Tuesday, July 26, 2011

சூர்யப் பார்வை - உயிரோசையில் வெளியான கவிதை

சூர்யப் பார்வை
குமரி எஸ். நீலகண்டன்

சூரியனைப் பார்த்து
நாய் வேகமாய்
குரைத்தது.

சூரியனைப் பார்த்து
ஒரு குயில்
மரத்திலிருந்து
கூவிக் கொண்டே இருந்தது.

சூரியனைப் பார்த்து
கடைக்காரன் கடையின்
விளக்குகளை அணைத்தான்.

சூரியனைப் பார்த்து
பெரியவர்
குடையை விரித்தார்.

சூரியனைப் பார்த்து
முடிசூடான்
தனது மொட்டைத் தலையில்
தொப்பியை வைத்தான்.

சூரியனைப் பார்த்து
கண்ணப்பன் கருப்புக்
கண்ணாடியை கௌரவமாய்
அணிந்தான்.

சூரியனைப் பார்த்து
கந்தன் கைக்குட்டையால்
தலைக்கு மகுடம்
சூட்டினான்.

சூரியனைப் பார்த்து
முனியம்மாள்
தலையை முந்தானையால்
மூடிக் கொண்டாள்.

சூரியனைப் பார்த்து
ஜூலியட் துப்பட்டாவால்
முகத்தையே
மூடிக் கொண்டாள்.

சூரியனைப் பார்த்து
பாட்டி வற்றலைக்
காய வைத்தாள்.

சூரியனைப் பார்த்து
ராமலக்ஷ்மி கேமராவைச்
சொடுக்கினார்.

சூரியனைப் பார்த்து
விவசாயி நெற்களை
நிலத்தில் பரத்தினான்.

சூரியனைப் பார்த்து
பூக்காரி பூக்களில்
தண்ணீரைத் தெளித்தாள்.

சூரியனைப் பார்த்து
மைதானத்தில்
சிறுவர்கள் விளையாட
களம் இறங்கினார்கள்.

சூரியனைப் பார்த்து
அந்தப் பெண்
சன்னல் திரையையும்
சன்னலையும் மூடிக்
கொண்டாள்.

சூரியனைப் பார்த்து
சன்னலோரத்திலிருந்த
ரயில்பயணி
கைத்துண்டால்
கண்களைக் கட்டி
இருளில்
நிலாவைப் பார்த்துக்
குளிர்ந்து கொண்டிருந்தான்.

சூரியனைப் பார்த்து
எங்கோ இன்னமும்
நாய் குரைத்துக்
கொண்டே இருந்தது.

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மாறுப்பட்ட கோணத்தில் கவிதை...

அசத்தல்...

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி சௌந்தர்... உங்கள் அன்பிற்கும் வருகைக்கும்.

ராமலக்ஷ்மி said...

உங்கள் கவிதை வரை வந்து விட்டது என் கேமரா:)! மகிழ்ச்சியும் நன்றியும்.

கவிதை அருமை.

குமரி எஸ். நீலகண்டன் said...

எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றிகள்.

ஸ்ரீராம். said...

சூரியனை வைத்து ஒரு பதிவும் இட்டு விட்டீர்கள். அருமை.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம்...