Saturday, June 22, 2013

ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது விழாப் படங்கள்

பதிப்புச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளை விருது விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. மெய்யப்பன் அறக்கட்டளைத் தலைவர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், சிலம்பொலி செல்லப்பனார், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் அவ்வை நடராசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணன், எழுத்தாளர் ராசேந்திர சோழன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழறிஞர் பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன், கவிஞர் பொன் செல்லமுத்து, கவிஞர் பல்லடம் மாணிக்கம், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், எழுத்தாளர், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், பால சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் கமலவேலன் உட்பட பல அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாப் படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,



Thursday, June 20, 2013

ஆகஸ்ட் 15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது....

 மணி வாசகர் பதிப்பகத்தின் சார்பில் பதிப்பகச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளையின் 2012 ஆம் ஆண்டின் சிறந்த நூலாக எனது ஆகஸ்ட்15 நூல் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருது நாளை வழங்கப்பட இருக்கிறது. விழா அழைப்பிதழை இத்தோடு இணைத்துள்ளேன்... விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

மிக்க அன்புடன்
குமரி எஸ்.நீலகண்டன்

Tuesday, April 16, 2013

சாலை விதி - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை


சாலை விதி
குமரி எஸ். நீலகண்டன்


ஏழு வயதுக் குழந்தை
ஸ்கூட்டர் ஓட்டும்
பாவனையில்
பிர்பிர் என்று
ஒலி எழுப்பிக் கொண்டே
ஓடிக் கொண்டிருந்தது.

வலது கையைச்
சுழற்றிச் சுழற்றி
வாகனத்தின் வேகத்தை
வாயால் கூட்டிற்று
குழந்தை.

இடது கை மட்டும்
காதினில் குவிந்திருக்க
சாலையில்
வாகனச்சப்தம்
காதை அடைக்கிறதா
என்றேன்.

உடனே குழந்தை
தொல்லைக்
கொடுக்காதே நான்
செல்ஃபோனில் பேசிக்
கொண்டேச்
செல்கிறேன் என்றது.

Thursday, January 3, 2013

" ஆகஸ்ட் 15 " நூலுக்கு பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி.....

" ஆகஸ்ட் 15 " நூலுக்கு பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி.....

ஆகஸ்ட் 15
இந்த நாள் ஒரு தலைமுறைக்கு இந்தியருக்கு விசேஷமாக இருந்தது. இலட்சியம், நாணயம், உண்மை ஆகியவற்றுக்கு நினைவூட்டலாக இருந்தது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் ருஷ்டி அவருடைய ‘’நடுநிசிக் குழந்தைகள்’’ எழுதிய போதே இந்தத் தேதி வரலாற்றுக்குள் புகுந்த இன்னொரு நாளாகப் போய் விட்டது.
நண்பர் நீலகண்டன் மேற்சொன்னது உண்மையல்ல என்று நிரூபிப்பது போல ஒரு அபூர்வமான இலக்கியப் படைப்பை உருவாக்கியிருக்கிறார். நிஜம், புனைக் கதை இரண்டும் பின்னிப் பின்னி வந்து இது இறுதியில் ஓர் நம்பிக்கையூட்டும் செய்தியை நமக்குத் தருகிறது. இதில் வரும் ஒரு பாத்திரத்தின் அசலை நான் நன்கு அறிவேன். இந்த நூல் நமது நாடு, நமது ஆரம்ப கால இலட்சியப் போக்கு, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் நமது பாரம்பரியம் ஆகிய மூன்றுக்கும் அஞ்சலி செலுத்துவதாக இருக்கிறது.

Tuesday, January 1, 2013

மீண்டும் வலைப்பூவில் ஆகஸ்ட் - 15 என்ற புதினக் குழந்தையோடு

இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... சுமார் ஒன்பது மாத இடைவெளிக்கு பின் மீண்டும் இடுகைகளுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அந்த ஒன்பது மாத இடைவெளியானது ஆகஸ்ட் 15 என்ற எனது புதினக் குழந்தையை பெறுவதற்கான பிரசவ விடுப்பு... 502 பக்கங்களுடன் அந்த நாவல் நூல் வடிவில் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது....
















இனி இந்த நூல் குறித்து....
ஆகஸ்ட் 15

இந்த நாளில் பிறந்த சத்யா (2000), கல்யாணம்(1922), பாரதமாதா(1947) ஆகியோரின் வாழ்க்கையின் பின்னணியில் உருவான புதினம் இது. இதுவரை எழுதப்படாத ஒரு புதிய உத்தியில் எழுதப்பட்ட நாவல் இது. 

 கல்யாணம்.
 காந்தியின் செயலாளர்.

காந்தி இறப்பதற்கு முந்தைய நான்கு வருடங்களில் அவரது தனிச் செயலராக இருந்தவர் கல்யாணம் . காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது காந்தியின் வெகு அருகில் சில அங்குல தூரத்தில் நின்றவர். காந்தி இறந்தபின் கல்யாணம் பஞ்சாபில் இயங்கிய கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள மீட்புக் குழுவில் லேடி மவுன்ட் பேட்டனோடு பணியாற்றினார். புதுடெல்லியில் லேடி எட்வினா மவுன்ட் பேட்டனோடு சேர்ந்து அகதிகள் நிவாரணப்பணியிலும் அவர்களின் மறுவாழ்விற்காக ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைந்த பணியிலும் ஈடுபட்டார். அதன்பின் ரிஷிகேஷில் மீராபென் நடத்திவந்த பசுலோக் ஆஸ்ரமத்தில் ஒரு வருடம் பணியாற்றினார்....

கதையின் தொடர்ச்சி ....   ஆகஸ்ட் 15 நூலில்.......

புத்தகங்களை கீழ்கண்ட முகவரிகளில் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்.


Discovery Book Palace (P)Ltd
No.6, Magavir Comlex, 1st Floor
Munusamy Salai, K K Nagar West
Chennai - 600078
Tamil Nadu, India. 
(Near Pondichery Guest house)

Ph"+91 44 65157525 , Cell +91 9940446650


Mail: discoverybookpalace@gmail.com

http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D

New Book Lands
52-C, North Usman Road,
T'Nagar, Chennai - 600017,
Tamilnadu, INDIA.
Phone: 91-044-28158171 / 28156006
Fax : 91-044-42123839
Email : orders@newbooklands.com / enquiry@newbooklands.com



Tuesday, March 20, 2012

பனி நிலா - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

பனிநிலா
குமரி எஸ். நீலகண்டன்

பனிக்குஞ்சொன்று கண்டேன்.
சூரியன் சுட்ட
கருஞ்சாம்பலை விலக்கி
வெண்ணொளி வீசி
வீதிக்கு வந்தது.
குளிர்ந்து செழித்தது
காடும் நாடும்.
வெண்ணிலா
அதுவென்று சொன்னேன்.
வியந்து உயரப்
பார்த்தவர்
விழிகளுள்
பனிக் குஞ்சினை
புதைத்து வைத்தேன்.
நாளுக்கு நாள்
வளரும் குஞ்சோடு
விரியும் ஒளியில்
வெளிகளும் வளர்ந்தன..
விண்மீன்களும் குஞ்சுடன்
கொஞ்சி களித்தன.

Saturday, March 10, 2012

காற்றின் கவிதை - திண்ணை இதழில் வெளியான கவிதை

காற்றின் கவிதை
குமரி எஸ். நீலகண்டன்

எழுதாமல் பல
பக்கங்கள் காலியாகவே
இருக்கின்றன.

எழுதுவதற்காக இருந்தவன்
எழுதாமல் போனதால்
பலன் பெற்றனவோ
அந்தப் பக்கங்கள்.

எழுதுபவன் எழுதாததால்
வெள்ளை உள்ளத்துடன்
வெற்றிடம் காட்டி
விரைந்து அழைக்கிறதோ
அந்தக் காகிதப் பக்கங்கள்.

காகிதத்தின் மொழி
அறியாமல் காகிதத்தில்
எழுத முயல்கையில்
எங்கோ இருந்து
வந்தக் காற்று
காகிதத்தை
அடித்துப் போயிற்று.

காற்று அந்தக் காகிதத்தில்
தன் கவிதையைக்
கொட்டி கொட்டி
உரக்கப் பாடியது.

நிச்சயமாக அந்தக்
காகிதம்
காற்றின் கவிதையில்
காலம் முழுவதும்
நிறைந்திருக்கும்.

Friday, March 2, 2012

இருளில் உருளும் மனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

இருளில் உருளும் மனம்
குமரி எஸ். நீலகண்டன்


இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.

வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.

Sunday, January 15, 2012

பொங்கல் 2012 - வல்லமை பொங்கல் சிறப்பு மலரில் வெளியான கவிதை

பொங்கல் 2012
குமரி எஸ். நீலகண்டன்

வழக்கம் போல்
பொங்கல் வந்து விட்டது... 
காய்கனிகளோடு
பொங்கல் பானையுடன்
கம்ப்யூட்டர் பத்தி
கமகமக்க
பக்தி மயமாய் பரவசமாய்
பொங்கல்.

குண்டு குண்டாய்
காய்கறிகள் வைக்கப்
பட்டிருக்கின்றன
வாழை இலைக்குப்
பதிலாயிருந்த
பச்சைக் காகித இலையில்.

கரும்பு இருக்கிறது
அதே இனிப்புடன்.
ஆனால் அது
ஆதவனைக் காண
இன்னும் வளர வேண்டும்
பத்து மாடி உயரத்திற்கு.

கத்தரிக்காய் கண்ணைப்
பிய்க்கும் வண்ணத்தில்
காட்சி அளிக்கிறது.
அதன் மேல்
புண்ணிற்கு சிறிய
பிளாஸ்டர் ஒட்டியது போல்
ஒரு ஸ்டிக்கர் வேறு.
பையன் கேட்டான்
அப்பா அது செய்ததா
அல்லது விளைந்ததா என்று.
விளக்குவதற்கு
விளங்கவில்லை எனக்கு.

அந்தக் காலத்தில்
விளக்கின் முன்
நாளி நிறைய
நெல் வைப்பார்கள்
என்றேன் பையனிடம்.
அவன் நெல்லென்றால்
எப்படி இருக்குமென்றான்.
நகரத்தில் தேடிக்
கிடைக்கவில்லை.
இனி கூகுளில் தேடிக்
காட்டிக் கொடுக்க
வேண்டும்.

மங்களமாய் மஞ்சளோடு
டூத் பேஸ்டைப் போல்
இஞ்சிக்குப் பதில்
இருந்தது இஞ்சி பேஸ்ட்
பொங்கலில் மங்கலாய்.

எல்லாவற்றிற்கும் பதிலாய்
ஏதோ ஒன்று இருந்தது.
ஒரு கிராமத்தைப் போல்
குருவி சத்தம் கேட்கிறது
அழைப்பு மணியில்.
எதற்காக எது இருந்தது
என அறியாமல்
எதற்காக நாம்
இருக்கிறோமெனத்
தெரியாமல் பொங்கலோப்
பொங்கலெனக் கூவிக்
கொண்டாடினர் பொங்கலை.

அறுவடை நாளாம் இன்று.
எதை அறுவடை செய்தார்கள்.

Monday, January 9, 2012

குழந்தையின் கோபம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

குழந்தையின் கோபம்
குமரி எஸ். நீலகண்டன்

கடவுளின் குழந்தையொன்று
உலகியல் விளையாட்டினை
விளையாடிக் கொண்டிருந்தது.
எது தவறு
எது சரியென
கடவுளிடம் கேட்டுக் கேட்டு
குழந்தை அந்தப்
பொம்மைகளை
தவறு சரியென
இரண்டு வட்டங்களுக்குள்
பிரித்து பிரித்து வைத்தது.

குழந்தை கடவுளிடம்
ஏதோ கேட்பதற்காக
திரும்பிப் பார்த்த
சில நிமிடங்களில்
வட்டங்களிரண்டிலிருந்தும்
பொம்மைகள்
சரிக்கும் தவறுக்குமாக
மாறி மாறி குதித்துக்
கொண்டிருந்தன.

சலித்துப் போனக்
குழந்தை
தவறுகள் வைத்திருந்த
வட்டத்திற்குள்
தானேப் போய்
உம்மென்று உட்கார்ந்து
கொண்டது.

Monday, January 2, 2012

மழை துரத்திய இரவில் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

மழை துரத்திய இரவில்
குமரி எஸ். நீலகண்டன்

வானத்தில் வந்த
பூகம்பம் போல்
திடீரென இடி முழக்கம்.
விண்மீன்களையெல்லாம்
சுனாமி அடித்துச்
சென்றது போல்
வெறுமையாய்
கருவானம்.

இடை இடையே
வானத்தைக் கீறித்
தெறித்த ரத்தமற்ற
நரம்புகளாய் மின்னல்.

எங்கோப் புறப்படுகிற
மழை என்னை
இங்கேத் துரத்தியது.

தூங்குவதற்கு முன்
சன்னல்களையெல்லாம்
அடைத்து விட்டேன்.
இடிக்கு அஞ்சி கேபிள்
இணைப்புகளையெல்லாம்
திறந்து விட்டேன்.
மொட்டை மாடியில்
தொங்கிய 
துணிகளையெல்லாம்
தூங்கும் அறைக்குள்
தூங்க விட்டேன்.
நானும் தூங்கிப்
போனேன் வருகிற
மழையும் வந்ததாய்..

இடையில்
கொசுக்கள் வந்து
கடித்து எழுப்ப
தொப்பையாய்
நனைந்திருந்தேன்
வியர்வையில்.
நீச்சல் தெரியாத
இன்னொரு கொசு
வியர்வை மழையில்
நனைந்து முங்கிச்
செத்தது.

சன்னலைத் திறந்தேன்.
வழக்கம் போல்
வெறும் வானம்
விண்மீன்களுடன்
ஒரு விளையாட்டுப்
புன்னகையுடன்...

கொசுக்கள்
குதூகலத்துடன்
கைதட்டிப் பறந்தன

விடியும் வரை
விளையாடி ஜெயித்த 
மழையின் வெற்றியில்.

Sunday, January 1, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்பும் அமைதியும் பரவட்டும்.... இனியுலகில் இயற்கையைப் பேணி எல்லோரும் மகிழ்ச்சியுடன் நிறைந்த வாழ்வு வாழட்டும். எல்லோருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Monday, December 26, 2011

ஊனப் பிள்ளையார் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

ஊனப் பிள்ளையார்
குமரி எஸ். நீலகண்டன்

அடுக்கு மாடிக் குடியிருப்பின்
கீழ் தளத்தின் குறுஞ்சுவரில்
கையொடிந்த பிள்ளையார்
அண்டுவார் யாருமின்றி....
பட்டினியாய்... பரிதாபமாய்...

இரண்டு தினம் முன்பு
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த  வயிறோடு
மோதகப் பாத்திரத்துடன்
பார்த்த நினைவு.

Tuesday, December 20, 2011

நிலா விசாரணை - திண்ணை இதழில் வெளியான கவிதை

நிலா விசாரணை
குமரி எஸ். நீலகண்டன்

வெயிலில் வெந்து
தணிந்த கடலில்
குளித்து முகமெங்கும்
மஞ்சள் பூசிய
மகாராணியாய்
வானமேறி வருகிறது
அழகு நிலா...

விரைந்து வருகின்றன
அவளைச் சுற்றி
வெள்ளியாய் மிளிரும்
விண்மீன் படைகள்..

ஓய்ந்துறங்கும் உலகை
உற்று நோக்குகிறாள்.
எல்லாமே
உறங்குவதாய் கருதி
திருடர்கள் மிக
கவனமாய் திருடிக்
கொண்டிருக்கிறார்கள்.

வேட்டை நரிகள்
அப்பாவிகளை
வேட்டையாடிக்
கொண்டிருக்கின்றன.

நாய்கள் குரைத்துக்
கொண்டே இருக்கின்றன.

காற்று கதவுகளைத்
தட்டித் தட்டி
உறங்குபவர்களை
எச்சரித்துக் கொண்டே
இருக்கின்றன.

எல்லாவற்றையும்
புறக்கணித்து விட்டு
அழுக்கு மிதக்கும்
நடைபாதையில்
தன்னந் தனியாய்
மல்லாந்து படுத்து
நிலவைப் பார்த்து
சிரித்தும் அழுதும்
தன் அந்தரங்கக்
கதைகளை சொல்லும்
மனநலமற்ற
இளம் பெண்ணின்
மனக் குறிப்புகளை
கவனமாகக்
கேட்கிறது நிலா...

Tuesday, December 13, 2011

ஒரு உண்ணாவிரத மேடையில் - திண்ணை இதழில் வெளியான கவிதை

ஒரு உண்ணாவிரத மேடையில்
குமரி எஸ். நீலகண்டன்

மரண தண்டனையை
எதிர்த்தும் மனித
உரிமைகளுக்காகவும்
உண்ணாவிரதமிருந்தான்
அவன்.

எந்த உயிரைக்
கொல்வதற்கும்
மனிதனுக்கு உரிமை
இல்லையென்றே
முழங்கினான்.

அவனைக் கடித்துக்
கொண்டே இருந்த
கொசுக்களை
அடித்து அடித்து
இதையெல்லாம்
சொல்ல வேண்டி
இருக்கிறது அவனுக்கு.

Tuesday, December 6, 2011

புள்ளிக் கோலங்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

புள்ளிக் கோலங்கள்
குமரி எஸ். நீலகண்டன்

அரைப் புள்ளிகள்
இணைந்த போது
ஒரு புள்ளியின்
கரு உருவானது.

இருட்டில் வளர்ந்து
ஒரு நாள்
வெளிச்சத்திற்கு
வந்த போது
அதற்கெல்லாமே
ஆச்சரியக் குறியாய்
இருந்தது.

கால் நிமிர்ந்தபோது
காற் புள்ளியானது.

கேள்விக் குறிகளோடு
உலகைக் கற்றுக்
கொண்டே வந்தது.

காலங்கள்
செல்லச் செல்ல
காற்புள்ளி
அரைப் புள்ளியாயிற்று.

மேலானவர்களின்
மேற்கோள் குறிகளுடன்
மேலாக வளர்ந்த அது
முக்காற்புள்ளியாய்
முதுமையை எட்டிற்று.

முகமெங்கும்
வரை கோலங்களுடன்
முதுகு வளைந்து
பணிவுடன் ...
முழுப் புள்ளியான
முற்றுப் புள்ளியை
எதிர்நோக்கி
இருக்கிறது
முக்காற்புள்ளி. 

Tuesday, November 29, 2011

மரம் பெய்யும் மழை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

மரம் பெய்யும் மழை
குமரி எஸ். நீலகண்டன்

மழை பெய்யத்
தொடங்கியதும்
மரம் பெய்யவில்லை
மழையை...

மழை நின்று
வெகு நேரமாகியும்
மரம் பெய்து
கொண்டே இருக்கிறது
மழையை பெரிய
பெரியத் துளிகளுடன்.

பூப்பெய்த மரங்கள்
பூ பெய்கின்றன
மழையோடு.
பூப்பெய்தாத மரங்கள்
இலைகளைப் போட்டு
விளையாடுகின்றன
போகும் நீரில்..

Monday, November 21, 2011

நிலவும் குதிரையும் - திண்ணை இதழில் வெளியான கவிதை


நிலாவும் குதிரையும்
குமரி எஸ். நீலகண்டன்
பரந்த பசும் வெளியில்
பாய்ந்து சென்றது
ஒரு குதிரை
தன்னந்தனியாய்.

ஆடுகள் மாடுகள்
ஆங்காங்கு மேய்ந்திருக்க
இறுமாப்புடன்
வானம் நோக்கியது.

வட்ட நிலாவைக் கண்டு
அழகிய இளவரசி
தன்மேல்
சவாரி செய்வதாய்
நினைத்துக் கொண்டது.

முதுகில் இருப்பதாய்
கூடத் தெரியவில்லை...
எவ்வளவு
மெல்லிய உடலுடன்
என் மேல் சவாரி
செய்கிறாளென
இன்னும் குதூகலமாய்
குதித்து குதித்து
பறந்தது.

அங்கே ஒரு அழகிய
தாமரைக் குளம் வந்தது.
குளத்தில் நிலாவைக்
கண்டதும்
அதிர்ந்து போனது.

தான் துள்ளிக்
குதித்ததில்
இளவரசி குளத்தில்
விழுந்ததாய் எண்ணி
சோகமாய் குனிந்து
நிலாவைக் கரையேற்ற
இயன்றவரை முயன்றும்
இயலாமல் சோகமாய்
குனிந்து மெதுவாய்
ஒரு மேடு
நோக்கி நடந்தது.

திடீரென வானத்தைப்
பார்த்த போது
நிலாவைப் பார்த்து
இளவரசி மீண்டும்
முதுகில் ஏறி
விட்டதாய் எண்ணி
இனி விழாத
அதிக சிரத்தையுடன்
ஆடி அசைந்து
இன்னும் இறுமாப்பாய்
பயணித்து
கொண்டிருந்தது
பரவசக் குதிரை.

Tuesday, November 15, 2011

நிலா அதிசயங்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை


நிலா அதிசயங்கள்
குமரி எஸ். நீலகண்டன்
அலை கடலில்
நீராடி வானமேறியது
வண்ண நிலா.

மங்கலப் பெண்ணாய்
மஞ்சள் முகத்தில்
ஆயிரமாயிரம்
வெள்ளிக் கரங்களால்
அழகழகான மலர்களை
அணு அணுவாய்
தொட்டு நுகர்ந்தது.

தாமரை மலர்களை
எல்லாம் தடவித்
தடவி தடாகங்களில்
மிதந்து களித்தது.

பழங்களையெல்லாம்
மரத்திலிருந்து
பறிக்காமல் சுவைத்தது.

நிலவின் சுமையில்
மலர்களில் இதழ்கள்
உதிரவில்லை.
மணங்களை மலர்கள்
இழக்கவில்லை.

நிலவு சுட்டப்
பழங்கள் நிறம்
மாறவில்லை.
கோடி கோடி
மைல்களென
அன்றாடம் அலையும்
நிலாவிற்கு அணுவளவும்
களைப்பில்லை.

Tuesday, November 8, 2011

காணாமல் போனவர்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை


காணாமல் போனவர்கள்
குமரி எஸ். நீலகண்டன்
மரத்தில்
தன்னந்தனியாய்
அழகான
ஒரு பறவையைப்
பார்த்தேன்.
முகமலர அதோடு
ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்த
நிலவையும் பார்த்தேன்.


எதிர்பாராமல்
ஒரு மின்னல்
கிழித்த துணியாய்
மேகத்தை கிழிக்க...


பேரிடி முழங்கியது.
பெருமழை பெய்தது.
பேசிக் கொண்டிருந்த
பறவையையும்
காணவில்லை.
நிலவையும்
காணவில்லை.
எங்கே போனதோ
அவைகள்.