Tuesday, March 20, 2012

பனி நிலா - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

பனிநிலா
குமரி எஸ். நீலகண்டன்

பனிக்குஞ்சொன்று கண்டேன்.
சூரியன் சுட்ட
கருஞ்சாம்பலை விலக்கி
வெண்ணொளி வீசி
வீதிக்கு வந்தது.
குளிர்ந்து செழித்தது
காடும் நாடும்.
வெண்ணிலா
அதுவென்று சொன்னேன்.
வியந்து உயரப்
பார்த்தவர்
விழிகளுள்
பனிக் குஞ்சினை
புதைத்து வைத்தேன்.
நாளுக்கு நாள்
வளரும் குஞ்சோடு
விரியும் ஒளியில்
வெளிகளும் வளர்ந்தன..
விண்மீன்களும் குஞ்சுடன்
கொஞ்சி களித்தன.

Saturday, March 10, 2012

காற்றின் கவிதை - திண்ணை இதழில் வெளியான கவிதை

காற்றின் கவிதை
குமரி எஸ். நீலகண்டன்

எழுதாமல் பல
பக்கங்கள் காலியாகவே
இருக்கின்றன.

எழுதுவதற்காக இருந்தவன்
எழுதாமல் போனதால்
பலன் பெற்றனவோ
அந்தப் பக்கங்கள்.

எழுதுபவன் எழுதாததால்
வெள்ளை உள்ளத்துடன்
வெற்றிடம் காட்டி
விரைந்து அழைக்கிறதோ
அந்தக் காகிதப் பக்கங்கள்.

காகிதத்தின் மொழி
அறியாமல் காகிதத்தில்
எழுத முயல்கையில்
எங்கோ இருந்து
வந்தக் காற்று
காகிதத்தை
அடித்துப் போயிற்று.

காற்று அந்தக் காகிதத்தில்
தன் கவிதையைக்
கொட்டி கொட்டி
உரக்கப் பாடியது.

நிச்சயமாக அந்தக்
காகிதம்
காற்றின் கவிதையில்
காலம் முழுவதும்
நிறைந்திருக்கும்.

Friday, March 2, 2012

இருளில் உருளும் மனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

இருளில் உருளும் மனம்
குமரி எஸ். நீலகண்டன்


இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.

வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.