Sunday November 14, 2010
மாயவலை
குமரி எஸ். நீலகண்டன்
எல்லோருடைய
காதிலும் அலைபேசிகள்.
வார்த்தைகள் வாயிலிருந்து
நூலாய் வளர்ந்தும்
பாம்பாய் வளைந்தும்
வானவெளியில் மிதந்து
விரல் தட்டுகிற இலக்கில்
சரியாய் விழுந்து விடுகிறது.
வார்த்தைகளோடு
பூக்களும் அம்புகளுமாய்
பின்னிப் பிணைந்து
வான்வெளியெங்கும்
போர்க்களம்.
வெளி எங்கும்
நூல்கள் வலைகளாய்
விரிய அதில் சிக்கி
சிதைந்து போனவை
சிட்டுக் குருவிகள்....
காணாத குருவிகளை எண்ணி
மனம் கதறிய போது
காதுகளில் குதூகலமாய்
குருவிகளின்
கீச் கீச் சப்தம்..
ஒருகணம் மந்திர உலகில்
வந்தது போல் ஆச்சரியமாய்
பால்ய நினைவுகளின்
ஈரத்துடன் ஒலியின்
திசை தேடி வீட்டின்
சாளரத்தின் உயரே
உற்று நோக்கினேன்.
காணாத குருவிகளின்
சப்தம் இன்னும்
அதிக வீச்சுடன்.....
வாசலைக் கடந்து
வீட்டிற்குள்.... தேடிய
கண்களுக்கு தெரியவே
இல்லைக் குருவிகள்.
காதுகளுக்கு தெரிந்தது
அதுவும் வந்த நண்பரின்
கைபேசியின்
ரிங் டோன் என்று..
உங்கள் குரலையும்
அழகாக பதிவு செய்து
வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குரலை
ரிங் டோனாக
நாளைய உலகம் கேட்பதற்கு
உங்களுக்கும் அதை
வைத்துக் கொள்பவருக்கும்
அதிர்ஷ்டம் வேண்டும் போலும்.