Saturday, November 13, 2010

கடவுளின் சங்கடம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளின் சங்கடம்

குமரி எஸ். நீலகண்டன்

சண்டையே விரும்பாத
அவனுக்காகவே
சண்டை இட்டார்கள் இருவர்.
சங்கடத்தில் கடவுள்.

கடவுள் காட்சி கொடுத்தார்
இருவருக்கும் தனித் தனியாய்.
அன்பின் மகத்துவத்தை
அறிவுபூர்வமாகச் சொன்னார்.

அட! நீ என் கடவுளே
இல்லையென
அவரிடமும்
சண்டை போட்டு
அவரவர் கடவுளுக்காக
அடித்துக் கொண்டனர்
இருவரும்….

பாவம்,
சலனமின்றி
சங்கடத்தில்
கண்களை மூடி,
யாருமில்லாத
ஆள் அரவமற்ற
அடர்ந்த வனத்தில்
தவத்தில் தியானத்தில்
கடவுள்.