Saturday, January 15, 2011

போகியும் பொங்கலும்

எல்லோருக்கும் என் உளம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

போகியும் பொங்கலும்
குமரி எஸ். நீலகண்டன்

பழைய துணி...
பழைய பாத்திரம்,
அரிவாள் மணை, கத்தி,
பழைய தலையணை,
விளையாட்டுப் பொருட்கள்,
கிரிக்கெட் மட்டை,
காகிதங்களென  அத்தோடு
பழைய நட்பு பகையென
பயன்படாதவைகளெயெல்லாம்
பழையதென
எரிந்தும் எறிந்தும் 


புது பாத்திரங்களுடன்
புதிய பொருட்களுடன்
புதுப் புது நண்பர்களுடன் ....
வாழ்த்துக்களுடன்
பொங்கலொ பொங்கலென்று
பொங்கிய பொங்கலின் புகையில்
பழைய நண்பரின்
கண்களில் நீர் ததும்ப
ல்

Monday, January 10, 2011

தாத்தாவும் பேரனும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

தாத்தாவும் பேரனும்
குமரி எஸ். நீலகண்டன்

தாத்தாவின் பிள்ளைக்கு
குழந்தை பிறந்திருக்கிறது.
கொஞ்ச நாளாய்
தாத்தாவிற்கு பேச
எந்த தோழர்களும்
தேவையில்லை...

தாத்தாவும் பேரனும்
ஏதேதோ பேசிக்
கொள்கிறார்கள்..
யாருக்கும் புரியவில்லை
அவர்களின் ரகசியங்கள்.

அழுகிறப் பேரனிடம்
தாத்தாய் அழகழகாய்
ஏதோ சொல்லிக்
கொடுக்கிறார்...

வாயில் பாட்டும்
கையில் கிலுக்குமாய்
கல கலப்பாய்
தாத்தாவின் ஆட்டம்.

குழந்தை கையை
அசைக்கிற போதும்
கால்களை ஆட்டி
இசைக்கிற போதும்
சாடையாய் கூடி நிற்கிற
முகத்தின் ஓசையில்
தாத்தா இப்போது
அவரது தாத்தாவின்
மடியினில்
கைகளையும் கால்களையும்
அசைத்து அசைத்து
ஏதோ சொல்லிக்
கொண்டிருக்கிறார்.


உலகம் திரும்பி
சுற்றிக் கொண்டிருக்கிறது.

Saturday, January 8, 2011

பல்லியின் சாபம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

பல்லியின் சாபம்
குமரி எஸ். நீலகண்டன்

சன்னலை அடைத்த போது
அந்த சப்தத்தில்
அச்சமுற்ற பல்லி
தப்பிக்க நினைத்து
இடுக்கின் இடையேத்
தலையை விட்டது.

குற்றுயிரில்
சபித்த பல்லியை
அடித்துக் கொன்றேன்
அதன் வலியற்ற
மரணத்திற்காக..

சபித்த பல்லிக்கு
எங்கேத்
தெரியப் போகிறது
என் சங்கடம்

Wednesday, January 5, 2011

வினோதக் காலை

வினோதக் காலை
குமரி எஸ். நீலகண்டன்



காலை என்பது
கடவுளின் வினோதம்.

இரவில் விதைத்த
நட்சத்திரங்கள்
வெளிச்சமாய் விரிகிற
வினோதம்.

இரவின் ரகசியங்கள்
இன்னும் ரகசியமாய்
பகலறியா பதுங்கு குழியில்
பாய்ந்து மறைகிற
வினோதம்.

கனவுகளில் குளித்து
வெளிச்சத்தில் உலர்த்த
விரிகிற காட்சிகளின்
விளையாட்டின் வினோதம்.

ஒட்டிய அழுக்குகளைத்
தட்டிக் கொள்ள
காலை அனுப்பும்
ஒளி ஓலையென
காலை என்பது
கடவுளின் வினோதம்.

Saturday, January 1, 2011

ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011 ம் - வல்லமை இதழில் வெளியான கவிதை


ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011ம்
குமரி எஸ். நீலகண்டன்
வருடங்கள் வளர வளர
வளர்ந்து கொண்டே
இருக்கிறோம்.  
உடலெங்கும் மின் ஒளியில்
பகட்டாய் பறக்கிறது பூமி.

காங்கிரீட் காடுகளில்
வாடாத பூக்களுடன்
பிளாஸ்டிக் தாவரங்கள்...

உயிர்களை உன்னதமாய்
காக்கிறோம்...
கொசுக்கள்.. வைரஸ்..
பாக்டீரியாக்களை
புதிது புதிதாய்
உருவாக்கியும் வளர்த்தும்...

வீட்டினுள் குளிரூட்டி
வெளியே அக்னி
வளர்க்கிறோம் .

பூமியின் அழுக்கான
கைகளின் வழி பணங்கள்
அவமானத்துடன்
அலைகின்றன

கட்டை பஞ்சாயத்தை
இன்னுமொரு கட்டை
பஞ்சாயத்தே தட்டி தனக்காய்
தீர்ப்பு சொல்கிறது.

ஆயிரம் வருடத்தில் பிறந்த
அழகான ஒரு மரப்பாச்சி பொம்மை
மிகுந்த சலிப்புடன்
குழப்பங்களின் குழைவினுள்
குதூகலமாய் வரும்
குழந்தை2011 ப்  பார்க்கிறது
பரிதாபமாய்.....

Friday, December 31, 2010

மௌனம் - வல்லமை இதழில் வெளியான கவிதை


மௌனம்

குமரி எஸ்.நீலகண்டன்..

பறக்கும் தூள்களுக்கு
இடையே
பரந்து நிற்கும்
மௌனத்தின் வெளி.

மணக்கும் மயக்கும்
மௌனத்தின் நெடி.

அடைத்த செவிகளுக்கும்
அடங்காமல் கேட்கும்
மௌனத்தின் ஒலி.

கால மாற்றத்தில்
புயலின் மையம்
மௌனம்.

புரிவதற்காகவும்
புரியாமல் இருக்கவும்
எழுதப்பட்டும்
ஓரளவு
புரிந்துவிடுகிறது
மௌனம்.

சலசலப்பில்
சல்லாபிக்கும்
மௌனம்.

எதுவும்
முடிந்துவிடுகிறது
உலகில் மௌனத்தில்.

இன்னொன்று
முளைத்தும் விடுகிறது
மௌனத்தில்.

Monday, December 27, 2010

காரணமெனும் ரணம்

காரணமெனும் ரணம்
குமரி எஸ். நீலகண்டன்

ஈருளி வாகனத்தில்
இயங்கிய அவன்
சாலைப் பூசணியில்
சரிந்து விழுந்தான்.
தலையெங்கும்
பூசணிக்குள்
புதைத்த குங்குமமாய்
சிகப்பு சித்திரங்கள்.
ஆஸ்பத்திரியில் அவனின்
அம்மா சொன்னாள்
எல்லாம் அவனுக்கு
திருஷ்டி கழிக்காததால்
நேர்ந்ததென்று.

Thursday, December 23, 2010

கடவுளின் ஆடை - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளின் ஆடை
குமரி எஸ். நீலகண்டன்
காற்றடைத்து
கடவுள் அளித்த
ஒரே ஆடையில்
கர்ஜிக்கும் முகங்கள்.

ஆடை
அவிழ்கிற போதும்
அசராமல் இருக்கும்
அகங்கார முகங்கள்.

திணித்த ஆசைகளால்
திணறும் மனத்துடன்
ஆடை
அவிழ்வதும் தெரியாமல்
அலையும் விழிகள்.

ஆசை ஆசையாய்
அலைந்து அள்ளியாயிற்று.
கடவுள் தந்த ஆடை
கழன்று போகும் தருணத்தில்
கொள்வதற்கு
கைகளும் இல்லை.
காற்றைச் சுமக்க
பைகளும் இல்லை.

Monday, December 20, 2010

தொலைவின் தூரம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

தொலைவின் தூரம்
குமரி எஸ். நீலகண்டன்



அவனின்
கொல்லும் கோபம்
பிடிக்காமல் அங்கிருந்து
விலகினேன்

அங்கும்
இன்னொருவனின் பொய்
என்னை பொசுக்க
அங்கிருந்தும் விலகினேன்

வந்த இடத்தில்
அங்கொரு
பொறாமைப் பேய்
அச்சுறுத்த
விரைந்து விலகினேன்

சிறிதேத் தொலைவில்
இன்னொருவனின்
சுயநலம்
என்னை அங்கே
அண்டவிடவில்லை

அந்த இடமும்
எனக்கு பாதுகாப்பற்ற
பகுதியாய் உணர்த்தியதால்
அங்கிருந்தும் விலகினேன்

சுற்றிச் சுற்றி
இடைவெளிகள்
விரிந்தாலும் போலிகளும்
அதன் கூலிகளும்
கும்மாளமிட
இன்னும் தொலைவில்
விலகிக் கொண்டே
இருந்தேன்

இன்னும் விலகி விலகி
எல்லையற்ற ஒரு வெளியில்
ஒரு புல்லாய்
நடுங்கி இருந்தேன்

அந்த இடத்தில்
என்னைச் சுற்றி
வெட்ட வெளி.
பொய்யர்கள், சுயநலவாதிகள்
பொறாமைக்காரர்கள்
அகங்காரிகளென
ஏதுமற்ற ஒரு சூன்ய வெளியில்
சூன்யமாகவே இருந்தேன்

உயிரற்ற ஒரு வெளியில்
வெறும் புல்லாக
நான் இருக்க
வந்த வழியறியாது
மந்தமாய் நின்றேன்

சுற்றுமுற்றும் பார்த்தேன்
இந்த நிசப்த வெளியில்
தொலைவில் ஒரு
காய்ந்த பட்டமரம்
என்னருகே வந்து நில் 
என என்னை
அழைத்ததுபோல்
இருந்தது.

Thursday, December 16, 2010

முகமூடிகள் - உயிரோசை இதழில் வெளியான கவிதை

முகமூடிகள்
குமரி எஸ். நீலகண்டன்

சாலையெங்கும்
சராசரி மனிதர்கள்
சஞ்சரிக்க
வியர்க்கிற வெயிலில்
ஈருருளி வாகனத்தில்
இறுக்கி அணைத்து
தோழனின் தோள் பற்றி
துப்பட்டாவில்
முகம் புதைத்து
மோகப் போதையில் அவள்.

அவளின் நெஞ்சைத்
திறந்த தோளாடை
அவளின் முகத்திற்கு
நல்ல பாதுகாப்பாம்
இரு வழிகளில்.....
சூரியக் கண்ணிலிருந்து
சுற்றும் கண்கள் வரை.

மூடிய துப்பட்டாவில்
கூடிய துளி உலகத்தில்
துள்ளி விளையாடியது
அவளது முகம்

Monday, December 13, 2010

ஒரு கைப் பிடியின் பிடிவாதம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday December 12, 2010

ஒரு கைப் பிடியின் பிடிவாதம்

குமரி எஸ். நீலகண்டன் 


ஆறு வயதில்
என்னுடன் தொங்கி
விளையாடியத் தோழனாய்
அந்தக்காலக் கதவின்
தாழ் கைப்பிடி. 


அப்பா அம்மா
தங்கையென எல்லோரின்
சந்தோஷ சங்கடங்கள்
கோப தாபமென
மன அழுத்தங்களின்
மின்சார பாய்ச்சல்களுக்கும்
ஈடு கொடுத்து..
இயங்கியது இக்கைப்பிடி.

ஆனந்தத்தில் ஆடாமல்
துயரத்தில் துவளாமல்
அமைதியாய் அசைகிற
அந்தக்காலக் கைப்பிடி.

பளபளக்கிற இதன்
மேனிக்குள் எங்கள்
குடும்ப வரைபடமாய்
எங்கள் எல்லோரின்
கைரேகைகள்.

காலம் கடந்து
மெலிந்த வலிந்த
அழுத்தங்களுக்கும்
தடுமாறாமல்
தடம் மாறாமல்
இளமைத் துடிப்புடன்
இன்றும் இயங்கும்
இந்தக் கைப்பிடி

இன்று எனது
முதுமையைச் சொல்கிறது
கதவைத் திறக்க
முனைந்த எனக்கு
திறக்காமல் பிடிவாதமாய்

Friday, December 10, 2010

சிவப்பு சமிக்ஞை - வல்லமை இதழில் வெளியான கவிதை

சிவப்புச் சமிக்ஞை 

குமரி எஸ்.நீலகண்டன்

Red_signal
சிவப்பு, பச்சை, மஞ்சளென
கண்களைச் சிமிட்டி,
போக்குவரத்தை
ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது
சமிக்ஞை விளக்கு.


சிமிட்டும் வண்ணங்களை
எப்போதுமே
சிதறடித்துச் செல்லும்
அவனது குதிரை.

விதிகளுக்குக் கட்டுப்படாத
அவனது விதி
அன்று வீதியில்.


கழன்ற காலணி
அவனது கன்னத்தில்.

அவனது கடிகார நேரம்
நின்று விட்டது.
அவனது பச்சை உடம்பில்
கிழிந்த போர்வையாய்
சிவப்பு வண்ணங்கள்.


உடலை உதைத்து
அவன் உயிரும்
எங்கோ போயிருக்க வேண்டும்.


சிவப்பு, பச்சை, மஞ்சளென
கண்களைச் சிமிட்டி,
போக்குவரத்தை
ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது
சமிக்ஞை விளக்கு.

Wednesday, December 8, 2010

மிதித்தலும் மன்னித்தலும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

குமரி எஸ். நீலகண்டன் 


காலை மிதித்தான்.
தெரியாமல்
மிதித்திருப்பானென
மன்னித்தேன்.

மீண்டும்
இன்னொரு தருணத்தில்
தெரியாமலும் தெரிந்ததும்
போலவும் மிதித்தான். 
சகித்தேன்..

சிறிது நேரம் கழித்து
சிரித்தான். மன்னித்தேன்.
காலங்கள் போகப் போக
அவ்வப்போது
 மிதித்தான். மன்னித்தேன்...
மிதித்தான்... மன்னித்தேன்...
மிதித்தான்.. மன்னித்தேன்.

இன்னும் மிதித்தான்...அவன்
எப்போதாவது சகதியிலிருந்து
மீள்வானென்ற நம்பிக்கையில்
மீண்டும் மீண்டும்
மன்னித்தேன். அவன்
இன்னும் சக்தியுடன்
சகதியுடன் மிதித்தான்.

மன்னித்து மன்னித்து
நான் என்னை மகானாக
நினைத்துக் கொண்டேன்.
அவன் எண்ணத்தில் நான்
ஒரு பலஹீனமானவனாக
கரைந்து கொண்டிருந்தேன்.

Saturday, December 4, 2010

இருட்டும் தேடலும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday November 28, 2010

இருட்டும் தேடலும்

குமரி எஸ். நீலகண்டன்

 


இருண்ட நீர் பையிலிருந்து
வளைந்து நெளிந்து
வெளியே வந்து
அழுத அவனுக்கு
ஒளி உற்சாகம் கொடுத்தது. 

வெளியின் துகள்கள்
அவன் வேர்களில் ஊருடுவ...
கருப்பு,வெளுப்பு,
அழுக்கு, மணம்,
மேல், கீழ்,
வடக்கு, தெற்கு,
சிறிது, பெரிது
உயர்ந்தது, தாழ்ந்தது,
நல்லது, கெட்டது,
அழகானது, அழகற்றது,
பலமானது, பலவீனமானது,
நிறம், திறமென ஒன்றாய்
இருந்தவற்றையெல்லாம்
பிரித்து பிரித்து
எல்லாவற்றையும் அவன்
ஒழுங்கீனம் செய்த போது.....

இறுதியில் இருள்
அவனை உள்வாங்கிக்
கொண்டது... 

இருட்டிலிருந்து வந்தவன்
இப்போது இருட்டில்
தேடுகிறான் ஒளியையும்
ஒளிக்கு பின்னால்
ஒளிந்து போனவைகளையும்.

Wednesday, December 1, 2010

இலையின் எல்லைக்கு அப்பால் - வல்லமை இதழில் வெளியான கவிதை

ஒரு வாரமாக நாகர்கோவில், திருவனந்தபுரம், கோட்டயமென பயணம்....அதனாலேயே தவிர்க்க முடியாமல் இடுகைகளில் சில விடுகைகள்...

இலையின் எல்லைக்கு அப்பால்

குமரி எஸ்.நீலகண்டன்
கங்காருவின் வயிற்றிலிருந்து
கங்காருக் குட்டிபோல்
இலைகள் துளிர்களாய்
விதைகளிலிருந்து
எட்டிப் பார்க்கின்றன.

கூடி விளையாட
கொம்புகளில் இலைகள்
வளர்ந்த போதும்
விரிந்த போதும்
காற்றின் தாளத்திற்குக்
கவிதைகள் படிக்கின்றன
இலைகள்.

காற்று இலைகளின் மேல்
மண்ணை வீசி
எறிந்த போதும்
கோபம் இல்லை இலைக்கு.

அடியில் புழுக்கள்
கூடு கட்டி
இலைகளைக் கீழே
தொங்கி இழுத்த போதும்
வருத்தமில்லை இலைக்கு.

பறவையாய்ப் பறந்த
பட்டாம் பூச்சி கீழே
மழை நீரில் தோய்ந்து
துவண்டு படபடத்த போது
இலையின் மேல்
விழுந்த நீர்த் துளிகளெல்லாம்
கண்ணீராய் சொட்டின.

Sunday, November 21, 2010

அதிசயக் குளியல் - வல்லமை இதழில் வெளியான கவிதை

அதிசயக் குளியல்

குமரி எஸ்.நீலகண்டன்

குளத்தில் சூரியன்
தினமும் குளிக்கிறது.
அதன் சூடு மட்டும்
குறைந்த பாடில்லை.

சேற்றுத் தண்ணீரில்
ஒவ்வொரு நாளும்
சந்திரனும் குளிக்கிறது.
அதன்மேல்
சிறிதும் ஒட்டுவதில்லை சேறு.

இரவில்
குளத்தில் நீந்தும் விண்மீன்கள்
காலையில் எங்கே
ஒளிந்து விடுகின்றன?

Friday, November 19, 2010

மேன்மக்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

மேன்மக்கள்
குமரி எஸ். நீலகண்டன்.


எல்லோரும் உடம்பின்
வியர்வை ஊற்றுக்
கண்களிலெல்லாம்
வாசனைத் திரவமூற்றி
காற்றில் போதையேற்றி
சற்றே முகமெங்கும்
வெள்ளை அடித்து
வீதிக்கு வருகிறார்கள்.
அவர்களின் ஒரு கையில்
பெரிய பூதக் கண்ணாடியும்
இன்னொரு கையில்
தார் சட்டியும்.
பூதக்கண்ணாடியால்
ஒவ்வொருவரையும்
கூர்ந்து பார்த்துவிட்டு
அவர்கள் முகத்தில்
சிறிது கரும்புள்ளி
தென்பட்டால் கூட
உடனடியாக அவருடைய
உருவம் வரைந்து
அதில் தார் பூசி
எல்லோருக்கும் காட்டி
இளித்து இன்பமடையும்
மக்கள்.

Monday, November 15, 2010

மாயவலை - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday November 14, 2010

மாயவலை

குமரி எஸ். நீலகண்டன்

எல்லோருடைய
காதிலும் அலைபேசிகள்.
வார்த்தைகள் வாயிலிருந்து
நூலாய் வளர்ந்தும்
பாம்பாய் வளைந்தும்
வானவெளியில் மிதந்து
விரல் தட்டுகிற இலக்கில்
சரியாய் விழுந்து விடுகிறது.

வார்த்தைகளோடு
பூக்களும் அம்புகளுமாய்
பின்னிப் பிணைந்து
வான்வெளியெங்கும்
போர்க்களம்.

வெளி எங்கும்
நூல்கள் வலைகளாய்
விரிய அதில் சிக்கி
சிதைந்து போனவை
சிட்டுக் குருவிகள்....

காணாத குருவிகளை எண்ணி
மனம் கதறிய போது
காதுகளில் குதூகலமாய்
குருவிகளின்
கீச் கீச் சப்தம்..

ஒருகணம் மந்திர உலகில்
வந்தது போல் ஆச்சரியமாய்
பால்ய நினைவுகளின்
ஈரத்துடன் ஒலியின்
திசை தேடி வீட்டின்
சாளரத்தின் உயரே
உற்று நோக்கினேன். 

காணாத குருவிகளின்
சப்தம் இன்னும்
அதிக வீச்சுடன்.....

வாசலைக் கடந்து
வீட்டிற்குள்.... தேடிய
கண்களுக்கு தெரியவே
இல்லைக் குருவிகள்.

காதுகளுக்கு தெரிந்தது
அதுவும் வந்த நண்பரின்
கைபேசியின்
ரிங் டோன் என்று..

உங்கள் குரலையும்
அழகாக பதிவு செய்து
வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குரலை
ரிங் டோனாக
நாளைய உலகம் கேட்பதற்கு
உங்களுக்கும் அதை
வைத்துக் கொள்பவருக்கும்
அதிர்ஷ்டம் வேண்டும் போலும்.

Saturday, November 13, 2010

கடவுளின் சங்கடம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளின் சங்கடம்

குமரி எஸ். நீலகண்டன்

சண்டையே விரும்பாத
அவனுக்காகவே
சண்டை இட்டார்கள் இருவர்.
சங்கடத்தில் கடவுள்.

கடவுள் காட்சி கொடுத்தார்
இருவருக்கும் தனித் தனியாய்.
அன்பின் மகத்துவத்தை
அறிவுபூர்வமாகச் சொன்னார்.

அட! நீ என் கடவுளே
இல்லையென
அவரிடமும்
சண்டை போட்டு
அவரவர் கடவுளுக்காக
அடித்துக் கொண்டனர்
இருவரும்….

பாவம்,
சலனமின்றி
சங்கடத்தில்
கண்களை மூடி,
யாருமில்லாத
ஆள் அரவமற்ற
அடர்ந்த வனத்தில்
தவத்தில் தியானத்தில்
கடவுள்.

Wednesday, November 10, 2010

ஜில்புயல் எச்சரிக்கை - வல்லமையில் வெளியான கவிதை

ஜில் புயல் எச்சரிக்கை

குமரி எஸ். நீலகண்டன்
cyclone
ஒரு நீடித்த மௌனம்
நெடும்புயலாகிறது.

வீறுகொண்ட
அதன் விழிகளுக்குத்
திசைகள் இல்லை.


காலத்தின் பசிக்
கால்களால் அதன்
வயிற்றை நசுக்கும்போது
அசைவப் பிரியனாய்
புயல் இழுத்துக்கொள்ளும்
அதன் வயிற்றில்
ஆயிரமாயிரம் உயிர்களையும்
குடில்களோடு கூடவே
அதனுள் பசித்த
குடல்களையும்
அசையாத பசும்
மரங்களையும்…
இன்னும் அதைச் சீரணிக்க
வானக் கலயம்
வார்க்கும் நீரையும்.


ஜில்லெனப் பெயர் வைத்து
ஜல்லென அழைத்து

நில்லெனச் சொன்னாலும்
நில்லாது செல்கிறது
அசுரப் புயல்.


காற்றடிக்கட்டும்
கடலைத் தின்னட்டும்
மழையைக் கக்கட்டும்
பாவம்..
உயிர்களை மட்டும்
விட்டு விடட்டும்
.