Saturday, February 19, 2011

மரப்பாச்சியின் கண்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

மரப்பாச்சியின் கண்கள்
குமரி எஸ். நீலகண்டன்

கோடியைக் கொட்டி
புதிய வீட்டைக் கட்டி
பால் காய்ச்சி
பளபளக்கும் வீட்டில்
பவுசாக குடி
வந்தாகி விட்டது.

பழைய மேசை... நாற்காலி,
கடிகாரம், பக்கெட்,
மரப் பொருட்களென
பழையப் பழையப்
பொருட்களெல்லாம்
புதிய வீட்டைப்
பார்க்காமலேயே
வேலைக்காரி,
குப்பைப் பெட்டி,
பேப்பர்காரனென
பல திசைகளிலும்
பறந்து போய் விட்டன.

புத்தம் புதியப் பொருட்களுடன்
புத்தொளி வீசியப் புதிய வீட்டில்
ஐந்து வயது சுனந்தாவின்
அழகான அயல் நாட்டுப்
பைக்குள்ளிருந்து
ஒரு சிறு வெளி வழியாக
யாருக்கும் தெரியாமல்
மறைந்து பார்த்துக்
கொண்டிருந்தன
அந்த அழகான
பழைய மரப்பாச்சிப்
பொம்மையின்
திருட்டு விழிகள்
சுனந்தாவின் விழிகளோடு
போட்டி போட்டுக் கொண்டு.

4 comments:

ராமலக்ஷ்மி said...

ஐந்து வயது சுனந்தா மனதில் நின்று விட்டாள் மரப்பாச்சியைப் புது வீட்டுக்குக் கொண்டு வந்து. நல்ல கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி ராமலக்ஷ்மி... இடுகையை வழங்கிய சில நிமிடங்களிலேயே உங்கள் கருத்துக்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல கவிதை. இன்னும் நிறைய எழுதுங்க..

குமரி எஸ். நீலகண்டன் said...

அமைதிச் சாரலின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி