Tuesday, August 10, 2010

இந்த வேம்புகள் கசப்பதில்லை - உயிரோசையில் வெளியான சிறுகதை

இந்த வேம்புகள் கசப்பதில்லை
குமரி எஸ்.நீலகண்டன்
எதிர் வீட்டில் ஒரு உயிர் நாளை வெட்டிக் கொலை செய்யப்படப் போகிறது. நாளை ஒரு கொலை நடக்கப் போகிறது எனத் தெரிந்தும், அதைக் காப்பாற்ற எந்த உரிமையும் இன்றி விஸ்வநாதன் கேவிக் கேவி அழுதார். என்ன செய்வது? எதுவுமே செய்ய முடியாது.விஸ்வநாதனின் பிள்ளைகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் விஸ்வநாதன் சமாதானம் அடையவில்லை.
எதிர்வீட்டுக்காரர் அவர் வீட்டு மரத்தை வெட்டப் போகிறார், அவ்வளவுதான். ஆனால் இந்தச் செய்தி விஸ்வநாதனுள் ஒரு தாங்க முடியாத துயரச்சூழலைப் பரவ விட்டு விட்டது.
மற்றவர்களைப் பொறுத்தவரை, நாளை வெட்டப் போகும் அந்த மரம் கசந்த இலைகளைக் கொண்ட ஒரு சாதாரண வேப்ப மரமாக இருக்கலாம். ஆனால் விஸ்வநாதனுக்கு, அது அவரைப் போல் நரைத்த தலை, மூளை, இதயம், கை, கால், நரம்பு, ரத்தம் கொண்ட ஒரு மாமனிதரின் உயிர். இவர் வீட்டின் முன்பு நீளமாய் விரித்த விரிப்பாக அமைந்தது ஒரு கறுப்பு தார் சாலை. அதைக்கடந்து எதிர் வீட்டு வளாகத்தில் நெடிதாய் வளர்ந்த அந்த வேப்ப மரத்தோடு அன்றாடம் இவர் வீட்டிலிருந்தபடியே பேசிக் கொண்டேதான் இருக்கிறார். அவரின் நெருங்கிய நண்பரான அப்துல்லா அல்லவா அந்த மரம்
இரட்டைக் குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். ஒரே மாதிரி சாயலில் ஒரே நிறத்தில் ஒரே நடை அசைவில் பிரித்தறிய இயலாத அளவிற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதே மாதிரிதான் இந்த இரட்டை மரங்களும். விஸ்வநாதன் வீட்டு முன்புள்ள சாலையில் நின்று பார்த்தால் தெரியும். விஸ்வநாதன் வீட்டு வேப்ப மரமும் எதிர்வீட்டு வேப்ப மரமும் ஒரே மாதிரியாக இருக்கும். சாலையில் செல்லும் மனிதர்களின் கவனத்தை திருப்பும் அளவிற்கு அதனுருவங்களும் அசைவுகளும் ஒத்திருக்கும்.
இரண்டு மரங்களுக்கும் ஒரு மாத வயது வித்தியாசம். விஸ்வநாதனுக்கும், எதிர்வீட்டில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு இருந்த அப்துல்லாவிற்கும் ஒரு மாத வயது வித்தியாசம்.
அப்துல்லா..... விஸ்வநாதன் நட்பு தெய்வீகமானது... 'அனபு' என்னும் கடவுளால் அரவணைக்கப்பட்டது.
அப்துல்லா வீடு தேடி நாகர்கோவில் நகரம் முழுக்க அலைந்து கொண்டிருந்தார். அப்போது நகரத்தின் வெளிப்புறத்தில் ஒரு காலனியில் ஆள் அரவமற்ற பகுதியில் ஒரு 45 வயதுமிக்க மனிதர் மயக்கமுற்றுக் கிடந்தார்.
அப்துல்லா அவசரமாய்த் தன் மிதிவண்டியை மிதித்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் அவரை மருத்துவமனை கொண்டு சென்றார். உரிய சிகிச்சைக்குப் பின் அவர் நினைவு பெற அவர் 'விஸ்வநாதனா'க அப்துல்லாவுக்கு அறிமுகமானார்.
விஸ்வநாதன் அப்துல்லாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்துல்லா வீடு தேடும் விபரமறிந்த விஸ்வநாதன் தன் எதிர் வீடு காலியாகும் விபரம் கூற அவர் எதிர் வீட்டிலேயே குடி அமர்ந்தார்.
அட! எதிர் வீடு என்றதும் ஏதோ ஒரு நபரின் வீடல்ல அது... அதுவும் விஸ்வநாதனுக்குச் சொந்தமான வீடுதான்.
இருவரது எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் இருந்ததால் குறைந்த கால அளவில் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். அப்துல்லாவிற்கு விஸ்வநாதன் ஒரு நண்பரென்றால் வேப்பமரம் இன்னொரு நண்பர். "இயற்கை வைத்தியத்தில் எனக்கு பைத்தியம்" என்பார் அப்துல்லா அடிக்கடி. அந்த அளவிற்கு இயற்கை மருத்துவத்தில் அவருக்கு ஈடுபாடு. அதிலும் குறிப்பாக 'வேப்பமரம்' அப்துல்லாவிற்கு மிகவும் பிடித்தமானது. அதன் இலை, தழை, பட்டையென பெரும்பாலான நேரமும் அதைப்பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்.
ஒரு சமயம் விஸ்வநாதனின் பேரக்குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். அவரின் குழந்தையின் காலில் வந்த சிரங்கு குரங்காய் உடம்பு முழுவதும் தாவிக் கொண்டிருந்தபோது ஆங்கில வைத்தியத்தில் வீட்டில் பல ஆயின்மென்ட் கூடுகள்தான் கூடின. சிரங்கு மீண்டும் மீண்டும் சீண்டிக் கொண்டிருக்க அப்துல்லாவின் வேப்பிலை வைத்தியத்தில் நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைத்தது. விஸ்வநாதன் கொசுத்தொல்லை பற்றிக் கூற 'வேப்பங்காற்றிற்கு கொசு வராது' என அப்துல்லா 'வேப்பம்பா' பாடுவார்.
விஸ்வநாதனின் பிறந்தநாளைத் தெரிந்து கொண்ட அப்துல்லா அன்று அவருடைய பரிசாய் விஸ்வநாதன் வீட்டு முற்றத்தில் வேப்பமரத்திற்கு வித்திட்டார். ஒருமாதம் கழித்து அப்துல்லாவின் பிறந்த நாள் வந்தது. அதேபோல் அவருடைய வீட்டில் விஸ்வநாதனும் இன்னொரு வேப்பமரத்திற்கு வித்திட்டார்.
இரண்டு வேப்பமரங்களும் ஒரு மாத வித்தியாசமிருந்தும் உருவத்தில் அதிக வித்தியாசமின்றி நட்போடு வளர்ந்தன. அந்தப் பக்கமாய் இருக்கும் பெரிய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கெல்லாம் இந்த மரங்களைச் சொல்லி அடையாளம் சொல்லும் அளவிற்குப் பெயர் பெற்றன அவை. வீட்டு வளாகத்தைவிட்டு அதன் கிளைகள் வெளிக்கிளம்பி சாலை பாதசாரிகளுக்கும் நிழல் தந்தன. சாலையில் செல்வோருக்கு எதிர் வீடுகளில் இரண்டு ஒரே மாதிரி மரங்கள் எப்போதும் "சல சல" வெனப் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும். இந்த இரண்டு மரத்தடிகளில்தான் விஸ்வநாதனும் அப்துல்லாவும் பெரும்பாலான நேரங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த இரண்டு மரங்களின் காற்றுகளிலும் இவர்களது கருத்துகளே நிறைந்திருக்கும்.
விஸ்வநாதன் அடிக்கடி சொல்வார்...
"உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை. உலகத்திலே எல்லோரும் எல்லோரையும் நேசிக்கணும். யாருக்கும் எந்த சுயநலமும் இருக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தரை அன்பு செலுத்தறதுங்கறது லட்சிய வெறியா இருக்கணும். உயர்வு தாழ்வு இல்லாம எல்லாத்துக்கும் உதவி பண்ணனும்."
இப்படியே அப்துல்லாவும் விஸ்வநாதனும் பேசிக்கொண்டிருப்பார்கள். இப்படி வளர்ந்த இந்த வேப்பமரங்களுக்கு ஒரு தருணத்தில் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்துவிட்டது.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'காகங்கள்' என்ற இலக்கியக் கூட்டத்தை இந்த மரத்தடிகளில் நடத்தி இருக்கிறார்.
விஸ்வநாதன் ஒரு பெரிய ஆசாரமான குடும்பத்தின் வாரிசாய் இருந்தும் எல்லோரிடமும் சாதி மத பேதமின்றி பழகுவார். ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற ஏழை நோயாளிகளைத் தொட்டு சேவை செய்வார். சாதி, மத பேதமற்ற அவரின் ஸ்பரிசமே அவரை அவர்களுள் ஒரு வித்தியாசமான மனிதராக அடையாளம் காட்டியது.
அப்துல்லா - விஸ்வநாதனின் நட்பு உருவானபின் இந்த சேவை இன்னும் பேறு பெற்றது. இலை, செடி, கொடி, காய், கனி என இயற்கையே கடவுளாக அவர்களுக்குப் பட்டது. எல்லா உயிர்களின் இயக்கமே கலை அம்சமாகத் தெரிந்தது. தடங்கலில்லாது அந்த உயிர்களின் இயக்கத்திற்கு சேவை செய்வதில் தன் நிறைவு கண்டார்கள் அவர்கள்.
உலகமே கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை, சிகப்பு என வண்ணமயமாய் இருந்தாலும் எல்லாம் ஒரே மண்ணிற்குச் சொந்தமானவை. விஸ்வநாதன் - அப்துல்லா உறவு சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை பாசம் மிகுந்ததாகக் கருதப்படும். ஆனால் நிஜத்தில் அது 'பாசம்' என்ற சுயநல கயிற்றால் பிணைக்கப்படாத அதற்கு அப்பாற்பட்ட உயர்வான உறவாகும்.
திடீரென அப்துல்லாவிற்குப் பணி நிமித்தமாக டெல்லிக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. விஸ்வநாதனுக்கும், அப்துல்லாவிற்கும் மிகப்பெரிய வருத்தமாகத்தான் இருந்தது. இயல்பான நடைமுறைகளை ஏற்று எதிர்கொள்வதே வாழ்க்கை என்பதில் இருவருக்கும் அதிக நம்பிக்கை உண்டு. அதனால் அப்துல்லா வீட்டைக் காலி செய்துவிட்டுக் குடும்பத்தோடு டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றார்.
ஆனால் விஸ்வநாதனுக்கோ, அவருடைய நினைவுகள் அவர் வீட்டு வளாகத்து வேப்பமரத்தில் இலைகளாய், காய்களாய், கனிகளாய் கனிந்து தொங்கின. வேப்பமரம் அவருக்கு வேப்பமரமாகத் தெரியவில்லை. அரைநரையோடு புன்முறுவல் கொண்ட ஆரோக்கியமான அப்துல்லாவாகவே தெரிந்தது. வீட்டுக்குள் போகாமல் வெளி இடங்கள் சுற்றாமல் தூங்காமல் நிமிர்ந்து நின்று பேசிக் கொண்டிருக்கும் அப்துல்லாவாகவே தெரிந்தது. காற்றில் மரம் ஆடி அசையும்போது அப்துல்லா கை அசைத்து அசைத்துப் பேசுவதாகவே விஸ்வநாதனுக்குத் தெரிந்தது. அவரின் கொள்கைகள், நடைமுறைகள், அன்பு அனைத்துமே அந்த மரத்துள் ஆழமாய்ப் பதிந்திருந்த்து. அத்தோடு அப்துல்லாவிற்கும் விஸ்வநாதனுக்கும் கடிதத் தொடர்பு அவ்வப்போது இருந்தது.
எதிர்பாராமல் ஒருநாள் அப்துல்லாவின் இறப்புச் செய்தியும் வந்தது.
விஸ்வநாதன் குடும்பத்திற்குப் பெரிய துயரமாகவே இருந்தது. குடும்பமே புதுடெல்லி சென்று வந்தது. ஆனாலும் அப்துல்லா அந்த இரட்டை வேப்பமரங்களில் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார். அப்துல்லாவின் நினைவுதினத்தில் அங்கு சர்வமதப் பாடல்கள் பாடப்பட்டன.
அந்த இரட்டை வேப்பமரங்களில் சில நேரங்களில் கிளிகள், வெளிநாட்டுப் பறவைகள் கொஞ்சிக் குலாவும்போது விஸ்வநாதனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
மகளின் திருமணத்தின்போது எதிர்வீட்டுமனையை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் விஸ்வநாதனுக்கு வந்தது. அந்த வேப்பமரத்தை மட்டும் வெட்டக்கூடாது என்ற நிபந்தனையை வேண்டுதலாய்த் தந்து ஓரு தூரத்து உறவினருக்கே விற்றும் விட்டார். ஆனால் சில மாதங்களுக்குள் எதிர் வீட்டு வேப்பமரம் வெட்டப்படும் செய்தி விஸ்வநாதனை எட்டியது. துடித்தே போய்விட்டார். எதிர்வீட்டு உறவினரிடம் எவ்வளவோ கெஞ்சினார். அவர்களுக்கு அது கேலிக்குரியதாகவே இருந்தது. ''இவருக்கென்ன பைத்தியமா.... ஒரு மரத்தை வெட்டறதுக்கு இவ்வளவு அழறாரு'' என்றார்கள்.
விஸ்வநாதனுக்கு அது ஒரு பேரிழப்பாய் தெரிந்தது. விஸ்வநாதனின் பேத்தி கூட தாத்தாவை சமாதானப்படுத்தினாள். "கவலைப்படாதீங்க தாத்தா! அந்த வெட்டப்போற மரத்திலே இருந்து ஒரு கொட்டையை எடுத்து நம்ம வீட்டிலே நட்டு மரமாக்கிடலாம்."
விஸ்வநாதன் நிதானமிழந்து நிலை குலைந்து நின்றார்.
அன்றிரவு இடிமழையோடு ஒரு பயங்கர சப்தம்...
எதிர்வீட்டுக்காரர்கள் என்னவோ ஏதோவென்று எட்டிக் கதவைத் திறக்க அங்கு 'பிரேக்' இழந்த ஒரு லாரி அதிவேகமாய் வீட்டு வெளிச்சுவரைத் தகர்த்து அந்த மரத்தில் இடித்து நின்றது. அந்தக் குடும்பமே அந்த மரத்தால் காப்பாற்றப்பட்ட நம்பிக்கையில் அந்த மரத்திற்காக எழுதப்பட்ட 'மரண உத்தரவு' தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும் அந்தப் பகுதியில் இரட்டை மரங்களின் சலசலப்பு விஸ்வநாதனோடு அளவளாவிக் கொண்டிருந்தது. அதில் விஸ்வநாதனுக்கு அந்தக் குடும்பத்தையும் அப்துல்லாவையும் காப்பாற்றிய மகிழ்ச்சி மணம் பரப்பி நின்றது.
உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com

வல்லமை இணைய இதழில் வெளியான கவிதைகள்

Tag Archive | "குமரி எஸ். நீலகண்டன்"

இருப்பும் இழப்பும்

Tags:


குமரி எஸ்.நீலகண்டன்

இழப்பை இருப்பும்
இருப்பை இழப்பும்
துரத்திக்கொண்டே
இருக்கின்றன.

சிலர் இருப்பது
இழப்பை
ஈடுகட்டவே..

பல இழப்புகளால்
உருவானவையே
சில இருப்புகள்.

இழந்தவை எல்லாம்
எங்கோ
இருந்துகொண்டிருக்கின்றன.

இருப்பவையெல்லாம்
யாரோ இழந்தவையாக
இருக்கலாம்.

இருப்பும் இழப்பும்
சதா இடம் பெயர்ந்துகொண்டே
இருக்கின்றன.

ஒளி
இருட்டை இழப்பதும்
இருட்டு
ஒளியை இழப்பதும்
எதார்த்தம்.

இழந்த ஒளியால்
வீட்டை நிரப்பலாம்
வாசல் திறந்து….

ஹெல்மெட்டின் பாதுகாப்பு - திண்ணை இணைய தளத்தில் எனது கவிதை

Saturday June 26, 2010

ஹெல்மெட்டின் பாதுகாப்பு

குமரி எஸ். நீலகண்டன்

குப்பைப் பெட்டியின்

அருகே பிளாட்ஃபார்மில்

உடைந்து கிடந்த

அந்த ஹெல்மெட்

ஏதோ ஒன்றை சொல்கிறது..

ஒவ்வொருவரும்

ஒவ்வொரு விதமாய்

புரிந்து கொள்கிறார்கள்.


அதைப் பார்த்த கவிஞன்

மூளை இல்லாத

ஏதோ ஒருவனின் தலையை

இந்த ஹெல்மெட் பாவம்

இத்தனை நாள்

பாதுகாத்திருக்கிறது என்று

சொல்லிப் போனான்.


ஒரு பெரியவர்

பொறுப்பில்லாத மனிதன்

குப்பைப் பெட்டிக்கு

வெளியே போட்டதை

உள்ளே போட்டுச்

செல்லக் கூடாதா

என்று அங்கலாய்த்தார்.


தரமற்ற ஹெல்மெட்

தலை நொறுங்கி கிடக்கிறது.

ஹெல்மெட்டின்

சொந்தக் காரன் தலை

தப்பி இருக்குமோ

என்னவோ என

கவலைப் பட்டுப் போனான்

இன்னொருவன்.


கருமி ஒருவன் வாங்கிய

விலை குறைந்த

ஹெல்மெட் என

இன்னொருவன்

சொல்லிப் போனான்.


அதோ உடைஞ்சு கிடக்குதே

அதே வண்ணத்தில்தான்

நான் உங்களிடம்

சேலை வாங்கச் சொன்னேன்

என்று தர்க்கித்தாள்

அந்த வழியாய் சென்ற

அவனிடம் அவள் மனைவி.


இந்த உடைந்த

ஹெல்மெட்டை

சிலையாய் இங்கே

நிறுவ வேண்டும்.

அப்படி வைத்தால்

வேகப்ரியர்களின்

உயிர் தாகம் அடங்க

எச்சரிக்கையாய்

இருக்கும் என்றார்

ஒரு போலிஸ்காரர்.


பல வருடங்களுக்கு முன்பு

தலை கவசம் அணியாமல்

விபத்தில் சிக்கி

உயிரிழந்த தன்

கணவனின் நினைவில்

கண்களில் பொங்கிய

கண்ணீரை துடைத்து

விட்டுச் சென்றாள்

இன்னொரு பெண்.


ஹெல்மெட் அணிந்தும்

முகமூடி கொள்ளையர்கள்

கொள்ளை அடிக்கிறார்களாம்

என்று பைக்கின்

பின்னால் இருந்தவன்

முன்னால் இருந்தவனிடம்

சொல்லிப் போனான்.


அது வாகன

ஓட்டிகளுக்கு மட்டுமல்ல

திருடர்களுக்கும்

பாது காப்பானது.


சாலையில்

இன்னொரு பக்கம்

கண்ணாடித் துண்டுகள்

சிதறி கிடக்க ஒரு சிறுவன்

அந்த ஹெல்மெட்டை எடுத்து

அதை மூடி வைத்துப் போனான்

குமரி எஸ். நீலகண்டன்




Copyright:thinnai.com 

அமைதிப் பயணம் - திண்ணை இணைய தளத்தில் எனது படைப்புகள்



Saturday August 7, 2010


அமைதிப் பயணம்

குமரி எஸ். நீலகண்டன்

வழியெங்கும் சிதறி

சின்னாபின்னமான

சர வெடியின்

சிகப்பு காகிதச் சிதறல்கள்.

புகழின்

வாசத்தை வசமாக்கியும்,

கால்களில் மிதிபட்டும்

ஆங்காங்கு சிதறிய

மலர்களின் இதழ்கள்.

நடந்து சென்றவர்களின்

காதுகளும் வாய்களும்

ஈனக் குரலில்

எதையோப்

பரிமாறிக் கொண்டன.

சிலர்

இறந்தவனை உயிர்ப்பித்து

துப்பியும் துடைத்தும்

விட்டார்கள்.

இறந்தவனைக் குத்த

கத்தியுடன் திரிந்தவன்

ஆசை தீர குத்தி

மகிழ்ந்தான்.

ஊதுகிற சங்கு

எதையோ ஓதுகிறது

சிந்திய மலர்களிலிருந்து

சிந்தனையைப் பிராண்டும்

ஒரு வாசனை.

இவை

எதையும் பார்க்காமல்,

எதையும் கேட்காமல்,

எதையும் எண்ணாமல்,

எதுவும் கூறாமல்

அமைதியாய் சென்றான்

அந்த ஊர்வலத்தின்

கதா நாயகன்.

குமரி எஸ். நீலகண்டன்




Copyright:thinnai.com 

முகத்தினைத் தேடி - திண்ணை இணைய தளத்தில் எனது படைப்புகள்

Sunday July 18, 2010

முகத்தினைத் தேடி

குமரி எஸ். நீலகண்டன்


நீ பார்க்கும் என் முகம்

என்னுடையது அல்ல.

நீ நேற்று பார்த்த

என் முகமும்

என்னுடையது அல்ல.

நீ பார்த்த

அந்த முகம்

என்னுள் நீ உருவாக்கிய

உன்னுடைய முகம்.

சிரித்தாய் சிரித்தேன்.

அழுதாய் அழுதேன்.

கோபப் பட்டாய்

நானும் கோபப் பட்டேன்

நான் உன்னிடம்

பேசிய வார்த்தைகள்

என்னுள் உன் முகம்

உன்னிடமே பேசியவை.

எங்கோ இருக்கும்

என் முகம்

உனக்குத் தெரிவதில்லை.

எனக்கும் ஒரு சிலருக்குமே

பார்க்க இயன்ற

என் முகத்தை

உனக்குப் பார்க்க

வேண்டுமா?

முதலில்

உன் முகத்தைக்

கண்ணாடியில் பார்.

குமரி எஸ். நீலகண்டன்




Copyright:thinnai.com 

உள்ளே வெளியே - திண்ணை இணைய தளத்தில் எனது கவிதை

Friday March 19, 2010

உள்ளே வெளியே

குமரி எஸ்.நீலகண்டன்..


சிறைக்கு வெளியே
குற்றத்தின் நாற்றத்தால்
சிறை மூக்கை பிடித்துக் கொண்டு
உள்ளே கைதிகளைப்
பார்த்து பெரு மூச்சு விடுகிறது.
குற்றம் செய்த கரங்களானாலும்
பற்றிக் கொள்ள
உயர்ந்து உறுதியுடன்
துணையாய் நிற்கும்
கம்பிகள் .
சிறைக் கம்பிகளின்
குறுகிய இடைவெளிகளாய்
சிறைக் கதவுகளின்
இருபுறங்களும்
இடைவெளி குறைவாகவே
இருக்கின்றது.
குறுகிய வெளிகளில்
குண்டர்களுக்கே
சிறைக்குள் நுழைய முடிகிறது
பாதுகாப்பாக.
கம்பிகளின் இரு பக்கங்களிலும்
இனங்கள் ஒன்றுதான்.
நிறங்கள் மட்டும் வேறு.
சிறைப் பட்டிருப்பது
கம்பிகள் மட்டும்தான்.
தெருவெங்கும் குப்பை...
குப்பைக் கூடைகள் ஓரளவு
சுத்தமாக இருக்கின்றன.
ஒவ்வொருப் புரிதலும்
பெரும்பாலும்
தடம் மாறா தவறுகளின்
உருவங்களாகவே
உயர்ந்து நிற்கின்றன.
ஒவ்வொரு சந்திப்பிலும்
அழுந்தப் பதியாத
ஆயத்தச் சிரிப்புகள்
காகிதப் பூக்களாய்
கர்ஜித்து எரிகின்றன.
கொள்ளை அடிக்கவே
கோபங்கள் குமுறி
எழுகின்றன.
அச்சமும் வெட்கமும்
ஒப்பனைப் பொருட்களாகவே
ஒவ்வொரு முகத்திலும்
ஒய்யாரமாய் தொங்குகின்றன.
மனங்களும் முகங்களும்
திரும்பி நிற்கின்றன.
வறண்ட மனங்களும்
வலிமையற்ற உணர்வுகளும்
தாலாட்டும் உலகத்தில்
தயவோடு ஒரு குழந்தைக்கு
தாயாக பாலூட்டும்
நாய்.
punarthan@yahoo.com



Copyright:thinnai.com 

பூனைக் காவல், மீனுவும் பூனையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதைகள்

19.4.10


பூனைகள் பூனைகள் பூனைகள் 21

பூனைக் காவல்

குமரி எஸ்.நீலகண்டன்

என்னை அறியாமலேயே
என்னுள்
ஏழெட்டுப் பூனைகள்
உலாவிக் கொண்டிருக்கின்றன.

எலியைக் கண்டதும்
எட்டிப் பாய்ந்தது
அந்தக் கருப்புப் பூனை.
பாலைக் கண்டு
பதுங்கி வந்தது
அந்த பரம
சாதுப் பூனை.
உருட்டுக் கண்களுடன்
உற்றுப் பார்த்தது
அந்த உளவுப் பூனை
என்னுள் எங்கோ
உறு உறுவென்று
உறுமிக் கொண்டே
ஒளிந்திருக்கிறது
இன்னொரு பூனை

என் மீசையை
தன் மீசையாக்கிக்
கொள்கிறது அந்த
தளர்ந்த பூனை
குதித்து குதித்து
குதூகலித்து
கும்மாளமிடுகின்றன
இன்னும் சில
குட்டிப் பூனைகள்
நான் கோபத்தில்
பதுங்கி பதுங்கிப்
பாய்கையில் யாரும்
என்னைக் கண்டு
பயப்படாமல்
காவல் காக்கின்றன
இந்த பூனைகள்
திருட்டு விழிகளுடன்

13.4.10


பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20





மீனுவும் பூனையும்
குமரி எஸ்.நீலகண்டன்
மீனு அவளது அம்மாவிடம்
அநியாயத்திற்கு
கோபப்படுவாள்.
அம்மாவைப் பற்றியே
அம்மாவைப்
பிடிக்காதவர்களிடம்
ஆயிரம் குசும்பு
சொல்லி இருக்கிறாள்

கணவன் ஏதாவது
சொன்னால் பாம்பாய்
படமெடுப்பாள்
மாமியாரிடம்
மணிக் கணக்கில்
சண்டை போடுவாள்

அவளை யாரும்
குத்தம் சொன்னால்
கொத்துகிற பாம்பாய்
விஷத்தை பீய்ச்சுவாள்

ஆனால் மீனு அவளது
பூனையுடன் மட்டும்
மிகுந்த அன்பு காட்டுவாள்.
அதற்கு நேரம் தவறாமல்
பால் கொடுப்பாள்
அதன் பஞ்சு போன்ற
முதுகைத் தடவிக்
கொடுப்பாள். அதனை
ஷாம்பு போட்டு
நாள் தவறாமல்
குளிப்பாட்டுவாள்.

பூனையோடு கொஞ்சியும்
விளையாடுவாள் பூனையின்
காலில் ஏற்பட்ட
சிறிய காயத்திற்காக
அண்டை அயலாரிடம்
ஐயோ பாவம்
ஐயோ பாவமென
துக்கித்து துவண்டு
போனாள்.

எல்லோரும்
அந்த பூனையை
பதுங்கி பதுங்கி
ஒரு திருட்டுப் பார்வையுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும் - நவீன விருட்சத்தில் வெளியானக் கவிதை

30.5.10


பூனைகள்...........பூனைகள்................பூனைகள்......25





அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும்
அரசியல்வாதி
ஒரு பூனை வளர்த்தார்
அன்றாடம் பாலுடன்
அனுசரணையாய்
வளர்க்கப் பட்டது
அந்தப் பூனை
அவர் மடியில் கிடந்து
மாமிசம் சாப்பிட்ட
பூனை அது.

அரசியல்வாதி
எம். எல். ஏ ஆனார்.
எம். பி ஆனார்.
மத்திய மந்திரியும் ஆனார்
பூனைக் காவல்படையுடன்
சுற்றும் அவர் அருகே
இன்று அந்த பூனையால்
அண்ட இயலவில்லை

அரசியல்வாதியின் மனைவியாய்
நெடுங்காலம் இருந்த பின்
ஒரே நாளில் திடீரென
முதல் மனைவியாய்
பதவி உயர்வு பெற்ற
அந்தப் பெண்ணின்
சமையல் அடுப்பில்
தூங்குகிறது
இன்று அந்த பூனை


குமரி எஸ்.நீலகண்டன்..

ஆறுதல் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

30.3.10


பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20




ஆறுதல்

விடுமுறையில்
குழந்தைகளுடன் மனைவி
ஊருக்குச் சென்றுவிட்டாள்
குழந்தையின் பூனைக்கத்தல்,
அவனின் சிரிப்பு,
குறும்பு, குதூகலங்களின்
பின்னணியில்
மிக்ஸியின் காட்டுப் பிளிறல்
சமையலறையில்
பாத்திரங்கள் உருள்கிற
விழுகிற
பின்வாசலில்
வாளிகள் மோதுகிற
சப்தம் எதுவுமின்றி
குக்கர் விசில்,
குழாயில் தண்ணீர்
விழும் சப்தம், என
ஏதுமின்றி ஒரே நிசப்தம்.
தனிமையில் அவன்.
உயிர்களற்ற உலகில்
அவன் மட்டும்
தனிமையில்
உலவுவது போல்
ஒரு உணர்வு அவனுள்.
என்னவோ போல்
இருந்தது.
சமையலறையில் திடீரென
பாத்திரங்கள்
உருளும் சப்தம்.
அதிர்ச்சியில் அங்கே
சென்று பார்த்தான்
ஒரே ஆறுதல்.
சமையலறையில்
பதுங்கி வந்தன
எதிர் வீட்டுப் பூனை
அதன் குட்டிகளுடன்.

திருட்டுப் பூனை - நவீன விருட்சத்தில் வெளியானக் கவிதை

பூனைகள் பூனைகள் பூனைகள் 22


திருட்டுப் பூனை

எல்லோருக்கும் உரியது
எல்லாம் என்று
எண்ணி இயங்குகிற
பூனைக்கு கிட்டியப் பெயர்
திருட்டுப் பூனை.

திருடாத பூனைக்கும்
உண்டு இப்பட்டம்.
இன்னொரு இனத்தால்
இடப் பட்ட
ஈனப் பெயர்.

இரையாகிற
எலிகள் கூட
நம்புகிறபோது
இவர்களுக்கு மட்டும்
திருட்டுப் பூனை.

கட்சித்தொண்டனாய்
தீக் குளித்தும்
காட்ட முடியாது அதற்கு
அதன் விசுவாசத்தை.

பாவம் விசுவாச அரிதாரம்
பூசத் தெரியாத
விழிகளுடன்
பதுங்கி பதுங்கி வாழும்
பரம சாதுவாய்
திருட்டுப் பூனை

கிழிசல் சேலை - நவீன விருட்சத்தில் எனது சிறுகதை


5.6.10


கிழிசல் சேலை





கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செயயாதவர்களுக்கான பெட்டியில் பயணம் செய்வது தாயம்மா பாட்டிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. நாகர்கோவிலில் ரயில் ஏறிய போது அந்த பெட்டியில் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அவ்வளவாக இல்லை. இருக்கையில் காலை வசதியாக நீட்டி வைக்க முடிந்தது. ரயில் ஆரல்வாய்மொழி, நாங்குநேரி, வள்ளியூர், என சினன ரயில் நிலையங்களைக் கடந்த போதுகூட பயணிகள் கூட்டம் எல்லா இருக்கைகளையும் நிரபபி விடடது. இருக்க ஓரததில் சிறிது இடம் கேடடவர்கள், சிறிது நேரததில் இடம் தந்தவர்களை இறுக்கி இருக்கையில் சவுகரியமாக உட்கார எததனித்தார்கள். தாயமமா பாடடி தன்னைவிட வயதான ஒருவருக்கும் , ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குமாக இடம் கொடுத்து கடைசியில் தரையிலேயே உட்கார்ந்தாள். தனக்கு துணையாக வந்த அந்த கோட்டாறுக் கடைக்காரப் பையன் பககவாட்டில் உயரததில் சாமான்கள் வைப்பதற்கான அநத குறுகிய இடத்தில் படுத்துக் கொண்டான். அதைப் பார்த்து தாயம்மா பாட்டிக்கு பயம் கொடுதது விடடது.
'எப்பா விழுந்திராதப்பா|கீழே இறங்கு|' என உட்காரச் சொன்னாள். அவன் படுத்திருக்கும் இடததில் அவன் உடம்பின் கால் பகுதி வெளியே துருத்திக் கொண்டிருந்தது. சிறிது கவனமின்றி கண் அயர்ந்தால் கூட கீழே விழ வேண்டியதுதான். கீழே விழுநதால் தலையில் அடி விழுந்து உயரே போய் விடும் ஆபத்து. இபபடி கவலையில் பாட்டி அவனை உரககக் கூப்பிட்டு அச்சுறுத்தினாள். சுற்றி இருககும் சிலருககு அது பொழுது போக்கு களமானது. எல்லோரும் பாட்டியை கிண்டல் செய்தார்கள். உட்கார்ந்தால் தலை தட்டுகிற அந்த குறைந்த உயரத்தில் அவனைப் போல் பலரும் படுத்திருந்தார்கள். அதிலும் அதிசயமாய் ஒருவர் தனது பருத்த தொப்பை ரயிலின் கூரையைத் தட்ட ரயிலுக்கு இணையாய் குறட்டை ஒலியால் கூவிக் கொண்டிருந்தார். அவர் தன் மேல் விழுந்து விடுவாரோ என அஞ்சி கீழே உட்கார்ந்திருந்த ஒருவர் இடம் மாறி சென்று விட்டார். இந்த அதிசயங்களோடு பயணிகளின் அவஸ்தைகளையெல்லாம் சகித்துக் கொண்டு ரயில் உற்சாகமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ரயிலை விட விரைவாய் பாட்டியின் மன ஓட்டம் இருந்தது. இது கூட அவளுக்கு எதிர்பாராமல் எதிர் கொள்ளும் பயணமாக இருந்தது. செனனையிலுள்ள தனது இளைய மகள் வழி பேத்திக்கு சென்ற வாரம்தான் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். உறவினர்கள் அதிகம் பேர் சொந்த ஊரில் இருந்ததால் அவர்களின் வசதிக்காக திருமணத்தை நாகர்கோவிலிலேயே நடத்தினார்கள். திருமணமென்ற சடங்கின் மூலம் தொலைவிலுள்ள தனது பிள்ளைகளையும் உறவினர்களையும் ஒன்றாகப் பார்க்க இயல்வதில் தாயம்மாவிற்கு மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. தான் தற்போது வசிக்கும் ஊர், அதன் மக்கள், அங்குள்ள சடங்குகள், பிளளைகள், அதன் பள்ளிகள், அவர்களின் அனுபவங்கள் என எல்லாவற்றையும் சொநத ஊரில் கூடிப் பகிர்ந்து கொண்டார்கள். இத்தோடு ஒரு சிலரின் பேச்சிலும் சிரிப்பிலும் அவர்கள் பலரிடம் கொண்ட வன்மப் பகையின் சாயல்கள் கொடிய மிருகமாய் பதுங்கி இருந்தன. தாயம்மா பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. உலகம் எவ்வளவு வேகமாய் போய் கொண்டிருக்கிறது. தனது மூத்த மகள் ரமணியையும் இளைய மகள் சுனிதாவையும் இப்போதுதான் பள்ளிக்கு கொண்டு விட்டது போல் இருக்கிறது. அதற்குள் அவர்கள் பெரியவர்களாகி, திருமணமாகி, குழந்தைகளும் பெற்று, அவர்களை நல்ல முறையில் படிக்க வைத்து, பெரியவர்களும் ஆக்கி, அவர்களுக்கும திருமணம் நடந்தாகி விட்டது. பேத்தியின் திருமணம் முடிந்து சென்னையில் நடைபெறும் விருந்து வைபவத்திற்காக, இளைய மகளின் நிர்ப்பந்தத்தில் பாட்டி சென்னைக்கு பயணமாகிக் கொண்டிருக்கிறாள்.
தாயம்மா பாட்டிக்கும் சேர்த்துத் தான் மொத்தம் இருபது டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். இருந்தும் அந்த குடும்பத்தின் மூத்த குடிமகளான அவளுக்கு மட்டும் பதிவு செய்யப் படாத பெட்டியில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை. அதுதான் அவளை இந்த நரக வேதனைக்குள்ளாக்கியது.
தான் தனது அம்மா அப்பாவை நேசித்த அளவிற்கு தனது பிள்ளைகள் தன்னை நேசிக்காதது தாயம்மா பாட்டிக்கு வருத்தத்துடன் ஆச்சரியமாகவும் இருந்தது. அதற்கான காரணங்களையும் அலசி ஆராய்ந்தாள்... எதுவும் பிடிபடவில்லை. ஆனாலும் அவள் தன் பிள்ளைகளைப் பற்றி மோசமாக யாரிடமும் எதுவும் சொன்னது கிடையாது.
பிள்ளைகள் சிறிதாக இருந்த போது இருவரில் இளைய மகள் சுனிதாவைப் பற்றித்தான் மிகவும் கவலைப் படுவாள். பொறுமையானவள். பிழைக்கத் தெரியாதவள், சூது வாது தெரியாது... எதைச் சொன்னாலும் நம்பி விடுவாள். இன்னொரு வீட்டில் மணமாகி செல்லப் போகிற இவள் எப்படி குடும்பம் நடத்தி, குழந்தை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கப் போகிறாள் என்று கவலைப் பட்டு புத்திமதி சொல்வாள். அன்று பல இரவுகள் உறங்காமல் தான் கவலைப் பட்ட அந்த மகளா இன்று இவ்வளவு பெரிய சாமரத்தியசாலி. மிகுந்த ஆச்சரியமாக இருந்த்து அவளுக்கு.
தாயம்மா பாட்டிக்கு எண்பது வயதாகி விட்டது. சில மாதங்களாக முதுமை காரணமாக உடல்நலமின்றி மிகவும் பலவீனமாகவே இருந்தாள். திருமணம் நாகர்கோவிலிலேயே நடந்ததால் மிகவும் சந்தோஷப்பட்டாள். தனது உடல் நலனைக் காரணம் காட்டி சென்னைக்கு விருந்துக்கு வர மறுத்தாள். இளைய மகளோ ' அம்மா நீங்க நிச்சயம் வரணும் . மாப்பிள்ளை வீட்டுக் காரங்க உங்களை கண்டிப்பா சென்னை விருந்துக்கு கூட்டிட்டு வரச் சொல்லி இருக்காங்க. அதனாலே நீங்க நிச்சயம் வந்தே ஆகணும். நீங்க வரல்லைண்ணா அவங்க தப்பாதான் எண்ணுவாங்க. இன்னும் உன் இளைய பேத்திக்கு இஞ்சினியரிங் அட்மிஷன் வேற இருக்கு. அதுக்கு கருமுத்து செட்டியார்ட்டே நீ வந்து நேரிலே சொன்னாதான் காரியம் நடக்கும். ஒரு வாரம் எங்கக் கூட இருந்திட்டு திருப்பி வந்திடலாம் 'என்று சொன்னாள்.
இளைய மகள் சுனிதா எந்த அளவிற்கு மாறி விட்டாள். திருமணமெல்லாம் முடிந்து சாமான்களையெல்லாம் பத்திரமாக பெட்டிகளாகக் கட்டிக் குவித்த போதே தனது மகளின் சாமர்த்தியத்தை எண்ணி ஆச்சரியப்பட்டாள். அவளுடைய நகைகளையும் துணிகளையும் மருமகன் பெரிய பைக்குள் அடைத்தபோது அவள் கூறிய வார்த்தைகள் இன்னமும் பாட்டியின் காதுகளில் அலைகளாய் அடித்துக் கொண்டிருக்கின்றன.
‘என்னங்க பையிலே துணியை இப்படி யாராவது அடுக்குவாங்களா? கிழிசல் சேலையை பத்திரமா உள்ளே வச்சிகிட்டு நகையை மேலே வச்சிருக்கீங்க| இபபடி வச்சா ஊரு போனா கிழிசல் சேலைதான் கிடைக்கும். முதல்லே நகையை பத்திரமா அடியிலே வச்சுகிட்டு எல்லா துணியையும் வச்ச பின்னாடி அம்மாவுக்க அந்த கிழிசல் சேலையை கடைசியிலே வைங்க .அது தொலைஞ்சு போனாலும் பரவாயில்ல' என்றாள்.
அப்போது தனது மகளுக்கு இவ்வளவு புத்தி வநது விடடதே என சந்தோஷப் பட்டாள். ஆனால் இன்று அந்த வார்த்தைகள் கத்தியாய் அவள் நெஞ்சைக் குத்திக் கிழிப்பது போல் இருக்கிறது. தானும் ஒரு கிழிந்த சேலையாய் அவளுக்கு பட்டது. கல்யாண நிகழ்வுகள் மிகவும் சிறப்பாகவும் சந்தோஷமாகவும்தான் நடந்தன. சுனிதாவைவிட அவளது சம்பந்தக்காரர்கள் தாயம்மாவை மிகவும் கவனித்து மரியாதை செலுத்தினார்கள். நிச்சயமாக சென்னை விருந்திற்கு வரவேண்டுமென விரும்பி வற்புறுத்தினார்கள். இறுதியில அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி தாயமமாவும் ரயிலுக்கு முன்பதிவு செய்ய சம்மதம் தெரிவித்தாள். சம்பந்தக்காரர்கள் கல்யாணம் முடிந்த மறுநாளே சென்னை திரும்பி விட்டனர். பெண்வீட்டாரோ திருப்பி கொடுக்க வேண்டிய கல்யாண சாமான்கள் பாத்திரங்களையெல்லாம் சரி செய்து விட்டு மூன்றாவது நாள் திரும்பினர்.
துணிமணிகள், கல்யாண அவசியத்திற்காக சென்னையிலிருந்து கொண்டு வந்த பொருட்களென எல்லாவற்றையும் கட்டிப் பெட்டிகளாக்கிய போது ரயில் புறப்படுவதற்கு இன்னமும் ஒரு மணி நேரமே இருந்தது. பக்கத்திலிருந்த ஒரு பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டு அவசர அவசரமாக காரைப் பிடித்து ரயில் நிலையம் வந்த போது அரை மணி நேரம் ஆகி இருந்தது. பிளாட் ஃபார்மில் எல்லாப் பொருட்களையும் வைத்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் ரயிலின் வருகைக்காக காத்திருந்தார்கள். கன்னியாகுமரியிலிருந்து ரயில் சிறிது கால தாமதமாகவே வந்தது. இவர்கள் ஏற வேண்டிய எஸ்.8 பெட்டியும் அவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளியே இருந்தது. ரயில் புறப்படுவதற்கு பதினைந்து நிமிடங்களே இருந்தன. தாயம்மா பாட்டியைப் பொருட்களுக்கு காவலாய் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்கள் ஒவ்வொரு பொருளாக பெட்டிக்கு கொண்டு போனார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பெட்டியில் சேர்க்கவும் ரயிலும் புறப்பட்டு விட ஒரு துணிப்பையுடன் தாயம்மா பாட்டி மட்டும் ரயில் நிலையத்தில் மாட்டிக் கொண்டாள். தாயம்மா பாட்டிக்கு எனன செய்வதென்றேத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அவளிடம் மூத்த மகள் வாங்கி கொடுத்த அந்த பழைய செல்ஃபோன் அலறியது. பாட்டி பதட்டத்துடன் செல்ஃபோனை எடுக்கவும் இணைப்பு தடை பட்டது. வீட்டிற்கே திரும்பி விடலாம் என்றால் வீட்டுச் சாவி கூட ரயிலிலுள்ள பையில்தான் இருக்கிறது. அடுத்து வந்த அழைப்புகளிலும் ரயில் நிலையத்திற்கே உரிய ஒலிப் பின்னணியில் எதிர் முனை பேச்சினை அவளால் உள் வாங்க இயலாமல் பக்கத்திலிருந்த ஒரு இளைஞனின் உதவியுடன் ரயிலிலிருந்து அழைத்த மகளுடன் பேசினாள். ஒரு பயனுமில்லாத அசிரத்தையான வருத்தத்தை மகள் தெரிவித்தாள்.
'அம்மா பத்திரமா அதே இருக்கையில் இரு| கோட்டாற்றிலே நம்ம கடைக்கார பையனுக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கிறேன். அவன் ஒரு மணி நேரத்திலே வந்திடுவான். அம்மா அடுத்த டிரெயின்லே அவன் கூட வந்திடு' என்றாள்.
அரை மணி நேரத்தில் அந்த கடைக்காரப் பையனும் வந்து டிக்கெட் எடுத்து பாட்டியை பத்திரமாக இருக்கையிலும இருத்தினான். அவனின் பாசம் பாட்டிக்கு சிறிது ஆறுதலைத் தந்தது. அவன் முடிந்த அளவு பாட்டியை சவுகரியமாக உட்கார வைத்தாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கே உரிய அசவுகரியங்களை அவள் அனுபவிக்க வேண்டி இருந்தது. அதிலும் கோடை விடுமுறைக் கூட்டம் வேறு. இந்த கூட்டத்தில் யாரும் யாரையும் மிதிக்கலாம். இந்த அசவுகரியத்தில் சமத்துவமும் சகிப்புத் தன்மையும் தானாகவேப் பிறக்கிறது. எந்த வசதியுமற்ற இந்தச் சூழலில் சிலர் குறட்டை விட்டு தூங்குவதைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கும். வீட்டில் இவர்கள் இவ்வளவு சுகமாகத் தூங்குவார்களா என நினைக்கத் தோன்றும். நாள் முழுக்க உழைத்த அவர்களின் உழைப்பின் களைப்போ என அனுதாபம் ஒருபுறம். மற்றவர்களின் இடங்களை ஆககிரமித்து நீட்டி நிமிர்த்தி படுத்திருக்கும் அவர்களது சுய நலத்தை எண்ணி கோபிக்கும் ஒரு மனம்.
தனது எண்பது வயது வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை கண்ட அவள் ரயிலில் இன்னும் புதிய மனிதர்களை சந்தித்தாள். எல்லாவற்றையும் விட தான் பெற்று வளர்த்த மகளே மிகவும் புதிதாகத் தெரிந்தாள்.
தாயம்மா பாட்டியின் அருகில் அழுக்குத் துணிகளும் பொருட்களும் நிறைந்த பையும் குழந்தைகளுமாக ஒரு தம்பதி உட்கார்ந்திருந்தது. கைக் குழந்தை அழுது கொண்டிருக்க இன்னொரு பையன் அவனது அப்பாவின் தலை முடியை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அம்மாவோ தலை வலியில் புழுவாய் துடித்துக் கொண்டிருக்க அப்பாவோ செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். தாயம்மா தலைவலிக்காக பையில் வைத்திருந்த ஹோமியோபதி மருந்தினை எடுத்து அநத பெண்ணிடம் கொடுத்து உதவினாள். சிறிது நேரத்திலேயே அவள் தலைவலியிலிருந்து விடுபட்டு நன்றி சொனனாள். தனது அவஸ்தை மிகுந்த இந்த பயணத்திலும் பாட்டிக்கு ஒரு திருப்தி. இந்தப் பெட்டியில் பயணம் செய்ததால் தானே இந்தப் பெண்ணிற்கு உதவ முடிந்தது என்று.
மணி அதிகாலை மூன்றாகி இருக்கும். பாட்டி உறக்கம் வந்தும் உறங்க முடியாமல் அரைத் தூக்கத்தில் இருந்தாள். அப்பொழுது ஒரு கனவு. ஒரு பெரிய பைக்குள் கீழே பாட்டியின் பிள்ளைகள் படுத்துக் கிடக்க அதன் மேல் பட்டுச் சேலைகள் போர்த்தி இருக்க பாட்டி பையின் மேல் பகுதியில் கிழிசல் சேலையுடன் படுத்து கிடந்தாள். கனவு மயக்கத்தில் களைத்த பாட்டி நிலையத்தில் நின்ற ரயிலின் ஹாரன் ஒலியில் திடுக்கிட்டு விழித்தாள். பக்கத்தில் இருந்த அந்த ஏழைப் பெண் பாட்டியின் காலைத் தொட்டு நன்றி கூறி விட்டு குடும்பத்துடன் ரயிலை விட்டு இறங்கினாள். அதற்குள் ரயில் புறப்படுவதற்கான ஹாரன் ஒலித்துவிட அநத பெண் கணவனிடம்
' நீங்க முதல்லே குழந்தையை இறக்குங்க. ரயில் புறப்பட்டாச்சு. சீக்கிரம் .... சாமான்ங்க போனாப் பரவாயில்ல கடைசியிலே எடுத்துக்கலாம் சீக்கிரமா குழந்தையை இறக்குங்க ' என்றாள்.


9.4.10


பூனைக் கனவு



பிரசவ அறையின் வெளியே
களைப்புடன் திகைப்புடன்
அரை தூக்கத்தில்
காத்திருந்த என்னுள்
என்னை மீறி
ஒரு கனவு
உளவு பார்த்தது.
அதில் ஒரு பூனை
பதுங்கி பதுங்கி வந்தது.
விழிகளில் ஒளி மிளிர
வீலென்று கத்திற்று
அந்த பூனை.
அதற்குள் சார் உங்களுக்கு
ஆண் குழந்தை
பிறந்திருக்குது என்று
என்னைத் தட்டி
எழுப்பி செய்தி
சொன்னாள் அந்த
மருத்துவமனை தாதி.

22.3.10


அழுகையும் அவனின் நகைச்சுவையும்




நான் இழந்து விட்டேன்.
எல்லாவற்றையும் இனி
இழப்பதற்கு எதுவுமில்லை என
அழுதான் அவன்.

அவனைச் சுற்றிலும்
கல் நெஞ்சைக் காட்டி
கனத்துயர்ந்த மலைகள்.

பூமித் தாய்க்காய்
நீரில் நெய்த
வெள்ளிச் சேலையாய்
வளைந்தோடும் அருவிகள்.

இடைவிடாது காற்றை வீசி
ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும்
மரங்கள்.

இளமைத் துடிப்புடன்
அவனோடு
இடறி விளையாடும்
இளந் தாவரங்கள்.

வனப்பான நட்சத்திரங்களுடன்
வளைந்து விரிந்த
வானம்.

அவன் மனதை
விரித்து உலர்த்த
விரிந்த மயானம்.

மனதை ஈரப்படுத்திக்
கொண்டே இருக்கும்
பதமான நீர் துளிகள்.

சுற்றி இருக்கும்
இவை எல்லாவற்றையும்
பார்த்து அழுதான்.

கதறி கதறி
அழுதான்.

'' நான் இழ்ந்து விட்டேன்
எல்லாவற்றையும்.......
இனி இழப்பதற்கு
எதுவுமில்லை '' எனப்
புலம்பி அழுதான்.

சுற்றி இருக்கும் அனைத்தும்
அவனைப் பார்த்து
சிரித்தன.

அந்த சிரிப்பொலி மட்டும்
அவனுக்குக் கேட்கவே
இல்லை.