Monday, January 10, 2011

தாத்தாவும் பேரனும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

தாத்தாவும் பேரனும்
குமரி எஸ். நீலகண்டன்

தாத்தாவின் பிள்ளைக்கு
குழந்தை பிறந்திருக்கிறது.
கொஞ்ச நாளாய்
தாத்தாவிற்கு பேச
எந்த தோழர்களும்
தேவையில்லை...

தாத்தாவும் பேரனும்
ஏதேதோ பேசிக்
கொள்கிறார்கள்..
யாருக்கும் புரியவில்லை
அவர்களின் ரகசியங்கள்.

அழுகிறப் பேரனிடம்
தாத்தாய் அழகழகாய்
ஏதோ சொல்லிக்
கொடுக்கிறார்...

வாயில் பாட்டும்
கையில் கிலுக்குமாய்
கல கலப்பாய்
தாத்தாவின் ஆட்டம்.

குழந்தை கையை
அசைக்கிற போதும்
கால்களை ஆட்டி
இசைக்கிற போதும்
சாடையாய் கூடி நிற்கிற
முகத்தின் ஓசையில்
தாத்தா இப்போது
அவரது தாத்தாவின்
மடியினில்
கைகளையும் கால்களையும்
அசைத்து அசைத்து
ஏதோ சொல்லிக்
கொண்டிருக்கிறார்.


உலகம் திரும்பி
சுற்றிக் கொண்டிருக்கிறது.

No comments: