Tuesday, March 1, 2011

அனுதாபத்திற்குரிய அவன் - திண்ணையில் வெளியான கவிதை

அனுதாபத்திற்குரிய அவன்
குமரி எஸ். நீலகண்டன்

அவனின் தலைக்குள்
ஒரு சிலருக்கே இருக்கும்
ஒரு சிறப்பு சுரப்பி
வெளியேத் தெரியாமல்.

அவன் பெருமையில்
திளைக்கும் போது
அதில் அவனுக்கு
அமிர்தம் சுரப்பதாய்
ஒரு பிரமை..

பெருமையானது
அவன் உடலை
அழுத்தும் போது
தலையின் உச்சியிலிருந்து
பீய்ச்சி அடிக்கும்
அந்த அசிங்கத்தை
அமிர்தமாய் எண்ணி
அவனும் 
தலைக்குள் மூளையைச்
சுருக்கி அந்த இடத்தில்
அதைப் பெருக்கி
பாதுகாப்பாய்
தலைப் பைக்குள் அழுத்தி
சுமந்து கொண்டிருக்கிறான்.

சுரக்க சுரக்க
நாளுக்கு நாள்
அசிங்கத்தின் சுமைகள்
இன்னும் அதிகமாய்

அதன் எடை கூடிக் கூடி
தலையில் இடமின்றி
முகம் வழியாக
வழிகிறது
கண்களினிடையே
கண்களினுள்ளே
மூக்கின் நுனி
முகத்தின் பள்ளங்களென...

வடிகிற அந்த 
அசிங்கத்தின் நாற்றம்
அவன் மூக்கின் நரம்புகளைத்
தொட்டதாய் தெரியவில்லை..
அந்த அசிங்கத்தின் காட்சிகளை
அவன் கண்ணாடிகளைப்
பார்க்கிற போது பார்த்ததாய்
தெரியவில்லை. 

அதைப் பார்த்தவர்களும்
மூக்கைப் பிடித்துக் கொண்டு
சென்றதையும் அவன்
கண்டுணர்ந்தானெனத்
தெரியவில்லை.

நாற்றத்தை சகித்துக் கொண்டு
நாராசமாய் சிரித்துச் செல்லும்
பலரின் உள்மனதை
அவன் உணர்ந்ததாகவும்
தெரியவில்லை.

எந்த மருத்துவத்தால்
அவனுள் சுரக்கும்
அந்த அவனது
அமிர்த சுரப்பியை
அறுத்தெடுப்பதென்பது
எனக்கும் தெரியவில்லை
அசிங்கத்தைச் சுமக்கும்
அவனுக்காக
அனுதாபப்படுவதைத் தவிர...

2 comments:

வசந்தா நடேசன் said...

தற்பெருமை சுரப்பியா??

குமரி எஸ். நீலகண்டன் said...

சரியாகவேச் சொன்னீர்கள்...