Monday, January 9, 2012

குழந்தையின் கோபம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

குழந்தையின் கோபம்
குமரி எஸ். நீலகண்டன்

கடவுளின் குழந்தையொன்று
உலகியல் விளையாட்டினை
விளையாடிக் கொண்டிருந்தது.
எது தவறு
எது சரியென
கடவுளிடம் கேட்டுக் கேட்டு
குழந்தை அந்தப்
பொம்மைகளை
தவறு சரியென
இரண்டு வட்டங்களுக்குள்
பிரித்து பிரித்து வைத்தது.

குழந்தை கடவுளிடம்
ஏதோ கேட்பதற்காக
திரும்பிப் பார்த்த
சில நிமிடங்களில்
வட்டங்களிரண்டிலிருந்தும்
பொம்மைகள்
சரிக்கும் தவறுக்குமாக
மாறி மாறி குதித்துக்
கொண்டிருந்தன.

சலித்துப் போனக்
குழந்தை
தவறுகள் வைத்திருந்த
வட்டத்திற்குள்
தானேப் போய்
உம்மென்று உட்கார்ந்து
கொண்டது.