Tuesday, August 10, 2010

பூனைக் காவல், மீனுவும் பூனையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதைகள்

19.4.10


பூனைகள் பூனைகள் பூனைகள் 21

பூனைக் காவல்

குமரி எஸ்.நீலகண்டன்

என்னை அறியாமலேயே
என்னுள்
ஏழெட்டுப் பூனைகள்
உலாவிக் கொண்டிருக்கின்றன.

எலியைக் கண்டதும்
எட்டிப் பாய்ந்தது
அந்தக் கருப்புப் பூனை.
பாலைக் கண்டு
பதுங்கி வந்தது
அந்த பரம
சாதுப் பூனை.
உருட்டுக் கண்களுடன்
உற்றுப் பார்த்தது
அந்த உளவுப் பூனை
என்னுள் எங்கோ
உறு உறுவென்று
உறுமிக் கொண்டே
ஒளிந்திருக்கிறது
இன்னொரு பூனை

என் மீசையை
தன் மீசையாக்கிக்
கொள்கிறது அந்த
தளர்ந்த பூனை
குதித்து குதித்து
குதூகலித்து
கும்மாளமிடுகின்றன
இன்னும் சில
குட்டிப் பூனைகள்
நான் கோபத்தில்
பதுங்கி பதுங்கிப்
பாய்கையில் யாரும்
என்னைக் கண்டு
பயப்படாமல்
காவல் காக்கின்றன
இந்த பூனைகள்
திருட்டு விழிகளுடன்

13.4.10


பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20





மீனுவும் பூனையும்
குமரி எஸ்.நீலகண்டன்
மீனு அவளது அம்மாவிடம்
அநியாயத்திற்கு
கோபப்படுவாள்.
அம்மாவைப் பற்றியே
அம்மாவைப்
பிடிக்காதவர்களிடம்
ஆயிரம் குசும்பு
சொல்லி இருக்கிறாள்

கணவன் ஏதாவது
சொன்னால் பாம்பாய்
படமெடுப்பாள்
மாமியாரிடம்
மணிக் கணக்கில்
சண்டை போடுவாள்

அவளை யாரும்
குத்தம் சொன்னால்
கொத்துகிற பாம்பாய்
விஷத்தை பீய்ச்சுவாள்

ஆனால் மீனு அவளது
பூனையுடன் மட்டும்
மிகுந்த அன்பு காட்டுவாள்.
அதற்கு நேரம் தவறாமல்
பால் கொடுப்பாள்
அதன் பஞ்சு போன்ற
முதுகைத் தடவிக்
கொடுப்பாள். அதனை
ஷாம்பு போட்டு
நாள் தவறாமல்
குளிப்பாட்டுவாள்.

பூனையோடு கொஞ்சியும்
விளையாடுவாள் பூனையின்
காலில் ஏற்பட்ட
சிறிய காயத்திற்காக
அண்டை அயலாரிடம்
ஐயோ பாவம்
ஐயோ பாவமென
துக்கித்து துவண்டு
போனாள்.

எல்லோரும்
அந்த பூனையை
பதுங்கி பதுங்கி
ஒரு திருட்டுப் பார்வையுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

No comments: