Saturday, December 4, 2010

இருட்டும் தேடலும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday November 28, 2010

இருட்டும் தேடலும்

குமரி எஸ். நீலகண்டன்

 


இருண்ட நீர் பையிலிருந்து
வளைந்து நெளிந்து
வெளியே வந்து
அழுத அவனுக்கு
ஒளி உற்சாகம் கொடுத்தது. 

வெளியின் துகள்கள்
அவன் வேர்களில் ஊருடுவ...
கருப்பு,வெளுப்பு,
அழுக்கு, மணம்,
மேல், கீழ்,
வடக்கு, தெற்கு,
சிறிது, பெரிது
உயர்ந்தது, தாழ்ந்தது,
நல்லது, கெட்டது,
அழகானது, அழகற்றது,
பலமானது, பலவீனமானது,
நிறம், திறமென ஒன்றாய்
இருந்தவற்றையெல்லாம்
பிரித்து பிரித்து
எல்லாவற்றையும் அவன்
ஒழுங்கீனம் செய்த போது.....

இறுதியில் இருள்
அவனை உள்வாங்கிக்
கொண்டது... 

இருட்டிலிருந்து வந்தவன்
இப்போது இருட்டில்
தேடுகிறான் ஒளியையும்
ஒளிக்கு பின்னால்
ஒளிந்து போனவைகளையும்.