Tuesday, March 1, 2011

அனுதாபத்திற்குரிய அவன் - திண்ணையில் வெளியான கவிதை

அனுதாபத்திற்குரிய அவன்
குமரி எஸ். நீலகண்டன்

அவனின் தலைக்குள்
ஒரு சிலருக்கே இருக்கும்
ஒரு சிறப்பு சுரப்பி
வெளியேத் தெரியாமல்.

அவன் பெருமையில்
திளைக்கும் போது
அதில் அவனுக்கு
அமிர்தம் சுரப்பதாய்
ஒரு பிரமை..

பெருமையானது
அவன் உடலை
அழுத்தும் போது
தலையின் உச்சியிலிருந்து
பீய்ச்சி அடிக்கும்
அந்த அசிங்கத்தை
அமிர்தமாய் எண்ணி
அவனும் 
தலைக்குள் மூளையைச்
சுருக்கி அந்த இடத்தில்
அதைப் பெருக்கி
பாதுகாப்பாய்
தலைப் பைக்குள் அழுத்தி
சுமந்து கொண்டிருக்கிறான்.

சுரக்க சுரக்க
நாளுக்கு நாள்
அசிங்கத்தின் சுமைகள்
இன்னும் அதிகமாய்

அதன் எடை கூடிக் கூடி
தலையில் இடமின்றி
முகம் வழியாக
வழிகிறது
கண்களினிடையே
கண்களினுள்ளே
மூக்கின் நுனி
முகத்தின் பள்ளங்களென...

வடிகிற அந்த 
அசிங்கத்தின் நாற்றம்
அவன் மூக்கின் நரம்புகளைத்
தொட்டதாய் தெரியவில்லை..
அந்த அசிங்கத்தின் காட்சிகளை
அவன் கண்ணாடிகளைப்
பார்க்கிற போது பார்த்ததாய்
தெரியவில்லை. 

அதைப் பார்த்தவர்களும்
மூக்கைப் பிடித்துக் கொண்டு
சென்றதையும் அவன்
கண்டுணர்ந்தானெனத்
தெரியவில்லை.

நாற்றத்தை சகித்துக் கொண்டு
நாராசமாய் சிரித்துச் செல்லும்
பலரின் உள்மனதை
அவன் உணர்ந்ததாகவும்
தெரியவில்லை.

எந்த மருத்துவத்தால்
அவனுள் சுரக்கும்
அந்த அவனது
அமிர்த சுரப்பியை
அறுத்தெடுப்பதென்பது
எனக்கும் தெரியவில்லை
அசிங்கத்தைச் சுமக்கும்
அவனுக்காக
அனுதாபப்படுவதைத் தவிர...

Saturday, February 26, 2011

ஒரு கவிதானுபவம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

ஒரு கவிதானுபவம்
குமரி எஸ். நீலகண்டன்

எல்லாக் கவிதைகளிலும்
எங்கோப் பார்த்த முகம்
கேட்ட எள்ளல்
உணர்ந்த கோபம்
சுட்ட நெருப்பு
சுருக்கென்று குத்துகிற ஊசி
பரவசித்தப் பசுமை
திகட்டியத் தென்றல்
நகர்த்திய நடையென
கவிதைகளின் அணிவகுப்பில்  
சாயலின் சங்கமத்தில்
சந்திக்காத ஒரு கவிதையை
நான் தேடிக்
கொண்டிருந்த போது
நான் இதுவரை சந்திக்காத
அந்தப் புதியவன்
என்னைத் தட்டி
உங்களை எங்கோப்
பார்த்த மாதிரி
இருக்கிறதென்று
என்னைக் கலைத்துவிட்டுப்
போனான்.

Tuesday, February 22, 2011

கடவுளின் பெருமிதம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளின் பெருமிதம்
குமரி எஸ். நீலகண்டன்


தொடர்ச்சியான
அநியாயங்களின்
சாட்சியான அவன்
கடவுளைத் திட்டிக்
கொண்டிருந்தான்.

உலகில்
கடவுளே இல்லை.
அப்படிக் கடவுள் இருந்தால்
அவன் திருடன்.
கொள்ளைக் காரன்,
அயோக்கியன்..
பித்தலாட்டக்காரன்.
ஏமாற்றுப் பேர்வழி...

நிறைய பேர்
கடவுளின் நாமம் சொல்லி
பூஜை செய்து கொண்டிருக்க
சோர்ந்திருந்த கடவுள்
நம்பிக்கை இழந்து திட்டிய
அவனை மட்டும் பார்த்து
நம்பிக்கையும்
பெருமிதமும் கொண்டார்.

Saturday, February 19, 2011

மரப்பாச்சியின் கண்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

மரப்பாச்சியின் கண்கள்
குமரி எஸ். நீலகண்டன்

கோடியைக் கொட்டி
புதிய வீட்டைக் கட்டி
பால் காய்ச்சி
பளபளக்கும் வீட்டில்
பவுசாக குடி
வந்தாகி விட்டது.

பழைய மேசை... நாற்காலி,
கடிகாரம், பக்கெட்,
மரப் பொருட்களென
பழையப் பழையப்
பொருட்களெல்லாம்
புதிய வீட்டைப்
பார்க்காமலேயே
வேலைக்காரி,
குப்பைப் பெட்டி,
பேப்பர்காரனென
பல திசைகளிலும்
பறந்து போய் விட்டன.

புத்தம் புதியப் பொருட்களுடன்
புத்தொளி வீசியப் புதிய வீட்டில்
ஐந்து வயது சுனந்தாவின்
அழகான அயல் நாட்டுப்
பைக்குள்ளிருந்து
ஒரு சிறு வெளி வழியாக
யாருக்கும் தெரியாமல்
மறைந்து பார்த்துக்
கொண்டிருந்தன
அந்த அழகான
பழைய மரப்பாச்சிப்
பொம்மையின்
திருட்டு விழிகள்
சுனந்தாவின் விழிகளோடு
போட்டி போட்டுக் கொண்டு.

Wednesday, February 16, 2011

என்னுள் ஒருவன் கவிதை குறித்து...

என்னுள் ஒருவன் கவிதை  குறித்து நண்பர் திரு.டோக்ரா அவர்களின் விமர்சனம்
எனது என்னுள் ஒருவன் என்ற கவிதையின் விமர்சனத்தோடு அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் நண்பர் திரு. டோக்ரா அவர்கள் அவரது கவிதை விமர்சனம் என்ற வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மீண்டும். அதற்கான இணைப்பு இதோ

நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2

நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2


நீலகண்டன் எழுதிய கவிதை “என்னுள் ஒருவன்” வார்த்தைகளுடன் அழகாக விளையாடி நம்மைப் பற்றியே நாம் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதால் நாம் மற்றவர்கள் கண்ணோட்டத்துடன் உலகத்தைப் பார்க்க இயலாமல் போய்விடுவதை எடுத்துரைக்கிறது.

மனித மனம் அதன் எல்லை விளிம்புகளைத் தாண்டி விரிவாக வாய்ப்புகள் இருந்தும், நம்முடனான நமது ஈடுபாடு நம்மை மற்றவர்களைப் பற்றி சிந்திக்க அனுமதிப்பதில்லை. நமது மனம் விரிவு பெற நாம் சற்று நேரம் நம்மை மறந்து உலகத்தை மற்றவர்கள் கண்ணோட்டத்துடன் காணக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் மனத்தில் வசிக்கும் “நான்” என்பவன் மனமாகிய இல்லத்தை விட்டுச் சென்று அங்கே இன்னொருவர் வந்து வசிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் “நான்” என்பவரின் தலையீட்டு இல்லாமல் இன்னொரு கண்ணோட்டத்தில் உலகத்தைப் பார்ப்பது சாத்தியமாகும். மேலதிகாரிக்குத் தனக்குக் கீழ் பணிபுரிபவரின் கஷடங்கள் புரியும்; கீழ் பணி புரிபவருக்கு மேலதிகாரியின் கவலைகள் தெரியும். மாணவன் ஏன் படிப்பில் அக்கறை காட்டவில்லை என்பதை ஆசிரியர் புரிந்து கொள்வார்; தான் நன்றாகப் படிக்காததால் ஆசிரியர் ஏன் கோபப்படுகிறார் என்பது மாணவனுக்குப் புரிந்துவிடும்.
இந்தச் சிறந்த கவிதை தமிழ் மொழி தெரியாதவர்களுக்குப் போய்ச் சேர இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளேன். இதோ அந்த கவிதை:

என்னுள் நானும்
உன்னுள்
நீயுமில்லாத போது
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
சாவகாசமாய்
உரையாடுகிறோம்…


என்னுள் நானில்லாத போது
பலருள் எனக்கும்
என்னுள் பலருக்கும்
இடமிருக்கிறது.


என்னுள்ளிருந்து
வெளியேறும் நான்
வெகு அருகிலும்..
சில நேரம் விலகியும்
மறைந்தும்
சில நேரம் வெகு
தூரத்திலிருந்தும்
வெகு அருகில் வந்தும்
அச்சுறுத்திக்
கொண்டிருக்கிறது.


என்னை அறியாமல்
என்னுள் புகுந்து
உச்சியிலாடி உட்கலகம்
செய்கிறது..


ஆயிரம் கைகளிலும்
ஆயுதங்கள் தாங்கி
அகத்திலிருந்து
கைகளைச் சுழற்றும்
அதன் ஆர்ப்பாட்டத்தில்
இலக்கு எதிரானாலும்
இழப்பு எனக்கே எனக்கு.


நானின் கையிலுள்ள
நாணின் சுருக்கில்
தலையை ஈர்க்கும்
என்னுள்
நானில்லாத போது
என்னுள் பலருக்கும்
பலருள் எனக்கும்
பட்டாம் பூச்சியாய்
பறக்க இயல்கிறது.


எனக்கே எதிராய்
எப்போதும்
எனது நான்…..


Here is a translation of the above poem in English:

When I am not
Within me
And you are not
Within your self
Then
I within you
And you within me
Are able to relax and talk.


When we do not
Occupy our selves
Then our self
Is able to accommodate many
And expand. 


Whenever I leave my self
I constantly threaten
To come back
Whether from afar
Or close
And disturb others
Who occupy me then. 


I become
Like a demon
Threatening to come back
Carrying weapons in all hands
Jutting out from my Ego —
Weapons that
While they are aimed at others
Cause me damage.


When the string
That pulls me within my self
Is let loose
And I do not occupy my self
Then
I within others
And others within me
Flutter around
Like colourful butterflies. 


The one who hinders me always
Is my “I – ness”.


3 Responses to நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2


  • Dr.k.S.J.Wilson says:
    Really It is a very loveable Poem. As others says every body in the world should read it and understand themselves. The lines reflect that the poet as a genius person. It is the most essential one in todays life style. I wish to give more poems like this



  • dogrask says:
    Thanks Dr. Wilson. This blog is intended to popularise good Tamil poetry. That is why I have nick-named it “தமிழ் கவிதைக்கு என் தொண்டு”.
    I appreciate your valuable comment.



  • //என்னுள் நானில்லாத போது
    பலருள் எனக்கும்
    என்னுள் பலருக்கும்
    இடமிருக்கிறது.//
    இந்த நான்கு வரிகளுக்குள் எல்லாமே அடங்கியுள்ளன.
    நல்லதொரு கவிதைக்கு சிறப்பான அங்கீகாரம் தந்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.




  •  

    Tuesday, February 15, 2011

    புத்தகப் பைத்தியம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

    புத்தகப் பைத்தியம்
    குமரி எஸ். நீலகண்டன்

    எனக்கு புத்தகமென்றால்
    பைத்தியம்.
    என் மனைவிக்கு
    புத்தகத்தைக் கண்டாலே
    பைத்தியம்.

    என் மாமனார் சொன்னார்
    சீ பைத்தியக்காரி
    இதையெல்லாம்
    பெரிது படுத்தாதே.
    புத்தகப் புழுவோடு
    புக்ககம் போயிருக்கிறாயென
    பெருமைப்படு என்றார்
    என் மனைவியிடம்.

    அதற்குள் என்
    கைப்பிள்ளை
    ஊர்ந்து ஊர்ந்து
    புத்தகத்தைப் பிய்த்து
    கிழித்துக் கொண்டிருந்தான்
    நான் படிக்காதப்
    பக்கங்களை...

    கிழித்து கசக்கிய
    பக்கங்களால் ஒரு
    பூச்சியைப் பிடித்து
    வெளியே எறிந்தார்
    என் மாமியார்

    புதிதாக ஒரு புத்தகத்தைப்
    படித்த திருப்தி எனக்கு.

    Sunday, February 13, 2011

    எனது கவிதை குறித்து ......

     எனது கவிதை குறித்து நண்பரின் விமர்சனம்

    அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய நண்பர் திரு. டோக்ரா அவர்கள்  அவரது என் கவிதை விமர்சனம் வலைப்பூவில் சுயநலத்தின் சுற்றுப்பாதை கவிதை குறித்து ஒரு இடுகையாக விமர்சனம் எழுதி உள்ளார். அதைப் படிக்க இதோ உங்களுக்காக அதன் இணைப்பு... 

    நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

    நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

    நீலகண்டன் என் நெருங்கிய நண்பர். அவரது கவிதைகளை http://neelakandans.blogspot.com/ என்னும் அவரது வலைப்பூவில் அடிக்கடி படிக்கிறேன். கவிதைகளில் அவர் பொதுவாகவே விஷயத்தை நேரிடையாகச் சொல்லாமல் ஒரு சூழ்நிலையை விவரிப்பதன் வாயிலாகத் தெரிவிப்பார். அந்தச் சூழ்நிலை நமக்கு விஷயத்தைத் தெரிவிப்பதோடு மட்டும் இல்லாமல் இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும்.
    “சுய நலத்தின் சுற்றுப் பாதை” என்ற கவிதையையே பாருங்கள். வாழ்க்கையின் ஒரு மிகச் சாதாரணமான, அன்றாடம் பல பேருந்துகளில் நடைபெறும் சங்கதி. ஆனாலும், மனித வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் நடக்கின்ற போட்டி மனப்பான்மையையும், அதன் பின்னணியாக இருக்கும் “எல்லாம் எனக்கே கிடைக்கட்டும், மற்றவர்கள் என்ன ஆனார்களோ எனக்கு கவலை இல்லை” என்று தன் மையச் சிந்தனை முறையையும் படிமங்கள் மூலம் காட்டுகிறது. அத்துடன் “கூட்டத்தில் மோதிக் கொண்டிருப்பவர்கள் என்னத்தான் செய்ய முடியும்? பாவம்!” என்று பரிதாப உணர்வையும் உருவாக்குகிறது.
    சங்கதி மிக சாதாரணமானதாக இருந்தாலும், அதை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இச்சூழ்நிலையைத் தங்கள் உயிருக்காகவும், ஒரு பெரிய லட்சியத்துக்காகவும் போர் களத்தில் இறங்கியிருக்கும் வீரர்களுடன் சொல்லாமலேயே ஒப்பிடுகிறது:

    அந்த இடத்தைப் பிடிக்க
    கைகள் கம்பிகளைப் பற்ற
    வாள்களாக
    சண்டையிடும்.

    இந்த வரிகளில் மட்டும் இல்லாமல், கவிதை முழுக்க குறைவான வசதிகளுக்காக கூட்டம் கூட்டமாக மக்கள் போட்டியிடும் நம் தற்காலச் சமுதாயத்தின் உண்மை நிலை வெளிபடுகிறது:

    தொங்கியும் சாய்ந்தும்
    சரிந்தும் வியர்த்தும்
    காற்றைப் பிழிந்து
    வியர்வை மிதந்த
    கனத்தக் கூட்டத்தில்

    பயணம் செய்யும் மக்கள் பேருந்தில் மட்டும் அல்ல வாழ்க்கையின் அனைத்துச் சூழ்நிலைகளிலும் இதே போல மோதி, முட்டி “இருக்கையைப் பிடிக்கும்” சவாலைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.
    கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேக நிலை மன அழுத்தத்தைத் தருகிறது:

    அவனின் பாவனை அசைவில்
    நிற்பவர்களின் ரத்தம்
    ஒடுங்கிய ஓடைகளில்
    உயர் அழுத்தத்தில் பாயும்.

    கிடைக்காத போது ஏற்படும் ஏமாற்றம் நகைச்சுவையாக அமைவதால் அவர்களது ஏக்கத்தை இன்னும் பலமாக சுட்டிக்காட்டுகிறது:

    அவன் எழாத போது
    பெய்யா மழையால்
    பொய்யாய் கலையும்
    கரு மேகமாய் …..

    கவிதை ஒரு புறம் மக்களின் தன்னையே சுற்றிச் சுற்றி வரும் “சுய நலத்தின் சுற்றுப் பாதை”யைப் பற்றிப் பேசினாலும், இன்னொரு புறம் ஒரு பேருந்து இருக்கைக்காக “உயர் அழுத்தத்தில் பாயும்” ரத்தத்துடன் “வியர்வை மிதந்த” மக்களின் பரிதாப நிலையையும் படம் போட்டுக் காட்டுவதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் போட்டியும் போராட்டமும் சந்திக்க வேண்டிய இன்றைய உலகத்தின் உண்மை நிலையையும் சுட்டிக்காட்டுகிறது.
    நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நீலா!

    3 Responses to நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

    1. வல்லமையில் வாசித்த அன்றே வியந்து கருத்தளித்திருந்தேன். பகிர்வுக்கு நன்றி.
    2. dogrask says:
      திரு ராமலக்‌ஷ்மி அவர்களே, விமர்சனம் படித்ததற்கு நன்றி. நீங்கள் மிக நன்றாக கவிதைகள் எழுதுகிறீர்கள் என்று நீலகண்டன் சொல்கிறார்.

     


    திரு டோக்ரா அவர்களுக்கு என் அன்பு நிறைந்த நன்றிகள்.

    குமரி எஸ். நீலகண்டன்

    Thursday, February 10, 2011

    சுயநலத்தின் சுற்றுப்பாதை - வல்லமை இதழில் வெளியான கவிதை

    சுய நலத்தின் சுற்றுப் பாதை
    குமரி எஸ். நீலகண்டன்

     ஓடும் பேருந்தில்
    தொங்கியும் சாய்ந்தும்
    சரிந்தும் வியர்த்தும்
    காற்றைப் பிழிந்து
    வியர்வை மிதந்த
    கனத்தக் கூட்டத்தில்
    இருக்கையை விட்டு
    எழுவதுபோல் எத்தனிக்கும்
    அவனைச் சுற்றி
    மந்தையாய் குவியும்
    சுயநலம்.

    அந்த இடத்தைப் பிடிக்க
    கைகள் கம்பிகளைப் பற்ற
    வாள்களாக
    சண்டையிடும்.

    அவனின் பாவனை அசைவில்
    நிற்பவர்களின் ரத்தம்
    ஒடுங்கிய ஓடைகளில்
    உயர் அழுத்தத்தில் பாயும்.

    அவன் எழாத போது
    பெய்யா மழையால்
    பொய்யாய் கலையும்
    கரு மேகமாய்
    அலைபாயும் அடுத்த
    இடத்திற்காய் சுயநலம்.

    Saturday, February 5, 2011

    என்னுள் ஒருவன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

    என்னுள் ஒருவன்
    குமரி எஸ். நீலகண்டன்

    என்னுள் நானும்
    உன்னுள்
    நீயுமில்லாத போது
    உன்னுள் நானும்
    என்னுள் நீயும்
    சாவகாசமாய்
    உரையாடுகிறோம்...

    என்னுள் நானில்லாத போது
    பலருள் எனக்கும்
    என்னுள் பலருக்கும்
    இடமிருக்கிறது.

    என்னுள்ளிருந்து
    வெளியேறும் நான்
    வெகு அருகிலும்..
    சில நேரம் விலகியும்
    மறைந்தும்
    சில நேரம் வெகு
    தூரத்திலிருந்தும்
    வெகு அருகில் வந்தும்
    அச்சுறுத்திக்
    கொண்டிருக்கிறது.

    என்னை அறியாமல்
    என்னுள் புகுந்து
    உச்சியிலாடி உட்கலகம்
    செய்கிறது..

    ஆயிரம் கைகளிலும்
    ஆயுதங்கள் தாங்கி
    அகத்திலிருந்து
    கைகளைச் சுழற்றும்
    அதன் ஆர்ப்பாட்டத்தில்
    இலக்கு எதிரானாலும்
    இழப்பு எனக்கே எனக்கு.

    நானின் கையிலுள்ள
    நாணின் சுருக்கில்
    தலையை ஈர்க்கும்
    என்னுள்
    நானில்லாத போது
    என்னுள் பலருக்கும்
    பலருள் எனக்கும்
    பட்டாம் பூச்சியாய்
    பறக்க இயல்கிறது.

    எனக்கே எதிராய்
    எப்போதும்
    எனது நான்.....

    Wednesday, February 2, 2011

    மேசை துடைப்பவன் - இந்த வார கல்கியில் வெளியான கவிதை

    மேசை துடைப்பவன்
    குமரி எஸ். நீலகண்டன்

    அந்த உணவு விடுதியில்
    மேசை துடைக்கும்
    அந்தச் சிறுவன்
    அவன் முகம்
    தெரியத் தெரிய
    பளபளவென
    அந்த மேசையைத்
    துடைத்துக் கொண்டே
    இருக்கிறான்.

    இருப்பவரைப் பொறுத்து
    மேசையில் அவன்
    முகத்தின் மேல்
    சிதறிய சட்னி... சாம்பார்...
    தேநீர்.. காப்பி என
    இத்யாதிகள்...

    அவனும்
    அவன் முகத்தில்
    எந்தக் கறையுமின்றி
    முகம் தெரியத் தெரியத்
    துடைக்கிறான்.
    ஒரு தடவை கூட
    மேசைக்குள்
    அவன் முகம்
    அவனைப் பார்த்து
    சிரிக்கவே மாட்டேன்
    என்கிறது.

    Monday, January 31, 2011

    மேகத்தின் பன்முகங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

    மேகத்தின் பன்முகங்கள்
    குமரி எஸ். நீலகண்டன்

    காற்றில் மிதக்கும்
    பஞ்சாய்
    வானில் மேகம்.

    பயணிக்கும் பறவைகளின்
    சீரிய சிறகசைவில்
    சிலிர்த்து வியந்து...

    மலையரசனின் தலையில்
    மகுடமாய் ....

    நிலத்திற்கும் கடலுக்கும்
    விரிந்த
    வெண்குடையாய்

    கிழித்தெறிந்த பஞ்சில்
    கிளர்ந்தெழுந்த வேகத்துடன்
    மேகம்.

    வானம் அழுகையில்
    கருங்கூந்தலை விரித்து
    இடியாய் கர்ஜிக்கிற
    இறுமாப்புடன் மேகம்.

    Thursday, January 27, 2011

    அவனைத் தின்ற புழு - உயிரோசையில் வெளியான கவிதை

    அவனைத் தின்ற புழு
    குமரி எஸ். நீலகண்டன்

    அவன் புத்தகத்தை
    பக்கம் பக்கமாய் சாப்பிட்டு
    வண்ணச் சிறகுகளுடன்
    பட்டாம் பூச்சியாய்
    பறந்து கொண்டிருந்தான்.

    அவனது அந்தக்
    குறிப்பிட்ட புத்தகத்தை
    நாலைந்து புழுக்கள்
    நாலே வாரங்களில்
    ஒவ்வொரு எழுத்தாய்
    தின்று தீர்த்து
    அடுத்த புத்தகத்துள்
    கன்னமிட்டு
    அவனையும் முந்தி
    அள்ளித் தின்னத்
    தொடங்கின.

    புழுக்களின்
    அத்து மீறியக் குடியிருப்பை
    அங்கேக் கண்ட
    அவனின் தலைக்குள்
    ஆயிரமாயிரமாய் புழுக்கள்
    அவன் தலையையும்
    தின்னத் தொடங்கி இருந்தன.

    Tuesday, January 25, 2011

    உடைகிறக் கோப்பைக்குள் - திண்ணை இதழில் வெளியான கவிதை


    உடைகிறக் கோப்பைக்குள்
    குமரி எஸ். நீலகண்டன்

    அவனுக்கும்
    எனக்குமாய் இருந்த
    அழகான இனிய
    கோப்பை அது.

    ஒளித் தடையில்லாத
    தெள்ளந் தெளிந்த
    பளிச்செனப் பளபளக்கும்
    பகட்டானக் கோப்பை அது.

    எங்கள் அன்பைக் கரைத்த
    அதி உன்னத பானத்துடன்
    நுரை பொங்கி நிறைந்த
    கோப்பை அது.

    ஊடுருவி உரையாடிக்
    கொண்டிருக்கும்
    எங்கள் உள்ளங்களின்
    ஒளி பெருக்கியாய்
    அந்த கண்ணாடிக் கோப்பை..

    நான் என் நண்பனிடம்
    ஒன்றைச் சொல்லப்
    போகிறேன்.. அப்போது
    அந்த கோப்பை
    என் நண்பனின் கைகளின்
    பிடி விலகலால்
    உடைக்கப் படலாம்.

    உடையக் கூடாதென
    அந்த கோப்பைக்காக
    உருகிக் கொண்டிருக்கும்
    எனக்கு நான்
    சொல்ல வேண்டியதை
    சொல்லாமலும் முடியாது.

    Friday, January 21, 2011

    ரோஜாவும நானும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

    ஒரு ரோஜாவும் நானும்
    குமரி எஸ். நீலகண்டன்

    ஒரு பெரும்புயலுக்கு
    முந்தைய மௌனத்தில்
    சிலு சிலுவென சிணுங்கிய
    தூறல்களுக்கிடையே நானும்
    அன்று பூத்த அந்த
    நந்தவனத்து ரோஜாவும்
    தன்னந்தனியாய்.

    விரிந்த இதழ்களில்
    விழுந்த நீர் துளிகளோடு
    வாசம் வீசிப் பேசிய
    அதன் வண்ண மொழிகள்
    எனக்குப் புரியவில்லை.

    அதன் ஆர்ப்பரிக்கும் அழகில்
    அலையோடிய
    என் கவிதைகளும்
    அதற்கு புரிந்ததாய்
    தெரியவில்லை.

    ஆனாலும் குத்தும் குளிரை
    விட்டு விலகும் என்னை
    தடுக்கும் பாவனையில்
    அதன் முகத்தின்
    மோக ஜாடை.

    மழைக்கு முந்தைய
    மௌனத்தில்
    சூழ்ந்த முட்களுக்கிடையே
    பேரிரைச்சலுடன்
    பேரன்புடன்
    புரியாத மொழியில்
    யாருக்கும் தெரியாமல்
    பேசிக் கொண்டிருக்கிறோம்
    இருவரும்.

    Tuesday, January 18, 2011

    நெருப்பு மலர் - திண்ணை இதழில் வெளியான கவிதை


    நெருப்பு மலர்
    குமரி எஸ். நீலகண்டன்
    எரியும் காகிதத்தில்
    அசையும் இதழ்களுடன்
    அழகாக
    ஆடியதொரு சிகப்புப் பூ..
    கருப்பு வாசம். 


    தொட இயலவில்லை
    தோட்டமெதுவும் இல்லை
    வண்டு மொய்க்கவில்லை
    இதழ்கள் உதிரவில்லை
    இறுதியில் மண்ணில்
    கருப்பு மகரந்தங்கள்

    Saturday, January 15, 2011

    போகியும் பொங்கலும்

    எல்லோருக்கும் என் உளம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    போகியும் பொங்கலும்
    குமரி எஸ். நீலகண்டன்

    பழைய துணி...
    பழைய பாத்திரம்,
    அரிவாள் மணை, கத்தி,
    பழைய தலையணை,
    விளையாட்டுப் பொருட்கள்,
    கிரிக்கெட் மட்டை,
    காகிதங்களென  அத்தோடு
    பழைய நட்பு பகையென
    பயன்படாதவைகளெயெல்லாம்
    பழையதென
    எரிந்தும் எறிந்தும் 


    புது பாத்திரங்களுடன்
    புதிய பொருட்களுடன்
    புதுப் புது நண்பர்களுடன் ....
    வாழ்த்துக்களுடன்
    பொங்கலொ பொங்கலென்று
    பொங்கிய பொங்கலின் புகையில்
    பழைய நண்பரின்
    கண்களில் நீர் ததும்ப
    ல்

    Monday, January 10, 2011

    தாத்தாவும் பேரனும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

    தாத்தாவும் பேரனும்
    குமரி எஸ். நீலகண்டன்

    தாத்தாவின் பிள்ளைக்கு
    குழந்தை பிறந்திருக்கிறது.
    கொஞ்ச நாளாய்
    தாத்தாவிற்கு பேச
    எந்த தோழர்களும்
    தேவையில்லை...

    தாத்தாவும் பேரனும்
    ஏதேதோ பேசிக்
    கொள்கிறார்கள்..
    யாருக்கும் புரியவில்லை
    அவர்களின் ரகசியங்கள்.

    அழுகிறப் பேரனிடம்
    தாத்தாய் அழகழகாய்
    ஏதோ சொல்லிக்
    கொடுக்கிறார்...

    வாயில் பாட்டும்
    கையில் கிலுக்குமாய்
    கல கலப்பாய்
    தாத்தாவின் ஆட்டம்.

    குழந்தை கையை
    அசைக்கிற போதும்
    கால்களை ஆட்டி
    இசைக்கிற போதும்
    சாடையாய் கூடி நிற்கிற
    முகத்தின் ஓசையில்
    தாத்தா இப்போது
    அவரது தாத்தாவின்
    மடியினில்
    கைகளையும் கால்களையும்
    அசைத்து அசைத்து
    ஏதோ சொல்லிக்
    கொண்டிருக்கிறார்.


    உலகம் திரும்பி
    சுற்றிக் கொண்டிருக்கிறது.

    Saturday, January 8, 2011

    பல்லியின் சாபம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

    பல்லியின் சாபம்
    குமரி எஸ். நீலகண்டன்

    சன்னலை அடைத்த போது
    அந்த சப்தத்தில்
    அச்சமுற்ற பல்லி
    தப்பிக்க நினைத்து
    இடுக்கின் இடையேத்
    தலையை விட்டது.

    குற்றுயிரில்
    சபித்த பல்லியை
    அடித்துக் கொன்றேன்
    அதன் வலியற்ற
    மரணத்திற்காக..

    சபித்த பல்லிக்கு
    எங்கேத்
    தெரியப் போகிறது
    என் சங்கடம்

    Wednesday, January 5, 2011

    வினோதக் காலை

    வினோதக் காலை
    குமரி எஸ். நீலகண்டன்



    காலை என்பது
    கடவுளின் வினோதம்.

    இரவில் விதைத்த
    நட்சத்திரங்கள்
    வெளிச்சமாய் விரிகிற
    வினோதம்.

    இரவின் ரகசியங்கள்
    இன்னும் ரகசியமாய்
    பகலறியா பதுங்கு குழியில்
    பாய்ந்து மறைகிற
    வினோதம்.

    கனவுகளில் குளித்து
    வெளிச்சத்தில் உலர்த்த
    விரிகிற காட்சிகளின்
    விளையாட்டின் வினோதம்.

    ஒட்டிய அழுக்குகளைத்
    தட்டிக் கொள்ள
    காலை அனுப்பும்
    ஒளி ஓலையென
    காலை என்பது
    கடவுளின் வினோதம்.

    Saturday, January 1, 2011

    ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011 ம் - வல்லமை இதழில் வெளியான கவிதை


    ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011ம்
    குமரி எஸ். நீலகண்டன்
    வருடங்கள் வளர வளர
    வளர்ந்து கொண்டே
    இருக்கிறோம்.  
    உடலெங்கும் மின் ஒளியில்
    பகட்டாய் பறக்கிறது பூமி.

    காங்கிரீட் காடுகளில்
    வாடாத பூக்களுடன்
    பிளாஸ்டிக் தாவரங்கள்...

    உயிர்களை உன்னதமாய்
    காக்கிறோம்...
    கொசுக்கள்.. வைரஸ்..
    பாக்டீரியாக்களை
    புதிது புதிதாய்
    உருவாக்கியும் வளர்த்தும்...

    வீட்டினுள் குளிரூட்டி
    வெளியே அக்னி
    வளர்க்கிறோம் .

    பூமியின் அழுக்கான
    கைகளின் வழி பணங்கள்
    அவமானத்துடன்
    அலைகின்றன

    கட்டை பஞ்சாயத்தை
    இன்னுமொரு கட்டை
    பஞ்சாயத்தே தட்டி தனக்காய்
    தீர்ப்பு சொல்கிறது.

    ஆயிரம் வருடத்தில் பிறந்த
    அழகான ஒரு மரப்பாச்சி பொம்மை
    மிகுந்த சலிப்புடன்
    குழப்பங்களின் குழைவினுள்
    குதூகலமாய் வரும்
    குழந்தை2011 ப்  பார்க்கிறது
    பரிதாபமாய்.....

    Friday, December 31, 2010

    மௌனம் - வல்லமை இதழில் வெளியான கவிதை


    மௌனம்

    குமரி எஸ்.நீலகண்டன்..

    பறக்கும் தூள்களுக்கு
    இடையே
    பரந்து நிற்கும்
    மௌனத்தின் வெளி.

    மணக்கும் மயக்கும்
    மௌனத்தின் நெடி.

    அடைத்த செவிகளுக்கும்
    அடங்காமல் கேட்கும்
    மௌனத்தின் ஒலி.

    கால மாற்றத்தில்
    புயலின் மையம்
    மௌனம்.

    புரிவதற்காகவும்
    புரியாமல் இருக்கவும்
    எழுதப்பட்டும்
    ஓரளவு
    புரிந்துவிடுகிறது
    மௌனம்.

    சலசலப்பில்
    சல்லாபிக்கும்
    மௌனம்.

    எதுவும்
    முடிந்துவிடுகிறது
    உலகில் மௌனத்தில்.

    இன்னொன்று
    முளைத்தும் விடுகிறது
    மௌனத்தில்.

    Monday, December 27, 2010

    காரணமெனும் ரணம்

    காரணமெனும் ரணம்
    குமரி எஸ். நீலகண்டன்

    ஈருளி வாகனத்தில்
    இயங்கிய அவன்
    சாலைப் பூசணியில்
    சரிந்து விழுந்தான்.
    தலையெங்கும்
    பூசணிக்குள்
    புதைத்த குங்குமமாய்
    சிகப்பு சித்திரங்கள்.
    ஆஸ்பத்திரியில் அவனின்
    அம்மா சொன்னாள்
    எல்லாம் அவனுக்கு
    திருஷ்டி கழிக்காததால்
    நேர்ந்ததென்று.