| காலமும் இடமும் | ||||
| ||||
![]() இடங்கள் இடங்களாகவே இருக்கின்றன. அதில் இருப்பவர்களும் அடையாளங்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. இடம் தன் அடையாளத்தை இழந்த போதும் இருந்தவர்களிடமெல்லாம் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறது இருந்த அடையாளத்துடன். ஒவ்வொரு இடத்திலும் பலர் வருவார்கள்.. இருப்பார்கள்... போவார்கள் ஆனால் இருந்த காலத்தின் இடம் இருந்தவர்களுக்கானது. | ||||
Thursday, November 4, 2010
காலமும் இடமும் - உயிர்மை உயிரோசையில் வெளியான கவிதை
Labels:
கவிதை
Wednesday, November 3, 2010
கடவுளின் அடையாளங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை
கடவுளின் அடையாளங்கள்
குமரி எஸ்.நீலகண்டன்
கடவுள் யார்
எப்படிப் பட்டவர் எனத்
தெரியாமல்
கடவுளோடு கடவுளாய்
மக்கள்.
அவனவன் இயல்புடன்
அவனவன் கடவுள்.
அவனுக்குக் கடவுள்
கோபக்காரன்.
அவனுக்கு கடவுள்
வஞ்சம் நிறைந்தவன்.
ஒருவனுக்கோ கடவுள்
அமைதி ஸ்வரூபி.
இன்னொருவனுக்கு
கடவுள்
இதயமில்லாதவன்.
அவனுக்குக் கடவுள்
ஆள வந்தான்.
இன்னொருவனுக்கு
கடவுள் கருணைப் பிடாரன்.
அவனுக்குக் கடவுள்
காணிக்கை கொடைக்குக்
கருணை காட்டுபவன்.
எங்கும் கடவுளாய்
கடவுள் நிறைந்த உலகம்.
எங்கெங்கினாதபடி எங்கும்
இறைவன் இருக்க
கடவுள் யார்
எப்படிப்பட்டவர் எனத்
தெரியாமல்
கடவுளோடு கடவுளாய்
மக்கள்.
Labels:
கவிதை
Tuesday, November 2, 2010
சில நிமிடங்கள் சில சந்தோஷங்கள் - வல்லமை இதழில் வெளியான சிறுகதை
சில நிமிடங்கள்! சில சந்தோஷங்கள்!
குமரி எஸ். நீலகண்டன்
அவனால் நம்ப இயலவில்லை… சூம்பிப் போன அவனது கால்கள் சிறகுகளாய் வளர்ந்து வானத்தில் பறப்பது போல் உணர்ந்தான். சில நம்ப இயலாத நிகழ்வுகளே நிஜத்தில் நிகழ்ந்து விடுவதில் நம்பிக்கை கொண்டான். அவனது கலைத் திறனுக்கு விலையாக, உலகில் யாருக்கும் கிடைக்காத மிக உயர்ந்த பரிசு தனக்குக் கிடைத்ததாகப் பெருமிதம் கொண்டான்.
அன்று ‘கிறீச்’ என்ற ஒலியுடன் இரண்டு காவல் துறை வாகனங்கள் அங்கு வந்து நின்றபோது அவன் மிகவும் பயந்துபோனான். வழக்கம்போல் தன்னை அந்த இடத்திலிருந்து விரட்டத்தான் வருகிறார்களோ என முதலில் அஞ்சி நடுங்கினான். ஆனால் எதிர்பாராத விதமாக அவனுக்கு அங்கு ஒரு ராஜ வரவேற்பு.
அவனது உடைமைகளைக் காவல் துறையினரே பத்திரமாக ஒரு பெட்டிக்குள் பூட்டினர். அவனை மிகுந்த
மரியாதையுடன் வாகனத்துள் ஏற்றினர். மறுநாள் எல்லாச் செய்தித் தாள்களின் தலைப்புச் செய்தியானான் கணேசன். ‘பிளாட்ஃபார்ம் ஓவியர் கணேசனுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து’. வானொலி, தொலைக்காட்சிகளோடு எல்லாச் செய்தித் தாள்களிலும் கணேசன் சிறப்புச் செய்தியானான்.
அவனது இருப்பிடமான அந்த பிளாட்ஃபார்மினை சுற்றியுள்ள கடைகள், அலுவலகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்தவர்களெல்லாம் ‘கணேசனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு நிறைய உதவி இருக்கிறேன்’ என்ற தொனியில் பெருமிதமாகப் பேசிக்கொண்டார்கள். கணேசன் ஒரு சாதாரண பிளாட்ஃபார்ம் பிரஜை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்க்கை. போராட்டங்களையும் பிரச்சனைகளையும் அன்றாட அலுவல்களாகப் பழகிப் போனவன். பிளாட்ஃபார்முக்கு முந்தைய அவனது வாழ்க்கை மிகவும் சுருக்கமானது. அவனது அப்பாவின் ஐம்பதாவது வயதில் பதினொன்றாவது குழந்தையாகப் பிறந்து, பிளாட்ஃபார்மில் பத்தோடு பதினொன்றானான். வீட்டின் கொடிய வறுமையும், இளம்பிள்ளை வாதத்தால் அவனது உடல் ஊனமும் எட்டாவது வயதிலேயே அவனை ஏற்பாரின்றித் தவிக்கவைத்தது.
எல்லாத் தொழில்களிலும் ஓரளவு ஆரம்பப் பாடம் படித்திருக்கிறான். தையற்கடையில் காஜா தைத்திருக்கிறான். ஓட்டலில் பாத்திரம் கழுவி இருக்கிறான். செருப்பு தைத்திருக்கிறான். கடலை விற்றிருக்கிறான். ஏதோ ஒரு காரணங்களால் எல்லாத் தொழில்களுமே அவனைக் கை விட்டுவிட்டன. ஆனால் அவனுள் பதுங்கியிருந்த ஓவியக் கலை ஆர்வம் மட்டும் அவனை விடாது பிடித்துக்கொண்டது. கடலை விற்றபோது நல்ல ஓவியங்கள் உள்ள காகிதங்களைப் பத்திரப்படுத்தினான். ஹோட்டல் வேலை கிடைத்தபோது சமையலறைக் கரியில் ஓவியங்கள் வரையக் கற்றான். ஹோட்டலில் முதலாளியின் தலைக்கு மேல் பூக்களுடன் தொங்கும் சாமிப் படங்களை வரையக் கற்றுக்கொண்டான். வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமுமே அவனுள் ஆயிரக்கணக்கான ஓவியங்களாய்ப் பரந்து விரிந்து கிடந்தன. ஒவ்வோர் ஓவியத்தினுள்ளும் ஒவ்வோர் ஆசிரியர் நின்று பாடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
அந்த விருதுபெறாத, உருவமற்ற நல்லாசிரியர்களால்தான் கணேசன், இன்று மிக உயர்ந்த கலைஞனாய், மனிதனாய் இருக்கிறான். அவனுள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாவிட்டாலும் ஓவியங்கள் வழி தனது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதில் அவனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதிகம் பேசமாட்டான். கரிகளிலும் சாக்பீசுகளிலும் அவனது உணர்வுகளை, அனுபவ வெளிப்பாடுகளைக் கொட்டித் தீர்த்தான். அவனது ஓவியங்களில் சில நேரங்களில் பயம் பரவிக் கிடந்தது. அபூர்வமாய் சந்தோஷம் துள்ளிக் குதித்தது. துக்கம் சிந்திக் கிடந்தது. காதல் கனிவுடன் பார்த்தது. பலரின் நம்பிக்கைகளுக்கும் தன் ஓவியத்தால் மரியாதை செய்தான்.
பல்கலைக்கழகத்தில் பட்டங்கள் பல பெற்றவர்களில் பலர் அவனது ஓவியத்தின் மொழியறியாது இரக்கமென்ற பெயரில் சில காசுகளை எறிந்துவிட்டுச் சென்றனர். பலரும் அவன் வரைவதெல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்கெனக் கருதினர். ஆனால் ஓவியத்தை வரைந்துவிட்டு அவன் யாரிடமும் காசிற்காக கையேந்தவில்லை. விழும் காசுகளில் ஒரு பகுதியால் வயிற்றை நிரப்பினான். அவன் வயிற்றிற்கு இடும் உணவின் ஒரு பகுதி அங்குச் சுற்றி வரும் நாய்களுக்கும் உண்டு. வரும் காசுகளில் இன்னொரு பகுதியில் மிட்டாய்கள் வாங்கி, பக்கத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து வரும் ஏழைச் சிறுவர்களுக்குக் கொடுத்தான்.
அந்தச் சக்கரப் பலகையின் மேல் உட்கார்ந்துகொண்டு இரு கைகளால் கரடுமுரடான சாலையில் உந்தி உந்தி ஊர்வதில்தான் எத்தனை கடினங்கள்! எத்தனை அவமானங்கள்! பல நேரங்களில் சாலையில் மிக வேகமாய்ச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மிக மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டுச் செல்வார்கள். சில சமயம் சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பித் துண்டுகள் கொஞ்சமும் கருணையில்லாது, காய்த்துப் போன கைகளுக்குள்ளும் ஏறி நிற்கும். கைக்குச் செருப்பணிந்தாலும் பலரின் வாய்கழிவுகள் அவன் கை மேல் ஒட்டத் தவறுவதில்லை.
கடந்த பத்து வருடங்களாய் அந்தப் பள்ளிக்கூடத்தின் அருகில் நிரந்தரமாய் அவன் குடியேறிவிட்டான். பல தடங்கல்களுக்கு பின்பும் கணேசன் அந்த இடத்தை நிரந்தரமாய்த் தக்க வைத்துக் கொண்டான். அவன் தற்போது தன் உணர்வுகளை ஓவியங்களாக்கும் அந்த இடமே இவனால்தான் புனிதப்பட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு அந்தச் சாலையின் அனைத்துக் குப்பைகளும் குவிக்கப்பட்டிருந்த இடம், அது. எப்போதும் இறந்து அழுகிய நாய்கள், பூனைகளின் துர் வாசம் வீசும் இடம் அது.
பள்ளிக்கூட நிர்வாகம் எவ்வளவோ முயன்றும் அந்தக் குப்பைக் கிடங்கை அங்கிருந்து அகற்ற இயலவில்லை. எத்தனையோ புகார்களுக்கு பின்பும் நகராட்சி நிர்வாகம் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறியே நாட்களை நகர்த்தியது. சுகாதாரக் கேட்டினால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனக் கணேசன் அஞ்சினான். அவனது உள்ள உறுதிக்கு முன்னே அவனது ஊனமான கால்கள் அவனுக்குத் தடையாக இருக்கவில்லை.
கணேசனே எல்லாக் குப்பைகளையும் அகற்றினான். கணேசனின் முயற்சியில் உற்சாகமடைந்த பலரும் அந்தச் சுகாதாரச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டனர். சில மணி நேரங்களில் அந்த இடம் சுத்தமான பூமியாக மாறியது. நகராட்சி நிர்வாகமே பள்ளிக்கு வெகு தொலைவில் ஒரு பெரிய குப்பைத் தொட்டியை மிகப் பாதுகாப்பாய் வைத்தது. கணேசன் தான் சுத்தம் செய்த இடத்தில் அழகிய ஓவியங்களை வரையத் தொடங்கினான். பள்ளி நிர்வாகம் கணேசனின் சேவைத் திறனையும் மன உறுதியையும் வியந்து பாராட்டியது. ஓரிரு தினங்களில் அந்த சுவர் யாராலோ வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. கணேசுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அடுத்த நாளில் அந்த ஆச்சரியம், அதிர்ச்சியாக மாறியது. பல்வேறு கட்சி சின்னங்கள் அந்தச் சுவரை போட்டி போட்டு ஆக்கிரமித்திருந்தன. குப்பைகள் சாய்ந்து கிடந்த இடத்தில் கட்சி சின்னங்கள் வாக்குறுதிகளோடு குவிந்து கிடந்தன. பல கடைக்காரர்கள் கணேசனைத் துரத்தி அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றனர்.
ஆனாலும் கணேசன் அந்த இடத்தை விட்டு விடவில்லை. அன்றாடம் அழகழகான வண்ண ஓவியங்களால் அந்த இடத்தை அலங்கரித்தான். கட்டம் கட்டமாக அமைந்திருக்கும் அந்த பிளாட்ஃபார்ம் கல் பாளங்கள் கூட மனித உருவங்களின் ஒவ்வோர் உறுப்பையும் சரியான விகிதத்தில் வரைய அவனுக்கு மிகவும் வசதியாகவே இருந்தது. உண்மையான ஆபரணங்களுக்கு ஒப்பாக அழகிய ஆபரணங்களை வரைந்து கடவுளரை அழகுபடுத்தினான். அவனின் தூய இதயத்தினுள் பரவி இருக்கும் கடவுளின் எல்லா உருவங்களும் அவனின் மந்திர விரலின் மாயத்தால் பூமியில் புன்னகையோடு காட்சி தந்தன. அதைக் கண்டு பலரும் அடையும் ஆனந்தத்திலேயே அவனின் ஆத்ம திருப்தி இருக்கிறது. பணங்களுக்காக அவன் மயங்கியதில்லை.
பல தருணங்களில் பல கட்சியினரும் பெரிய பேனர்கள் வரைய அழைத்தபோது பலவந்தமாக மறுத்தான். பல கசப்பான முன் அனுபவங்களால் அவனுக்கு அரசியல் கட்சிகளின் மேலேயே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அவன் எதற்காகவும் தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. அவனைப் பார்க்கும் பலருக்கும் அவன் ஒரு சாதரண பிளாட்ஃபார்ம் பிரஜையாகத் தோற்றமளித்தாலும் அவனுள் ஒளிந்திருக்கும் நல்லியல்புகள் மிக அசாதாரணமானவை. அவன் பார்க்கும் அனைத்தையும் விரல்களில் படைக்கும் பிரம்மனாகவே இருந்தான். அன்று அவனுள் ஒரு பயம் கவ்விக்கொண்டது.
ஒரு கட்சி சார்புடைய கடைக்காரன், ஒரு முரட்டு போலிஸ்காரரோடு வந்தான். இரண்டு தினங்களில் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டுமென எச்சரித்துப் போனான். அதற்குள் ஒளிந்திருக்கும் நியாய, அநியாயங்கள் அவனுக்குத் தெரியும்தான். அந்த இடத்திற்குத் தான் உரிமை கொண்டாட இயலாது என்பதும் அதில் எந்த நியாயமும் இல்லை என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனாலும் பொதுமக்களுக்குத் தொல்லை தரக்கூடிய இன்னொரு ஆக்கிரமிப்பிற்காக தான் அப்புறப்படுத்தப்படுவதாகக் கருதினான். இன்னும் அவன் யாருக்கும் தொல்லை தராத அளவிலேயே அந்த இடத்தைப் பயன்படுத்தினான். ஆனாலும் இந்தத் தடவை மிரட்டல்கள் தொடர்ந்தன.
காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் வேறு, பைக்கில் வந்து மிரட்டிவிட்டுப் போனார். பல குழந்தைகளைச் சந்தோஷப்படுத்திய அந்தத் திறந்தவெளி ஓவியக் கூடம் அவனை விட்டுப் போகப் போகிறது. பெற்றோர், உற்றார் உறவின் அன்பை அறியாத அவன் ஓவியங்களின் புன்னகைகளிலும், அன்புப் பார்வைகளிலும், அதைக் கண்டு களிக்கும் பக்கத்துப் பள்ளிக் குழந்தைகளின் சந்தோஷங்களிலும், மன நிறைவு கொண்டான். ஏற்கெனவே உடலால் ஊனமுற்ற அவன் அன்று மிகவும் நொறுங்கிப் போனான். தன் எண்ணங்களை, உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் அந்த ஒப்பற்ற இடம், தன்னைவிட்டு போகப்போகிறது…
அதற்குள் நம்ப இயலாத அந்த நிகழ்வு. குடியரசுத்தலைவரின் மாளிகையில் சிறப்பு விருந்து. புத்தம் புதிய ஆடைகளில் புதுதில்லிக்குப் பறந்தான்.
பெரிய பெரிய அதிகாரிகள், பணக்காரர்கள் நுழைய முடியாத இடத்தில் தான் சிறப்புச் செய்யப்படுவதில் மிகவும் பெருமிதம் அடைந்தான். குடியரசுத் தலைவர் மாளிகையின் காவலர்களும் அதிகாரிகளும் அவனை மிகவும் ஆச்சரியத்தோடு பார்த்தனர். குடியரசுத் தலைவர் அன்போடு வரவேற்றார். அவனைச் சிறு வயதிலேயே குடியரசுத் தலைவருக்கு நன்றாகத் தெரியும் என்றார். பக்கத்து பள்ளியில் தேசிய கீதம் ஒலிக்கும் போது பிளாட்ஃபாரத்தில் ஊனமுற்ற கால்களோடு நின்று மரியாதை செய்யும் கணேசனின் தேசப் பற்றை, அவர் பக்கத்தில் பணி செய்த கல்லூரியிலிருந்து பார்த்திருக்கிறாராம். அவனது கலைத் திறனுக்காக உயர்ந்த அங்கீகாரம் அளிக்கப் போவதாகக் குடியரசுத் தலைவர் உறுதி அளித்தார். உயர்தரமான தமிழ்நாட்டு உணவுடன் கூடிய உபசரிப்பு கிடைத்தது. இந்தியாவின் மிக உயர்ந்த மனிதரின் அன்பில், உபசரிப்பில் கணேசன் திக்குமுக்காடிப் போனான். குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே தங்க வைக்கப்பட்டான். மிதக்கும் மேகம்போல் இருந்த அந்த பஞ்சு மெத்தையில் கணேசன் மிதந்தான்.
உறங்கிக் கோண்டிருந்த கணேசனின் நெஞ்சின் மேல் ஈரம் பாய்ந்த உணர்வு. திடுக்கிட்டு விழித்தான். அவன் வழக்கமாய் உணவளிக்கும் நாய் அவன் மார்பில் நேசமுடன் நக்கிக்கொண்டிருந்தது. தொலைவில் பைக்கின் ஒலி அவன் நெஞ்சை இடித்துக்கொண்டிருந்தது. அவனது உறக்கத்தில் அவனைப் பரவசப்படுத்திய அந்த ஓவியங்கள் அவன் கண் திறந்ததும் காணாமல் போயின.
Labels:
சிறுகதை
Saturday, October 30, 2010
செய்தியும் கவிதையும் - ஆணுறையில் நவரத்தினங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை
செய்தியும் கவிதையும்
(நவரத்தினக் கற்களை ஆணுறைக்குள் வைத்து விழுங்கி, கடத்திய இலங்கை வாலிபர் சென்னையில் கைது என்ற செய்தியின் எதிரொலியாக எழுந்த படைப்பு)

நவதானியங்களுக்குப் பதில்
நவரத்தினங்களை
உண்ணும் குருவிகள்.
நவரத்தினம் உண்ணும்
நாகராஜர்.
ஆணுறை இவருக்கு
மட்டுமல்ல இவரின்
நவரத்தினங்களுக்கும்
பாதுகாப்பாம்.
அவரோடு அவரின்
நவரத்தினங்கள்
வந்த வழியும் தனிவழி.
கழிவுகளை நோக்கி
கழிவுகளோடு வந்த
நவரத்தினங்கள்.
ஆணுறைக்குள் நவரத்தினங்கள்
குமரி எஸ். நீலகண்டன்(நவரத்தினக் கற்களை ஆணுறைக்குள் வைத்து விழுங்கி, கடத்திய இலங்கை வாலிபர் சென்னையில் கைது என்ற செய்தியின் எதிரொலியாக எழுந்த படைப்பு)

நவதானியங்களுக்குப் பதில்
நவரத்தினங்களை
உண்ணும் குருவிகள்.
நவரத்தினம் உண்ணும்
நாகராஜர்.
ஆணுறை இவருக்கு
மட்டுமல்ல இவரின்
நவரத்தினங்களுக்கும்
பாதுகாப்பாம்.
அவரோடு அவரின்
நவரத்தினங்கள்
வந்த வழியும் தனிவழி.
கழிவுகளை நோக்கி
கழிவுகளோடு வந்த
நவரத்தினங்கள்.
Labels:
செய்தியும் கவிதையும்
Thursday, October 28, 2010
சில எதிர்பார்ப்புகள் - உயிர்மை உயிரோசையில் வெளியானக் கவிதை
| சில எதிர்பார்ப்புகள் | ||||
| ||||
![]() எதிர்பாராமல் இருக்கலாம். எதிர்வரவின் கொடுந்தீயில் பார்வைகள் பொசுங்காமல்... எதிர்பாராமல் இருக்கலாம். எதிர் வரவு அதி வலிமையுடன் ஆயுத பலத்துடன் உள உறுதியுடனும் இருக்கலாம். எதிர்பாராமல் இருக்கலாம். அகத்துள் ஒரு யுத்தமும் ஆயுதப் பிரளயமும் தவிர்க்கலாம். எதிர்பாராமல் இருக்கலாம். எதிர் வரவில் பூக்களின் வாசத்துடன் பட்டாம் பூச்சிகளின் படபடப்பில் அதன் இறகுகளின் பூக்கள் இருபுறமும் விரிய காற்றின் வாத்தியத்துடன் கவிதைகள் பூக்கலாம். எதிர்பாராமல் இருக்கலாம். எதிர் வரவிலேயே செலவும் செய்யலாம். எதிர்பாராமல் இருக்கலாம். எதிர் வரவு எதிரியின் வருகையாய் இடம் கொடாமல்..... எதிர்பாராமல் இருக்கலாம். கண்களை மூடி கதவுகளில் ஒளிந்து கவலைகளில் கரையாமல். எதிர்பாராமல் இருக்கலாம். எதிர்வரவே வாழ்க்கையின் வரைபடமாதலால்.... உயிரின் உறைவிடமாதலால் வருபவை வரட்டுமென்று வாசலைத் திறந்து வைத்து | ||||
Labels:
கவிதை
Tuesday, October 26, 2010
மழையின் மொழி - திண்ணை இதழில் வெளியானக் கவிதை
Sunday October 24, 2010
மழையின் மொழி
குமரி எஸ். நீலகண்டன்
அழுக்கான புழுக்கத்தில்
நினைவுகள் அடங்கி நான்
நித்திரையில் கிடக்கையில்
சோவென்று பெய்த மழை
என்னை எழுப்பியது...
நான் அரை விழிப்பில்
நித்திரைக்குள் மீண்டும்
நுழைய முற்படுகையில்
அது தன் ராக ஆலாபனையில்
என் முகத்தை நீரால்
கழுவியது....
கனவுகளெல்லாம் புழுக்கத்தில்
புதைந்து போக
அழுது அழுது அது தன்
வானச்சுமையை நீராய்
கரைத்தாயிற்று...
நாற்றங்களை பொசுக்க
வழியில் ஒரு
ரோஜாப் பூவையும்
பறித்தாயிற்று.
குப்பைகளைக் கூட்டி
குழிகளில் தள்ளி
செடிகொடிகளின் கால் கழுவி
அழுக்கானத் தரைகளை மெழுகி
வழிபோக்கர்கள் இன்னொருமுறை
சிறுநீர் கோலமிடவும்
துப்பல் ஓவியங்கள் வரையவும்
பாதைகளைக் கழுவித்
தயார் செய்து விட்டு
சொட்டிச் சொட்டி
தரையைத் தட்டித் தட்டி
என்னிடம் விடைபெற்றுச்
சென்றது மழை.
punarthan@yahoo.com
Labels:
கவிதை
Monday, October 25, 2010
மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம் - திண்ணையில் வெளியான இலக்கியக் கட்டுரை
Sunday October 24, 2010
மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்
குமரி எஸ். நீலகண்டன்

பிரபல மலையாளக் கவிஞர் ஏ. அய்யப்பன் தனது 61 வது வயதில் சென்ற 21ம் தேதி காலமானார். அவரது மரணமானது இறந்த தினத்தின் மறுநாளே மக்களுக்குத் தெரிந்தது. அய்யப்பன் சென்ற வியாழக்கிழமை திருவனந்தபுரம் தம்பானூரில் ரயில் நிலையம் அருகில் மக்கள் கூட்டம் மிகுந்த ஒரு தெருவில் நினைவற்ற நிலையில் கிடந்தார்.காவல் துறையும் மக்களும் சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சில மணி நேரங்களில் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப் பட்டு அவர் அடையாளம் காணப்படாமல் பிணவறையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்தது. வழக்கமான சோதனை வருகையின் போது ஒரு மருத்துவரால் அவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. ஏற்கனவே அதிக குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளான அவர் சென்ற மாதம் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு வந்தவர். மலையாள இலக்கியத்தின் மிகப் பிரபலமான விருதான குமாரன் ஆசான் விருதினைப் பெறுவதற்கு 23 ஆம் தேதி சென்னைக்கு வரவிருந்தவர். மாலமில்லாத பாம்பு, ஓணக்காழ்சகள், புத்தனும் ஆண்குட்டியும், வெயில், சுமங்கலி ஆகியன அவரது முக்கியமான படைப்புக்களாகும். 1999ல் கேரள சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றவர். பள்ளிப்பருவத்திலேயே கவிதைகளை எழுதத் துவங்கியவர் இருபது தொகுதிகளாக இரண்டாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதி உள்ளார். தனது தத்துவார்த்தமான கவிதைகளால் இளைய தலைமுறையினரின் இதயத்தைக் கவர்ந்து இனிதே நேசிக்கப்பட்டவர். 1949 ல் திருவனந்தபுரம் அருகே பாலராம புரத்தில் பிறந்த அவர் முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அதன் கருத்து முழக்கமான ஜனயுகத்தில் சில காலம் பணியாற்றினார். சோகமயமானது அவரது இளமைக் காலம். அவரது ஒரு வயதில் பொற்கலைஞரான அவரது தந்தை விஷமருந்தி தற்கொலை செய்தார். அவரது பதினைந்தாவது வயதில் அம்மாவும் தற்கொலை செய்தார். நேமத்திலுள்ள அவரது சகோதரி சுபலக்ஷ்மி தம்பதியரின் துணையுடன் வாழ்ந்து வந்தார். தனிமை விரும்பியான அவர் சொந்த வீடின்றி சகோதரி வீடு நண்பர்கள் வீடென சுற்றித் திரிந்தார். நடைபாதைகளிலும் பூங்காக்களிலும் அதிகம் காணக் கிடைத்தார். மலையாளத்தின் முக்கிய திரைப்பட தயாரிப்பாளரான ஜான் ஆப்ரகாமின் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரது நண்பர்களில் ஒருவரான சத்யன் என்பவர் அய்யப்பனைக் குறித்து ஒரு குறும்படம் செய்த போது அதை நிறைவேற்ற அவருக்கு இரண்டு வருடமாயிற்று. காரணம் கவிஞர் பல நேரங்களில் காமிராவின் எல்லைக்கு அப்பால் ஏதோ ஒரு தெருவில் சுற்றிக் கொண்டிருப்பார். நாடோடியாக அலைந்து திரிந்து வாழ்ந்த அபூர்வ கலைஞன் அவர்.சமூகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட வாழ்க்கையும் எழுத்தையும் விரும்பாத அவர் சுதந்திரமாக எழுதினார். சுதந்திரமாக வாழ்ந்தார். பெரும்பாலானத் தருணங்களில் தெருவே அவருக்கு வீடாக இருந்தது. வீடோ அவரின் கவிதை மொழிக்கு சாதகமற்று இருந்தது. 70 களில் அட்சரம் என்ற இலக்கிய இதழை கொண்டு வந்தார். அதுவே அவரது இன்றைய நவீன இலக்கிய படைப்பாற்றலுக்கு உந்து சக்தியாக இருந்தது. அவருடைய மரணமும் அவருடைய வாழ்க்கையைப் போலவே நிகழ்ந்தது. அவரது மரணத்தின் போது அவரது சட்டைப் பையில் அவர் இறுதியில் எழுதிய மரணத்தின் வாசம் கொண்ட ஒரு கவிதையுடன் ஒரு துண்டு காகிதமும் வெறும் 375 ரூபாயும் மட்டுமே இருந்தது. அவர் முன்பு எழுதிய ஒரு கவிதையானது...
ரத்தம் தோய்ந்த விபத்தில்
இறந்த அவனைச் சுற்றி
மக்கள் கூட்டம்.
என் கண்கள் இறந்தவனின்
சட்டைப் பைக்குள்
ஒட்டி இருக்கும்
ஐந்து ரூபாயின் மேல்.
அவரது கவிதையைப் போலவே அவரது மரணமும் தெருவில் நிகழ்ந்தது. தனது தத்துவார்த்த கவிதைகளால் என்றும் மலையாள இலக்கிய உலகில் மறக்க இயலாத மாபெரும் கவிஞர் ஐயப்பன்.
shri uthamanarayanan is a very good translator... and dedicated writer in english. he has translated this article in english and has published in his blog.
for reading its english translation please follow this link
punarthan@yahoo.com
Labels:
கட்டுரை
Wednesday, October 20, 2010
காமன்வெல்த் 2010 - வல்லமை இதழில் வெளியானக் கவிதை
காமன்வெல்த் 2010
குமரி எஸ். நீலகண்டன்
கோடிகளுடன் கொண்டாடியாச்சு
காமன்வெல்த் 2010.
சேர்த்தவர்கள் சேர்த்த
செல்வங்கள் போக
எஞ்சியவை சேறுகளாய்
வீதியில் மிதக்க
தேசியக் கொடி உயர்த்தி
ஒட்டிய வயிறுடன்
உலக வரைபடங்கள்
உள் நெஞ்சினில் தெரிய
வெற்றி…. வெற்றியெனக்
கூக்குரலிட்டான்
விளையாட்டரங்கின்
வெகு அருகில்
வீதியொன்றில் சிறுவன்…..
Labels:
கவிதை
Monday, October 18, 2010
கொலு 2010 - வல்லமை இதழில் வெளியான கவிதை
கொலு 2010
குமரி எஸ். நீலகண்டன்
கொலுவில் இந்தத் தடவை
பாரதியாரின் அருகில்
காந்தி இருந்தார்.
அவர்களைச் சுற்றிலும்
ஐ.டி. கட்டடங்கள்..
மேம்பாலங்கள்.
நாடாளுமன்றம் உட்பட…
இன்றைய இந்திய
நகரமும்
அதற்குப் போட்டியாய்
நகர மிதப்பில்
கிராமத்துக் காட்சியும்…
பிளாஸ்டிக் பூக்களோடு
பிளாஸ்டிக் மரங்களும்…
நிலா மின்வெப்பத்தில்
தகித்துக்கொண்டிருக்கிறது..
காந்தி மௌன
விரதமாகவே இருக்கிறார்.
காந்தியின் அருகே
ஒரு ஐபாட்..
பாரதியாரின் கண்களில்
அக்னிக் குழம்பாக
ஏதோ ஒரு கொந்தளிப்பு
கவிதை மின்னலாக
வெட்டிக்கொண்டிருக்கிறது.
இருவரும் பூஜை
எடுக்கிற நாளில்
பேசிக்கொள்வார்களென
நினைக்கிறேன்.
Labels:
கவிதை
Sunday, October 17, 2010
பூனையின் பிடிவாதம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
15.10.10
பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...
எழுத்து / வகை : தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்
பூனையின் பிடிவாதம்
எழுத எழுத…
எழுத மறுத்தப்
பேனா முனை
காகிதப் பாதையில்
எங்கோத் தட்டிற்று.
ஓடும் மோட்டார் சக்கரத்தில்
சிக்கிய சேலைத் துண்டாய்
பேனா முனையின்
இரு கம்பீர
கம்பங்களைப் பிளந்து
அதற்குள் ஒரு
காகிதத் துணுக்கு.
ஜீரணிக்க இயலாமல்
கக்கிய மைக்குள்
மிதந்து வந்த
ஒரு பூனை
பிடிவாதமாய்
வரைமுறையின்றி கத்திற்று
ஒரு எலியினை
வரை வரை என்று.
குமரி எஸ். நீலகண்டன்
Labels:
கவிதை
Wednesday, October 13, 2010
காதலுக்கான காலி இடங்கள் - வல்லமை இதழில் வெளியானக் கவிதை
காதலுக்கான காலி இடங்கள்
குமரி சு. நீலகண்டன்
ஈருடல் ஓருள்ளம்,
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்.. காதல்.. கனவு
எல்லாமே கல்யாணமாகி
ஆறே மாதத்தில்
போயே போச்சு.
அடுத்து அகத்துள் துயில்கிற
அசுரன் தலைக்குள் ஏறி
காதலைப் பிய்த்துத் தின்று
கர்ஜிக்கக் காட்டுப் போர்…..
மங்களமாய் விவாகரத்து…
அன்பு செய்ய
இங்கொரு இடம்
காலியாக இருக்கிறது.
காதலெனும் கவரி வீச
தகுதி உடையவர்கள்
யாரும் விண்ணப்பிக்கலாம்.
Labels:
கவிதை
Tuesday, October 12, 2010
தேடாமல் வந்தது - திண்ணை இதழில் வெளியானக் கவிதை
Sunday October 10, 2010
தேடாமல் வந்தது.
குமரி எஸ். நீலகண்டன்
இருண்ட பையிலிருந்து
எழுந்து வந்ததும்
எதுவும் இல்லாமல்
இருட்டைத் தேடி
ஒளியை அறிந்து
முகங்களை அறிந்து
சிரிப்பினை அறிந்து
ஓசைகளை அறிந்து
அவற்றையெல்லாம் தேடி
தவழ்ந்து தடுமாறி
கைவண்டியின் கைப்பிடியைத்
தேடிப் பிடித்து
நின்று.. நிமிர்ந்து
அம்மாவின் கைகளைத் தேடி
தவழ்ந்து முத்தங்கள் பொழிந்து
பொம்மைகள் தேடி
பொழுதுகள் தேடி
பள்ளி பருவமும் வந்தது.
புத்தகங்கள்.. பேனா...
பென்சில்.. நண்பர்கள்..
கிரிக்கெட் மட்டை
கில்லி கம்பு எனத்
தேடித் தேடி
வெளியூர் பயணத்தில்
அவ்வப்போது
அப்பா.. அம்மாவையும் தேடி
அறிவின் தேடலில்
யாஹூ... கூகிளென
அகலத் தேடி
மண் தேடி
பெண் தேடி மணந்த பின்
மக்களைப் பெற்று
கோவில் விழாவில்
குழந்தையைத் தேடி
பள்ளி தேடி
படிக்க வைத்து .....
குடும்பம்.. குதூகலம்..
பணம்... அலுவலகமென
அனைத்திற்குமாய் தேடி
முதுமை வந்தபோது
இளமையைத் தேடி
குனிந்த முதுகிற்கு
கூடவே துணையாய்
கைக் கம்பு தேடி
புத்தகங்கள்.. மருந்துகள்
எங்கோ தவறவிட்ட
கண்ணாடியின்றியே
கண்ணாடியைத் தேடி....
இப்படி இன்னும் சில
தேடி...தேடி...
அன்பிற்காய் கண்களை
அகல விரித்துத்
தேடிய போது
தேடாமல் வந்தது
மரணம்.....
punarthan@yahoo.com
Labels:
கவிதை
Monday, October 11, 2010
33 நிமிடத்தில் 50 ஆயிரத்து 33 மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை - செய்தியும் கவிதையும்
காஷ்மீரில் 33 நிமிடத்தில், 50 ஆயிரத்து 33 மரக்கன்றுகளை நட்டு, நேற்று கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
வெட்டும் மரங்களின்
சாதனைகளோடு
நட்ட மரங்கள்
நடுங்கி புதைந்தன....
நட்டவர்கள் பெயர்கள்
சாதனையில்.
கன்றுகளின் நாட்கள்
எண்ணிக்கையில்.....
குமரி எஸ். நீலகண்டன்
வெட்டும் மரங்களின்
சாதனைகளோடு
நட்ட மரங்கள்
நடுங்கி புதைந்தன....
நட்டவர்கள் பெயர்கள்
சாதனையில்.
கன்றுகளின் நாட்கள்
எண்ணிக்கையில்.....
குமரி எஸ். நீலகண்டன்
Labels:
செய்தியும் கவிதையும்
Sunday, October 10, 2010
உலகிலேயே மிகப்பெரிய டீ கப் - செய்தியும் கவிதையும்
உலகிலேயே மிகப்பெரிய டீ கப்பை தயாரித்துள்ளது இலங்கை
இலங்''கை''யில் உலக
சாதனைக் கோப்பையாம்.
தீ கோப்பையைச்
சுமந்தவர்கள் கையில்
ஆவி பறக்கும்
அசுர உருவில்....
தேனீர் கோப்பை...
அசையாமல் தேனீரை
அழகாக குடியுங்கள்..
அடியில்
ஆயிரம் ஆயிரம்
மக்கள்....
கோப்பைக்குள் இருப்பது
தேநீரா அல்லது
எரிந்தவர்களின் நீறா...
குமரி எஸ். நீலகண்டன்
இலங்''கை''யில் உலக
சாதனைக் கோப்பையாம்.
தீ கோப்பையைச்
சுமந்தவர்கள் கையில்
ஆவி பறக்கும்
அசுர உருவில்....
தேனீர் கோப்பை...
அசையாமல் தேனீரை
அழகாக குடியுங்கள்..
அடியில்
ஆயிரம் ஆயிரம்
மக்கள்....
கோப்பைக்குள் இருப்பது
தேநீரா அல்லது
எரிந்தவர்களின் நீறா...
குமரி எஸ். நீலகண்டன்
Labels:
செய்தியும் கவிதையும்
Saturday, October 9, 2010
சீன சிறைவாசிக்கு அமைதிக்கான நோபல் பரிசு - செய்தியும் கவிதையும்
சீன சிறைவாசிக்கு அமைதிக்கான நோபல் பரிசு....
அமைதி பொதிந்த
பரிசுக்குள்
அமுங்கி இருப்பவை
சிதறுவதற்காய் சிறுக
இறுக்கப் பட்டிருக்கும்
சீரிய ஆன்மாக்கள்.
சுழற்றி அடிப்பதற்காய்
சுருங்கப் பொதிந்த
சுனாமி அலைகள்.
அழுதழுது
ஆவியாகிப் போன
அற்புத உயிர்கள்.
சீன அரசு எதிர்ப்பாளரும், ஆட்சியைக் கவிழ்க்க போராட்டத்தைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவருமான லியூ ஷியோபோ (54) 2010ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குமரி எஸ். நீலகண்டன்
அமைதி பொதிந்த
பரிசுக்குள்
அமுங்கி இருப்பவை
சிதறுவதற்காய் சிறுக
இறுக்கப் பட்டிருக்கும்
சீரிய ஆன்மாக்கள்.
சுழற்றி அடிப்பதற்காய்
சுருங்கப் பொதிந்த
சுனாமி அலைகள்.
அழுதழுது
ஆவியாகிப் போன
அற்புத உயிர்கள்.
Labels:
செய்தியும் கவிதையும்
Friday, October 8, 2010
பிரபுதேவா நயன்தாரா ரகசிய திருமணம் - செய்தியும் கவிதையும்
பிரபு தேவா – நயன்தாரா ரகசிய திருமணம்!
ஆறுதலாய் தீண்ட
செஞ்சுடராய் அங்கு
படர்ந்து எரிந்தது
இன்னுமொரு
காதல் தீ.
சுட்டுக் கொண்டது
பழைய காதலும்
பழகிய மரபும்
பரிதாபமாய் குழந்தைகளும்...
இது காதல் தீயா....
குப்பைகளின் நெருப்பா
குமரி எஸ். நீலகண்டன்
Labels:
செய்தியும் கவிதையும்
Thursday, October 7, 2010
மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் - செய்தியும் கவிதையும்
மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
ஆழ்ந்த அறிவால்
அறிவியல் ஆய்வால்
புத்துலகங்கள்
கண்களில் பூக்க
வக்கிரப் பார்வையுடன்
வர்த்தக அசுரர்கள்
எரியும் விழிகளில்
சருகான பசுமை...
குமரி எஸ். நீலகண்டன்
ஆழ்ந்த அறிவால்
அறிவியல் ஆய்வால்
புத்துலகங்கள்
கண்களில் பூக்க
வக்கிரப் பார்வையுடன்
வர்த்தக அசுரர்கள்
எரியும் விழிகளில்
சருகான பசுமை...
குமரி எஸ். நீலகண்டன்
Labels:
செய்தியும் கவிதையும்
Wednesday, October 6, 2010
மின் திருட்டைத் தடுக்க ஆலைகளில் சோதனை - செய்திக் கவிதை
மின் திருட்டைத் தடுக்க ஆலைகளில் சோதனை: முதல்வர் உத்தரவு
மின் திருட்டைத் தடுக்க
ஆலைகளில் சோதனையாம்
சோதனையைத் தடுக்க
ஆலையைச் சுற்றிலும்
மின் வேலியாம்
திருடும் மின்சாரத்திற்கு
உருட்டு கட்டைகள்
உட் பாதுகாப்பு.
குமரி எஸ். நீலகண்டன்
மின் திருட்டைத் தடுக்க
ஆலைகளில் சோதனையாம்
சோதனையைத் தடுக்க
ஆலையைச் சுற்றிலும்
மின் வேலியாம்
திருடும் மின்சாரத்திற்கு
உருட்டு கட்டைகள்
உட் பாதுகாப்பு.
குமரி எஸ். நீலகண்டன்
Labels:
செய்தியும் கவிதையும்
Tuesday, October 5, 2010
செய்தியும் கவிதையும்- காவலர் தேர்வில் தில்லுமுல்லு
காவலர் உடல் திறன் தேர்வில் தேங்காய் சரட்டை வைத்து வாலிபர் "தில்லுமுல்லு'
சேலம் : சேலத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலருக்கான உடல் திறன் தேர்வில், உயரத்துக்காக தலையில் தேங்காய் சரட்டை வைத்து, "தில்லுமுல்லு' செய்த வாலிபர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காவல் பணியில்
காதல் அவருக்கு ....
உடற் தகுதிக்கான
உயரம் போதவில்லை.
உயர்மட்ட ஆலோசனைக்குபின்
பொய்முடிக்குள்
கொப்பரை வைத்து
உயரம் கூட்டினான்.
மூளை வளர்ச்சி
போதவில்லையென்று
சிறையில் அடைத்தனர்
அவனை அதிகாரிகள்.
தலையில் தேங்காய்
வைத்தால் தென்னை
மரமாக இயலுமா...
குமரி எஸ். நீலகண்டன்
Labels:
செய்தியும் கவிதையும்
Monday, October 4, 2010
குடையும் நானும் - நவீன விருட்சத்தில் வெளியானக் கவிதை
3.10.10
குடையும் நானும்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்

நான் சென்ற அந்த ஊர்
எனக்குப் புதிது.
வேலைகளில்
ஒடுங்கிப் போன
என் கண்களுக்கு
அந்த ஊரில்
எதுவுமே தெரியவில்லை.
ஊருக்கு திரும்பும் நேரம்
பெய்த மழையில்
குடையினை விரித்தேன்.
சிதறிய மணலில் நீரின்
சிருங்கார ஆட்டம்
என் கால்களை
கிளுகிளுக்க வைத்தது.
சுற்றிலும் பன்னீரைச்
சொரிந்தது போல்
குடையருவியின் குதூகலம்.
கார் மேக குடையில்
கண்ணாடி மாளிகைக்குள்
கனிந்த மழை ரசத்தில்
களித்த நான்
ரயில் நிலையத்தை
நெருங்கிய போது
கையில் குடை இல்லை.
மழை விட்ட போது
தேநீருக்காக ஒதுங்கிய
கடையில் குடையையும்
விட்டிருக்கிறேன்.
அவசர அவசரமாக
குடைக்காக அந்த
வழியில் திரும்பிய
என் நடையின்
வேகத்தை கண்கள்
கால்களில் கயிறுகளைக்
கட்டி இழுத்தன.
நான் வந்த பாதையில்
உண்மையில் களைந்தது
விரிந்த குடைக்கு அப்பால்
மிதந்த மஞ்சள் மலர்
கூட்டங்கள்.
சில்லென்ற மழையில்
சிலிர்த்துப் பறந்த
சிட்டுக் குருவிகள்..
பதமான மழையில்
மிதமாகப் பறந்த
பட்டாம் பூச்சிகள்.
முரட்டு மீசையுடன்
மயிர்கள் நிறைந்த
உடம்போடு
அரக்கன் போல்
காட்சி அளித்த
தொலைவில் இருக்கும்
அந்த அசுர மலையும்தான்.
களைந்த குடைக்குள்
விரிந்த உலகத்தில்
விளைந்தன கோடானு கோடி
குதூகலங்கள்.
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)















June 5th, 2010 at 7:43 pm hmm.. sudden end… yes.. in dreams only these things could happen.
July 7th, 2010 at 12:15 pm // ஒவ்வோர் ஓவியத்தினுள்ளும் ஒவ்வோர் ஆசிரியர் நின்று பாடம் சொல்லிக்கொண்டிருந்தனர். //
நல்ல கதை. அதில் இது ஒரு கருத்துச் செறிவுள்ள வரி.