Sunday, October 30, 2011

சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும் - கணையாழி அக்டோபர் 2011 இதழில் வெளியான கதை


சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும்
குமரி எஸ். நீலகண்டன்
சாரங்கன் அழவில்லையா. ம்.... அப்படி இருக்காதே.... எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகவே  இருந்தது. காரணம் அவன் எப்போதுமே மிகவும் பாசத்துடன் உணர்ச்சி வயப்படுகிற குழந்தை. இலேசாக அவனது உணர்ச்சியைத் தூண்டி விட்டால் அவன் கண்ணீர் பையை பிசுக்கியதைப் போல் கண்ணீர் வெள்ளமாய் பொங்கிப் பாயும்.

சாரங்கன் பதினொரு வயது பையன். அவனால் எப்போதும் சும்மா இருக்கவே முடியாது. படு சுட்டி. துருதுருவென்று வருவான். '' டேய்.. கொஞ்ச நேரமாவது சிவனேண்ணு ஒரு இடத்துலே இரி... எப்போவும் ஆடிக்கிட்டும் சாடிக்கிட்டும் கால் வலிக்காதா உனக்கு '' என்று அவனது பாட்டி அடிக்கடிச் சொல்வாள்.அப்படி அவன் ஏதாவதொன்றை வீட்டில் செய்து கொண்டே இருப்பான். அவன் எல்லோருக்கும் மிக அமைதியானப் பையனென்ற பட்டத்திற்குரியவன். யாருக்கும் எந்த தொந்தரவும் செய்ய மாட்டான். யாரையும் கேலி, கிண்டல் செய்வது, அழுவது, அடம் பிடிப்பது, பிடிவாதமாய் ஒன்றைக் கேட்டு அழுவது, அடிப்பது. பொருட்களை உடைப்பது, இன்னொருவர் பொருளை எடுப்பது, அதற்கு ஆசைப் படுவது இந்த மாதிரி விஷயங்களெல்லாம் அவனது அகராதியில் இல்லையென்றே சொல்லலாம். ஆனால் அவனுக்கு மீன், நாய், எலி, பூனை, புறா, கிளி இவற்றையெல்லாம் வளர்க்க ஆசை... இன்னும் பேராசையாய் நடிகர் ஜெயராம் யானை வளர்ப்பதை அறிந்து யானையைக் கூட வளர்க்க அவன் ஆசைப்பட்டதுண்டு. ஏதாவது ஒருநாள் கனவு தேவதை திடீரென அவனது கனவில் வந்து அவனது இந்த ஆசைகளையெல்லாம் அவ்வப்போது நிவர்த்தி செய்துவிட்டுப் போவதுண்டு. ஆனாலும் உறக்கம் விழித்த பின் அந்த உயிர் பிராணிகளைக் காணாது ஏங்குவான். அப்பாவிடம் தன் ஆசைகளை சொல்ல அச்சம். காரணம் நாங்கள் இருப்பது அடுக்கு மாடி குடியிருப்பு... இங்கு பிராணிகளை வளர்ப்பதற்கு குடியிருப்பு சட்ட விதிமுறைகள் கொஞ்சமும் இடம் கொடுக்கவில்லை.

எப்போதாவது ''அப்பா| நம்ம பிந்து ஆன்டி வீட்டிலே பூனை அஞ்சு குட்டி போட்டிருக்கு. அதிலே ஒரு பூனையை மட்டும் ஒரு பைக்குள் கொண்டு வந்து யாருக்கும் இடைஞ்சல் இல்லாம வெளியே விடாம வளர்க்கலாமா'' என்பான். அதெல்லாம் இங்கு வளர்க்க சாத்தியமில்லையென அவனுக்கு புரிய வைத்துச் சொல்லும் போது மட்டும் பேசாமல் இருப்பான். ஆனாலும் அவன் ஆசைக்கு சிறிது ஈடு செய்யுமளவில் எங்கள் வீட்டு அடுக்களை சன்னலில் ஒரு ஒற்றைக்கால் புறா எப்போதுமே இருக்கும். அவன் சன்னல் வழியாக அதோடு உரையாடுவான். உணவுகள் கொடுப்பான். ஒற்றைக் காலில் அந்த சன்னல் மாடத்தில் உட்கார்ந்து சில நேரங்களில் அது சிறகுகளை அடிக்கும். அப்போது அதன் சிறகுகளிலுள்ள தூசுகளோடு அது உட்கார்ந்த இடத்திலுள்ள எச்சத்தின் சிறு துகள்களும் காற்றோடு அடுக்களை நோக்கிப் பறந்து வரும். எங்கள் எல்லோருக்குமே இதனால் காற்றில் பறக்கிற கிருமிகள் உணவுகளோடு கலந்து விடுமென்ற அச்சம். அதனால் என் மனைவி அதை வேறொரு இடத்திற்கு தண்ணீரைத் தெளித்து விரட்ட முயன்ற போது அம்மா.. பாவம் பாவமென அவன் அந்த புறாவிற்காக போராடினான். நாங்களும் அமைதிப் புறாவை அவனுக்காக அப்படியே விட்டு விட்டோம். அது எங்கள் வீட்டு சன்னல் மாடத்தில் எங்களோடே குடியிருந்தது பல நாட்கள்.

எங்கள் குடியிருப்பில் எலிகளுக்கு சாத்தியமே இல்லை. நாங்கள் இருப்பது ஐந்தாவது மாடி. கீழிருக்கும் எலிகள் மேல் வருவதற்கும் சாத்தியமில்லை. ஆனாலும் எதிர் வீட்டிலிருந்து ஒரு விருந்தாளியாய் எலி எங்கள் வீட்டிற்குள் நுழைந்து விட்டது. அதுவும் கேபிள் கம்பியையே என் வீட்டிற்கு வரும் பாலமாகக் கொண்டு சாகசப் பயணம் செய்திருக்கிறது. நான் இந்த குடியிருப்பிற்குள் எலிகள் நுழைந்து விட்டனவே என்று வருத்தப்படுகையில் சாரங்கனோ கேபிள் கம்பியின் மேல் வருகிற போது ஐந்து மாடி உயரத்திலிருந்து அது கீழே விழுந்தால் என்ன ஆகுமென்று வருத்தப்பட்டான். எலி எப்படியோ எங்கள் வீட்டில் நுழைந்து பழைய டிவி அட்டைப் பெட்டிக்குள் குடி புகுந்து விட்டது. சப்தமில்லாமல அதற்கு வாழத் தெரியவில்லை. அட்டைப் பெட்டிக்குள் தன்னைச் சுற்றி இருட்டாக இருப்பதால் இந்த பூலோகமே இருட்டாகி விட்டதாய் அதனது நண்பன் பூனையைப் போல் அது நினைக்கிறது போலும். அது இருப்பது இன்னொருவருக்கு சொந்தமான இடமென்றும் அதற்கு தெரியவில்லை. தனது வீட்டில் தான் எப்படியும் இருக்கலாமென்று அது அடிக்கிற கொட்டம் அதன் உயிருக்கு ஆபத்தென்று அது அறியாது இருக்கிறது. ஒரு வீட்டிற்குள் வந்தால் ஒரு நல்ல விருந்தாளியாக வந்து நாம் வைக்கிற சிறிய அளவிலான தானியங்களைத் தின்று விட்டு புழுக்கைகளையெல்லாம் வெளியில் சென்று போட்டுவிட்டு தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் யாரும் எலியைப் பிடித்துக் கொல்லவோ விரட்டவோ மாட்டார்கள். அன்பாகவே வளர்ப்பார்கள். அது தெரியவில்லை இந்த எலிக்கு. வந்த சில மணி நேரங்களிலேயே டி.வி பெட்டியை கிழித்து நாசம் செய்து அடுத்து கொலு பொம்மை பெட்டிக்குள் நுழைந்து அழகாக பத்திரமாக காகிதத்தில் பொதிந்து வைக்கப் பட்டிருந்த பொம்மைகளின் மேல் ஏறி காகிதங்களை கடித்து கிழித்துக் குதறி விட்டது. பிள்ளையார் பொம்மையில் மூஞ்சிறு உருவத்தின் அருகே மோதகத் தட்டில் எச்சத்தைப் போட்டு வைத்திருந்தது. இப்படி இது தொடர்ந்து அட்டகாசம் செய்ய நான் உடனடியாக அதிரடியாக எலிப்பொறி வாங்கச் செல்ல வேண்டியதாயிற்று.

எத்தனை எலிப் பொறிகளை அந்த எலி  பார்த்திருக்கும். ஆனாலும் நாவை அடக்காத அதற்கு ஆபத்து தெரிவதில்லை.எலிப் பொறி வாங்குவதற்கு நான் எவ்வளவு தூரம் அலைய வேண்டி இருக்கிறது. எத்தனை பேரிடம் விசாரிக்க வேண்டி இருக்கிறது. அதுவே இன்னொரு ஊரென்றால் அந்த ஊர் கடைத்தெருவுக்குப் போனாலே நல்ல எலிப்பொறி வாங்கி விடலாம், பாரிமுனை, மீர் சாகிப் மார்க்கெட்டென பல இடங்கள் அலைந்து ஒரு பெரிய எலிப்பொறி அளவிற்கு இருந்த அந்த எலிப்பொறிக் கடையைப் பிடித்தாகி விட்டது. அங்கே இரண்டு வகையான எலிப் பொறிகள். ஒன்று எலியைச் சிறை பிடிக்கும் பொறி. மற்றொன்று எலியை எந்த விசாரணையுமின்றி மரணதண்டனை நிறைவேற்றுவது. இரண்டாவது வகை பொறியே சிறந்ததென கடைக்காரன் என்னிடம் பரிந்துரைத்தான். ஆனால் அதில் எலியை நசுக்கி கொல்கிற அந்த பொறியின் வாயிலிலுள்ள இரும்பு கம்பியின் இறுக்கு விசையும் அதன் உறுதியும் என்னை எலியின் மேல் ஒரு இரக்க உணர்வை ஏற்படுத்தியது. அதனால் எலியை தன் கையால் கொல்ல வேண்டாமென்ற உறுதியுடன் முதல் வகை எலிப்பொறியையே வாங்கினேன்.

வீட்டிற்கு வந்தால் என் பையனுக்கு பொறியைப் பார்த்த சந்தோஷம். முதன் முதலாக ஒரு புதிய எலிப் பிடி இயந்திரத்தைப் பார்க்கிறான். அதன் செயல்முறைகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அதில் மாட்டப் போகும் எலியைப் பற்றியெல்லாம் முதலில் அவன் கவலை கொள்ளவில்லை. பொறியின் கொலைத் தூண்டிலான கம்பியில் காரட் துண்டு, சுட்ட தேங்காயென  விருந்து வைத்து சமையலறையின் உயரே எலிவழிச் சாலையில் பொறியையும் வைத்து விட்டேன். என்ன ஆச்சரியம்... நாக்கை அடக்கத் தெரியாத எலியாக அது இருக்கும். ஐந்தே நிமிடத்தில் டப்பென்று வெடி வெடித்தது போல் சப்தம்... என் பையன் ''அப்பா எலி மாட்டிக்கிச்சு. எலி மாட்டிக்கிச்சு'' என்று சந்தோஷமாய் கத்தினான். நான் உடனடியாய் பொறியை எடுத்துப் பார்த்தேன். அதில் மாட்டிக் கொண்டது மிகச் சிறிய சுண்டெலி. நல்ல காலம் அதன் வாலொன்றும் கதவுகளுக்கிடையே சிக்கவில்லை. அப்போது பிறந்த சிசு போலிருந்தது அந்த சுண்டெலி. உடம்பிலுள்ள ரத்தமெல்லாம் வெளியேத் தெரிகிற மாதிரி சிகப்பாக இருந்தது அந்த எலி. எனக்கே மிக இரக்கமாக இருந்தது. கண்களை உருட்டி உருட்டி அப்போது பிறந்த குழந்தை புதிய உலகத்தைப் பார்த்தது போல் எலி என்னையும் இந்த உலகத்தையும் பார்த்தது. அதன் கண்களில் ''கருணை செய்யாயோ| என்னைக் காத்து ரட்சிப்பாய்''. என என்னை நோக்கி கேட்பது போலிருந்தது. வேறு யாரோ அதை சிறை வைத்து என்னிடம் அதைக் காப்பாற்ற உதவி கோருவது போலிருந்தது அதன் விழிகளின் மொழி. பையனோ பாவம் அப்பா.. எவ்வளவு அழகா இருக்கு.. இந்த எலி... இதை ஒண்ணும் செய்யக் கூடாதென்றான்...

அடுத்த நாள் காலையில் எலியை வெளியே கொண்டு விட்டு விடலாமென்று தீர்மானித்தோம். காலை எழுந்ததுமே எலிப்பொறியை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் மறைத்து சாலைக்கு கொண்டு வந்தேன். சாலையில் யாருக்கும் தொந்தரவில்லாமல் மழைத் தண்ணீர் வடிவதற்காக பாதாள சாக்கடைக்கு செல்லும் மடைப் பாதையில் எலியை விட்டுவிட என் உத்தேசம். சரியாக அந்த மடையை நோக்கி பொறியின் கதவுகளைத் திறந்தேன். அதற்கு நான் காட்டிய வழியை விலக்கி அது வேறு பாதையில் ஓடத் துவங்க தெரு நாயொன்று அதைக் கவ்விக் கொள்ள அந்த எலிக்காக மிகவும் வருத்தப்பட்டான் சாரங்கன்.

இதற்கெல்லாம் அடுத்த முயற்சியாக அவன் இறங்கியதுதான் மீன் வளர்ப்பு. அவன் பள்ளி செல்லும் வழியிலுள்ள வளர்ப்பு மீன் விற்பனைக் கடையிலுள்ள வண்ண வண்ண மீன்களைப் பார்த்து பார்த்து தனது கனவினில் அன்றாடம் மீன்களை நீந்த விட்டான். வாழைக்காயை தண்ணீரில் மிதக்க விட்டு அதை மீனாக கற்பனை செய்து கொண்டு வாழைக்காயோடு கொஞ்சி விளையாடினான். வாழைக்காயை கறி வைப்பதற்காக எடுத்த போது என் மீனைக் கொன்று சமையல் வைக்கப் போகிறாயா எனக் கேட்டான். அப்போதே உயிர்களின் மேலுள்ள அவனது அதீத அன்பை உணர்ந்து நான் வீட்டில் மீன் வளர்க்க வேண்டுமென்று தீர்மானித்து விட்டேன். அவனது ஆசைக்காகவும் மீன் வளர்ப்பதால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கப் போகிறதில்லை என்ற காரணத்தாலேயே அவ்வாறு தீர்மானித்தேன். படிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்றப் பல கட்டுப்பாடுகளையும் பையனுக்கு விதித்து பின் மீன் வாங்குவதற்காக அவனைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

சாரங்கனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் மீன் படம் போட்ட ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டான். வளர்ப்பு மீன் கடை திறந்திருக்குமோவென அவனுக்கு சந்தேகம். அங்கே திறந்த கடையைப் பார்த்ததும் தம் கனவு நிறைவேறப் போவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். காரணம் இன்று ஏதாவதொரு காரணத்தால் மீன் வாங்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டால் நாளை இன்னொரு காரணத்தால் மீன் வளர்க்கும் கனவு இன்னும் சில காலங்களுக்கு நிறைவேறாமலேப் போகலாமென்பது அவனது ஊகம். அந்தக் கடையில் வெவ்வேறு வடிவத்தில், விதவிதமான வண்ணத்தில் நான்கு ரூபாயிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாய் அளவிற்கு விலையுள்ள மீன்களும் பெரிய பெரிய கண்ணாடிப் பெட்டிகளில் குறுகிய வட்டத்தினுள் நீச்சலடித்துக் கொண்டிருந்தன. நிறைய சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி விட்டு அங்கே மீன் வாங்க வந்திருந்தனர். கைகளிலும் வலைகளிலும் மீன்களைப் பிடித்து சிறிய பிளாஸ்டிக் பைகளிலுள்ள சிறிய அளவு தண்ணீரில் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தான் கடைக்காரன். கடையில் சிறிய மீன்களை பிடித்து இன்னொரு தொட்டியில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான் கடைக்காரனின் நான்கு வயது பையன். கடலோடு தொடர்புடைய சிப்பி, கடல்மண், கடற்பாசி உட்பட்ட கடற்தாவரங்களென எல்லாப் பொருட்களும் கடை நிரம்ப இருந்தன. சாரங்கனால் அவனுக்கு வேண்டிய மீன்களை தேர்வு செய்வதில் பெரிய சவாலாக இருந்தது. எதை வளர்க்கலாம்... அதற்காக நான் செலவு செய்யும் தொகை, தொட்டியின் விலை, தொட்டியின் கொள்ளளவு, வீட்டில் அதை வைத்துக் கொள்தற்கான வசதியென பல விஷயங்களை கருத்தில் கொண்டு அவனுக்கு முடிவெடுப்பதில் மிகுந்த சிக்கலாகவும் இருந்தது. உங்களுக்கு எது வேண்டும்... இதை வாங்கிக் கொள்கிறீர்களா என்ற கடைக்காரனின் அழுத்தத்தில் நாங்கள் ஜோடி 20.30 மதிப்புகளில் மொத்தம் எட்டு மீன்கள் வாங்கினோம்.

அதில் கப்பீ, சையமீஸ் ஃபைட்டர், ஏஞ்சல் ரக மீன்கள் இருந்தன. ஒரு கோள வடிவ தொட்டி, மீன்கள் சுவாசிப்பதற்காக நல்ல காற்றிற்காக மின் கருவி, மீன் உணவு, நோய் வந்தால் மீன்களை மீட்டெடுக்க சொட்டு மருந்து என எல்லாவற்றையும் வாங்கி வீட்டிற்கு வந்தோம். மீன் வளர்ப்பதற்கான தண்ணீருக்கு எங்கு போவது... நாங்கள் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பதோ மாநகராட்சியின் குளோரின் கலந்த தண்ணீர். அதில் மீன்களைப் போட்டால் ஒரே நாளிலேயே செத்து விடலாம். கடைக்காரன் சிறிய அளவிலேயே தண்ணீர் தந்திருந்தான். அன்றைய நாளை சமாளிப்பதற்காக இரண்டு பெரிய பாட்டில்கள் மினரல் வாட்டர் வாங்கி மீன் தொட்டியில் விட வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு. அவ்வாறேச் செய்தேன். இரண்டு நாட்களில் மழை வந்தபோது மொட்டை மாடியில் பெரிய பிளாஸ்டிக் வாளிகளில் மழை நீரை சேமித்தும்.. பின் கார்ப்பரேஷன் தண்ணீரை வெயிலில் வைத்து அதன் குளோரின் சக்தியை நீர்த்து போக வைத்தும் தண்ணீர் தேவையை சமாளித்தது வேறு கதை. எப்படியோ நிறைவாக சாரங்கனின் கனவு நிறைவேறியது.

மீன் வீட்டிற்கு வந்த முதலிரண்டு நாட்களும் சாரங்கன் முழு நேரமும் மீன் தொட்டியையேப் பார்த்து கொண்டிருந்தான். மீன்களின் ஒவ்வொரு அசைவும் அவனின் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது. மீன் தொட்டிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மீன் உணவு புட்டியை சாரங்கன் எடுத்த உடனேயே தொட்டியிலுள்ள மீன்கள் அதை உண்பதற்கு தயாராக மீன் தொட்டியின் மேல் பகுதிக்கு வருமளவிற்கு அவன் மீன்களுக்கு நல்ல பரிச்சயமாகி இருந்தான். அவனும் நிறைய உணவு உருண்டைகளை போடுவதில்லை. நிறைய உணவு உருண்டைகளைப் போடுவதால் மீந்து போகும் உணவுத் துகள்களால் தண்ணீர் கெட்டு விஷமாகி விடுமென்று அவனுக்கு தெரிந்திருந்தது. ஒரு மீனுக்கு இரண்டு உருண்டைகளென கணக்கு வைத்து எல்லா மீன்களுக்கும் கிடைக்கிற அளவில் சிதறலாக ஒரு அதிதொழில்நுட்ப ரீதியாக உணவைப் போடுவான். ஆனாலும் சில தருணங்களில் வலுவற்ற மீன்களுக்கு உணவு கிடைக்காமல் போகும் போது சாரங்கன் மிகவும் வருத்தப்பட்டு அதனை தனியாக ஒரு கோப்பைக்குள் கொண்டுவந்து உணவு கொடுத்த பின் தொட்டிக்குள் விடுவான்.  அவன் ஒவ்வொரு மீனையும் வெள்ளை, குட்டி, கருப்பு, சில்வர், என அடையாளப் படுத்தி ஒன்றைப் பாவமென்றும் இன்னொன்றை கொடுமையானதாகவும், முட்டாள், புத்திசாலி, மூர்க்கன், அரசியல்வாதியென சித்தரித்து அதன் இயல்புகளையும் அதன் அடையாளங்களோடு ஒட்டி வைத்தான். ஆனாலும எல்லா மீன்களோடும் அவனது அன்பு குறையாமலேயே இருந்தது. மீன் தொட்டியில் மீன்கள் உல்லாசமாய் சுற்றி சுற்றி வந்தன. நாங்கள் மீன்கள் சந்தோஷமாக சுற்றி வருகிறதென்றே கருதினோம். மீன்கள் என்ன நினைக்கின்றன என்பதை மீன்களிடம்தான கேட்க வேண்டும்.

கண்ணாடி தொட்டியினுள்ளிருந்து மீன்கள் வீட்டில் நடப்பவைகளையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. வீட்டில் எல்லாவற்றிற்கும் ஒரே சாட்சி அந்த மீன்கள்தான்.சாரங்கனுக்கு தற்போதெல்லாம் பொழுது போவதென்பது பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை. நூலகம் சென்று மீன்கள் வளர்ப்பது குறித்த புத்தகங்களை எடுத்து வரி தவறாமல் படித்தான். இரண்டு மாதங்கள் கழிந்தன. ஏதோ ஒரு நோயால் முதலில் ஒரு மீன் தளர்ந்து தண்ணீரில் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் நோய் மற்ற மீன்களுக்கு பரவாத அளவில் சாரங்கன் அந்த மீனை பிடித்து இன்னுமொரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் தண்ணீர் விட்டு தனியாகப் போட்டான். அதன் நோய் குணமாக சிறிது கல் உப்பையும் அதில் போட்டான். உப்பு அதனை நோயிலிருந்து காக்குமென்பது அவன் கேட்டுப் பெற்ற மருத்துவ அறிவு.  அவன் எவ்வளவு முயற்சி செய்தும் மீனின் உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்தது. செல்லக்குட்டி உனக்கு என்னாச்சு என்று அன்பொழுக அதனிடம் பேசினான். அவன் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது. சிறிது நேரத்திலேயே அந்த மீன் இறந்து விட்டது. அவனுக்கு அன்று தூக்கமே இல்லை. அழுது கொண்டே இருந்தான். சில நாட்களில் ஒவ்வொரு மீனாக இறக்கத் தொடங்கின. அவை இறப்பதும் அவன் வருத்தப்படுவதும் சகஜமாகி விட்டது. எனது அத்தை பையன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் சாரங்கனை கிண்டல் செய்வான். நீ மீன்களின் முன்பு வயலின் வாசிக்காதே.. அவை உன் இசையைக் கேட்டுதான் உயிரை விடுகின்றன என்று விளையாட்டாய் சொல்லி சிரிப்பான். இன்னும் அவனை சமாதானப் படுத்தும் நோக்கில் அவனுள் இன்னொரு மூட நம்பிக்கையை யாரோ ஏற்றி விட்டார்கள். அதாவது வீட்டிலுள்ளோருக்கு ஆபத்து வரும் தருணங்களில் மீன்கள் தங்கள் உயிரை விட்டு அந்த துயரங்களை வாங்கிக் கொள்கின்றன என்பது. அப்படியே ஏதோ ஒரு நோயால் மீன்கள் ஒவ்வொன்றாய் இறக்க இறுதியில் இரண்டே இரண்டு மீன்கள் மட்டுமே எஞ்சின.

அப்போதுதான் நாங்கள் ஒரு திருமணத்திற்காக குடும்பத்தோடு ஊருக்கு பத்து பதினைந்து நாட்கள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இரண்டு மீன்களை என்ன செய்வதென்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. பக்கத்து வீட்டிலுள்ளோரை தொந்தரவு செய்ய விருப்பமில்லை. இறுதியாக அந்த இரண்டு மீன்களை மீன் வாங்கிய கடையிலேயே கொண்டு கொடுத்துவிட்டு ஊர் விட்டு வந்து எடுத்துக் கொள்கிறோம் என்றோம். கடைக்காரரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். ஆனால் இந்த இரண்டு மீன்களையும் அந்த தொட்டியிலேயே மற்ற மீன்களோடு போட வேண்டுமென்றும், இந்த மீன்களை பகுத்தறிய முடியாததால் ஊர் விட்டு வந்ததும் இதே போல் வேறு மீன்களை எடுத்துக் கொள்ளலாமென்றும் சொன்னார். நாங்கள் அந்த மீன்களை தொட்டியில் விட்டதுமே அங்கேயிருந்த ஐம்பது அறுபது மீன்களின் சங்கமத்தில் அவை இரண்டற கலந்து விட்டன. அந்த இரண்டு மீன்களையும் அடையாளம் தெரியாத அளவிற்கு எல்லா மீனகளுமே ஒன்றாக இருந்தன. மீன்களைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் விட்டதில் சாரங்கனுக்கும் எங்களுக்கும் மிகுந்த திருப்தி இருந்தது.

ஊருக்கு போய் வந்தோம். பத்து பதினைந்து நாட்கள் கழிந்து விட்டன.
இனியொரு நல்ல நாளில் மீன் தொட்டியினை நன்றாகக் கழுவி மழை தண்ணீரில் இறுதியாக கழுவி தண்ணீரை நிரப்பி தயாராக மேசை மேல் வைத்துவிட்டு மீண்டும் மீன்கள் வாங்கப் போனோம். கொடுத்த மீன்களுக்கு ஈடாக இரண்டு மீன்களோடு இன்னும் ஐந்து ஜோடி மீன்களையும் வாங்கி வந்தோம். கடைக்காரனிடம் மீன்கள் தொடர்ந்து நோயினால் இறந்து போவதைப் பற்றிக் கூறிய போது அவன் ''கப்பீஸ் ஒரு ஜோடி வாங்கிப் போடுங்க.. அது அதுபாட்டுக்கு கிடக்கும்.. நிறைய குட்டி போடும்... குட்டியை மட்டும் தனியா இன்னொரு பாட்டில்லே கவனமா மாத்திடுங்க.. இல்லைன்னா குட்டிகள் எல்லாத்தியும் பெரிய மீன்கள் சாப்பிட்டிடும்''. என்று பரிந்துரைக்க நாங்கள் வாங்கியவற்றில் கப்பீஸ் ஒரு ஜோடியும் எங்கள் மீன் ஜாடிக்குள் வந்து விட்டது. மீண்டும் மீன்களுடன் நாங்களும் வீட்டில் நீந்திக் கொண்டிருந்தோம். மீன்கள் வந்ததிலிருந்து இப்போதெல்லாம் வீட்டில் கொசுவர்த்தியெல்லாம் வைப்பதில்லை. காரணம் கொசுவர்த்தியின் நச்சு வாசம் தண்ணீரில் கலந்து மீன்களைக் கொன்று விடுமோ என்ற அச்சம்தான். அதனால் மீன்களால் கொசுக்களுக்கு ஏக கொண்டாட்டம். எல்லோருடைய ரத்தத்தையும் குடித்து ரத்தப்பைகளை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தன கொசுப் பறவைகள். மீண்டும் இரண்டே நாட்களில் ஒவ்வொரு மீன்களாக இறக்கத் தொடங்கின. அப்படி பத்து மீன்கள் இறந்து விட்டன. கடைசியில் எஞ்சியது கப்பீஸ் ஜோடிகள் மட்டும்தான்.

பத்து மீன்கள் இறந்த அன்றே பத்து குட்டிகளைப் போட்டன அந்த கப்பீஸ் ஜோடிகள். இறந்த மீன்கள் குட்டிகளை மறு ஜன்ம மெடுத்தது போல் சாரங்கனுக்கு ஆறுதல். அந்த மீன் குஞ்சுகள் கண்களுக்கே தெரியாத அளவில் சிறிய துரும்பின் அளவில் நீந்திக் கொண்டிருந்தன. அந்த பத்துக் குஞ்சுகளையும் சாரங்கனே தனியாக ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் தனிக் குடித்தனமாக்கினான். தாய் தண்ணீர் வேண்டுமென்று பெரிய தொட்டியிலிருந்து சிறிது தண்ணீரை எடுத்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் விட்டான். பெரிய தொட்டியின் அருகேயே சிறிய மீன் குஞ்சுகளின் பாட்டிலையும் வைத்து தாயும் பிள்ளைகளும் பார்க்கிற அளவில் வைத்துக் கொண்டான். மீன் உணவை ஒரு காகிதத்திற்குள் ஐந்தாக மடித்து சிறிய மரக்கட்டையால் பொட்டலத்தை தட்டி அதைப் பொடியாக்கிய பின் மீன்குஞ்சுகளுக்கு கொடுத்தான். ஏற்கனவே ஒரு பெரிய முன்னனுபவம்தான் அவனை அவ்வாறு செய்யத் தூண்டியது. காரணம் ஒரு தடவை அவன் மீன் உணவு உருண்டைகளைப் போட்ட போது ஒரு சிறிய மீன் பேராசையில் கவ்விக் கொள்ள அந்த உணவு தொண்டைக்குள் நுழைய முடியாமல் அதன் வாய்க்குள் சிக்கிக் கொண்டது. அது சித்ரவதையில் நீந்திக் கொண்டிருக்க அதன் சக மீன்கள் அதன் வாயிலுள்ள உணவைக் கொத்த இந்த மீன் அவற்றிலிருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருக்க அவைகளுக்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. ஒரு தருணத்தில் இன்னொரு மீன் அதன் வாயைக் கொத்த அதன் வாயில் பெரிய அளவில் ரத்தக்காயம் ஏற்பட சாரங்கன் அதைத் தனியாக ஒரு கோப்பையில் அப்புறப்படுத்தி அது அன்று மாலையே இறந்து மிதந்த கதை வேறு. அந்த அனுபவத்தில்தான் அவன் இந்த மீன்குஞ்சுகளுக்கு உணவைப் பொடித்து கொடுத்தான். அந்த மீன் குஞ்சுகளும் அதன் பெற்றோர்களான ஜோடி மீன்களும் நலமுடன் நீந்திக் கொண்டிருந்தன.
ஒரு வாரம் கழித்து அன்று தண்ணீர் மாற்றுவதற்கான நாள். பெரிய மீன்களுக்கும் சிறிய மீன்களுக்குமான தண்ணீர் மாற்றும் பணியினை நானே செய்து வந்தேன். தண்ணீர் மாற்றுவதற்கான தேவையானப் பொருட்களை வீட்டின் பின்வாசலில் வைத்துவிட்டு அப்பா| எல்லாம் வைத்து விட்டேன். மீனுக்கு தண்ணீர் மாற்றலாமா என்பான். அப்படி அவன் தண்ணீர் மாற்றுவதற்கான அடிப்படை உதவிகளை எனக்கு  நன்றாகவே செய்தான். அன்று பெரிய தொட்டியை கவனமாக தண்ணீர் மாற்றும் இடத்திற்கு கொண்டு வந்தேன். தொட்டி கொண்டு வரும்போது வரும் வழியில் தண்ணீர் ஏதாவது சிந்தி சிதறி கிடக்கிறதா, யாராவது எதிரில் வருகிறார்களா என ஒரு வாகனங்கள் நிறைந்த நெடுஞ்சாலையில் வருகிற கவனத்துடன் வீட்டிற்குள் வந்தேன். கையிரண்டிலும் மீன் தொட்டி இருப்பதால் சிறிது வழுக்கினாலும் மீனுக்கும் தொட்டிக்கும் ஆபத்துதான். முதலில் வலையை வைத்து மீன்களைப் பிடித்து நொடிப்பொழுதில் ஏற்கனவே நல்ல தண்ணீர் விட்டு வைத்திருந்த வாளிக்குள் விட்டேன். பின் தொட்டியை நன்றாக தேங்காய் சவுரியால் தேய்த்து கழுவி ஏற்கனவே மீன் இருந்த பழைய தண்ணீரில் இரண்டு மூன்று கோப்பைகளை தொட்டிக்குள் விட்டு பின் இரண்டு பெரிய மீன்களையும் அதில் வெற்றிகரமாக விட்டபின் ஒரு பணி முடிந்தது.

அடுத்தது குட்டி மீன்களை மாற்ற வேண்டும். வலைகளில் இவற்றைப் பிடிப்பது மீனுக்கு அவ்வளவு பாதுகாப்பாக இருக்காது என்ற காரணத்தால் ஒரு கப்பில் அதை அப்படியே சரித்து ஊற்றினேன். இதெல்லாம் நான் செய்யும் போது சாரங்கனின் கண்கள் ஒரு பதட்டத்துடன் அலையோடிக் கொண்டிருக்கும். ''அப்பா கவனம் மெதுவா தண்ணீரை விடு... தண்ணீர் விழற அதிர்ச்சியிலே மீனுக்கு டிப்ரஷன் வந்திடும். பாவம் மீன்'' என அவன் என்னை பதட்டப்படுத்திக் கொண்டே இருப்பான். அவனது பதட்டத்தில் எனக்கு அவனைக் கண்டு பதட்டமாக இருக்கும். அதில் என் கவனம் சிதறும். எதுவும் பேசாதே என அவனை எச்சரித்துக் கொண்டேதான் சிறிய மீன் குஞ்சுகளை அந்த கோப்பைக்குள் விட்டுக் கொண்டிருந்தேன். அவை மிக சிறிய மீன்களாக இருந்ததால் நான் சரித்து மீன்களோடு தண்ணீரை ஊற்றுகையில் மீன்கள் கீழே விழுந்து விடுமோ என்பதுதான் சாரங்கனின் அச்சம். அந்த அச்சமே அவனின் கண்களை மறைக்க ''அப்பா நீ தண்ணீரை விட்டதில் ஒரு மீன் கீழே எங்கேயோ விழுந்திடிச்சு விழுந்திடிச்சு'' என்று கூறிக் கொண்டே அந்த சிறிய கோப்பைக்குள் விழுந்த மீன் குஞ்சுகளை எண்ணிக் கொண்டே இருந்தான். அவன் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் நிரம்பி வழிந்தது.

அவன் அதை சரியாக எண்ணுவதென்பது கடினமான வேலை. காரணம் அவை கண்ணுக்கேத் தெரியாத அளவிற்கு மிகச் சிறிய மீன் குஞ்சுகள். அதை அவன் ஒன்று இரண்டு என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே எண்ணிய மீன்கள் அவன் எண்ணி முடிக்காத மீன்களினிடையே நீந்தி அவன் எண்ணிக்கையை குழப்பிக் கொண்டு சென்று விடும். அவனது இந்த பதட்டமும் அவனது கண்ணீரும் என் கவனத்தை மிகவும் சிதறடித்தது. அதற்குள் ''அப்பா இங்கே ஒரு மீன் ஒட்டிக் கொண்டிருக்கு'' என்று அதைத் தட்டி தண்ணீருக்குள் விட்டான். எனக்கே ஆச்சரியமளிக்கும் விதமாக தண்ணீரை சரித்து ஊற்றும் போது ஒரு மீன் குஞ்சு அந்த கோப்பையின் பக்க சுவரில் ஒட்டி இருந்திருக்கிறது. அந்த பக்க சுவரின் இழுப்பு விசையிலிருந்து மீள்வதற்கான போதிய சக்தியற்ற அளவிற்கு மிகச்சிறியதாக இருந்தது அந்த மீன் குஞ்சு. இன்னும் சாரங்கனின் பதட்டப் பரபரப்பு காட்சிகளில் என் கவனமும் அந்த ஒட்டியிருந்த மீனை காணத் தவறி விட்டது. எப்படியோ அதிரடியாக சாரங்கனே கைகளால் அதைத் தட்டி தண்ணீருக்குள் விட்டு அதனைக் காப்பாற்றி விட்டான். அது நீந்தி கொண்டிருந்ததும் அதைக் காப்பாற்றியதில் அவனுக்கு ஓரளவு திருப்தி. பின்பு வழக்கம் போல் அந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை கழுவி விட்டு பழைய படி கவனமாக மீன் குஞ்சுகளை அதில் விட்டு விட்டு அவைகளைப் பத்திரமாக முன்ன்றையில் மேசையின் மேல் வைத்தேன். அப்போதுதான் சாரங்கன் ''அப்பா நம்ம தட்டிவிட்ட மீன் மிகுந்த மனத்தளர்ச்சியில் நன்றாக நீந்த மாட்டேங்குது'' என்று வருத்தப்பட்டான். பின் கூர்ந்து கவனித்த அவன் ஓவென்று அழத் தொடங்கினான்.

அப்பா அந்த மீனின் வால் ஒடிந்திருக்கிறது... அது ஒடிந்து தொங்குகிறது பார் என அதைக் காட்டினான். மிக கூர்ந்து கவனிக்கும் போதுதான் அவன் கூறியது சரியென்று பட்டது. அவன் கோப்பையின் பக்கச் சுவரில் ஒட்டியிருந்த மீன் குஞ்சை காப்பாற்றும் வேகத்தில் கைகளால் தட்டி விட்ட போது அதன் வால் ஒடிந்திருக்கலாமென்பது எனது ஊகம். ஒடிந்த வாலோடு அது நீந்திக் கொண்டுதான் இருந்தது. அவன் மிகுந்த துக்கத்தில் அழுது கொண்டே இருந்தான். எனக்கும் மிகுந்த வருத்தமாகவே இருந்தது. அன்றிரவு அதை நினைத்து கொண்டே இருந்ததால் எனக்கு தூக்கம் வர மிகுந்த நேரமாகி விட்டது. வாலொடிந்த மீனின் துயரத்தோடு என் பையன் அனுபவிக்கும் வருத்தமும் சேர்ந்து நான் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருந்தேன். சாரங்கனும் மீன் குஞ்சைப் பார்த்து பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டே அன்று தூங்கி விட்டான்.

காலையில் சீக்கிரமாகவே எழுந்து முதல் வேலையாக வழக்கம் போல் மீன் தொட்டியைப் பார்த்து அந்த மீன் குஞ்சைத் தேடினான். அது சிறிது நீந்திக் கொண்டிருந்தது. ஆனால் அதன் ஒடிந்த வால் மேல் நோக்கி மடங்கி மீனை தண்ணீரில் மெதுவாய் பறக்கிற ஒரு ஹெலிகாப்டரைப் போல் தோற்றமளிக்க வைத்தது.  தற்போது அந்த மீனின் ஒடிந்த வால்களில் இறுகிய ரத்தம் தெரிந்தது. வருத்தப்பட்டுக் கொண்டே அதற்கு உணவினை போட்டான். எனக்கு தற்போது அந்த மீன்குஞ்சைப் பார்க்கும் போது மிகுந்த வருத்தமாக இருந்தது. அது நீரின் அடிப்பகுதியில் கிடந்தது. அதனால் நீரின் மேற்பகுதிக்கு நீந்தி வர இயலவில்லை. அடிப்பகுதியிலேயே சிறிய அளவில் நேற்றை விட சிறிது வேகமாக நீந்திக் கொண்டிருந்தது. அது பிழைப்பது கடினமென்பதே எனது ஊகம். அது படும் கடினத்தை விட அதைப் பிடித்து வெளியேப் போட்டு அதனை கருணைக் கொலை செய்து விடலாமென்று எனக்குத் தோன்றியது. அதை நான் சொன்ன போது என் பையனோ மனைவியோ ஒத்துக் கொள்ளவில்லை. அது எப்படியும் இறந்து விடப் போகிறது.. அதை கருணைக் கொலை செய்வது மூலம் அதுபடும் கஷ்டத்தையாவது குறைத்து அதன் வலியைப் போக்கலாமென்பதே எனது எண்ணம். ஆனால் சாரங்கனின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய மனமில்லை. அந்த மீன்குஞ்சுகளிருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலானது மேசையின் மேலே உள்ளே தள்ளி இருந்தது. காயம்பட்ட குஞ்சை தெளிவாக பார்ப்பதற்காக நான் அந்த பாட்டிலைத் தூக்க முற்பட்ட போது ''அப்பா அந்த பாட்டிலை தூக்காதே.. நீ தூக்கும் போது உருவாகும் நீரின் அதிர்வலைகளில் மீன் குஞ்சுக்கு மன இறுக்கம் உருவாகும்'' என்று சாரங்கன் எச்சரித்தான். என்னால் மிக மெதுவாக அதிர்ச்சி ஏற்படாத அளவில் அந்த பாட்டிலை தூக்கிப் பார்க்க இயலும். ஆனால் நான் அவனது நல்லெண்ணத்திற்கு மாறாக எதுவும் செய்யக் கூடாதென தீர்மானித்தேன்.

நான் அந்த இரு தொட்டிகளையுமேத் தொடாமல் தவிர்த்தேன். பின் அந்த மீன் குஞ்சை மட்டும் கவனமாக இன்னொரு சிறிய கோப்பைக்குள் மாற்றி தனியாக வைத்தான். அதுவும் மற்ற மீன் குஞ்சுகள் இதன் வாலை கொத்தி விடாமல் இருப்பதற்காகவும் அதற்கு மற்ற மீன்களோடு சேர்ந்து உணவினைத் தேடி தின்பதற்கு இயலாததாலும்  ஒரு முன்னெச்சரிக்கையாக அவ்வாறு செய்தான். என் பையன் பள்ளிக்கு சென்று விட்டான். எனக்கு அன்று மாலை நேரப் பணி. வீட்டிலிருந்த நான் ஒடிந்த வாலுடன் ஓட முடியாமல் சித்ரவதையுடன் தொட்டிக்குள் நகர்ந்து கொண்டிருந்த அந்த மீன் குஞ்சை எண்ணி மிகவும் வேதனைப்பட்டு கொண்டிருந்தேன். சாரங்கனுக்கு கூறிய உறுதிமொழியின்படி அந்த வாலொடிந்த மீனின் கோப்பையைத் தொடக் கூடாதென தீர்மானித்தேன்.
காலை ஒரு பத்தரை மணி அளவில் மீன் குஞ்சைப் பார்த்தேன். அப்போது அது நீந்த முடியாமல் தண்ணீரின் மேல் பகுதியில் இருந்தது. ஆனால் சிறிய அளவில் மேலே அது நீந்தி கொண்டிருந்தது. எனக்கு அது படும் வேதனையை எண்ணி மிகவும் வருத்தமாக இருந்தது. நம் கண்களுக்கு தெரியாமல் உலகில் கோடிக்கணக்கான உயிர்கள் பல்வேறு வகையான கடினங்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சிந்தித்தால் நம் வாழ்க்கையே நிம்மதியில்லாமல் போய் விடும். ஆனால் நம் கண்ணெதிரே ஒரு உயிர் கஷ்டப்படுகிற போது  இயல்பாகவே நாமும் அந்த சித்ரவதையை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. நான் வருத்தப்பட்டுக் கொண்டு மீண்டும் படுக்கையில் படுத்து செய்தித் தாள்களில் என் கவனத்தை மாற்ற முயற்சித்தேன்.

ஒரு இருபது நிமிடங்கள் கழிந்திருக்கும். என் மனைவி ''இன்ன பாருங்க.. அந்த வாலொடிந்த மீன் குஞ்சை எடுத்து வெளியிலே போட்டுட்டீங்களா'' என்றாள். ''இல்லையே'' என்று அதிர்ச்சியுடன் அந்த சிறிய கோப்பையை நோக்கினேன். அதில் அந்த மீன் குஞ்சைக் காணவேயில்லை. என்னால் நம்பவே முடியவில்லை. ஏதோ மந்திர சக்தியால் அந்த மீன்குஞ்சு மாயமானது போல் தோன்றியது. எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம் அந்த மீன் குஞ்சு உயிரை விட்டு மரண வேதனையிலிருந்து விடுபட்டதில். ஆனாலும் மீன்குஞ்சு எங்கேப் போயிருக்கும்? இருபது நிமிடங்களுக்கு முன்புதானே மீன் குஞ்சைப் பார்த்துவிட்டு படுத்தேன். இன்னும் அந்த மீன்குஞ்சின் முன்பாகத்தான் படுத்து படித்து கொண்டிருக்கிறேன். அதற்குள் அது எப்படி மாயமாகி இருக்கும். என் மனைவி ''நீங்கதான் அந்த மீன் குஞ்சை வெளியே எடுத்து எங்கேயோ போட்டுட்டீங்க?'' என்றாள். நான் ''அந்த மீன் குஞ்சின் கோப்பையைத் தொடவே இல்லை. இருபது நிமிடங்களுக்கு முன்பாக எட்ட நின்று அந்த மீன் குஞ்சைப் பார்த்தேன். அது உயிரோடுதான் இருந்தது. இப்போது அது காணாமல் போனதுதான் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது'' என்றேன். ''எனக்கு உங்கள் மேல்தான் சந்தேகம்'' என்று என் மனைவி ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள். ''நீ நம்பினால் நம்பு. நான் சாரங்கனுக்கு கொடுத்த உறுதியின்படி மீன் கோப்பையைக் கூடத் தொடவேயில்லை'' என்றேன்.

பள்ளி விட்டு வரும் சாரங்கன் வருத்தப்படுவானே| அவனை எப்படி சமாளிப்பது என்பதும் எனது கவலையாக இருந்தது. ஆனாலும் மீன்குஞ்சு வலியிலிருந்து காப்பாற்றப் பட்டதில் மிகுந்த மகிழ்ச்சிதான். அதன்பின் மீன் குஞ்சு எப்படி காணாமல் போயிருக்குமென்று ஆராயத் தொடங்கினேன். அந்த கோப்பையில் மீன் குஞ்சு இருந்ததற்கான எந்த அடையாளமுமில்லாத அளவிற்கு வெறும் தண்ணீர் மட்டுமே இருந்தது. இன்னும் நன்றாக உன்னிப்பாக கவனித்த போது அந்த கோப்பையின் உட் புறத்தில் தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலாக இரண்டு மூன்று பிள்ளையார் எறும்புகள் உலாவிக் கொண்டிருந்தன. அவை தண்ணீர் குடிக்க வந்திருக்கலாம். மீன் குஞ்சு மேற் பகுதியில் சிறிது ஓரமாகத்தான் அசைந்து கொண்டிருந்தது. எறும்புகள் கூட தூக்கிச் சென்றிருக்கலாம். தண்ணீர் குடிக்க வரும் எறும்பு அந்த மிகச் சிறிய மீன் குஞ்சை இலேசாக கடித்து தூக்கினாலே மீன் குஞ்சு உயிரை விட்டிருக்கலாம். ஆனால் ஒரு எறும்பால் அதை தூக்க முடியுமா... தூக்கிச்செல்கிற அளவிற்கு அங்கே அதிக எறும்புகளும் இல்லை. அப்படியே தூக்கிச் சென்றாலும் இருபது நிமிடங்களில் அவை  எவ்வளவு தூரம்தான் அதைக் கொண்டு செல்ல முடியும்.. சுற்று முற்றும் பார்த்தேன். வேறு எந்த இடத்திலும் எறும்புகளின் தடயங்களே இல்லை. தண்ணீர் கோப்பையின் மேற் பரப்பில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு மூன்று எறும்புகளைத் தவிர... கடவுளே என்னை திருப்திபடுத்துவதற்காக அந்த மீன் குஞ்சை எடுத்துச் சென்று விட்டது போல் மகிழ்ந்தேன். என் மனைவிக்கு என் மேல் சந்தேகம். நான் எப்படி இந்த மீன்குஞ்சு மாயமானது என்ற ஆச்சரியத்திலிருந்து மீள முடியாமல் இருந்தேன்.

மாலை என் பையன் பள்ளி விட்டு வந்ததும் காலணிகளை கழற்றியதுமே நேராக மீன் குஞ்சை நோக்கி வந்தான். ''அம்மா மீன் குஞ்சு என்னாச்சு'' என்றான். நான் நடந்தவற்றை விளக்கமாகக் கூறினேன். நீந்த முடியாத மீன் தண்ணீரில் எவ்வளவு கஷ்டப்படுமென்று விளக்கி அது மாயமான ஆச்சரியத்தையும் விளக்கினேன். என் வார்த்தைகளில் சாரங்கன் முழு திருப்தி அடைந்தான். இப்போது அவன் மாயமான மீனுக்காக அழவில்லை. மற்ற மீன் குஞ்சுகளை மிகவும் சிரத்தையுடன் பராமரிப்பதில் கவனம் செலுத்தினான். ஆனாலும் மாய மீன் குறித்த என் மீதுள்ள சந்தேகம் என் மனைவிக்கு அப்படியே இருந்தது.
ஒரு வாரம் கழிந்திருக்கும். அவன் அம்மாவிடம் பள்ளியில் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தான். அவன் வகுப்பில் நிறைய மாணவர்களிருந்ததால் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு டிவிஷன்களாக பிரித்து விட்டார்களாம். ஒற்றை வரிசை எண் கொண்ட மாணவர்களை 'ஏ' பிரிவிற்கும் இரட்டை வரிசை எண் கொண்ட மாணவர்களை 'பி' பிரிவிற்குமாக பிரித்து விட்டார்களாம். ஒன்றாக இருந்த மாணவர்கள் இரண்டு வகுப்புகளில் பிரிவதில் எல்லா மாணவர்களுக்கும் மிகுந்த வருத்தம். அதில் எல்லா மாணவர்களுமே பிரிவின் வருத்தத்தில் கண்ணீர் வடிக்க நானும் சில முரட்டு பசங்கள் மட்டுமே அழவில்லையென்று பெருமையாக கூறினான். இதைக் கேட்ட எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. எதையும் சிறிதளவு கூடத் தாங்க இயலாத மெல்லிய மனம் கொண்ட இவன் மட்டும் எப்படி அழாமல் இருந்தான் என்றேன். உடனே என் மனைவி அவன் இதற்கெல்லாம் அழ மாட்டான். மீன் குஞ்சுக்கு மட்டும் ஏதாவது வந்து விட்டால் தாங்க மாட்டான் என்றாள்.

Monday, October 24, 2011

நிலவைச் சீண்டிய காற்று - வல்லமை இதழில் வெளியான கவிதை

நிலவைச் சீண்டியக் காற்று
குமரி எஸ். நீலகண்டன்

காற்று மரத்தின்
கிளைகளாய் நீண்ட
கம்புகளை வைத்து
சதா நிலாவை
அடித்துக் கொண்டே
இருக்கிறது.


கிளைகளின் அசைவில்
தேன் கூட்டிலிருந்து
தேன் சொட்டிற்று.


கூரிய இலைகள்
நிலாவைக்
கீறிய போது
மரத்திலிருந்து
நட்சத்திரங்களாய்
ஒளிப் பூக்கள்
சொட்டின.


திறந்த வெளியில்
நிலாவைப் பார்த்தேன்.
நிலாவின் முகத்தில்
இல்லை எந்த
தழும்புகளும்.


மரம் நிலவை
அடிக்கிறதா...
அணைக்கிறதா...

Wednesday, October 19, 2011

நிலவின் வருத்தம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

நிலவின் வருத்தம்
குமரி எஸ். நீலகண்டன்

இரவைத் துளைத்து
வானத்தைத் தொட்டுக்
கொண்டிருந்த
அடுக்குமாடிக் கட்டிடத்தின்
மொட்டை மாடியில்
தேங்கிக் கிடந்த
தண்ணீரில்
இரவுக் குளியல்
நடத்தியது ஒரு காகம்.

அதில் அருகே
குளித்துக் கொண்டிருந்தது
பௌர்ணமி நிலா...

நிலா கேட்டது
காகத்திடம்
இந்த நேரத்தில்
இங்கே எப்படி என்று.

கால நேரம் பார்த்தால்
என் தாகமும் தீராது
தேகமும் தகிப்பிலிருந்து
தணியாது என்றது
காகம் தன்
சிறகுகள் அடித்து.

நிலா சொன்னது..
அப்போதெல்லாம்
இந்த இடத்தில்
ஒரு பெரிய
குளம் இருந்தது.
மீன்கள் இருந்தன.
மரங்கள் இருந்தன.
கொக்கும் நாரையும்
குதூகலமாய இருந்தன.
தினமும் குளித்துக்
கொண்டிருந்தேன்..
இப்போது
எப்போதாவது பெய்யும்
தூறலில் மட்டும்
இந்த மொட்டை மாடியில்
தரை பூசிய நீரில்
என் உடலைத் தேய்த்துக்
கொள்கிறேன்...
 என்றது மிகுந்த
வருத்தத்துடன்.

Thursday, October 13, 2011

அவனுக்கு இல்லாதவை - உயிரோசையில் வெளியான கவிதை

அவனுக்கு இல்லாதவை
குமரி எஸ். நீலகண்டன்

ஒவ்வொருவருக்கும்
ஏதோ ஒரு
இடம் இருக்கிறது.
அதில் ஏதோ
ஒரு காரணத்தால்
உட்கார்ந்து
கொள்கிறார்கள். 

அவனுக்கான
அந்த இடத்தில்
யாரோ ஒருவர்
உட்கார்ந்திருக்கிறார்.
அவன்
இருக்குமிடத்திலிருந்து
அந்த இடம் வெகு
தொலைவிலிருக்கிறது.

அந்த இடத்தை
எட்டும் ஆசையில்
இருக்குமிடத்தையும்
இழந்து விடுவோமோ
என்ற அச்சத்தில்
இருந்த இடத்திலேயே
இருந்து
கொண்டிருக்கிறான்...

அவனுக்கான
அந்த இடத்தைச்
சுற்றிய ஒளிவட்டம்
அவனை பேதலிக்க
வைத்து விட்டது...

அந்த இடத்தைச்
சுற்றியக் கூட்டம்
இரும்புக் கோட்டையாய்
இருக்க இருப்பதற்காய்
மொய்க்கின்றன
ஈக்களின் கூட்டம்.

அவன் பெறாமலேயே
இழந்த இடத்தை
எண்ணி புலம்பிக்
கொண்டிருக்கிறான்
தனக்குள் தன்
தகுதியைக் கூறி
தன்னிடமே
நீதி கேட்டு....

இருக்குமிடத்தை
முதலில் நீ
வெளிச்சமாக்கு
என்கிறது ஏதோ
ஒரு அசரீரி..

Monday, October 10, 2011

குழந்தையின் நிலாப் பயணம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

குழந்தையின் நிலாப் பயணம்
குமரி எஸ். நீலகண்டன்

பிறையின்
வளைவினில்
வசதியாய்
ஒரு குழந்தை
உட்கார்ந்து கொண்டது.
நிலாவும் குதூகலமாய்
குழந்தையை
உலகம் முழுவதும்
சுற்றிக் காட்டிக்
கொண்டிருந்தது.
அதற்குள்
அம்மா பள்ளிக்கு
நேரமாகிறதென
குழந்தையை அடித்து
எழுப்பி பலவந்தமாய்
இழுத்துப் போனாள்.

Sunday, October 2, 2011

ஒரு ராஜகுமாரனின் கதை - காந்தி டுடே இணையத் தளத்தில் அக்டோபர் ஐந்தன்று வெளியான கவிதை

ஒரு ராஜகுமாரனின் கதை
குமரி எஸ். நீலகண்டன்

கடவுளின் ராஜ குமாரன்
கம்பீரமாய் குதிரையில்
வந்தான்
அழகான தேசத்தை
அவன் பெருமிதத்துடன்
பார்த்தான்

முதலில் அவனைச் சுற்றி
எல்லாம் சுகமாகவும்
சுறுசுறுப்பாகவுமே இருந்தன.
திருட்டு அவ்வளவாகத்
தென்படவில்லை.
சோம்பேரித்தனமாய் யாரும்
தெரியவில்லை.
அவலங்களும் அதிர்ச்சியும்
மனத்தளர்ச்சியுமாய்
எதுவும் படவில்லை.

அவன் பயணத்தில்
சில காலங்களில்
சில தூரங்கள்
கடந்திருப்பான்.

அதிர்ச்சி ஆரம்பமானது.
பசுமை உடுத்திய தாயின் மடியில்
பரிதாபத்துடன் பல உயிர்கள்

ஆடையில்லாமல்
அழுக்குத் துண்டில்
ஆடிக் கொண்டிருந்தன
பல உயிர்கள்
உலக வரைபடங்களெல்லாம்
நெஞ்சில்
நிதர்சனமாய் தெரிந்தன.
வறுமையில் தோய்ந்து
வழிந்தது துயரம்

முதலில் தனது
தலை கிரீடத்தை
எறிந்தான் ராஜகுமாரன்
தன் மேல் சட்டைகளை
அவிழ்த்து எறிந்தான்
தனது உடமைகளைத் திறந்து
அவர்களாகவே மாறி
அவர்களுக்காக
போரிடத் தொடங்கினான்

பருத்தி மரத்தின்
விதைகளைப் பறித்து
அதைப் பிரித்து
நூல் நூற்று
அவர்களுக்காய் ஆடை
நெய்து கொடுத்தான்
சுற்றியிருக்கும்
இயற்கையுடன்
கை கோர்க்க இனிதேக்
கற்றுக் கொடுத்தான்

அன்னியனின் விலங்குக்குள்
அனைவரும்
முடங்கிக் கிடந்தனர்
அவனிடம் கத்தியில்லை
குண்டூசி கூட இல்லை
நிராயுதனாய் சத்தியத்துடன்
சரித்திரப் போர்
தொடங்கினான்

அகிம்சையெனும்
ஆயுதமே அவனுக்கு
ஆரோக்கியமாய் தெரிந்தது.
கோபத்தை
அண்ட விடவில்லை
அவனின் கொள்கை
சிதையாமல் இருந்தது.

அகிம்சையின் வெப்பத்தில்
உருகினான் அன்னியன்
விலங்குகள் முறிய
வீர முழக்கமிட்டனர்
மக்கள்
ஆனந்தத்தின் உச்சத்தில்
ஆரவாரம் செய்தனர் மக்கள்
உற்சாக கோஷத்தில்
உலகமே அதிர்ந்தது


ராஜகுமாரன்
எச்சரிக்கை உணர்வுடன்
ஏதோ கூறினான்
வெறும் விடுதலை
மயக்கத்தில்
விழிக்கவே இல்லை
பல தலைகள்.

மக்களுக்காக
அறிவுறுத்திக் கொண்டே
இருந்தான் அவர்களின்
ஆரவாரத்தில் அவன் குரல்
அமுங்கிப் போனது

தனித்து விடப் பட்டான்
அவன் விடாமல் தனது
எச்சரிக்கை ஒலிகளை
எழுப்ப எழுப்ப
ஆரவார கூட்டத்திலிருந்து
ஒருவனின்
துப்பாக்கி குண்டுகள்
கோழையாய் அவனை
குதறிச் சிதைத்தன

ரத்தத்தின் கொதிப்பினை
அறிய குண்டுகள்
துளைத்திருக்க கூடும்
அகிம்சை சமாதியானது
ஆரவாரித்த மக்களெல்லாம்
இன்னொருவனுக்கு
அடிமையாயினர்.

ராஜகுமாரனை மறக்காத
அவர்கள் அவன்
பிறந்த நாள் இறந்த நாள்
எல்லாவற்றையும்
கொண்டாடினர்
காலங்காலமாய்
கடிதங்களிலெல்லாம்
தபால் தலையாய் அவன்
தலையைப் பதித்து
தவறாமல் அவனைக்
குத்திக் கொண்டே
இருந்தார்கள்

அவனுக்கு பிடிக்காத
மதுக் கடைகளின்
கல்லாப் பெட்டிகளிலெல்லாம்
மொட்டைத் தலையுடன்
அவன் முகங்களெல்லாம்
கொட்டிக் கிடந்தன
கொலை கொள்ளை
கூலிப்படையென
எல்லோர் கைகளிலும்
அவன் தலைகளையே
கூலிகளாய் பரிமாறினர்

அந்த ராஜகுமாரனைப் பற்றி
எல்லோரும் அவர்களின்
குழந்தைகளைக்கு சொல்லிக்
கொடுக்கிறார்கள் அவனையும்
அவனது வாழ்க்கையையும்
படிக்காமல் தெரியாமல்..
   
அந்த ராஜ குமாரனின்
பெயர் மகாத்மா என்றார்கள்