Saturday, February 26, 2011

ஒரு கவிதானுபவம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

ஒரு கவிதானுபவம்
குமரி எஸ். நீலகண்டன்

எல்லாக் கவிதைகளிலும்
எங்கோப் பார்த்த முகம்
கேட்ட எள்ளல்
உணர்ந்த கோபம்
சுட்ட நெருப்பு
சுருக்கென்று குத்துகிற ஊசி
பரவசித்தப் பசுமை
திகட்டியத் தென்றல்
நகர்த்திய நடையென
கவிதைகளின் அணிவகுப்பில்  
சாயலின் சங்கமத்தில்
சந்திக்காத ஒரு கவிதையை
நான் தேடிக்
கொண்டிருந்த போது
நான் இதுவரை சந்திக்காத
அந்தப் புதியவன்
என்னைத் தட்டி
உங்களை எங்கோப்
பார்த்த மாதிரி
இருக்கிறதென்று
என்னைக் கலைத்துவிட்டுப்
போனான்.

Tuesday, February 22, 2011

கடவுளின் பெருமிதம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளின் பெருமிதம்
குமரி எஸ். நீலகண்டன்


தொடர்ச்சியான
அநியாயங்களின்
சாட்சியான அவன்
கடவுளைத் திட்டிக்
கொண்டிருந்தான்.

உலகில்
கடவுளே இல்லை.
அப்படிக் கடவுள் இருந்தால்
அவன் திருடன்.
கொள்ளைக் காரன்,
அயோக்கியன்..
பித்தலாட்டக்காரன்.
ஏமாற்றுப் பேர்வழி...

நிறைய பேர்
கடவுளின் நாமம் சொல்லி
பூஜை செய்து கொண்டிருக்க
சோர்ந்திருந்த கடவுள்
நம்பிக்கை இழந்து திட்டிய
அவனை மட்டும் பார்த்து
நம்பிக்கையும்
பெருமிதமும் கொண்டார்.

Saturday, February 19, 2011

மரப்பாச்சியின் கண்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

மரப்பாச்சியின் கண்கள்
குமரி எஸ். நீலகண்டன்

கோடியைக் கொட்டி
புதிய வீட்டைக் கட்டி
பால் காய்ச்சி
பளபளக்கும் வீட்டில்
பவுசாக குடி
வந்தாகி விட்டது.

பழைய மேசை... நாற்காலி,
கடிகாரம், பக்கெட்,
மரப் பொருட்களென
பழையப் பழையப்
பொருட்களெல்லாம்
புதிய வீட்டைப்
பார்க்காமலேயே
வேலைக்காரி,
குப்பைப் பெட்டி,
பேப்பர்காரனென
பல திசைகளிலும்
பறந்து போய் விட்டன.

புத்தம் புதியப் பொருட்களுடன்
புத்தொளி வீசியப் புதிய வீட்டில்
ஐந்து வயது சுனந்தாவின்
அழகான அயல் நாட்டுப்
பைக்குள்ளிருந்து
ஒரு சிறு வெளி வழியாக
யாருக்கும் தெரியாமல்
மறைந்து பார்த்துக்
கொண்டிருந்தன
அந்த அழகான
பழைய மரப்பாச்சிப்
பொம்மையின்
திருட்டு விழிகள்
சுனந்தாவின் விழிகளோடு
போட்டி போட்டுக் கொண்டு.

Wednesday, February 16, 2011

என்னுள் ஒருவன் கவிதை குறித்து...

என்னுள் ஒருவன் கவிதை  குறித்து நண்பர் திரு.டோக்ரா அவர்களின் விமர்சனம்
எனது என்னுள் ஒருவன் என்ற கவிதையின் விமர்சனத்தோடு அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் நண்பர் திரு. டோக்ரா அவர்கள் அவரது கவிதை விமர்சனம் என்ற வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மீண்டும். அதற்கான இணைப்பு இதோ

நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2

நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2


நீலகண்டன் எழுதிய கவிதை “என்னுள் ஒருவன்” வார்த்தைகளுடன் அழகாக விளையாடி நம்மைப் பற்றியே நாம் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதால் நாம் மற்றவர்கள் கண்ணோட்டத்துடன் உலகத்தைப் பார்க்க இயலாமல் போய்விடுவதை எடுத்துரைக்கிறது.

மனித மனம் அதன் எல்லை விளிம்புகளைத் தாண்டி விரிவாக வாய்ப்புகள் இருந்தும், நம்முடனான நமது ஈடுபாடு நம்மை மற்றவர்களைப் பற்றி சிந்திக்க அனுமதிப்பதில்லை. நமது மனம் விரிவு பெற நாம் சற்று நேரம் நம்மை மறந்து உலகத்தை மற்றவர்கள் கண்ணோட்டத்துடன் காணக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் மனத்தில் வசிக்கும் “நான்” என்பவன் மனமாகிய இல்லத்தை விட்டுச் சென்று அங்கே இன்னொருவர் வந்து வசிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் “நான்” என்பவரின் தலையீட்டு இல்லாமல் இன்னொரு கண்ணோட்டத்தில் உலகத்தைப் பார்ப்பது சாத்தியமாகும். மேலதிகாரிக்குத் தனக்குக் கீழ் பணிபுரிபவரின் கஷடங்கள் புரியும்; கீழ் பணி புரிபவருக்கு மேலதிகாரியின் கவலைகள் தெரியும். மாணவன் ஏன் படிப்பில் அக்கறை காட்டவில்லை என்பதை ஆசிரியர் புரிந்து கொள்வார்; தான் நன்றாகப் படிக்காததால் ஆசிரியர் ஏன் கோபப்படுகிறார் என்பது மாணவனுக்குப் புரிந்துவிடும்.
இந்தச் சிறந்த கவிதை தமிழ் மொழி தெரியாதவர்களுக்குப் போய்ச் சேர இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளேன். இதோ அந்த கவிதை:

என்னுள் நானும்
உன்னுள்
நீயுமில்லாத போது
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
சாவகாசமாய்
உரையாடுகிறோம்…


என்னுள் நானில்லாத போது
பலருள் எனக்கும்
என்னுள் பலருக்கும்
இடமிருக்கிறது.


என்னுள்ளிருந்து
வெளியேறும் நான்
வெகு அருகிலும்..
சில நேரம் விலகியும்
மறைந்தும்
சில நேரம் வெகு
தூரத்திலிருந்தும்
வெகு அருகில் வந்தும்
அச்சுறுத்திக்
கொண்டிருக்கிறது.


என்னை அறியாமல்
என்னுள் புகுந்து
உச்சியிலாடி உட்கலகம்
செய்கிறது..


ஆயிரம் கைகளிலும்
ஆயுதங்கள் தாங்கி
அகத்திலிருந்து
கைகளைச் சுழற்றும்
அதன் ஆர்ப்பாட்டத்தில்
இலக்கு எதிரானாலும்
இழப்பு எனக்கே எனக்கு.


நானின் கையிலுள்ள
நாணின் சுருக்கில்
தலையை ஈர்க்கும்
என்னுள்
நானில்லாத போது
என்னுள் பலருக்கும்
பலருள் எனக்கும்
பட்டாம் பூச்சியாய்
பறக்க இயல்கிறது.


எனக்கே எதிராய்
எப்போதும்
எனது நான்…..


Here is a translation of the above poem in English:

When I am not
Within me
And you are not
Within your self
Then
I within you
And you within me
Are able to relax and talk.


When we do not
Occupy our selves
Then our self
Is able to accommodate many
And expand. 


Whenever I leave my self
I constantly threaten
To come back
Whether from afar
Or close
And disturb others
Who occupy me then. 


I become
Like a demon
Threatening to come back
Carrying weapons in all hands
Jutting out from my Ego —
Weapons that
While they are aimed at others
Cause me damage.


When the string
That pulls me within my self
Is let loose
And I do not occupy my self
Then
I within others
And others within me
Flutter around
Like colourful butterflies. 


The one who hinders me always
Is my “I – ness”.


3 Responses to நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2


  • Dr.k.S.J.Wilson says:
    Really It is a very loveable Poem. As others says every body in the world should read it and understand themselves. The lines reflect that the poet as a genius person. It is the most essential one in todays life style. I wish to give more poems like this



  • dogrask says:
    Thanks Dr. Wilson. This blog is intended to popularise good Tamil poetry. That is why I have nick-named it “தமிழ் கவிதைக்கு என் தொண்டு”.
    I appreciate your valuable comment.



  • //என்னுள் நானில்லாத போது
    பலருள் எனக்கும்
    என்னுள் பலருக்கும்
    இடமிருக்கிறது.//
    இந்த நான்கு வரிகளுக்குள் எல்லாமே அடங்கியுள்ளன.
    நல்லதொரு கவிதைக்கு சிறப்பான அங்கீகாரம் தந்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.




  •  

    Tuesday, February 15, 2011

    புத்தகப் பைத்தியம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

    புத்தகப் பைத்தியம்
    குமரி எஸ். நீலகண்டன்

    எனக்கு புத்தகமென்றால்
    பைத்தியம்.
    என் மனைவிக்கு
    புத்தகத்தைக் கண்டாலே
    பைத்தியம்.

    என் மாமனார் சொன்னார்
    சீ பைத்தியக்காரி
    இதையெல்லாம்
    பெரிது படுத்தாதே.
    புத்தகப் புழுவோடு
    புக்ககம் போயிருக்கிறாயென
    பெருமைப்படு என்றார்
    என் மனைவியிடம்.

    அதற்குள் என்
    கைப்பிள்ளை
    ஊர்ந்து ஊர்ந்து
    புத்தகத்தைப் பிய்த்து
    கிழித்துக் கொண்டிருந்தான்
    நான் படிக்காதப்
    பக்கங்களை...

    கிழித்து கசக்கிய
    பக்கங்களால் ஒரு
    பூச்சியைப் பிடித்து
    வெளியே எறிந்தார்
    என் மாமியார்

    புதிதாக ஒரு புத்தகத்தைப்
    படித்த திருப்தி எனக்கு.

    Sunday, February 13, 2011

    எனது கவிதை குறித்து ......

     எனது கவிதை குறித்து நண்பரின் விமர்சனம்

    அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய நண்பர் திரு. டோக்ரா அவர்கள்  அவரது என் கவிதை விமர்சனம் வலைப்பூவில் சுயநலத்தின் சுற்றுப்பாதை கவிதை குறித்து ஒரு இடுகையாக விமர்சனம் எழுதி உள்ளார். அதைப் படிக்க இதோ உங்களுக்காக அதன் இணைப்பு... 

    நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

    நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

    நீலகண்டன் என் நெருங்கிய நண்பர். அவரது கவிதைகளை http://neelakandans.blogspot.com/ என்னும் அவரது வலைப்பூவில் அடிக்கடி படிக்கிறேன். கவிதைகளில் அவர் பொதுவாகவே விஷயத்தை நேரிடையாகச் சொல்லாமல் ஒரு சூழ்நிலையை விவரிப்பதன் வாயிலாகத் தெரிவிப்பார். அந்தச் சூழ்நிலை நமக்கு விஷயத்தைத் தெரிவிப்பதோடு மட்டும் இல்லாமல் இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும்.
    “சுய நலத்தின் சுற்றுப் பாதை” என்ற கவிதையையே பாருங்கள். வாழ்க்கையின் ஒரு மிகச் சாதாரணமான, அன்றாடம் பல பேருந்துகளில் நடைபெறும் சங்கதி. ஆனாலும், மனித வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் நடக்கின்ற போட்டி மனப்பான்மையையும், அதன் பின்னணியாக இருக்கும் “எல்லாம் எனக்கே கிடைக்கட்டும், மற்றவர்கள் என்ன ஆனார்களோ எனக்கு கவலை இல்லை” என்று தன் மையச் சிந்தனை முறையையும் படிமங்கள் மூலம் காட்டுகிறது. அத்துடன் “கூட்டத்தில் மோதிக் கொண்டிருப்பவர்கள் என்னத்தான் செய்ய முடியும்? பாவம்!” என்று பரிதாப உணர்வையும் உருவாக்குகிறது.
    சங்கதி மிக சாதாரணமானதாக இருந்தாலும், அதை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இச்சூழ்நிலையைத் தங்கள் உயிருக்காகவும், ஒரு பெரிய லட்சியத்துக்காகவும் போர் களத்தில் இறங்கியிருக்கும் வீரர்களுடன் சொல்லாமலேயே ஒப்பிடுகிறது:

    அந்த இடத்தைப் பிடிக்க
    கைகள் கம்பிகளைப் பற்ற
    வாள்களாக
    சண்டையிடும்.

    இந்த வரிகளில் மட்டும் இல்லாமல், கவிதை முழுக்க குறைவான வசதிகளுக்காக கூட்டம் கூட்டமாக மக்கள் போட்டியிடும் நம் தற்காலச் சமுதாயத்தின் உண்மை நிலை வெளிபடுகிறது:

    தொங்கியும் சாய்ந்தும்
    சரிந்தும் வியர்த்தும்
    காற்றைப் பிழிந்து
    வியர்வை மிதந்த
    கனத்தக் கூட்டத்தில்

    பயணம் செய்யும் மக்கள் பேருந்தில் மட்டும் அல்ல வாழ்க்கையின் அனைத்துச் சூழ்நிலைகளிலும் இதே போல மோதி, முட்டி “இருக்கையைப் பிடிக்கும்” சவாலைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.
    கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேக நிலை மன அழுத்தத்தைத் தருகிறது:

    அவனின் பாவனை அசைவில்
    நிற்பவர்களின் ரத்தம்
    ஒடுங்கிய ஓடைகளில்
    உயர் அழுத்தத்தில் பாயும்.

    கிடைக்காத போது ஏற்படும் ஏமாற்றம் நகைச்சுவையாக அமைவதால் அவர்களது ஏக்கத்தை இன்னும் பலமாக சுட்டிக்காட்டுகிறது:

    அவன் எழாத போது
    பெய்யா மழையால்
    பொய்யாய் கலையும்
    கரு மேகமாய் …..

    கவிதை ஒரு புறம் மக்களின் தன்னையே சுற்றிச் சுற்றி வரும் “சுய நலத்தின் சுற்றுப் பாதை”யைப் பற்றிப் பேசினாலும், இன்னொரு புறம் ஒரு பேருந்து இருக்கைக்காக “உயர் அழுத்தத்தில் பாயும்” ரத்தத்துடன் “வியர்வை மிதந்த” மக்களின் பரிதாப நிலையையும் படம் போட்டுக் காட்டுவதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் போட்டியும் போராட்டமும் சந்திக்க வேண்டிய இன்றைய உலகத்தின் உண்மை நிலையையும் சுட்டிக்காட்டுகிறது.
    நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நீலா!

    3 Responses to நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

    1. வல்லமையில் வாசித்த அன்றே வியந்து கருத்தளித்திருந்தேன். பகிர்வுக்கு நன்றி.
    2. dogrask says:
      திரு ராமலக்‌ஷ்மி அவர்களே, விமர்சனம் படித்ததற்கு நன்றி. நீங்கள் மிக நன்றாக கவிதைகள் எழுதுகிறீர்கள் என்று நீலகண்டன் சொல்கிறார்.

     


    திரு டோக்ரா அவர்களுக்கு என் அன்பு நிறைந்த நன்றிகள்.

    குமரி எஸ். நீலகண்டன்

    Thursday, February 10, 2011

    சுயநலத்தின் சுற்றுப்பாதை - வல்லமை இதழில் வெளியான கவிதை

    சுய நலத்தின் சுற்றுப் பாதை
    குமரி எஸ். நீலகண்டன்

     ஓடும் பேருந்தில்
    தொங்கியும் சாய்ந்தும்
    சரிந்தும் வியர்த்தும்
    காற்றைப் பிழிந்து
    வியர்வை மிதந்த
    கனத்தக் கூட்டத்தில்
    இருக்கையை விட்டு
    எழுவதுபோல் எத்தனிக்கும்
    அவனைச் சுற்றி
    மந்தையாய் குவியும்
    சுயநலம்.

    அந்த இடத்தைப் பிடிக்க
    கைகள் கம்பிகளைப் பற்ற
    வாள்களாக
    சண்டையிடும்.

    அவனின் பாவனை அசைவில்
    நிற்பவர்களின் ரத்தம்
    ஒடுங்கிய ஓடைகளில்
    உயர் அழுத்தத்தில் பாயும்.

    அவன் எழாத போது
    பெய்யா மழையால்
    பொய்யாய் கலையும்
    கரு மேகமாய்
    அலைபாயும் அடுத்த
    இடத்திற்காய் சுயநலம்.

    Saturday, February 5, 2011

    என்னுள் ஒருவன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

    என்னுள் ஒருவன்
    குமரி எஸ். நீலகண்டன்

    என்னுள் நானும்
    உன்னுள்
    நீயுமில்லாத போது
    உன்னுள் நானும்
    என்னுள் நீயும்
    சாவகாசமாய்
    உரையாடுகிறோம்...

    என்னுள் நானில்லாத போது
    பலருள் எனக்கும்
    என்னுள் பலருக்கும்
    இடமிருக்கிறது.

    என்னுள்ளிருந்து
    வெளியேறும் நான்
    வெகு அருகிலும்..
    சில நேரம் விலகியும்
    மறைந்தும்
    சில நேரம் வெகு
    தூரத்திலிருந்தும்
    வெகு அருகில் வந்தும்
    அச்சுறுத்திக்
    கொண்டிருக்கிறது.

    என்னை அறியாமல்
    என்னுள் புகுந்து
    உச்சியிலாடி உட்கலகம்
    செய்கிறது..

    ஆயிரம் கைகளிலும்
    ஆயுதங்கள் தாங்கி
    அகத்திலிருந்து
    கைகளைச் சுழற்றும்
    அதன் ஆர்ப்பாட்டத்தில்
    இலக்கு எதிரானாலும்
    இழப்பு எனக்கே எனக்கு.

    நானின் கையிலுள்ள
    நாணின் சுருக்கில்
    தலையை ஈர்க்கும்
    என்னுள்
    நானில்லாத போது
    என்னுள் பலருக்கும்
    பலருள் எனக்கும்
    பட்டாம் பூச்சியாய்
    பறக்க இயல்கிறது.

    எனக்கே எதிராய்
    எப்போதும்
    எனது நான்.....

    Wednesday, February 2, 2011

    மேசை துடைப்பவன் - இந்த வார கல்கியில் வெளியான கவிதை

    மேசை துடைப்பவன்
    குமரி எஸ். நீலகண்டன்

    அந்த உணவு விடுதியில்
    மேசை துடைக்கும்
    அந்தச் சிறுவன்
    அவன் முகம்
    தெரியத் தெரிய
    பளபளவென
    அந்த மேசையைத்
    துடைத்துக் கொண்டே
    இருக்கிறான்.

    இருப்பவரைப் பொறுத்து
    மேசையில் அவன்
    முகத்தின் மேல்
    சிதறிய சட்னி... சாம்பார்...
    தேநீர்.. காப்பி என
    இத்யாதிகள்...

    அவனும்
    அவன் முகத்தில்
    எந்தக் கறையுமின்றி
    முகம் தெரியத் தெரியத்
    துடைக்கிறான்.
    ஒரு தடவை கூட
    மேசைக்குள்
    அவன் முகம்
    அவனைப் பார்த்து
    சிரிக்கவே மாட்டேன்
    என்கிறது.