Thursday, October 28, 2010

சில எதிர்பார்ப்புகள் - உயிர்மை உயிரோசையில் வெளியானக் கவிதை

சில எதிர்பார்ப்புகள்
குமரி எஸ். நீலகண்டன்

எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர்வரவின் கொடுந்தீயில்
பார்வைகள் பொசுங்காமல்...
எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர் வரவு
அதி வலிமையுடன்
ஆயுத பலத்துடன்
உள உறுதியுடனும்
இருக்கலாம். 
எதிர்பாராமல் இருக்கலாம்.
அகத்துள் ஒரு யுத்தமும்
ஆயுதப் பிரளயமும்
தவிர்க்கலாம். 
எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர் வரவில்
பூக்களின் வாசத்துடன்
பட்டாம் பூச்சிகளின்
படபடப்பில் அதன்
இறகுகளின் பூக்கள்
இருபுறமும் விரிய
காற்றின் வாத்தியத்துடன்
கவிதைகள் பூக்கலாம். 
எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர் வரவிலேயே
செலவும் செய்யலாம்.

எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர் வரவு எதிரியின்
வருகையாய்
இடம் கொடாமல்..... 
எதிர்பாராமல் இருக்கலாம்.
கண்களை மூடி
கதவுகளில் ஒளிந்து
கவலைகளில் கரையாமல்.
எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர்வரவே வாழ்க்கையின்
வரைபடமாதலால்....
உயிரின் உறைவிடமாதலால்
வருபவை வரட்டுமென்று
வாசலைத் திறந்து வைத்து

2 comments:

வருணன் said...

நல்ல கருத்துருவாக்கம். உங்கள் இனி வரும் படைப்புகளைத்தான் எதிர்பாராமல் இருக்க முடியவில்லை. திண்ணையில் வெளிவந்திருக்கும் உங்கள் “ மழையின் மொழி”யும் அழகு. நேரமிருப்பின் எனது வலைப்பூவிற்கும் வருகை தாருங்கள்...

குமரி எஸ். நீலகண்டன் said...

வருணன் அவர்களுக்கு மிக்க நன்றி... நிச்சயமாக உங்கள் வலைப்பூவிற்கு வருகை தருகிறேன்
அன்புடன்
குமரி எஸ். நீலகண்டன்