This Blog
Linked From Here
The Web
5.9.10
தாத்தா தந்த கடிகாரம்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்
Posted on 17 August 2010
குமரி எஸ். நீலகண்டன்
திசைகள்
இரண்டானாலும்
தசைகள் ஒன்று.
ஒருவர் பின்
போனால்தான்
இருவர் முன்
போக முடியும்.
இடையே பாவம்
இரண்டின் கன்று.
குமரி எஸ். நீலகண்டன்
பற்றுதலுக்குப்
பிடிபடாமல் எல்லாமே
கை நழுவி விடுகிறது.
விழுந்ததில் உடையாத
சிலவற்றை
வழிப்போக்கர்கள்
எடுத்துச் சென்றார்கள்.
உடைந்தவற்றில்
ஒரு பகுதி
குப்பைத் தொட்டிக்குச்
சென்றிருக்க வேண்டும்.
உடைசல்களின்
எஞ்சிய குவியல்களை
ஒன்று சேர்க்கப் பார்க்கிறேன்
கைக்கு லாகவமாய்ப்
பற்றிக் கொள்ள.
பொருளுக்கேற்றாற் போல்
கைகள் வேண்டும்
பற்றிக்கொள்ள.
குமரி எஸ். நீலகண்டன்
எனக்குச் சுதந்திரம் வேண்டும்.
ஆனால்
எல்லோரும்
நான் சொல்வதையே
கேட்க வேண்டும்.
எல்லோரும் உழைக்க வேண்டும்.
ஆனால்
எனக்கு வியர்வை ஒவ்வாது.
உதவும் மனதே
உலகை உயர்த்தும்.
எல்லோரும் எனக்கு
உதவுங்கள்.
பாவம்! அவனுக்கு
ஏதாவது கொடுங்கள்!
என்னிடம் மட்டும்
எதுவும் கேட்காதீர்கள்.
உனக்காக உயிரையே
கொடுப்பேன்.
உறுதியாக வாக்கு
தருகிறேன்.
என்னிடம் ஒரு பலஹீனம்
வாக்குறுதிகள் மட்டும்
என் நினைவில்
இருப்பதே இல்லை.
| ஃபீல்டு மார்ஷல் மானெக்சா | ||||||||||
| | ||||||||||
| |
| | ஆசிரியர்: குமரி சு.நீலகண்டன் வெளியீடு: விகடன் பிரசுரம் பகுதி: வாழ்க்கை வரலாறு ISBN எண்: 978-81-8476-139-9 மொத்த பார்வையாளர்கள்: 125 Views விலை: ரூ. 45 அண்டை நாடுகள் பலவற்றிலும், ராணுவ ஆட்சியும் சர்வாதிகார அடக்குமுறையும் இருந்தாலும், எவ்வளவோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாரம்பரியம் மிக்க பாரத நாடு இன்றும் வலுவான ஜனநாயகத்தைக் கொண்டிருக்கிறது. சுதந்திரப் போக்கும் மக்களாட்சியும் இன்றும் உலக நாடுகள் நம் நாட்டை வியந்து பார்க்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிலைக்குக் காரணமாக இருப்பவர்களில் முக்கியமானவர்கள், நம் ராணுவ உயரதிகாரிகள் _ குறிப்பாக மானெக்ஷா போன்றவர்கள். பார்ஸி இனத்தைச் சேர்ந்த அமிர்தசரஸில் பிறந்து, நம் தமிழகத்தின் குன்னூரை அதிகம் நேசித்த ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷாவின் மறைவு, உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்தியா சந்தித்த மூன்று போர்களுக்கு சாட்சியாக இருந்தவர் மானெக்ஷா. அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களில் சில சுவாரஸ்யங்கள் இந்த நூலில் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்திரா காந்திக்கும் மானெக்ஷாவுக்கும் இடையில் நிலவிய புரிந்துணர்வு, எப்படி நம் நாட்டை வலுவான நாடாகத் திகழ வைத்தது என்பதை இந்த நூலில் அழகாகக் காட்டியுள்ளார் நூலாசிரியர் குமரி சு.நீலகண்டன். இந்திராகாந்தியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, மானெக்ஷா இந்தியாவில் ராணுவ ஆட்சியை நிறுவி விடுவார் என்று புரளி கிளப்பப்பட்ட போது, மானெக்ஷாவிடம் நேரிலேயே அதைக் கேட்டுவிட்டார் இந்திராகாந்தி. அதற்கு மானெக்ஷா சொன்ன பதில், நகைச்சுவையானது மட்டுமல்ல; இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிக்காட்டுவதாகவும் அமைந்தது. அது என்ன என்பதை இந்த நூலில் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம். நகைச்சுவை உணர்வு மிகுந்த மானெக்ஷா, நெருக்கடியான தருணங்களை எப்படி எதிர்கொண்டார் என்பதையும், ராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடன் கலந்து பழகிய விதத்தையும் இந்த நூலில் படிக்கும்போது, உண்மையில் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை நன்கு அறிய முடியும். | |||||||
வெகு நாட்களுக்கு முன் நாகர்கோவில் செல்லும் வழியில் மணிமேடை சந்திப்பில் காலை வேளையில் அவ் வழியாகச் செல்லும்போது அங்குள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் கூடைகூடையாக ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இறங்கும். பழங்களெல்லாம் பாதுகாப்பாய் வைக்கோலால் பொதியப்பட்டிருக்கும். மொத்த விற்பனையாளர் அந்தப் பழங்களை இறக்கி, சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகித்துக் கொண்டிருப்பார்.
அன்று நாம் பார்த்த பழங்கள் மெருகு குலையாதவை. இன்றைய பழங்கள் மெழுகு குலையாதவை. அறிவியலும் தொழில்நுட்பமும் நன்மையோடு தீமையையும் செய்து கொண்டிருக்கின்றன.
இன்று பழம் விளைகிற ஊரில் பழத்தை வாங்க முடியாத அளவுக்கு விலை. விளைகிற ஊரிலிருந்து பழங்கள் வாகனங்கள், ரயில், விமானமென ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக் கடந்து உலகின் எந்த மூலைக்கோ பயணப்படுகிறது.
வழக்கமாக அமெரிக்கா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு, டிராகன், கிவி போன்ற பழங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.
அந்தப் பழம் கெட்டுப் போகாமல் அது பயணப்படும் காலத்தையும் கால நிலையையும் தாங்கிக் கொள்ளும் விதமாக அது பதப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பார்க்கப் பளபளப்பாக இருக்கும் விலை உயர்ந்த ஆப்பிள் பழங்கள் ரசாயன மெழுகால் பூசப்பட்டு பொதியப்பட்டவை. கையால் அப்பழத்தைச் சுரண்டிப் பார்த்தாலே அந்தப் பழத்திலிருந்து மெழுகு உதிர்வதைக் காணலாம்.
பெரும்பாலானவர்கள் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களின் பளபளப்பில் அதுவே தரமான ஆப்பிளாகக் கருதி அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். அந்த ஆப்பிள் பழத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு இயற்கைத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட உண்ணத் தகுந்தவையா, ரசாயனப் பூச்சா என யாராலும் பகுத்தறிய இயல்வதில்லை.
ரசாயனப் பூச்சு மெழுகும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்த முறையான ஆய்வும் இல்லை. மக்களுக்கும் அது குறித்த போதுமான விழிப்புணர்வும் இல்லை.
பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.
இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் தூரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.
மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள்.
நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர்.
சுத்தப்படுத்தப்பட்ட மெழுகானது சுவையற்றது, மணமற்றது, விஷமற்றது. ஆனால், இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கே உரிய மெழுகைத்தான் இந்த வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை.
பழங்களுக்கு மெழுகு பூச்சிடுவதால் வணிகர்களுக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மெழுகிடுவதால் பழங்களின் எடைக்குறைவைத் தவிர்க்க இயலும்.
பளபளப்பான தோற்றம், பழத்தின் இளமையைக் கூட்டுதல், பழத்தின் நீர்மம் ஆவியாகாமலும் பழம் சுருங்கிவிடாமலும் தடுத்தல், பழத்தின் பருமனைப் பெருக்கிக் காட்டுதல், பூச்சிகளிலிருந்தும் மற்ற காரணங்களாலும் பழம் பழுதடையாமல் காத்தல் என பல அம்சங்கள் அவர்களை இந்த மெழுகிடும் வேலையைச் செய்விக்கின்றன.
உடலுக்குக் கெடுதல் விளைவிக்காத பூச்சிடத்தகுந்த சாதனங்கள் விலை அதிகமானவை. அதனால் தரங்குறைந்த மெழுகுகளால் மெழுகப்பட்ட பழங்கள் பல பெரிய நிறுவனங்களின் அலமாரிகளை பளபளப்புடன் அலங்கரிக்கின்றன. அந்தப் பழங்களுக்கு மெழுகோடு ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பெயர்களும் பெருமையுடன் சூட்டப்படுகின்றன.
மெழுகிடப்பட்ட இந்தப் பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு தொடர்புடைய நோய்களுக்கு வழிவகுப்பதோடு, புற்று நோய்க்குக்கூடக் காரணமாகிவிடும் என்ற மக்களின் அச்சத்துக்கு வலுவான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இன்னொரு பக்கம் கார்பைடு கற்களால் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்கப்படுகின்றன. பணமே முக்கியமாகிவிட்டது. நாட்டின் ஆரோக்கியத்தைப் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை.
அந்தந்த ஊரில் விளையும் கொய்யா, மாங்காய், பப்பாளி, வாழை, திராட்சை போன்றவற்றிலேயே நமது ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. அதைப் பறித்த குறைந்த கால அளவுக்குள் அந்தந்த ஊர் மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் உட்கொள்ளலாம்.
பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமிலவாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம்.
சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தைவிட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும் சீர்கெட்டு வருகிறதாம்.
ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம்.
இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.
இந்நிலையில் நாகரிக உலகத்தைப் பார்த்து ஆப்பிளும் மெழுகைப்பூசி தன் அழகை மெருகேற்றிக் கொண்டதோ?
the other bank is always green.though everyone knows this all erring by not realising fault.god gives through nature all what we need in everyones area.if people eat what they get in their ares money,health,nature all will be saved along with their life longevity.
கறுப்பு நாய் எசமானரின் முகத்தைக் காணும் ஆவலில் கண்ணீர் மல்க நின்றது. திடீரென எங்கிருந்தோ அங்கு ஓடி வந்த பொமரேனியன், கறுப்பு நாயின் அருகில் வந்து சோகத்துடன் அதன் கண்ணீரை நக்கிக் கொண்டிருந்தது.
| இந்த வேம்புகள் கசப்பதில்லை | ||||
| ||||
எதிர்வீட்டுக்காரர் அவர் வீட்டு மரத்தை வெட்டப் போகிறார், அவ்வளவுதான். ஆனால் இந்தச் செய்தி விஸ்வநாதனுள் ஒரு தாங்க முடியாத துயரச்சூழலைப் பரவ விட்டு விட்டது. மற்றவர்களைப் பொறுத்தவரை, நாளை வெட்டப் போகும் அந்த மரம் கசந்த இலைகளைக் கொண்ட ஒரு சாதாரண வேப்ப மரமாக இருக்கலாம். ஆனால் விஸ்வநாதனுக்கு, அது அவரைப் போல் நரைத்த தலை, மூளை, இதயம், கை, கால், நரம்பு, ரத்தம் கொண்ட ஒரு மாமனிதரின் உயிர். இவர் வீட்டின் முன்பு நீளமாய் விரித்த விரிப்பாக அமைந்தது ஒரு கறுப்பு தார் சாலை. அதைக்கடந்து எதிர் வீட்டு வளாகத்தில் நெடிதாய் வளர்ந்த அந்த வேப்ப மரத்தோடு அன்றாடம் இவர் வீட்டிலிருந்தபடியே பேசிக் கொண்டேதான் இருக்கிறார். அவரின் நெருங்கிய நண்பரான அப்துல்லா அல்லவா அந்த மரம் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். ஒரே மாதிரி சாயலில் ஒரே நிறத்தில் ஒரே நடை அசைவில் பிரித்தறிய இயலாத அளவிற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதே மாதிரிதான் இந்த இரட்டை மரங்களும். விஸ்வநாதன் வீட்டு முன்புள்ள சாலையில் நின்று பார்த்தால் தெரியும். விஸ்வநாதன் வீட்டு வேப்ப மரமும் எதிர்வீட்டு வேப்ப மரமும் ஒரே மாதிரியாக இருக்கும். சாலையில் செல்லும் மனிதர்களின் கவனத்தை திருப்பும் அளவிற்கு அதனுருவங்களும் அசைவுகளும் ஒத்திருக்கும். இரண்டு மரங்களுக்கும் ஒரு மாத வயது வித்தியாசம். விஸ்வநாதனுக்கும், எதிர்வீட்டில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு இருந்த அப்துல்லாவிற்கும் ஒரு மாத வயது வித்தியாசம். அப்துல்லா..... விஸ்வநாதன் நட்பு தெய்வீகமானது... 'அனபு' என்னும் கடவுளால் அரவணைக்கப்பட்டது. அப்துல்லா வீடு தேடி நாகர்கோவில் நகரம் முழுக்க அலைந்து கொண்டிருந்தார். அப்போது நகரத்தின் வெளிப்புறத்தில் ஒரு காலனியில் ஆள் அரவமற்ற பகுதியில் ஒரு 45 வயதுமிக்க மனிதர் மயக்கமுற்றுக் கிடந்தார். அப்துல்லா அவசரமாய்த் தன் மிதிவண்டியை மிதித்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் அவரை மருத்துவமனை கொண்டு சென்றார். உரிய சிகிச்சைக்குப் பின் அவர் நினைவு பெற அவர் 'விஸ்வநாதனா'க அப்துல்லாவுக்கு அறிமுகமானார். விஸ்வநாதன் அப்துல்லாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்துல்லா வீடு தேடும் விபரமறிந்த விஸ்வநாதன் தன் எதிர் வீடு காலியாகும் விபரம் கூற அவர் எதிர் வீட்டிலேயே குடி அமர்ந்தார். அட! எதிர் வீடு என்றதும் ஏதோ ஒரு நபரின் வீடல்ல அது... அதுவும் விஸ்வநாதனுக்குச் சொந்தமான வீடுதான். இருவரது எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் இருந்ததால் குறைந்த கால அளவில் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். அப்துல்லாவிற்கு விஸ்வநாதன் ஒரு நண்பரென்றால் வேப்பமரம் இன்னொரு நண்பர். "இயற்கை வைத்தியத்தில் எனக்கு பைத்தியம்" என்பார் அப்துல்லா அடிக்கடி. அந்த அளவிற்கு இயற்கை மருத்துவத்தில் அவருக்கு ஈடுபாடு. அதிலும் குறிப்பாக 'வேப்பமரம்' அப்துல்லாவிற்கு மிகவும் பிடித்தமானது. அதன் இலை, தழை, பட்டையென பெரும்பாலான நேரமும் அதைப்பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். ஒரு சமயம் விஸ்வநாதனின் பேரக்குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். அவரின் குழந்தையின் காலில் வந்த சிரங்கு குரங்காய் உடம்பு முழுவதும் தாவிக் கொண்டிருந்தபோது ஆங்கில வைத்தியத்தில் வீட்டில் பல ஆயின்மென்ட் கூடுகள்தான் கூடின. சிரங்கு மீண்டும் மீண்டும் சீண்டிக் கொண்டிருக்க அப்துல்லாவின் வேப்பிலை வைத்தியத்தில் நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைத்தது. விஸ்வநாதன் கொசுத்தொல்லை பற்றிக் கூற 'வேப்பங்காற்றிற்கு கொசு வராது' என அப்துல்லா 'வேப்பம்பா' பாடுவார். விஸ்வநாதனின் பிறந்தநாளைத் தெரிந்து கொண்ட அப்துல்லா அன்று அவருடைய பரிசாய் விஸ்வநாதன் வீட்டு முற்றத்தில் வேப்பமரத்திற்கு வித்திட்டார். ஒருமாதம் கழித்து அப்துல்லாவின் பிறந்த நாள் வந்தது. அதேபோல் அவருடைய வீட்டில் விஸ்வநாதனும் இன்னொரு வேப்பமரத்திற்கு வித்திட்டார். இரண்டு வேப்பமரங்களும் ஒரு மாத வித்தியாசமிருந்தும் உருவத்தில் அதிக வித்தியாசமின்றி நட்போடு வளர்ந்தன. அந்தப் பக்கமாய் இருக்கும் பெரிய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கெல்லாம் இந்த மரங்களைச் சொல்லி அடையாளம் சொல்லும் அளவிற்குப் பெயர் பெற்றன அவை. வீட்டு வளாகத்தைவிட்டு அதன் கிளைகள் வெளிக்கிளம்பி சாலை பாதசாரிகளுக்கும் நிழல் தந்தன. சாலையில் செல்வோருக்கு எதிர் வீடுகளில் இரண்டு ஒரே மாதிரி மரங்கள் எப்போதும் "சல சல" வெனப் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும். இந்த இரண்டு மரத்தடிகளில்தான் விஸ்வநாதனும் அப்துல்லாவும் பெரும்பாலான நேரங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த இரண்டு மரங்களின் காற்றுகளிலும் இவர்களது கருத்துகளே நிறைந்திருக்கும். விஸ்வநாதன் அடிக்கடி சொல்வார்... "உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை. உலகத்திலே எல்லோரும் எல்லோரையும் நேசிக்கணும். யாருக்கும் எந்த சுயநலமும் இருக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தரை அன்பு செலுத்தறதுங்கறது லட்சிய வெறியா இருக்கணும். உயர்வு தாழ்வு இல்லாம எல்லாத்துக்கும் உதவி பண்ணனும்." இப்படியே அப்துல்லாவும் விஸ்வநாதனும் பேசிக்கொண்டிருப்பார்கள். இப்படி வளர்ந்த இந்த வேப்பமரங்களுக்கு ஒரு தருணத்தில் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்துவிட்டது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'காகங்கள்' என்ற இலக்கியக் கூட்டத்தை இந்த மரத்தடிகளில் நடத்தி இருக்கிறார். விஸ்வநாதன் ஒரு பெரிய ஆசாரமான குடும்பத்தின் வாரிசாய் இருந்தும் எல்லோரிடமும் சாதி மத பேதமின்றி பழகுவார். ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற ஏழை நோயாளிகளைத் தொட்டு சேவை செய்வார். சாதி, மத பேதமற்ற அவரின் ஸ்பரிசமே அவரை அவர்களுள் ஒரு வித்தியாசமான மனிதராக அடையாளம் காட்டியது. அப்துல்லா - விஸ்வநாதனின் நட்பு உருவானபின் இந்த சேவை இன்னும் பேறு பெற்றது. இலை, செடி, கொடி, காய், கனி என இயற்கையே கடவுளாக அவர்களுக்குப் பட்டது. எல்லா உயிர்களின் இயக்கமே கலை அம்சமாகத் தெரிந்தது. தடங்கலில்லாது அந்த உயிர்களின் இயக்கத்திற்கு சேவை செய்வதில் தன் நிறைவு கண்டார்கள் அவர்கள். உலகமே கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை, சிகப்பு என வண்ணமயமாய் இருந்தாலும் எல்லாம் ஒரே மண்ணிற்குச் சொந்தமானவை. விஸ்வநாதன் - அப்துல்லா உறவு சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை பாசம் மிகுந்ததாகக் கருதப்படும். ஆனால் நிஜத்தில் அது 'பாசம்' என்ற சுயநல கயிற்றால் பிணைக்கப்படாத அதற்கு அப்பாற்பட்ட உயர்வான உறவாகும். திடீரென அப்துல்லாவிற்குப் பணி நிமித்தமாக டெல்லிக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. விஸ்வநாதனுக்கும், அப்துல்லாவிற்கும் மிகப்பெரிய வருத்தமாகத்தான் இருந்தது. இயல்பான நடைமுறைகளை ஏற்று எதிர்கொள்வதே வாழ்க்கை என்பதில் இருவருக்கும் அதிக நம்பிக்கை உண்டு. அதனால் அப்துல்லா வீட்டைக் காலி செய்துவிட்டுக் குடும்பத்தோடு டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றார். ஆனால் விஸ்வநாதனுக்கோ, அவருடைய நினைவுகள் அவர் வீட்டு வளாகத்து வேப்பமரத்தில் இலைகளாய், காய்களாய், கனிகளாய் கனிந்து தொங்கின. வேப்பமரம் அவருக்கு வேப்பமரமாகத் தெரியவில்லை. அரைநரையோடு புன்முறுவல் கொண்ட ஆரோக்கியமான அப்துல்லாவாகவே தெரிந்தது. வீட்டுக்குள் போகாமல் வெளி இடங்கள் சுற்றாமல் தூங்காமல் நிமிர்ந்து நின்று பேசிக் கொண்டிருக்கும் அப்துல்லாவாகவே தெரிந்தது. காற்றில் மரம் ஆடி அசையும்போது அப்துல்லா கை அசைத்து அசைத்துப் பேசுவதாகவே விஸ்வநாதனுக்குத் தெரிந்தது. அவரின் கொள்கைகள், நடைமுறைகள், அன்பு அனைத்துமே அந்த மரத்துள் ஆழமாய்ப் பதிந்திருந்த்து. அத்தோடு அப்துல்லாவிற்கும் விஸ்வநாதனுக்கும் கடிதத் தொடர்பு அவ்வப்போது இருந்தது. எதிர்பாராமல் ஒருநாள் அப்துல்லாவின் இறப்புச் செய்தியும் வந்தது. விஸ்வநாதன் குடும்பத்திற்குப் பெரிய துயரமாகவே இருந்தது. குடும்பமே புதுடெல்லி சென்று வந்தது. ஆனாலும் அப்துல்லா அந்த இரட்டை வேப்பமரங்களில் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார். அப்துல்லாவின் நினைவுதினத்தில் அங்கு சர்வமதப் பாடல்கள் பாடப்பட்டன. அந்த இரட்டை வேப்பமரங்களில் சில நேரங்களில் கிளிகள், வெளிநாட்டுப் பறவைகள் கொஞ்சிக் குலாவும்போது விஸ்வநாதனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மகளின் திருமணத்தின்போது எதிர்வீட்டுமனையை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் விஸ்வநாதனுக்கு வந்தது. அந்த வேப்பமரத்தை மட்டும் வெட்டக்கூடாது என்ற நிபந்தனையை வேண்டுதலாய்த் தந்து ஓரு தூரத்து உறவினருக்கே விற்றும் விட்டார். ஆனால் சில மாதங்களுக்குள் எதிர் வீட்டு வேப்பமரம் வெட்டப்படும் செய்தி விஸ்வநாதனை எட்டியது. துடித்தே போய்விட்டார். எதிர்வீட்டு உறவினரிடம் எவ்வளவோ கெஞ்சினார். அவர்களுக்கு அது கேலிக்குரியதாகவே இருந்தது. ''இவருக்கென்ன பைத்தியமா.... ஒரு மரத்தை வெட்டறதுக்கு இவ்வளவு அழறாரு'' என்றார்கள். விஸ்வநாதனுக்கு அது ஒரு பேரிழப்பாய் தெரிந்தது. விஸ்வநாதனின் பேத்தி கூட தாத்தாவை சமாதானப்படுத்தினாள். "கவலைப்படாதீங்க தாத்தா! அந்த வெட்டப்போற மரத்திலே இருந்து ஒரு கொட்டையை எடுத்து நம்ம வீட்டிலே நட்டு மரமாக்கிடலாம்." விஸ்வநாதன் நிதானமிழந்து நிலை குலைந்து நின்றார். அன்றிரவு இடிமழையோடு ஒரு பயங்கர சப்தம்... எதிர்வீட்டுக்காரர்கள் என்னவோ ஏதோவென்று எட்டிக் கதவைத் திறக்க அங்கு 'பிரேக்' இழந்த ஒரு லாரி அதிவேகமாய் வீட்டு வெளிச்சுவரைத் தகர்த்து அந்த மரத்தில் இடித்து நின்றது. அந்தக் குடும்பமே அந்த மரத்தால் காப்பாற்றப்பட்ட நம்பிக்கையில் அந்த மரத்திற்காக எழுதப்பட்ட 'மரண உத்தரவு' தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அந்தப் பகுதியில் இரட்டை மரங்களின் சலசலப்பு விஸ்வநாதனோடு அளவளாவிக் கொண்டிருந்தது. அதில் விஸ்வநாதனுக்கு அந்தக் குடும்பத்தையும் அப்துல்லாவையும் காப்பாற்றிய மகிழ்ச்சி மணம் பரப்பி நின்றது. உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com | ||||
Tags: குமரி எஸ். நீலகண்டன்
குமரி எஸ்.நீலகண்டன்
இழப்பை இருப்பும்
இருப்பை இழப்பும்
துரத்திக்கொண்டே
இருக்கின்றன.
சிலர் இருப்பது
இழப்பை
ஈடுகட்டவே..
பல இழப்புகளால்
உருவானவையே
சில இருப்புகள்.
இழந்தவை எல்லாம்
எங்கோ
இருந்துகொண்டிருக்கின்றன.
இருப்பவையெல்லாம்
யாரோ இழந்தவையாக
இருக்கலாம்.
இருப்பும் இழப்பும்
சதா இடம் பெயர்ந்துகொண்டே
இருக்கின்றன.
ஒளி
இருட்டை இழப்பதும்
இருட்டு
ஒளியை இழப்பதும்
எதார்த்தம்.
இழந்த ஒளியால்
வீட்டை நிரப்பலாம்
வாசல் திறந்து….
Saturday June 26, 2010
ஹெல்மெட்டின் பாதுகாப்பு
அருகே பிளாட்ஃபார்மில்
உடைந்து கிடந்த
அந்த ஹெல்மெட்
ஏதோ ஒன்றை சொல்கிறது..
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாய்
புரிந்து கொள்கிறார்கள்.
அதைப் பார்த்த கவிஞன்
மூளை இல்லாத
ஏதோ ஒருவனின் தலையை
இந்த ஹெல்மெட் பாவம்
இத்தனை நாள்
பாதுகாத்திருக்கிறது என்று
சொல்லிப் போனான்.
ஒரு பெரியவர்
பொறுப்பில்லாத மனிதன்
குப்பைப் பெட்டிக்கு
வெளியே போட்டதை
உள்ளே போட்டுச்
செல்லக் கூடாதா
என்று அங்கலாய்த்தார்.
தரமற்ற ஹெல்மெட்
தலை நொறுங்கி கிடக்கிறது.
ஹெல்மெட்டின்
சொந்தக் காரன் தலை
தப்பி இருக்குமோ
என்னவோ என
கவலைப் பட்டுப் போனான்
இன்னொருவன்.
கருமி ஒருவன் வாங்கிய
விலை குறைந்த
ஹெல்மெட் என
இன்னொருவன்
சொல்லிப் போனான்.
அதோ உடைஞ்சு கிடக்குதே
அதே வண்ணத்தில்தான்
நான் உங்களிடம்
சேலை வாங்கச் சொன்னேன்
என்று தர்க்கித்தாள்
அந்த வழியாய் சென்ற
அவனிடம் அவள் மனைவி.
இந்த உடைந்த
ஹெல்மெட்டை
சிலையாய் இங்கே
நிறுவ வேண்டும்.
அப்படி வைத்தால்
வேகப்ரியர்களின்
உயிர் தாகம் அடங்க
எச்சரிக்கையாய்
இருக்கும் என்றார்
ஒரு போலிஸ்காரர்.
பல வருடங்களுக்கு முன்பு
தலை கவசம் அணியாமல்
விபத்தில் சிக்கி
உயிரிழந்த தன்
கணவனின் நினைவில்
கண்களில் பொங்கிய
கண்ணீரை துடைத்து
விட்டுச் சென்றாள்
இன்னொரு பெண்.
ஹெல்மெட் அணிந்தும்
முகமூடி கொள்ளையர்கள்
கொள்ளை அடிக்கிறார்களாம்
என்று பைக்கின்
பின்னால் இருந்தவன்
முன்னால் இருந்தவனிடம்
சொல்லிப் போனான்.
அது வாகன
ஓட்டிகளுக்கு மட்டுமல்ல
திருடர்களுக்கும்
பாது காப்பானது.
சாலையில்
இன்னொரு பக்கம்
கண்ணாடித் துண்டுகள்
சிதறி கிடக்க ஒரு சிறுவன்
அந்த ஹெல்மெட்டை எடுத்து
அதை மூடி வைத்துப் போனான்
குமரி எஸ். நீலகண்டன்
Saturday August 7, 2010
குமரி எஸ். நீலகண்டன்வழியெங்கும் சிதறி சின்னாபின்னமான சர வெடியின் சிகப்பு காகிதச் சிதறல்கள்.
புகழின் வாசத்தை வசமாக்கியும், கால்களில் மிதிபட்டும் ஆங்காங்கு சிதறிய மலர்களின் இதழ்கள்.
நடந்து சென்றவர்களின் காதுகளும் வாய்களும் ஈனக் குரலில் எதையோப் பரிமாறிக் கொண்டன.
சிலர் இறந்தவனை உயிர்ப்பித்து துப்பியும் துடைத்தும் விட்டார்கள்.
இறந்தவனைக் குத்த கத்தியுடன் திரிந்தவன் ஆசை தீர குத்தி மகிழ்ந்தான்.
ஊதுகிற சங்கு எதையோ ஓதுகிறது
சிந்திய மலர்களிலிருந்து சிந்தனையைப் பிராண்டும் ஒரு வாசனை.
இவை எதையும் பார்க்காமல், எதையும் கேட்காமல், எதையும் எண்ணாமல், எதுவும் கூறாமல் அமைதியாய் சென்றான் அந்த ஊர்வலத்தின் கதா நாயகன். குமரி எஸ். நீலகண்டன் Copyright:thinnai.com |
Sunday July 18, 2010
முகத்தினைத் தேடி
நீ பார்க்கும் என் முகம்
என்னுடையது அல்ல.
நீ நேற்று பார்த்த
என் முகமும்
என்னுடையது அல்ல.
நீ பார்த்த
அந்த முகம்
என்னுள் நீ உருவாக்கிய
உன்னுடைய முகம்.
சிரித்தாய் சிரித்தேன்.
அழுதாய் அழுதேன்.
கோபப் பட்டாய்
நானும் கோபப் பட்டேன்
நான் உன்னிடம்
பேசிய வார்த்தைகள்
என்னுள் உன் முகம்
உன்னிடமே பேசியவை.
எங்கோ இருக்கும்
என் முகம்
உனக்குத் தெரிவதில்லை.
எனக்கும் ஒரு சிலருக்குமே
பார்க்க இயன்ற
என் முகத்தை
உனக்குப் பார்க்க
வேண்டுமா?
முதலில்
உன் முகத்தைக்
கண்ணாடியில் பார்.
குமரி எஸ். நீலகண்டன்


