Thursday, July 7, 2011

மௌனத்தின் முகம் - திண்ணையில் வெளியான கவிதை

மௌனத்தின் முகம்
குமரி எஸ். நீலகண்டன்

எப்போதும் மௌனமாய்
இருப்பதே உசிதமென
இருந்து விட்டேன்.

யாரிடமும் பேசுவதில்லை.
தவிர்க்க முடியாத
தருணங்களில்
ஓரிரு வார்த்தைகளை
தானமாய் விட்டெறிவேன்..

என் கண்களைக் கூட
பேசவிடாது
குனிந்து விடுவேன்.

வெளியே எல்லோரும்
நானிருக்குமிடம்
அமைதியின் உறைவிடமென
உற்சாகமாய்
சொல்லிச் சென்றார்கள்.

நாட்கள் செல்ல
செல்ல என் மௌன
முகத்தின் அகத்துள்
உச்சமாய் கூச்சல்..
சதா சலசலப்பும்
உச்சந்தலையை குத்தும்
உட்கலவரம்.

காதுகளற்ற
அகத்தின் முகத்துள்
கலவரக் காயங்கள்.

இரக்கமின்றி இன்னும்
இறுகி இருக்கிறது
வெளியே மௌனம்.