Wednesday, August 17, 2011

பிடிவாதக் குழந்தையும் பிறை நிலாவும் - திண்ணையில் வெளியான கவிதை

பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்

அமாவாசையன்று
நிலா நிலா ஓடிவா
என்றது குழந்தை.

வானம் முழுவதும்
தேடியும் நிலாவைக்
காணவில்லை.

இன்னும் பிடிவாதமாய்
நிலாவை அழைத்தது.
வரவே இல்லை.

கோபத்தில் குழந்தை
நிலாவோடு டூ விட்டது.
அடுத்த நாள் நிலா
பிறை வடிவில்
எட்டிப் பார்த்த போது
குழந்தை கண்ணை
அடைத்துக் கொண்டது.

சிறிதாய் நிலா
கண் இமைகளின்
இடைவெளியில்
எம்பி நுழைய
முற்படுகையில்
கண்ணை இன்னும்
இறுக்கிக் கொண்டது.

அப்போதும் நிலா
எப்படியோ கண்ணுக்குள்
காட்சி அளித்தது.

இன்னும் கோபத்தில்
குழந்தை போ.. போவென
புறக்கணித்து
உறங்கிப் போனது.

அப்போதும் நிலா
கனவில் வந்து
குழந்தையின்
இரு கைக்குள்
லாகவகமாய் உட்கார்ந்தது.

குழந்தை அதை
இறுக்கமாய் பிடித்துக்
கொண்டு தூங்கியது.