Friday, August 26, 2011

காற்றும் நிலவும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

காற்றும் நிலவும்
குமரி எஸ். நீலகண்டன்

சிதறிக் கிடந்த
கருமேகங்களைக்
கூட்டி அதற்குள்
மறைந்து மறைந்து
போனது நிலா.

காற்று அந்த
கருந்திரையைக்
கலைத்துக் கலைத்து
நிலாவின் முகத்தை
அம்பலமாக்கியது.

கருந்திரை எங்கோ
பறந்து போக
முகம்மூட
ஆடை தேடி
மிதந்து சென்று
கொண்டிருந்தது நிலா.

நிலவுடன் காற்று
காதல் விளையாடிக்
கொண்டிருக்க...
மேகத்தைக் கலைத்து
மழையைக் கொண்டு
சென்று விட்டதாக
காற்றைக் கடுமையாய்
திட்டிக் கொண்டு
சென்று கொண்டிருந்தனர்
பலரும்.