Friday, April 1, 2011

மரத்தின் கௌரவம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

மரத்தின் கௌரவம்
குமரி எஸ். நீலகண்டன்

அந்த கொழுத்த
மரத்திலிருந்து ஒவ்வொரு
பழுத்த இலையும்
சருகுகளோடு
கீழே விழுகிற போதும்
மரத்தின் பிரிவின்
துக்கத்தின் துளிகள்
சில இலைகளோடு
ஒட்டி இருக்கும்.

மஞ்சளாய் பழுத்த
அந்த இலை
காற்றில் மிதந்து
மிதந்து தரையைத்
தொட்ட போது
அலகுகளால் காகம்
அந்த இலைகளை எடுத்து
அடுத்த மரத்தின்
கிளைகளில் வைத்த போதும்....

அடுக்கடுக்காய் சருகுகள்
இலைகளோடு காகத்தின்
கூடான போதும்...

கொழுத்த மரத்தின்
கழுத்து கொஞ்சம்
கௌரவமாய்
உயர்ந்து நிற்கும்.