Tuesday, December 6, 2011

புள்ளிக் கோலங்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

புள்ளிக் கோலங்கள்
குமரி எஸ். நீலகண்டன்

அரைப் புள்ளிகள்
இணைந்த போது
ஒரு புள்ளியின்
கரு உருவானது.

இருட்டில் வளர்ந்து
ஒரு நாள்
வெளிச்சத்திற்கு
வந்த போது
அதற்கெல்லாமே
ஆச்சரியக் குறியாய்
இருந்தது.

கால் நிமிர்ந்தபோது
காற் புள்ளியானது.

கேள்விக் குறிகளோடு
உலகைக் கற்றுக்
கொண்டே வந்தது.

காலங்கள்
செல்லச் செல்ல
காற்புள்ளி
அரைப் புள்ளியாயிற்று.

மேலானவர்களின்
மேற்கோள் குறிகளுடன்
மேலாக வளர்ந்த அது
முக்காற்புள்ளியாய்
முதுமையை எட்டிற்று.

முகமெங்கும்
வரை கோலங்களுடன்
முதுகு வளைந்து
பணிவுடன் ...
முழுப் புள்ளியான
முற்றுப் புள்ளியை
எதிர்நோக்கி
இருக்கிறது
முக்காற்புள்ளி.