Friday, June 17, 2011

மனவழிச் சாலை - திண்ணை இதழில் வெளியான கவிதை

மனவழிச் சாலை
குமரி எஸ். நீலகண்டன்

கவலைகள்
அவ்வப்போது கடுகாகவும்
கடுஞ்சீற்றத்துடனும் வரும்...

அதன் வருகையின்
அடையாளமாய் மனதில்
சிறு குழிகளும்
பெருங்குண்டுகளுமாய்
இருக்கும்...

எதிரே வருபவர்களெல்லாம்
அதில் தடுக்கி விழலாம்.
குழிகளையும் சாலையையும்
பொறுத்து காயங்களும்
ஏற்படலாம்.

மிகச் சிலரே அதில்
தண்ணீர் ஊற்றி
குழிகளை நிரப்பி
செடி வளர்த்து
அதில் ஒரு பூ
பூப்பது வரை கூடவே
இருந்து பராமரிப்பர்...

ஆனாலும் அவனுக்கு
அவன் மனதானது
எப்போதும்
அர்ப்ப ஆயுளுடன்
சீர் செய்யப் படுகிற
தார் சாலையாய்
குண்டும் குழியுமாய்.