Wednesday, August 31, 2011

நிலாச் சோறு - திண்ணையில் வெளியான கவிதை

நிலாச் சோறு
குமரி எஸ். நீலகண்டன்

பௌர்ணமி இரவில்
வெண்மை பொங்க
விசாலமாய் தெரிந்தது
பால்நிலா.

வெண் சித்திரங்களாய்
சிதறிக் கிடந்தன
நட்சத்திர கூட்டம்.

மொட்டை மாடியில்
சூழ்ந்திருந்த குழந்தை
நட்சத்திரங்களுக்கு
வாய்க்கொன்றாய்
உருண்டை
உருண்டையாய்
சுவையாய் ஊட்டினாள்
நிலாச் சோற்றினை
அற்புதப் பாட்டி.

அவளுக்கு மிகவும்
பிடித்த அந்த
சரவணனிடம் கேட்டாள்.
நிலாச் சோறு
எப்படி என்று.

மிகவும் சுவையாக
இருக்கிறது என்றான்
கண்களில் நிலா
மின்ன பார்வையற்ற
அந்தப் பேரன்.