Tuesday, May 31, 2011

இது மருமக்கள் சாம்ராஜ்யம் - திண்ணை இதழில் வெளியான சிறுகதை

இது மருமக்கள் சாம்ராஜ்யம்
குமரி எஸ். நீலகண்டன்

 ''அம்மா தர்மம்.....''- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்தது. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் 'அவர்களுக்குத் தென்னந்தோப்பு உண்டு' எனச் சாட்சி கூறும் வகையில், அவள் மரவையை விட்டுச் சோற்றிற்குச் செல்லக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. தீயலில் எண்ணெய் ஏராளமாகத்தான் மிதந்தது. பார்த்ததுமே அந்தச் சோறும், கூட்டும் அந்தப் பிச்சைக்காரனின் உடலினுள் தெம்பை ஏற்றி அவன் பேச்சுக்கு ஒரு புது சக்தி கொடுத்தது. ''மகராசியா வாழணும்மா''- அவளுடைய வாழ்க்கையே இவன் நாக்கில் இருப்பது போல்தான் வாழ்த்தும் கூறி விட்டான்.
 அங்கங்கே சில முணுமுணுப்புகள், ''கண்டவன் காசு கரிக் கட்டையாய் போகுது'' என்று, அக்கம் பக்கத்தார் சொல்லும் அளவுக்கு அது என்ன கண்டவன் சொத்தா? அவளது கணவன் சொத்தில் தானே வாரி வழங்குகிறாள்?
 இப்படி நீங்கள் அந்தக் காலத்தில் நினைத்திருந்தால் அப்போதைய சட்டப்படி தவறுதான். இசக்கி அம்மாள் ஊரிலுள்ள அனைவருக்குமே அபிமானி. சிலருக்கு அவள் பாரியின் பரம்பரை, ஆனால் அவளது ஒரே ஒரு எதிரி கணவன் சண்முகப்பிள்ளையின் அக்கா மகன். அதாவது மருமகன் பதினான்கு வயது ரெங்கம் பிள்ளைதான். அவன் சண்முகம் பிள்ளையின் ஐம்பது ஏக்கர் நிலத்திற்கும் அடர்த்தியான தோப்பு ,வீடு யாவற்றிற்கும் வாரிசு ஆயிற்றே, ரெங்கம் பிள்ளை என்ற பெயருடைய எந்தக் குழந்தையையும் கழுத்தை நெரித்துவிடத் தோன்றும் அவளுக்கு. அத்தகைய உணர்ச்சியை அவன் அவளது மனத்தில் ஊன்றிவிட்டான். அவள் நெற்றியெல்லாம் ''சுரீர்! சுரீர்!'' எனக் குத்தியது. சண்முகம் பிள்ளை நேற்று அவளது முடியைப் பிடித்து அடித்த அடிதான் இன்று அவளின் தலைவலிக்குக் காரணம். நாலு நாட்களுக்குப் பின்னால் நேற்றுதான் ரெங்கம் பிள்ளை மாமாவைப் பார்க்க வந்தான். தன் மருமகனைக் கண்டதுமே சண்முகம் பிள்ளை தலை கீழாய்த் துள்ளிக குதிப்பார். அவன் செய்யும் அசட்டையான காரியங்களையும் அசாத்தியமாகப் புகழ்வார். அப்படியிருக்க அவன் செய்யும் சிறிது பயனுள்ள காரியங்களுக்கு மகுடமே சூட்டி விடுவார். ஆனால் தன் சொந்த மகளைக் கண்டும் காணாமலும் வளர்த்து வந்தார்.
 ''ஏ இசக்கி! வயல்லே தண்ணி நிக்காண்ணு பார்த்துக் கிட்டு வர்றேன். மருமகப் பய வந்திருக்காமுல்லா! மொச்சைக் கொட்டையும் கடலைத் தீயலுமுன்னா அவனுக்கு உசிரு. பய மூக்கு முட்டச் சாப்பிடுவான். மொச்சைக் கொட்டைக் கடலைத் தீயலும், பயறுத் தொவையலும், முட்டையும் , முருங்கைக்காய் அவியலும் முக்கியம். கூட ரெண்டு மூணு வை!'', என இசக்கி அம்மாளிடம் கட்டளை இட்டு விடடு வயலுக்குச் சென்று விட்டார் மாமா.           
 கணவனின் கட்டளையில் அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது! பின்வாசலில் கழுவ இட்டிருந்த எச்சில் தட்டத்தை எடுத்தாள். முந்தைய நாள் பழைய கஞ்சியைத் தட்டு நிறைய விட்டாள். காளான் பூத்த அந்தக் கஞ்சியின் புளிச்ச வாடை உடலைக் குமட்டியது. சிறிது உப்பை அள்ளிப் போட்டு, ஒரு நார்த்தங்காத் துண்டையும் இட்டுத் திண்ணுலே'' என மருமகனுக்குக் கட்டளை இட்டாள்.
 அத்தையின் அமர்க்களத்தில் அத்தனையும் தின்று விட்டான். பின் அத்தையைக்  காணாது தோட்டம் சென்று வாந்தியாகக் கொப்பளித்தும் விட்டான். மாமா மட்டும் அறிந்தால் இன்று அத்தையின் இடத்தில் அடுத்தவள் இருப்பாள்.
 ரெங்கம் பிள்ளைக்குப் பசி வயிற்றைப் பிய்த்து எடுத்தது. ஆத்திரமாய் ஆற்றங்கரைக்கு ஓடினான். அரை அடி ஆழத்தில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடந்தான். மாமாவின் தோப்பிற்குள் நுழைந்து தென்னை மரத்தில் ஏறிப்பத்துப் பதினைந்து இளநீரையும், விளையாத தேங்காய்களையும் பறித்து எறிந்தான். ஒரு ஓலையில் தேங்காய்களைக் கட்டி ஈஞ்சப் படப்பில் பத்திரமாக வைத்தான். ஆற்றங்கரையில் ஓலைக் குடிசையில் இருக்கும் இட்லியாச்சியிடம் சென்றான்.
 ''யாச்சி! கோரங்கால்லே கொஞ்சம் தேங்காயைப்பறிச்சுப் போட்டிருக்கேன். கொஞ்சம் கழிச்சு வருவேன்.  தேங்காயும், நெய்யும் நெறைய விட்டுத் தோசை சுட்டு வச்சிரு, என்னா?
 கிழவிக்குப் பலத்த சந்தோஷம், ருசியுடன் சுட்டுக் கொடுக்கப் போகும் நான்கு தோசைகளுக்காகக் கிடைக்கப் போகும் பதினைந்து தேங்காய்களை எண்ணி, ஒத்தைப் பல்லிலும் அமர்க்களமாய்ச் சிரித்தாள்.
    சண்முகம் பிள்ளை வயலுக்குச் சென்றால் குறைந்தது நான்குமணி நேரமாவது ஆகும் என இசக்கி அம்மாளுக்குத் தெரியும். சண்முகம் பிள்ளையின் கட்டளைப்படி தீயல் குழம்பும், பல வகையறாக்களும் வைத்து, தாயும், மகனும் மட்டும் சட்டமாகச் சாப்பிட்டார்கள். சண்முகம் பிள்ளைக்காகச் சாப்பாட்டையும், கூட்டு இருந்த தூக்கு வாளியையும் தனியாக எடுத்து, கைக்கு எட்டாத உயரமான கருப்பட்டி பந்தயத்தின் மேல் வைத்தாள். தெருவில் வாயாடி பண்ணிய இருவர் பேச்சில் ஈயாடிப் போனதிலிருந்து தன் பண்ணையார் கணவரின் வருகையை உணர்ந்தாள். வந்ததும் வராததுமாக, ''பய சாப்பிட்டானா?'' என ஒரு கேள்வி கேட்டார்.
''நீங்க வருகுது வரை அவனைக் காக்க வைப்பேனா. அப்பதே அவன் மூக்கு முட்ட அடிச்சாச்சு'' சமாளித்தாள்?
'' லே! தீயக்குழம்பு எப்படிலே'' மாமா கேட்டார்.
''படு ஷோரு மாமா''- நம்மால் வீட்டில் குழப்பம் எதற்கு? என சமாளித்தான். பசி குடலைப் புரட்டியது. இட்லியாச்சி ருசியாக நெய் தோசைச் சுடடு வைத்திருப்பாள். மாமாவைக் காணாது இட்லியாச்சி வீட்டிற்குச் செல்ல நினைத்தான். அப்போது மாமாவின் வார்த்தை தலையில் இடி இடித்தது போல் இருந்தது.
''லே! ஆற்றிலே தண்ணி துறந்து விட்டிருக்காம்லே! ஆத்துப் பக்கம் போகாதே!''
      இட்லியாச்சியைப் பார்க்கணும்ண்ணா ஆற்றைக் கடக்கணுமே! வயிறு குமட்டிக் கொண்டிருந்தது. ஆத்திரத்தில் அவனுக்கு ஒரே வழி தான் தெரிந்தது. அடுக்களையைப் பார்த்தான். அத்தையைக் காணவில்லை, மேல் பலகை மீது ஏணியைச் சாய்த்தான். ஒவ்வொரு கம்புப  படிகளிலும் கவனமாகக் காலூன்றி ஏறினான். தீயக்குழம்பையும் சோற்றையும் எடுத்தான். ஏணி சறுக, பானை உடைய டமார்.....டமார்.....என்ன சத்தம்?......என்ன சத்தம்?......
     மாமாவின் கேள்விக்கு விடை தோன்றி விஷயத்தை அம்பலப்படுத்த, அத்தையின் தலைமுடி மாமாவின் கையில், ''உலுக் உலுக்கெனக்'' குலுக்கிய குலுக்கலில்தான் அத்தைக்கு இன்று தலைவலி. ''புள்ளே! என் சொத்துக்குக் காரணவஸ்தனுக்கா இப்படித் துரோகம் பண்ணினே!'' எனக் கூறி அத்தையின் உடம்பை மத்தளமாய் அடித்தார்.
  மாமாவுக்கு அன்று ரொம்ப சீரியஸ், உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. எலும்பு புடைக்க 'நரைமுடி' சிலிர்த்திருந்தது. ஆனாலும் அவரது மீசை எலுமிச்சைப் பழத்தைக் குத்தி வைக்கும் அளவிற்குக் கூராக இருந்தது. இடை இடையே ''ரெங்கா! ரெங்கா!;;- என உறுமிக் கொண்டிருந்தார். கம்பவுண்டர் மாமாவின் உடம்பைப் பார்த்து விட்டு ''முகத்திலே சாவுக்குள்ள ஐசுவரியம் வந்தாச்சு! ஒரு வாரம் தேறாது!'' எனச் சொல்லி விட்டார். இதுதான் சமயமென இசக்கி அம்மாள் மருமகனைப் பற்றி நன்றாக 'கோள்' மூட்டினாள். விரல்களைத் தன் கண்களில் குத்திக் கண்ணீரைச் சுரக்க வைத்தாள். எப்படியும் சொத்து சட்டப்படி அவளுக்கு கிடைக்கப் போவதில்லை. எனினும் எப்படியாவது அவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையாவது அபகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டாள்.
''ஆனாலும் இந்தப் பய என்னைப் பார்க்க வரல்லியே இசக்கி!''- மாமா.
 ''ஆமா! எத்தனை பேர் கிட்டே சொல்லி விட்டாச்சு! பாசம் இருந்தாத்தானே''-இசக்கி
 ''ஆமா! இந்தப் பயலுக்கு ஒரு காசு கொடுக்கக் கூடாது. ஏ இசக்கி, எனக்கு உறைப்பா ஏதாவது திங்கணும்ண்ணு இருக்கு! பாஞ்சாலியம்ம வீட்டில் போய்க் கொஞ்சம் கருக்கலிட்ட நெல்லிக்காய் வாங்கி வாயேன்! அவளோட கைராசி ரெம்ப ருசியா இருக்கும்''.
 இசக்கிக்குத் தெரியாமல் சேமித்து வைத்த பணம் தலையில் பொட்டலமாய் இருந்தது. பாஞ்சாலியம்ம வீட்டிற்கு இசக்கி சென்று வர, கால்மணி நேரமாவது ஆகும். அதற்குள் அங்கிருந்த கம்பௌண்டரிடம் மருமகனைக் கூப்பிடச் சொல்லி அனுப்பினார். மருமகனும் பாசத்தோடு ஓடிவந்தான். அதற்குள் இசக்கியும் வந்து விட்டாள்.
  மாமா அவசர அவசரமாக ''லேய்! என்னை நீ பார்க்க வரல்லியே! என் சொத்து மட்டும் உனக்குப் போரும் என்னா? ஒளிஞ்சி போ'' எனக் கோபத்தில் திட்டுவது போல் பணப் பொட்டலத்தைக் காரியமாக அவனிடம் எறிந்தார். தன் பொறுப்பு முடிந்த திருப்தியில் மாமா கண்களை மூடிக் கொண்டார்.
 ரெங்கன் ''மாமா'' எனக் கதறினான். கணவனென்ற உறவு தூரப்பட்டது போல் ஏமாற்றத்தில் சண்முகம் பிள்ளையின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இசக்கி.

 குறிப்பு - திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரச குடும்பத்தில் ஆட்சிக்கு உரிமையுடையவர் மருமகன் முறையில் வருபவரே என்பது வரலாறு. அதே வழியில் திருவிதாங்கூரில் சில சாதியினரிடமும் தந்தையின் சொத்து மருமகனுக்குச் செல்ல வேண்டுமென்ற நியதி இருந்தது.

Friday, May 27, 2011

வருடச் சங்கடம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

வருடச் சங்கடம்
குமரி எஸ். நீலகண்டன்

அப்பா அம்மாவோடுதான்
அவனது ஒவ்வொரு
பிறந்த நாளும்.


கேக் வெட்டி
மெழுகுத் திரிகள் ஒளிர
வருடம் தவறாமல்
கொண்டாடி வருகிறான்.


வருடந்தோறும்
மெழுகுத் திரிகளோடு
அவன் வயதும்
பெருகப் பெருக அவனது
அப்பாவும் அம்மாவும்
அதே இளமையில்
புகைப்படத்தில்..

Tuesday, May 24, 2011

பம்பரக் காதல் - திண்ணை இதழில் வெளியான கவிதை

பம்பரக் காதல்
குமரி எஸ். நீலகண்டன்

கயிறு காதலில்
பம்பரத்தைச்
சுற்றிச் சுற்றி
வந்தது. அதன்
உடலெங்கும்
அழுந்தத் தழுவி
தன்னன்பை
அந்தரங்கமாய் சொன்னது.

எதுவும் சொல்லாமல்
இயல்பாய் இருந்த
பம்பரத்தின் கயிற்றை
இழுத்துப் பிரித்த போது
ஒற்றைக் காலில் பம்பரம்
சுற்றிச் சுற்றி வந்தது
துணையைத் தேடி.

இத்து இத்து கயிறு
செத்துப் போகும்
நிலையிலும் முனை
மழுங்கிய பம்பரம்
முனைந்தது தன்
காதல் சுற்றை
இயன்றவரை.

களித்தனர் தோழர்கள்
கயிற்றோடு பம்பரம்
களித்தக் காதல்
விளையாட்டில்.


சில கவிதைகள் மனதில் ஆழமாய் பம்பரமாய் சுற்றும்... அதன் தடங்களில் கூட இன்னொரு கவிதை உருவமளிக்கும்.. நான் சில மாதங்களுக்கு முன்பு நவீன விருட்சத்தில் படித்த ராமலக்ஷ்மியின்  அழகிய வீரர்கள் கவிதை கூட இந்த கவிதையின் காரணமாக இருக்கலாம்... அந்தக் கவிதையையும் இந்த இணைப்பில் படித்துப் பாருங்கள்... அழகிய வீரர்கள்

Thursday, May 19, 2011

அறியாப் பிறவி - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

அறியாப் பிறவி
குமரி எஸ். நீலகண்டன்

நான் கோபக்காரன்
கொலைகாரன்
காட்டுச் சிங்கமென்று
எனது கவிதை
நாயகனுக்குத் தெரியாது.

அப்பாவியாய்
அபகரிக்க வல்லவனாய்
எண்ணி என்னை
அன்றாடம் அலைக்கழிக்கும்
சூன்யக்காரனான
அவனறிய மாட்டான்
நான் அவனை
அவ்வப்போது எழுத்தால்
கண்டந்துண்டமாய்
வெட்டிப் பிளப்பதை.

பாவம் அவன்
என் கவிதைகளைப்
படிப்பதில்லை.
கவிதைகளும்
அவனுக்குப் பிடிப்பதில்லை.

Monday, May 16, 2011

நெய்தல் போர் - திண்ணை இதழில் வெளியான கவிதை

நெய்தல் போர்
குமரி எஸ். நீலகண்டன்.

கனத்த இதயத்தோடு
கடற்கரை வந்த போது
இதமானக் காற்றில்
இதயம் கரைந்தது.

கடலைக் கொரித்து
கடலையேக் குடித்தேன்.

உள்ளிருந்து உறுமிக்
கொந்தளித்த சுனாமி அலைகள்
ஆர்ப்பரித்த கடலைக் கண்டு
அடங்கி ஒடுங்கின.

மணற் பாதுகைகளாய்
உப்பு மணல்கள்
கால்களோடு
ஒட்டிக் கொண்டன.

களைத்து சிறிது
கரையினில்
கண்ணயர்ந்த போது
நிலத்திலிருந்து
ஆயிரமாயிரம்
கொந்தளித்த கடல்கள் வந்து
கடலோடு போரிட்டு
கரைந்து கொண்டிருந்தன.

கடலை விற்பவர்களும்
பட்டம், பஜ்ஜி
விற்பவர்களும்
கடலோடு சேர்ந்து
போரிட்டனர்.

எப்போதும் வென்றானென்ற
நிதர்சனத்தில் கடல்
நெய்தல் பூசூடி
பாடிக் கொண்டிருந்தது.

மௌன சாட்சியாய்
பெருமிதப் புன்னகையுடன்
நிலா கடலில்
முகம் பார்த்துக்
கொண்டிருந்தது.

Wednesday, May 11, 2011

வனவாசம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

வனவாசம்
குமரி எஸ். நீலகண்டன்

பசுமையற்ற
காங்கிரீட் காடுகளினிடையே
விலங்குகள் விலக்கிய
வீச்சம் நிறைந்த
வீதி நதிகளின்
விஷ வாசத்தினூடே
நான்கு சக்கர கால்களுடன்
காட்டுக் கத்தலில்
நகர்ந்து செல்கிற
சிங்கங்கள், புலிகள்,
காட்டு யானைகள்,
கரடிகள், பன்றிகள்,
குள்ள நரிகள்,
விஷப் பூச்சிகள்,
கண்ணாடி முட்கள்,
காட்டு ராஜாக்களின் மிரட்டல்
இவற்றினிடையே பலஹீனமான
ஒரு காட்டு வாசியின்
அச்சத்துடன்
கடந்து செல்கிறேன்
காடுகளை
வேட்டைக் கருவிகள் ஏதுமின்றி
வெறும் நம்பிக்கைகளுடன்.

Friday, May 6, 2011

அன்பு மழை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

அன்பு மழை
குமரி எஸ். நீலகண்டன்.


அலைபேசியில் அன்பின்
பரிமாற்றங்கள் குறுஞ்செய்திகளாய்
குவிந்தும் குழைந்தும்
சிந்தி சிதறிக் கொண்டிருக்க
அவளுக்கொரு அழைப்பு
வந்தது.

ஹாய் என்றாள்..
அவசரமாய் எங்கோ
செல்வதாகச் சொன்னாள்.
அப்படியா என்று
ஆச்சரியப் பட்டாள்..

சுதாவுக்கு ஹாய் சொல்லு..
சந்தோஷுக்கும் ஒரு ஹாய் சொல்லு..
மல்லிகாவுக்கு ஹாய் சொல்லு
மஞ்சுவுக்கும் ஹாய் சொல்லு
வர்ஷூக்கும் ஹாய் சொல்லு
லாரன்ஸ்க்கும் ஹாய் சொல்லு
ஜெயஸ்ரீக்கும் ஒரு ஹாய் சொல்லுடி..
என்று எத்தனையோ பேருக்கு
ஹாய் சொல்ல சொன்னவள்
இடையில்...
கொஞ்சம் நில்லுடி
இன்னொரு கால் வருது
என்று சொல்லி
ஒரே நிமிடம் லைனில்
காத்திருக்கச் சொன்னாள்..

இன்னொரு பழைய
பெரிய நைந்து போன
அலைபேசியில்
எரிந்து விழுந்தாள்
இன்னப் பாரு..
திருப்பி திருப்பி
என்னக் கூப்பிடாதே..
நான் ரெம்ப
பிசியா இருக்கிறேன்.
எனக்கு எதுக்கும்
நேரமே இல்லை.
இப்போ எனக்கு
ஊருக்கு வரவே முடியாது.
வயசானா பேசாம
இருக்க மாட்டே..
தொந்தரவு பண்ணாதே என்று
அந்த அழைப்பை
அழுத்தி நிறுத்தி விட்டு....

தொடர்ந்து ஹாய்
பாடினாள்.. அடுத்து
ஒரு அப்படியா என்று
ஆச்சரியப்பட்டு விட்டு
ரியலி இண்ணைக்கு
உங்களையெல்லாம்
மிஸ் பண்ணறேன்டீ
என்று கூறி
பை சொல்லிவிட்டு
எதிரே வந்த
இன்னொரு பெண்ணிடம்
ஹை சொன்னாள்.

Monday, May 2, 2011

இலையின் முனங்கல் - வல்லமையில் வெளியான கவிதை

இலையின் முனங்கல்
குமரி எஸ். நீலகண்டன்

ஒவ்வொருவரும்
செடியின் இலையைக்
கிள்ளி எறிகிற போதும்
இலை சொல்லுகிறதாம்
உங்களுக்கு
குழந்தைகள் என்று
இருந்தால்
பாவம் அதை
பார்த்து கிள்ளுங்கள் என்று,,,