Monday, August 22, 2011

நீரும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நீரும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்

பித்தளை குட்டுவத்தின்
நீரில் நிலா மிதக்க
ஐந்து வயது சிறுவன்
ஒரு தட்டால் நிலாவை
சிறை வைத்தான்.

அடுத்த நாள்
மூடியை பத்திரமாக
திறந்து பார்த்தான்.
நிலா இருந்தது.
கொஞ்சம்
கரைந்துமிருந்தது.
மீண்டும் மூடி
வைத்து விட்டு
அடுத்த நாள் பார்த்தான்.
இன்னும் கரைந்திருந்தது.

நாட்கள் செல்லச்
செல்ல முழுவதும்
கரைந்திருந்தது.
நிலா முழுவதும்
நீரில் கரைந்து
விட்டதாக எண்ணி
மூடியைத் திறந்தே
வைத்திருந்தான்.

நீர் ஆவியாகி
வானத்தில் நிலாவாகப்
படியத் தொடங்கியது.
நீர் ஆவியாக
ஆவியாக
நாட்கள் செல்லச்
செல்ல வானத்தில்
நிலாப் படிமம்
வளரத் தொடங்கியது
முழு நிலாவாக.

7 comments:

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

ஸ்ரீராம். said...

நல்லது. நிலா கவிதையாகவே எழுதுகிறீர்கள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

எனக்கு இதொரு நிலாக்காலம்... மிக்க நன்றி ஸ்ரீராம்

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. நிலவுக் கவிதைகளை விரைவில் தொகுப்பாக எதிர்பார்க்கலாமா? வாழ்த்துக்கள்!

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி ராமலக்ஷ்மி. நிச்சயமாக நிலாக் கவிதைகளாக...ஒரு முழு நூலாக வரும்... தேவையான அளவு கவிதை அதற்கு தற்போதே இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

/ஒரு முழு நூலாக வரும்.../

மகிழ்ச்சி. காத்திருக்கிறோம். அட்வான்ஸ் வாழ்த்துக்களும்!

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி...