வினோதக் காலை
குமரி எஸ். நீலகண்டன்
காலை என்பது
கடவுளின் வினோதம்.
இரவில் விதைத்த
நட்சத்திரங்கள்
வெளிச்சமாய் விரிகிற
வினோதம்.
இரவின் ரகசியங்கள்
இன்னும் ரகசியமாய்
பகலறியா பதுங்கு குழியில்
பாய்ந்து மறைகிற
வினோதம்.
கனவுகளில் குளித்து
வெளிச்சத்தில் உலர்த்த
விரிகிற காட்சிகளின்
விளையாட்டின் வினோதம்.
ஒட்டிய அழுக்குகளைத்
தட்டிக் கொள்ள
காலை அனுப்பும்
ஒளி ஓலையென
காலை என்பது
கடவுளின் வினோதம்.