தனிமரத்து பூக்கள்
குமரி எஸ். நீலகண்டன்
கணவனும் குழந்தையும்
ஊரில் இல்லையென்று
தனக்காக சமைக்காத மனைவி.
படிப்பதற்கு யாருமே
இல்லையென்று
தனக்காகவும் கவிதை
படைக்காத கவிஞன் இவர்கள்
இருவருமே சிரித்து சிரித்து
எப்போதும் தனிமையில்
ஆனந்தமாய் அழகழகாய்
படம் வரைந்து
ஆனந்தப்படும் அந்த
மனநிலை பாதிக்கப்பட்டதாக
கூறப்படுகிற வயதான
பாட்டியின் ஓவியங்களை
சிறிது நேரம்
பார்க்க வேண்டும். அல்லது
விளையாட யாருமின்றி
தனிமையில் கரியால்
சுவரில் தீட்டுகிற
குழந்தையின்
கை வண்ணத்தையாவது
காண வேண்டும்.
குமரி எஸ். நீலகண்டன்