Wednesday, October 19, 2011

நிலவின் வருத்தம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

நிலவின் வருத்தம்
குமரி எஸ். நீலகண்டன்

இரவைத் துளைத்து
வானத்தைத் தொட்டுக்
கொண்டிருந்த
அடுக்குமாடிக் கட்டிடத்தின்
மொட்டை மாடியில்
தேங்கிக் கிடந்த
தண்ணீரில்
இரவுக் குளியல்
நடத்தியது ஒரு காகம்.

அதில் அருகே
குளித்துக் கொண்டிருந்தது
பௌர்ணமி நிலா...

நிலா கேட்டது
காகத்திடம்
இந்த நேரத்தில்
இங்கே எப்படி என்று.

கால நேரம் பார்த்தால்
என் தாகமும் தீராது
தேகமும் தகிப்பிலிருந்து
தணியாது என்றது
காகம் தன்
சிறகுகள் அடித்து.

நிலா சொன்னது..
அப்போதெல்லாம்
இந்த இடத்தில்
ஒரு பெரிய
குளம் இருந்தது.
மீன்கள் இருந்தன.
மரங்கள் இருந்தன.
கொக்கும் நாரையும்
குதூகலமாய இருந்தன.
தினமும் குளித்துக்
கொண்டிருந்தேன்..
இப்போது
எப்போதாவது பெய்யும்
தூறலில் மட்டும்
இந்த மொட்டை மாடியில்
தரை பூசிய நீரில்
என் உடலைத் தேய்த்துக்
கொள்கிறேன்...
 என்றது மிகுந்த
வருத்தத்துடன்.