Thursday, March 3, 2011

நியூட்டனின் மூன்றாம் விதி - வல்லமை இதழில் வெளியான கவிதை

நியூட்டனின் மூன்றாம் விதி
குமரி எஸ்.நீலகண்டன்

*ஒரு சர்ச்சையின் பின்
நெடுநாட்கள் கழித்து
நண்பர்கள் இருவரும்
வழியில் சந்தித்தனர்.

*தயக்கத்துடன்
அவன் சிரித்தான்.
கண்கள் சிரித்தன.
உதடுகள் சிரிக்கவில்லை.

எதிர் வினை -
இரண்டாமவரின்
கண்கள் மட்டும்
சிரிக்கலாம்.
கண்களோடு உதடுகளும்
சிரிக்கலாம்.

*வெப்பம் படர்ந்த
அவனது கண்கள்
சிரிக்கவில்லை.
உதடுகள் மட்டும்
சிரித்தன.

எதிர் வினை -
இரண்டாமவரின்
உதடுகள்  மட்டும்
சிரிக்கலாம் அல்லது
உதடுகள் தட்டி
உணர்வுகளை எழுப்பலாம்

*கனிவுடன்
கண்களோடு உதடுகளும்
சிரித்தன.

எதிர் வினை -
பௌர்ணமி நிலவில்
பரந்த வானமாய்
உடல் முழுக்க
பரவசிக்கலாம்.

*மௌனமாய் இருந்தான்

எதிர் வினை -
அங்கொரு குறைந்த
காற்றழுத்த மண்டலம்
உருவாகி அதுவே
பெருத்தப் புயலின்
மையமாகலாம்
மழையும் பெய்யலாம்.
பிழையான மழையால்
மௌனம்
ஒரு மயானத்தையும்
உருவாக்கலாம்.