Thursday, August 12, 2010

ஈர்ப்பு - சென்னை ஆன்லைனில் வெளியானக் கவிதை

ஈர்ப்பு

  ஈர்ப்பு

குமரி எஸ். நீலகண்டன்

பற்றுதலுக்குப்
பிடிபடாமல் எல்லாமே
கை நழுவி விடுகிறது.

விழுந்ததில் உடையாத
சிலவற்றை
வழிப்போக்கர்கள்
எடுத்துச் சென்றார்கள்.

உடைந்தவற்றில்
ஒரு பகுதி
குப்பைத் தொட்டிக்குச்
சென்றிருக்க வேண்டும்.

உடைசல்களின்
எஞ்சிய குவியல்களை
ஒன்று சேர்க்கப் பார்க்கிறேன்
கைக்கு லாகவமாய்ப்
பற்றிக் கொள்ள.

பொருளுக்கேற்றாற் போல்
கைகள் வேண்டும்
பற்றிக்கொள்ள.

  ஈர்ப்பு
Jun 23, 2009

சத்திய பிரமாணம் - சென்னை ஆன் லைனில் வெளியானக் கவிதை

சத்திய பிரமாணம்

 சத்திய  பிரமாணம்

குமரி எஸ். நீலகண்டன்

எனக்குச் சுதந்திரம் வேண்டும்.
ஆனால்
எல்லோரும்
நான் சொல்வதையே
கேட்க வேண்டும்.

எல்லோரும் உழைக்க வேண்டும்.
ஆனால்
எனக்கு வியர்வை ஒவ்வாது.

உதவும் மனதே
உலகை உயர்த்தும்.
எல்லோரும் எனக்கு
உதவுங்கள்.

பாவம்! அவனுக்கு
ஏதாவது கொடுங்கள்!
என்னிடம் மட்டும்
எதுவும் கேட்காதீர்கள்.

உனக்காக உயிரையே
கொடுப்பேன்.
உறுதியாக வாக்கு
தருகிறேன்.

என்னிடம் ஒரு பலஹீனம்
வாக்குறுதிகள் மட்டும்
என் நினைவில்
இருப்பதே இல்லை.

 சத்திய  பிரமாணம்
Jul 21, 2009

பீல்டு மார்ஷல் மானெக்சா - விகடன் பிரசுரம்

ஃபீல்டு மார்ஷல் மானெக்சா



பிடித்தவை


ஆசிரியர்: குமரி சு.நீலகண்டன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்: 978-81-8476-139-9
மொத்த பார்வையாளர்கள்: 125 Views
விலை: ரூ. 45

விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

அண்டை நாடுகள் பலவற்றிலும், ராணுவ ஆட்சியும் சர்வாதிகார அடக்குமுறையும் இருந்தாலும், எவ்வளவோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாரம்பரியம் மிக்க பாரத நாடு இன்றும் வலுவான ஜனநாயகத்தைக் கொண்டிருக்கிறது. சுதந்திரப் போக்கும் மக்களாட்சியும் இன்றும் உலக நாடுகள் நம் நாட்டை வியந்து பார்க்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிலைக்குக் காரணமாக இருப்பவர்களில் முக்கியமானவர்கள், நம் ராணுவ உயரதிகாரிகள் _ குறிப்பாக மானெக்ஷா போன்றவர்கள்.
பார்ஸி இனத்தைச் சேர்ந்த அமிர்தசரஸில் பிறந்து, நம் தமிழகத்தின் குன்னூரை அதிகம் நேசித்த ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷாவின் மறைவு, உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பு.
இந்தியா சந்தித்த மூன்று போர்களுக்கு சாட்சியாக இருந்தவர் மானெக்ஷா. அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களில் சில சுவாரஸ்யங்கள் இந்த நூலில் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்திரா காந்திக்கும் மானெக்ஷாவுக்கும் இடையில் நிலவிய புரிந்துணர்வு, எப்படி நம் நாட்டை வலுவான நாடாகத் திகழ வைத்தது என்பதை இந்த நூலில் அழகாகக் காட்டியுள்ளார் நூலாசிரியர்
குமரி சு.நீலகண்டன். இந்திராகாந்தியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, மானெக்ஷா இந்தியாவில் ராணுவ ஆட்சியை நிறுவி விடுவார் என்று புரளி கிளப்பப்பட்ட போது, மானெக்ஷாவிடம் நேரிலேயே அதைக் கேட்டுவிட்டார் இந்திராகாந்தி. அதற்கு மானெக்ஷா சொன்ன பதில், நகைச்சுவையானது மட்டுமல்ல; இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிக்காட்டுவதாகவும் அமைந்தது. அது என்ன என்பதை இந்த நூலில் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
நகைச்சுவை உணர்வு மிகுந்த மானெக்ஷா, நெருக்கடியான தருணங்களை எப்படி எதிர்கொண்டார் என்பதையும், ராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடன் கலந்து பழகிய விதத்தையும் இந்த நூலில் படிக்கும்போது, உண்மையில் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை நன்கு அறிய முடியும்.

மெழுகு குலையாத பழங்கள் - தினமணி தலையங்க பக்கத்தில் ஆகஸ்ட் 31,2009 ல் வெளியான கட்டுரை

கட்டுரைகள்
மெழுகு குலையாத பழங்கள்
First Published : 31 Aug 2009 11:44:00 PM IST


வெகு நாட்களுக்கு முன் நாகர்கோவில் செல்லும் வழியில் மணிமேடை சந்திப்பில் காலை வேளையில் அவ் வழியாகச் செல்லும்போது அங்குள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் கூடைகூடையாக ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இறங்கும். பழங்களெல்லாம் பாதுகாப்பாய் வைக்கோலால் பொதியப்பட்டிருக்கும். மொத்த விற்பனையாளர் அந்தப் பழங்களை இறக்கி, சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகித்துக் கொண்டிருப்பார்.
அன்று நாம் பார்த்த பழங்கள் மெருகு குலையாதவை. இன்றைய பழங்கள் மெழுகு குலையாதவை. அறிவியலும் தொழில்நுட்பமும் நன்மையோடு தீமையையும் செய்து கொண்டிருக்கின்றன.
இன்று பழம் விளைகிற ஊரில் பழத்தை வாங்க முடியாத அளவுக்கு விலை. விளைகிற ஊரிலிருந்து பழங்கள் வாகனங்கள், ரயில், விமானமென ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக் கடந்து உலகின் எந்த மூலைக்கோ பயணப்படுகிறது.
வழக்கமாக அமெரிக்கா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு, டிராகன், கிவி போன்ற பழங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.
அந்தப் பழம் கெட்டுப் போகாமல் அது பயணப்படும் காலத்தையும் கால நிலையையும் தாங்கிக் கொள்ளும் விதமாக அது பதப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பார்க்கப் பளபளப்பாக இருக்கும் விலை உயர்ந்த ஆப்பிள் பழங்கள் ரசாயன மெழுகால் பூசப்பட்டு பொதியப்பட்டவை. கையால் அப்பழத்தைச் சுரண்டிப் பார்த்தாலே அந்தப் பழத்திலிருந்து மெழுகு உதிர்வதைக் காணலாம்.
பெரும்பாலானவர்கள் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களின் பளபளப்பில் அதுவே தரமான ஆப்பிளாகக் கருதி அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். அந்த ஆப்பிள் பழத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு இயற்கைத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட உண்ணத் தகுந்தவையா, ரசாயனப் பூச்சா என யாராலும் பகுத்தறிய இயல்வதில்லை.
ரசாயனப் பூச்சு மெழுகும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்த முறையான ஆய்வும் இல்லை. மக்களுக்கும் அது குறித்த போதுமான விழிப்புணர்வும் இல்லை.
பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.
இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் தூரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.
மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள்.
நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர்.
சுத்தப்படுத்தப்பட்ட மெழுகானது சுவையற்றது, மணமற்றது, விஷமற்றது. ஆனால், இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கே உரிய மெழுகைத்தான் இந்த வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை.
பழங்களுக்கு மெழுகு பூச்சிடுவதால் வணிகர்களுக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மெழுகிடுவதால் பழங்களின் எடைக்குறைவைத் தவிர்க்க இயலும்.
பளபளப்பான தோற்றம், பழத்தின் இளமையைக் கூட்டுதல், பழத்தின் நீர்மம் ஆவியாகாமலும் பழம் சுருங்கிவிடாமலும் தடுத்தல், பழத்தின் பருமனைப் பெருக்கிக் காட்டுதல், பூச்சிகளிலிருந்தும் மற்ற காரணங்களாலும் பழம் பழுதடையாமல் காத்தல் என பல அம்சங்கள் அவர்களை இந்த மெழுகிடும் வேலையைச் செய்விக்கின்றன.
உடலுக்குக் கெடுதல் விளைவிக்காத பூச்சிடத்தகுந்த சாதனங்கள் விலை அதிகமானவை. அதனால் தரங்குறைந்த மெழுகுகளால் மெழுகப்பட்ட பழங்கள் பல பெரிய நிறுவனங்களின் அலமாரிகளை பளபளப்புடன் அலங்கரிக்கின்றன. அந்தப் பழங்களுக்கு மெழுகோடு ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பெயர்களும் பெருமையுடன் சூட்டப்படுகின்றன.
மெழுகிடப்பட்ட இந்தப் பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு தொடர்புடைய நோய்களுக்கு வழிவகுப்பதோடு, புற்று நோய்க்குக்கூடக் காரணமாகிவிடும் என்ற மக்களின் அச்சத்துக்கு வலுவான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இன்னொரு பக்கம் கார்பைடு கற்களால் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்கப்படுகின்றன. பணமே முக்கியமாகிவிட்டது. நாட்டின் ஆரோக்கியத்தைப் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை.
அந்தந்த ஊரில் விளையும் கொய்யா, மாங்காய், பப்பாளி, வாழை, திராட்சை போன்றவற்றிலேயே நமது ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. அதைப் பறித்த குறைந்த கால அளவுக்குள் அந்தந்த ஊர் மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் உட்கொள்ளலாம்.
பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமிலவாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம்.
சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தைவிட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும் சீர்கெட்டு வருகிறதாம்.
ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம்.
இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.
இந்நிலையில் நாகரிக உலகத்தைப் பார்த்து ஆப்பிளும் மெழுகைப்பூசி தன் அழகை மெருகேற்றிக் கொண்டதோ?

கருத்துக்கள்

the other bank is always green.though everyone knows this all erring by not realising fault.god gives through nature all what we need in everyones area.if people eat what they get in their ares money,health,nature all will be saved along with their life longevity.

By alexander,kuwait
9/2/2009 9:27:00 AM

கறுப்பு நாய் - சென்னை ஆன் லைனில் வெளியான சிறுகதை

கறுப்பு நாய்

  கறுப்பு நாய்
குமரி எஸ். நீலகண்டன்

கறுப்பு நாய்க்கு முதுகு மிகவும் வலித்தது. முதுகுப் புண் செக்கச் செவேலென்று பார்ப்பவர் கண்களை அருவருக்கச் செய்யும் விதத்தில் இருந்தது. மிளகாய் தூளைப் புண்ணில் தூவியது போலக் காந்தல் எடுத்தது, கறுப்பு நாயின் கண்களிலிருந்து நீர் பொலபொலவென்று கொட்டியது. முதுகுப் புண்ணின் வேதனையை விட மனப்புண் வேதனை மிகவும் வருத்தியது.

காரிலிருந்து வெளியே தள்ளப்பட்டதும் காரைத் துரத்தி வீட்டினை அடைய அது எவ்வளவோ முயன்றது. ஒரு காலத்தில் ''திருடனைத் துரத்தும் போலீஸ் மாதிரி எங்க நாய் கம்பீரமாக ஓடும்'' என்று எசமானனால் வர்ணிக்கப்படட அந்தக் கறுப்பு நாயின் கால்களால் காரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

திருவிழாவில் பெற்றோரைத் தவற விட்ட குழந்தையாய்த் திருதிருவென விழித்தது. தூரத்தில் ஒரு கார் விரைவாக வர, அந்தச் சாலையை அது மெதுவான வேகத்தில் கடந்தது. அதன் நடையோடு அதன் மன நிலையான நிழல்கள் விழுந்து விரைந்து சென்றன. 'இந்த டிரைவர் நம்மைக் கொல்ல மாட்டான்' என்ற மனிதனின் மீது கொண்ட அதன் ஆழ்ந்த நம்பிக்கையும், கார் வருவதற்குள் இந்த நடையின் வேகத்தில் சாலையைக் கடந்து விடலாமென்ற நுண்ணிய மனக் கணக்கீட்டையும், மனச்சோர்வில் 'கார் இடித்து விட்டுப் போகட்டும்' என்ற தற்கொலை மனோபாவமும் அந்த நடையில் சித்திரங்களாய்த் தெரிந்தன.

பார்வைக்கு எட்டிய திசைகளில் எல்லாம் ஓடி ஓடி முயன்றது. ஆனால் அதனால் வீட்டை எட்டவே முடியாமல் போனது. அது போகும் தெருக்களில் எல்லாம், அங்குள்ள வெளிநாட்டு வீட்டு நாய்களும், சில சொறி நாய்களும், கறுப்பு நாயை ஒருவித இன வெறியுடன் தீண்டத் தகாததாய்ப் பார்த்தன. அவை இதை ஏதோ அந்நியனாய்ப் பாவித்துக் குரைத்து நிராகரித்தன.

அது சாலை ஓரத்தில் இருந்த மலத்தை நுகர்ந்தது. ஒரு வெறுப்புணர்ச்சியுடன் அதை நிராகரித்து விட்டு மீண்டும் ஒடியது. கழுத்தில் கிடந்த லைசென்சு அதை முனிசிபாலிட்டிகாரர்களிடமிருந்து காப்பாற்றியது. பசி வயிற்றைப் பிய்த்தது. பசியின் கொடுமையால் முதன்முதலாய் அந்த ஹோட்டலின் எச்சில் இலையை நக்கத் துவங்கியது. அந்த எச்சில் சோறு வயிற்றின் உள்ளே செல்ல மிகவும் தயங்கியது.

அது எப்படியெல்லாம் வளர்ந்த நாய். அது பிறந்த இரண்டாவது நாளிலிருந்து, இன்று காலை வரை எசமானன் நஞசப்பன் வீட்டு உணவை மட்டுமே உண்ட நாய், நஞ்சப்பனின் மூன்றாவது குழந்தையாய் வளர்ந்த நாய். ''நஞ்சப்பன் வீடு'' என்று சொல்லாமல், ''கறுப்பு நாய் வீடு'' என நஞ்சப்பன் வீட்டை அறிமுகப்படுத்தும் அளவிற்குத் தெருவிலுள்ள எல்லோரும் அறிந்த நாய்! அது ஒரு முக்கிய அறிவுஜீவி.
பல வருடங்களுக்கு முன்பு நஞ்சப்பன் வங்கியில் கணக்கராக இருந்தபோது அதிக வசதிகளில்லாத ஒரு நடுத்தர வர்க்கத்து இந்தியனாகவே இருந்தார். அவர் கறுப்பு நாய்க்கு மட்டும் எந்தக் குறையும் வைத்தது கிடையாது.

நஞ்சப்பன் வீட்டைக் கறுப்பு நாயும் சிறந்த காவல் வீரனாகக் காத்திருக்கிறது. அது பல திருடர்களைக் குரைத்து விரட்டியிருக்கிறது. ஆனால் அது தன் வாழ்வில் யாரையும் கடித்ததாய்ச் சரித்திரம் இல்லை. நஞ்சப்பன் கூட அந்தக் கறுப்பு நாயைப் பற்றி வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம் ''இதுக்குக் கண் கழுகுக் கண், இதுக்குக் காது பாம்புச் செவியாக்கும, இதுக்கு மூக்கு அபாரமான நுகர்வுத் திறனுள்ளது. திருடனைத் துரத்தும் போலீஸைப் போலக் கம்பீரமாக இது ஓடும்'' என விதவிதமாக, அதன் அங்கங்களை வர்ணிப்பார். நஞ்சப்பனைத் தேடி வரும் பலர் கறுப்பு நாயைப் புகழ்ந்து பேசி அவரை ஐஸ் வைத்துப் பல காரியங்களும் சாதித்திருக்கின்றனர். இந்தக் கறுப்பு நாய் நஞ்சப்பன் வீட்டுக்கு விருந்துக்கு வரும் விருந்தாளிகளின் குழந்தைகளுக்குக் காட்சிப் பொருளாய் அவர்களின் அழுகையை நிறுத்தி எவ்வளவு சேவை செய்திருக்கிறது!

''கடிக்காத நாய்''என்ற அபார நம்பிக்கையில் நஞ்சப்பன் தைரியமாக நாயின் பக்கத்திலேயே குழந்தைகளை விளையாட விடுவார்.

''ஹாய்! நாயைப் பாரு'' என்றதுமே அடம்பிடிக்கும் குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும். அந்தக் கறுப்பு நாய் மட்டும் இல்லாவிட்டால், குழந்தை அழுதுகொண்டே இருந்திருக்கும். 'சீ! குரங்கு அழுகையை நிறுத்தல்லே கொன்னுடுவேன்' எனத் தாயும் மிரட்டி இருக்கலாம். அழுது அழுது குழந்தையின் உடல் நிலை கூடப் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

''என்னடி! அப்பதே சொன்னேன்! குழந்தை கேட்டத கொடுன்னு! குழந்தை அடம்பிடிக்கறதே உன்னாலேதான்'' எனக் கணவன் மனைவியிடையே பிரளயம் ஆரம்பித்து அது பூகம்பமாய் வெடித்திருக்கவும் செய்யலாம்.

இப்படிச் சாதாரணமாக நம் சிந்தனைக்கு எட்டாமலேயே, இந்தக் கறுப்பு நாய் பெரிய பெரிய சேவைகளை நஞ்சப்பன் குடும்பத்திற்குச் செய்திருக்கிறது.. அதுவே பலர் இவருக்குக் கடிதம் எழுதும் போது கறுப்பு நாயைப் பற்றி விசாரிக்கவும் வைத்திருக்கிறது.

நஞ்சப்பனும் கறுப்பு நாயை நாள் தவறாமல் குளிப்பாட்டி, குழந்தை போல் வளர்த்தார். அதன் உடம்பில் உண்ணிப் பூச்சிகள் ஒன்றினைக்கூட அண்ட விடமாட்டார்.

பக்கத்து வீட்டுச் சிறுவன், கறுப்பு நாயின் மேல் கல்லை எறிந்ததற்கு அவர்களிடம் சண்டை போட்டு அவர்களின் நட்பையே முறித்துக்கொண்டார். ஒரு தடவை அது சைக்கிளில் அடிபட்டுக் கால் ஒடிந்து வ்ந்தபோது, நாய் என்று பாராமல், மூலிகைகளைக் கால்களில் வைத்துக் கட்டிக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்தார். குளிர்க் காலங்களில், பல இரவுகளில், நடு இரவில் விழித்து, ''பாவம்! நாய்க்கு குளிரடிக்கும்'' என்று கூறி நாயை அவிழ்த்து, முற்றத்தில் படுக்க வைத்துக் கோணியால் போர்த்தி விடுவார்.

''நாய் தனியாக இருக்கும்'' என்ற காரணத்தினாலேயே அயலூரில் பல உறவினர்கள், நண்பர்களின் திருமண விழாக்களை நஞ்சப்பன் நிராகரித்திருக்கிறார். பல விழாக்களுக்கு மனைவியையும், பிள்ளைகளையும் மட்டும் அனுப்பி இருக்கிறார். நஞ்சப்பன் கவலையோடு ஏதாவது ஆலோசித்துக் கொண்டிருக்கையில் 'அது ஊர் சுற்றிவிட்டு, கல்லூரியிலிருந்து வீட்டிற்குக் காலம் தாழ்த்திப் பெற்றோருக்குப் பயந்து வரும் ஒரு மகனின் தயங்கிய கால்களைப்' 'போல் தன் கால்களை நகர்த்தி நகர்த்தி வரும். நஞ்சப்பன் அதன் தலையினை அன்பாய்த் தடவித் தடவியே தன் கவலைகளை மறந்து போவார்.
ஆண்டுகள் பல ஓட, நஞ்சப்பன் வசதியும் சிறிது பெருகிக் கொண்டே சென்றது. புதுவீடு கட்டினார். ஸ்கூட்டர், கார் வாங்கும் அளவிற்கு அவர் வசதிகள் பெருகின. புதுப் புது நண்பர்கள் வந்தனர். ஒருநாள் நஞ்சப்பன் வீட்டிற்கு விருந்திற்கு வந்த ஒரு பெண், ''என்னங்க! இந்தச் சொறி நாயைப் போய் வீட்டிலே வளர்க்கறீங்களே? நல்ல பொமரேனியன் குட்டி கிடக்குது! ஒண்ணைத் தர்றோம்!'' என்று நஞ்சப்பன் மனைவியிடம் சொல்ல, அன்றுதான் இந்தக் கறுப்பு நாய்க்குக் கெட்ட காலம் தொடங்கியது.

அடுத்த நாள் வெள்ளை நிற பொமரேனியன் நாய், நஞ்சப்பன் மடியில் கொஞ்சி விளையாடியது. கறுப்பு நாயைக் கண்டதுமே பொமரேனியன் விடாமல் வெறுப்புடன் குரைத்தது. முதல் இரண்டு நாட்கள் கறுப்பு நாயைத் தனியாக பின் வாசலில் கட்டி வைத்தார்கள். ஆனால் பொமரனியனோ இந்த நாயைக் கண்டால் விடாமல் தொண்டை கிழியக் குரைத்தது. சப்தம் தாங்கச் சகிக்காமல் பக்கத்து வீட்டுக்காரர்கள், நஞ்சப்பன் வீட்டாரைத் திட்டத் தொடங்கினர். கறுப்பு நாயின் மீது நஞ்சப்பன் குடும்பத்தாரின் அன்பு சிறிது சிறிதாக விலகத் தொடங்கியது நஞ்சப்பன் முன்பு, பரிதாபமாய் வாலை அசைத்து அன்பிற்காக ஏங்கி நிற்கையில் அடித்து விரட்டப்பட்டது. அது வீட்டு வாசலிலேயே சோகமாய்ப் படுத்துக்கொண்டது.

ஒரு நாள் நஞ்சப்பனின் மனைவி தன் கணவனிடம் ''இதோ பாருங்க. இந்த நாயை நம்ம வீட்டிலே வச்சிருந்தோம்னா நம்ம ஸ்டேட்டஸ் குறைஞ்சிடும்'' என்று சொன்னாள். உடனே கறுப்பு நாய் காரில் பக்கத்து ஊரிலேயே விட்டு வரப்பட்டது. ஆனால் அன்று மாலையே அலைந்து வீட்டை மோப்பம் பிடித்து வந்துவிட்டது. நன்றியுடன் நஞ்சப்பனிடம் அன்பிற்காக ஏங்கி வாலை ஆட்டிக் கெஞ்சியது. நேற்று வந்த பொமரேனியன் இதைக் குரைத்து விரட்டியது.

அன்று இரவு கறுப்பு நாயை விரட்ட வேறு வழியில்லாமல் ஒரு நண்பரின் ஆலோசனையின் கீழ் நஞ்சபப்னின் மனைவி விஷத்தை மாமிசத்தில் கலந்து அதன் முன் வைத்து விட்டுச் சென்றாள். சில மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் இறந்த ரோஸி என்ற தன் சகநாய் வாந்தி எடுத்த எச்சில் சோற்றின் வாடை இதிலும் வீச, கறுப்பு நாய் அந்த விஷச் சோற்றை வெறுப்புடன் நிராகரித்தது.

அன்று நஞ்சப்பனின் வீட்டிற்கு அவரது அக்கா வந்திருந்தாள் அக்காவின் மூன்று வயதுக் குழந்தை தவழ்ந்து தவழ்ந்து கறுப்பு நாயின் பக்கம் வந்து அந்தச் சோற்றைத் தின்ன முயல, கறுப்பு நாயும் எச்சரிக்கை உணர்வுடன் தன் கால்களால் குழந்தையின் கையைத் தட்டிவிட்டு ஊளையிட்டுக் காப்பாற்றியது. ஆனால் நாயின் கால் நகம் குழந்தையின் கைகளைச் சிறிது கீச்சிப் புண் ஆக்கிவிட, அதன் அழுகையில், நஞ்சப்பன் குடும்பமே ''நாய் கடிச்சிடிச்சு! குழந்தையை நாய் கடிச்சிடிச்சு!'' எனக் கதறியது.
நஞ்சப்பன் அன்புடன் வளர்த்த அந்தக் கறுப்பு நாயை முட்கள் போல் 'சிரா' நிறைந்த விறகுக் கட்டையால் அடித்துக் கொல்ல முயன்றார் 'ஓ' என்று வலியில் கத்தியது. ''சீ! வளர்த்த நாயை அடிக்காதே! எங்கயாவது கொண்டு விட்டுகிட்டு வா!" எனப் பக்கத்தது வீட்டு வயதான அம்மா சொல்ல, கறுப்பு நாய் காரில் பயணமானது. வீட்டிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் விடப்பட்டது, அது சுற்றி சுற்றி வந்தது. நஞ்சப்பன் வீட்டை அதனால் எட்ட இயலவில்லை. கறுப்பு நாய் நஞ்சப்பன் வீட்டை விட்டு வெளியேறிச் சுமார் ஆறு மாதங்கள் கழிந்துவிடட்ன. இந்த ஆறு மாதங்களில் அது எவருக்கும சொந்தமில்லாமல், கல்லடி, கம்படியென எல்லாத் துயரங்களையும் பெற்றுகொண்டு ''சொறி'' நாயாகச் சந்தை, தெருவென அலைந்து கொண்டிருக்கிறது. எசமானன் நஞ்சப்பனை மட்டும் அடிக்கடி நினைத்துக் கண்ணீர் விடும்.

அன்று தன் எசமானரின் கார் டிரைவரை வைத்துக் காரை அடையாளம் கண்டு கொண்டது. டிரைவர் காரின் கதவைத் திறந்து போட்டு விட்டு, பூக்கடைக்குள் நுழைய இது தந்திரமாய்க் காருக்குள் நுழைந்து, இருக்கையின் அடியில் ஒளிந்து கொண்டது. காரினுள் பூக்கூடைகள் அடுக்கப்பட்டிருந்தன. பூவின் வாசம் நாயின் மூக்கை துளைத்தது.

வீட்டின் முன் கார் நின்றது. ஒரே கூட்டம். காரிலிருந்து வேகமாய்த் தாவிக் குதித்துச் சந்தோஷமாய் எசமானனைக் காணும் ஆசையில் வீட்டிற்குள் ஓடியது. ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் தன் சக நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

''பாவம்! நஞ்சப்பன் சார்! ஹார்ட் அட்டாக்லே 'பட்'டுன்னு போயிட்டாரு! இந்தக் கறுப்பு நாய் போனதிலேயிருந்து அவங்க குடும்பம் சீரழிஞ்சு போச்சு! இவரு ஒரு பொமரேனியன் வளத்தாரு! அது பக்கத்து வீட்டுப் பொட்டை நாய் கூட எங்கோ ஓடிப் போச்சு! பாவம் இது நன்றியுள்ள நாய்! அடிச்சுத் துரத்தின பிறகும் எவ்வளவு நன்றியா வீடு தேடி வந்திருக்கு! ”

கறுப்பு நாய் எசமானரின் முகத்தைக் காணும் ஆவலில் கண்ணீர் மல்க நின்றது. திடீரென எங்கிருந்தோ அங்கு ஓடி வந்த பொமரேனியன், கறுப்பு நாயின் அருகில் வந்து சோகத்துடன் அதன் கண்ணீரை நக்கிக் கொண்டிருந்தது.