Wednesday, August 31, 2011

நிலாச் சோறு - திண்ணையில் வெளியான கவிதை

நிலாச் சோறு
குமரி எஸ். நீலகண்டன்

பௌர்ணமி இரவில்
வெண்மை பொங்க
விசாலமாய் தெரிந்தது
பால்நிலா.

வெண் சித்திரங்களாய்
சிதறிக் கிடந்தன
நட்சத்திர கூட்டம்.

மொட்டை மாடியில்
சூழ்ந்திருந்த குழந்தை
நட்சத்திரங்களுக்கு
வாய்க்கொன்றாய்
உருண்டை
உருண்டையாய்
சுவையாய் ஊட்டினாள்
நிலாச் சோற்றினை
அற்புதப் பாட்டி.

அவளுக்கு மிகவும்
பிடித்த அந்த
சரவணனிடம் கேட்டாள்.
நிலாச் சோறு
எப்படி என்று.

மிகவும் சுவையாக
இருக்கிறது என்றான்
கண்களில் நிலா
மின்ன பார்வையற்ற
அந்தப் பேரன்.

11 comments:

Unknown said...

எளிமையான நடை,மிகவும் கவர்ந்தது.

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி மால்குடி... உங்கள் வருகையும் அன்பான கருத்துக்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது...

ராமலக்ஷ்மி said...

/சூழ்ந்திருந்த குழந்தை
நட்சத்திரங்களுக்கு
வாய்க்கொன்றாய்
உருண்டை
உருண்டையாய்
சுவையாய் ஊட்டினாள் /

அழகான கற்பனை. முடிவு கனம்.

Anonymous said...

நல்ல கவிதை. சிறப்பாக உள்ளது. சூர்யா

Anonymous said...

நிலாவின் முதலில் குறிலை நெடிலாக்கி மீதியை குறிலாக்கினால் என்ன வரும்... மேலும் ஒரு சொல்லை சேர்த்தால்... இது தான் நிலாவின் மேலுள்ள பற்றுதலா?
மிக்க அன்புடன்
சூர்யா...

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி....

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி சூர்யா... \நிலாவின் முதலில் குறிலை நெடிலாக்கி மீதியை குறிலாக்கினால் என்ன வரும்...\
என்ன வரும்... அருமையான கண்டுபிடிப்பு... சூர்யாவிற்கு ஆயிரம் பொற் காசுகள்....

Yaathoramani.blogspot.com said...

மிகவும் சுவையாக
இருக்கிறது என்றான்
கண்களில் நிலா
மின்ன பார்வையற்ற
அந்தப் பேரன்.


இறுதி வாக்கியம் கவிதையை
இமயமாய் உயர்த்திப் போகிறது
எளிய வார்த்தைகளில்
ஒரு அரிய சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ரமணி அவர்களுக்கு...

ஸ்ரீராம். said...

அருமை. கடைசி வரி சின்ன திடுக்கிடல்.

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி ஸ்ரீராம்....உங்கள் அன்பிற்கும் கருத்திற்கும்...