Wednesday, December 8, 2010

மிதித்தலும் மன்னித்தலும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

குமரி எஸ். நீலகண்டன் 


காலை மிதித்தான்.
தெரியாமல்
மிதித்திருப்பானென
மன்னித்தேன்.

மீண்டும்
இன்னொரு தருணத்தில்
தெரியாமலும் தெரிந்ததும்
போலவும் மிதித்தான். 
சகித்தேன்..

சிறிது நேரம் கழித்து
சிரித்தான். மன்னித்தேன்.
காலங்கள் போகப் போக
அவ்வப்போது
 மிதித்தான். மன்னித்தேன்...
மிதித்தான்... மன்னித்தேன்...
மிதித்தான்.. மன்னித்தேன்.

இன்னும் மிதித்தான்...அவன்
எப்போதாவது சகதியிலிருந்து
மீள்வானென்ற நம்பிக்கையில்
மீண்டும் மீண்டும்
மன்னித்தேன். அவன்
இன்னும் சக்தியுடன்
சகதியுடன் மிதித்தான்.

மன்னித்து மன்னித்து
நான் என்னை மகானாக
நினைத்துக் கொண்டேன்.
அவன் எண்ணத்தில் நான்
ஒரு பலஹீனமானவனாக
கரைந்து கொண்டிருந்தேன்.