Tuesday, February 15, 2011

புத்தகப் பைத்தியம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

புத்தகப் பைத்தியம்
குமரி எஸ். நீலகண்டன்

எனக்கு புத்தகமென்றால்
பைத்தியம்.
என் மனைவிக்கு
புத்தகத்தைக் கண்டாலே
பைத்தியம்.

என் மாமனார் சொன்னார்
சீ பைத்தியக்காரி
இதையெல்லாம்
பெரிது படுத்தாதே.
புத்தகப் புழுவோடு
புக்ககம் போயிருக்கிறாயென
பெருமைப்படு என்றார்
என் மனைவியிடம்.

அதற்குள் என்
கைப்பிள்ளை
ஊர்ந்து ஊர்ந்து
புத்தகத்தைப் பிய்த்து
கிழித்துக் கொண்டிருந்தான்
நான் படிக்காதப்
பக்கங்களை...

கிழித்து கசக்கிய
பக்கங்களால் ஒரு
பூச்சியைப் பிடித்து
வெளியே எறிந்தார்
என் மாமியார்

புதிதாக ஒரு புத்தகத்தைப்
படித்த திருப்தி எனக்கு.