Thursday, October 13, 2011

அவனுக்கு இல்லாதவை - உயிரோசையில் வெளியான கவிதை

அவனுக்கு இல்லாதவை
குமரி எஸ். நீலகண்டன்

ஒவ்வொருவருக்கும்
ஏதோ ஒரு
இடம் இருக்கிறது.
அதில் ஏதோ
ஒரு காரணத்தால்
உட்கார்ந்து
கொள்கிறார்கள். 

அவனுக்கான
அந்த இடத்தில்
யாரோ ஒருவர்
உட்கார்ந்திருக்கிறார்.
அவன்
இருக்குமிடத்திலிருந்து
அந்த இடம் வெகு
தொலைவிலிருக்கிறது.

அந்த இடத்தை
எட்டும் ஆசையில்
இருக்குமிடத்தையும்
இழந்து விடுவோமோ
என்ற அச்சத்தில்
இருந்த இடத்திலேயே
இருந்து
கொண்டிருக்கிறான்...

அவனுக்கான
அந்த இடத்தைச்
சுற்றிய ஒளிவட்டம்
அவனை பேதலிக்க
வைத்து விட்டது...

அந்த இடத்தைச்
சுற்றியக் கூட்டம்
இரும்புக் கோட்டையாய்
இருக்க இருப்பதற்காய்
மொய்க்கின்றன
ஈக்களின் கூட்டம்.

அவன் பெறாமலேயே
இழந்த இடத்தை
எண்ணி புலம்பிக்
கொண்டிருக்கிறான்
தனக்குள் தன்
தகுதியைக் கூறி
தன்னிடமே
நீதி கேட்டு....

இருக்குமிடத்தை
முதலில் நீ
வெளிச்சமாக்கு
என்கிறது ஏதோ
ஒரு அசரீரி..