Friday, September 10, 2010

முதுமையெனும் வனம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday September 5, 2010

முதுமையெனும் வனம்

குமரி எஸ். நீலகண்டன்



முடிகளில் மூத்த
தலைமுடியினை முந்தி
மீசையில் நரை
உறைய ஆரம்பித்தது.
வெண்மை நுரை தள்ள
அசை போட்டுக்
கொண்டிருந்தது முதுமை.


தாடியில் நரை
ஓவியம் வரைந்தது.
இளமை ஆசைகள் மீசையில்
கருப்பு வண்ணத்தை
பீய்ச்சி விளையாடும்.


காலத்தின் பரப்பில்
கனிந்த கோலங்கள்
வரையும்.
தளர்ந்த உடலில்
இளமை நினைவுகள் தழுவும்.


தொடரும் நினைவுகளின்
நரம்புகளில்
இளமை முறுக்கேறும்
தாவிப் பாயும்
ஆடிப் பாடும்


உள்ளுக்குள் ஒரு காடு
பற்றி எரியும் அங்கே
முதுமைக்குள்
இளமை குளிர் காயும்


குமரி எஸ். நீலகண்டன்