Friday, May 6, 2011

அன்பு மழை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

அன்பு மழை
குமரி எஸ். நீலகண்டன்.


அலைபேசியில் அன்பின்
பரிமாற்றங்கள் குறுஞ்செய்திகளாய்
குவிந்தும் குழைந்தும்
சிந்தி சிதறிக் கொண்டிருக்க
அவளுக்கொரு அழைப்பு
வந்தது.

ஹாய் என்றாள்..
அவசரமாய் எங்கோ
செல்வதாகச் சொன்னாள்.
அப்படியா என்று
ஆச்சரியப் பட்டாள்..

சுதாவுக்கு ஹாய் சொல்லு..
சந்தோஷுக்கும் ஒரு ஹாய் சொல்லு..
மல்லிகாவுக்கு ஹாய் சொல்லு
மஞ்சுவுக்கும் ஹாய் சொல்லு
வர்ஷூக்கும் ஹாய் சொல்லு
லாரன்ஸ்க்கும் ஹாய் சொல்லு
ஜெயஸ்ரீக்கும் ஒரு ஹாய் சொல்லுடி..
என்று எத்தனையோ பேருக்கு
ஹாய் சொல்ல சொன்னவள்
இடையில்...
கொஞ்சம் நில்லுடி
இன்னொரு கால் வருது
என்று சொல்லி
ஒரே நிமிடம் லைனில்
காத்திருக்கச் சொன்னாள்..

இன்னொரு பழைய
பெரிய நைந்து போன
அலைபேசியில்
எரிந்து விழுந்தாள்
இன்னப் பாரு..
திருப்பி திருப்பி
என்னக் கூப்பிடாதே..
நான் ரெம்ப
பிசியா இருக்கிறேன்.
எனக்கு எதுக்கும்
நேரமே இல்லை.
இப்போ எனக்கு
ஊருக்கு வரவே முடியாது.
வயசானா பேசாம
இருக்க மாட்டே..
தொந்தரவு பண்ணாதே என்று
அந்த அழைப்பை
அழுத்தி நிறுத்தி விட்டு....

தொடர்ந்து ஹாய்
பாடினாள்.. அடுத்து
ஒரு அப்படியா என்று
ஆச்சரியப்பட்டு விட்டு
ரியலி இண்ணைக்கு
உங்களையெல்லாம்
மிஸ் பண்ணறேன்டீ
என்று கூறி
பை சொல்லிவிட்டு
எதிரே வந்த
இன்னொரு பெண்ணிடம்
ஹை சொன்னாள்.