Thursday, March 10, 2011

எழுத்தின் சாரம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

எழுத்தின் சாரம்
குமரி எஸ். நீலகண்டன்

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
பேனா மை கொட்டலாம்.
பேனா முனை உடையலாம்.
காகிதங்கள் கிழியலாம்.
எழுதியதைக் கிழித்து
கைக் குழந்தை எறியலாம்.

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
நீங்கள் கணிப்பொறியில்
எழுதுபவராக இருந்தால்
தட்டச்சை தட்டிய போது
எழுத்தெல்லாம்
சதுரம் சதுரமாக வரலாம்.
வைரஸ் வந்து
உங்கள் எழுத்துக்களைத்
தின்று போகலாம்.
நினைவுத் தட்டின்
வெட்டுக் காயங்களில்
உங்களின் எழுத்து
உடைபடலாம். அல்லது
உங்கள் எழுத்துக்கு அங்கே
இடமில்லாமலும் இருக்கலாம்.

ஆனாலும்
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
அதில் எப்போதாவது
அபூர்வமாய் ஒளிவட்டத்துடன்
ஒரு நல்ல கவிதை வரலாம்.
அதன் விதையிலிருந்து
ஒரு மரம் வளரலாம்.
அதன் பூவிலிருந்து
ஒரு புதுக் கனி விளையலாம்.
அதைத் தின்ன
ஒரு தேவதை வருவாள். 
அவள் இன்னொரு கவிதையை
உங்களுக்கு தெரியாமலேயே
உங்கள் மனதில்
எழுதிவிட்டுச் செல்வாளாம்.
அந்த கவிதையை
உரக்க நீங்கள்
உச்சரிக்கையில்
பல்லக்கில் ஏற்றி அவள்
உலகமறியாத உன்னத
பரிசொன்றைத் தருவாளாம்.
அதென்ன பரிசு?

அதனை அறிவதற்கு 
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்

6 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை. எழுதப் பிடிப்பவருக்கு இக்கவிதையும் மிகப் பிடிக்கும்.

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றிகள் ராமலக்ஷமி... வலைச்சரப் பொறுப்பிற்கிடையே என் கவிதையினை படித்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள். எழுத்து உங்களுக்கு மிகவும் பிடித்தமானது.

RAJA RAJA RAJAN said...

நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்... எழுதுபவரையும் ஊக்கப்படுத்துங்கள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

ராஜ ராஜனின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள்

ஸ்ரீராம். said...

சரியான கண்ணி. பிடிக்காமல் எழுத முடியுமா?

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி ஸ்ரீராம். பிடிக்காமல் எதையுமே நம்மால் செய்ய இயல்வதில்லையே...