Sunday, February 13, 2011

எனது கவிதை குறித்து ......

 எனது கவிதை குறித்து நண்பரின் விமர்சனம்

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய நண்பர் திரு. டோக்ரா அவர்கள்  அவரது என் கவிதை விமர்சனம் வலைப்பூவில் சுயநலத்தின் சுற்றுப்பாதை கவிதை குறித்து ஒரு இடுகையாக விமர்சனம் எழுதி உள்ளார். அதைப் படிக்க இதோ உங்களுக்காக அதன் இணைப்பு... 

நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

நீலகண்டன் என் நெருங்கிய நண்பர். அவரது கவிதைகளை http://neelakandans.blogspot.com/ என்னும் அவரது வலைப்பூவில் அடிக்கடி படிக்கிறேன். கவிதைகளில் அவர் பொதுவாகவே விஷயத்தை நேரிடையாகச் சொல்லாமல் ஒரு சூழ்நிலையை விவரிப்பதன் வாயிலாகத் தெரிவிப்பார். அந்தச் சூழ்நிலை நமக்கு விஷயத்தைத் தெரிவிப்பதோடு மட்டும் இல்லாமல் இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும்.
“சுய நலத்தின் சுற்றுப் பாதை” என்ற கவிதையையே பாருங்கள். வாழ்க்கையின் ஒரு மிகச் சாதாரணமான, அன்றாடம் பல பேருந்துகளில் நடைபெறும் சங்கதி. ஆனாலும், மனித வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் நடக்கின்ற போட்டி மனப்பான்மையையும், அதன் பின்னணியாக இருக்கும் “எல்லாம் எனக்கே கிடைக்கட்டும், மற்றவர்கள் என்ன ஆனார்களோ எனக்கு கவலை இல்லை” என்று தன் மையச் சிந்தனை முறையையும் படிமங்கள் மூலம் காட்டுகிறது. அத்துடன் “கூட்டத்தில் மோதிக் கொண்டிருப்பவர்கள் என்னத்தான் செய்ய முடியும்? பாவம்!” என்று பரிதாப உணர்வையும் உருவாக்குகிறது.
சங்கதி மிக சாதாரணமானதாக இருந்தாலும், அதை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இச்சூழ்நிலையைத் தங்கள் உயிருக்காகவும், ஒரு பெரிய லட்சியத்துக்காகவும் போர் களத்தில் இறங்கியிருக்கும் வீரர்களுடன் சொல்லாமலேயே ஒப்பிடுகிறது:

அந்த இடத்தைப் பிடிக்க
கைகள் கம்பிகளைப் பற்ற
வாள்களாக
சண்டையிடும்.

இந்த வரிகளில் மட்டும் இல்லாமல், கவிதை முழுக்க குறைவான வசதிகளுக்காக கூட்டம் கூட்டமாக மக்கள் போட்டியிடும் நம் தற்காலச் சமுதாயத்தின் உண்மை நிலை வெளிபடுகிறது:

தொங்கியும் சாய்ந்தும்
சரிந்தும் வியர்த்தும்
காற்றைப் பிழிந்து
வியர்வை மிதந்த
கனத்தக் கூட்டத்தில்

பயணம் செய்யும் மக்கள் பேருந்தில் மட்டும் அல்ல வாழ்க்கையின் அனைத்துச் சூழ்நிலைகளிலும் இதே போல மோதி, முட்டி “இருக்கையைப் பிடிக்கும்” சவாலைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.
கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேக நிலை மன அழுத்தத்தைத் தருகிறது:

அவனின் பாவனை அசைவில்
நிற்பவர்களின் ரத்தம்
ஒடுங்கிய ஓடைகளில்
உயர் அழுத்தத்தில் பாயும்.

கிடைக்காத போது ஏற்படும் ஏமாற்றம் நகைச்சுவையாக அமைவதால் அவர்களது ஏக்கத்தை இன்னும் பலமாக சுட்டிக்காட்டுகிறது:

அவன் எழாத போது
பெய்யா மழையால்
பொய்யாய் கலையும்
கரு மேகமாய் …..

கவிதை ஒரு புறம் மக்களின் தன்னையே சுற்றிச் சுற்றி வரும் “சுய நலத்தின் சுற்றுப் பாதை”யைப் பற்றிப் பேசினாலும், இன்னொரு புறம் ஒரு பேருந்து இருக்கைக்காக “உயர் அழுத்தத்தில் பாயும்” ரத்தத்துடன் “வியர்வை மிதந்த” மக்களின் பரிதாப நிலையையும் படம் போட்டுக் காட்டுவதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் போட்டியும் போராட்டமும் சந்திக்க வேண்டிய இன்றைய உலகத்தின் உண்மை நிலையையும் சுட்டிக்காட்டுகிறது.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நீலா!

3 Responses to நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

  1. வல்லமையில் வாசித்த அன்றே வியந்து கருத்தளித்திருந்தேன். பகிர்வுக்கு நன்றி.
  2. dogrask says:
    திரு ராமலக்‌ஷ்மி அவர்களே, விமர்சனம் படித்ததற்கு நன்றி. நீங்கள் மிக நன்றாக கவிதைகள் எழுதுகிறீர்கள் என்று நீலகண்டன் சொல்கிறார்.

 


திரு டோக்ரா அவர்களுக்கு என் அன்பு நிறைந்த நன்றிகள்.

குமரி எஸ். நீலகண்டன்

Thursday, February 10, 2011

சுயநலத்தின் சுற்றுப்பாதை - வல்லமை இதழில் வெளியான கவிதை

சுய நலத்தின் சுற்றுப் பாதை
குமரி எஸ். நீலகண்டன்

 ஓடும் பேருந்தில்
தொங்கியும் சாய்ந்தும்
சரிந்தும் வியர்த்தும்
காற்றைப் பிழிந்து
வியர்வை மிதந்த
கனத்தக் கூட்டத்தில்
இருக்கையை விட்டு
எழுவதுபோல் எத்தனிக்கும்
அவனைச் சுற்றி
மந்தையாய் குவியும்
சுயநலம்.

அந்த இடத்தைப் பிடிக்க
கைகள் கம்பிகளைப் பற்ற
வாள்களாக
சண்டையிடும்.

அவனின் பாவனை அசைவில்
நிற்பவர்களின் ரத்தம்
ஒடுங்கிய ஓடைகளில்
உயர் அழுத்தத்தில் பாயும்.

அவன் எழாத போது
பெய்யா மழையால்
பொய்யாய் கலையும்
கரு மேகமாய்
அலைபாயும் அடுத்த
இடத்திற்காய் சுயநலம்.

Saturday, February 5, 2011

என்னுள் ஒருவன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

என்னுள் ஒருவன்
குமரி எஸ். நீலகண்டன்

என்னுள் நானும்
உன்னுள்
நீயுமில்லாத போது
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
சாவகாசமாய்
உரையாடுகிறோம்...

என்னுள் நானில்லாத போது
பலருள் எனக்கும்
என்னுள் பலருக்கும்
இடமிருக்கிறது.

என்னுள்ளிருந்து
வெளியேறும் நான்
வெகு அருகிலும்..
சில நேரம் விலகியும்
மறைந்தும்
சில நேரம் வெகு
தூரத்திலிருந்தும்
வெகு அருகில் வந்தும்
அச்சுறுத்திக்
கொண்டிருக்கிறது.

என்னை அறியாமல்
என்னுள் புகுந்து
உச்சியிலாடி உட்கலகம்
செய்கிறது..

ஆயிரம் கைகளிலும்
ஆயுதங்கள் தாங்கி
அகத்திலிருந்து
கைகளைச் சுழற்றும்
அதன் ஆர்ப்பாட்டத்தில்
இலக்கு எதிரானாலும்
இழப்பு எனக்கே எனக்கு.

நானின் கையிலுள்ள
நாணின் சுருக்கில்
தலையை ஈர்க்கும்
என்னுள்
நானில்லாத போது
என்னுள் பலருக்கும்
பலருள் எனக்கும்
பட்டாம் பூச்சியாய்
பறக்க இயல்கிறது.

எனக்கே எதிராய்
எப்போதும்
எனது நான்.....

Wednesday, February 2, 2011

மேசை துடைப்பவன் - இந்த வார கல்கியில் வெளியான கவிதை

மேசை துடைப்பவன்
குமரி எஸ். நீலகண்டன்

அந்த உணவு விடுதியில்
மேசை துடைக்கும்
அந்தச் சிறுவன்
அவன் முகம்
தெரியத் தெரிய
பளபளவென
அந்த மேசையைத்
துடைத்துக் கொண்டே
இருக்கிறான்.

இருப்பவரைப் பொறுத்து
மேசையில் அவன்
முகத்தின் மேல்
சிதறிய சட்னி... சாம்பார்...
தேநீர்.. காப்பி என
இத்யாதிகள்...

அவனும்
அவன் முகத்தில்
எந்தக் கறையுமின்றி
முகம் தெரியத் தெரியத்
துடைக்கிறான்.
ஒரு தடவை கூட
மேசைக்குள்
அவன் முகம்
அவனைப் பார்த்து
சிரிக்கவே மாட்டேன்
என்கிறது.

Monday, January 31, 2011

மேகத்தின் பன்முகங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

மேகத்தின் பன்முகங்கள்
குமரி எஸ். நீலகண்டன்

காற்றில் மிதக்கும்
பஞ்சாய்
வானில் மேகம்.

பயணிக்கும் பறவைகளின்
சீரிய சிறகசைவில்
சிலிர்த்து வியந்து...

மலையரசனின் தலையில்
மகுடமாய் ....

நிலத்திற்கும் கடலுக்கும்
விரிந்த
வெண்குடையாய்

கிழித்தெறிந்த பஞ்சில்
கிளர்ந்தெழுந்த வேகத்துடன்
மேகம்.

வானம் அழுகையில்
கருங்கூந்தலை விரித்து
இடியாய் கர்ஜிக்கிற
இறுமாப்புடன் மேகம்.

Thursday, January 27, 2011

அவனைத் தின்ற புழு - உயிரோசையில் வெளியான கவிதை

அவனைத் தின்ற புழு
குமரி எஸ். நீலகண்டன்

அவன் புத்தகத்தை
பக்கம் பக்கமாய் சாப்பிட்டு
வண்ணச் சிறகுகளுடன்
பட்டாம் பூச்சியாய்
பறந்து கொண்டிருந்தான்.

அவனது அந்தக்
குறிப்பிட்ட புத்தகத்தை
நாலைந்து புழுக்கள்
நாலே வாரங்களில்
ஒவ்வொரு எழுத்தாய்
தின்று தீர்த்து
அடுத்த புத்தகத்துள்
கன்னமிட்டு
அவனையும் முந்தி
அள்ளித் தின்னத்
தொடங்கின.

புழுக்களின்
அத்து மீறியக் குடியிருப்பை
அங்கேக் கண்ட
அவனின் தலைக்குள்
ஆயிரமாயிரமாய் புழுக்கள்
அவன் தலையையும்
தின்னத் தொடங்கி இருந்தன.

Tuesday, January 25, 2011

உடைகிறக் கோப்பைக்குள் - திண்ணை இதழில் வெளியான கவிதை


உடைகிறக் கோப்பைக்குள்
குமரி எஸ். நீலகண்டன்

அவனுக்கும்
எனக்குமாய் இருந்த
அழகான இனிய
கோப்பை அது.

ஒளித் தடையில்லாத
தெள்ளந் தெளிந்த
பளிச்செனப் பளபளக்கும்
பகட்டானக் கோப்பை அது.

எங்கள் அன்பைக் கரைத்த
அதி உன்னத பானத்துடன்
நுரை பொங்கி நிறைந்த
கோப்பை அது.

ஊடுருவி உரையாடிக்
கொண்டிருக்கும்
எங்கள் உள்ளங்களின்
ஒளி பெருக்கியாய்
அந்த கண்ணாடிக் கோப்பை..

நான் என் நண்பனிடம்
ஒன்றைச் சொல்லப்
போகிறேன்.. அப்போது
அந்த கோப்பை
என் நண்பனின் கைகளின்
பிடி விலகலால்
உடைக்கப் படலாம்.

உடையக் கூடாதென
அந்த கோப்பைக்காக
உருகிக் கொண்டிருக்கும்
எனக்கு நான்
சொல்ல வேண்டியதை
சொல்லாமலும் முடியாது.

Friday, January 21, 2011

ரோஜாவும நானும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

ஒரு ரோஜாவும் நானும்
குமரி எஸ். நீலகண்டன்

ஒரு பெரும்புயலுக்கு
முந்தைய மௌனத்தில்
சிலு சிலுவென சிணுங்கிய
தூறல்களுக்கிடையே நானும்
அன்று பூத்த அந்த
நந்தவனத்து ரோஜாவும்
தன்னந்தனியாய்.

விரிந்த இதழ்களில்
விழுந்த நீர் துளிகளோடு
வாசம் வீசிப் பேசிய
அதன் வண்ண மொழிகள்
எனக்குப் புரியவில்லை.

அதன் ஆர்ப்பரிக்கும் அழகில்
அலையோடிய
என் கவிதைகளும்
அதற்கு புரிந்ததாய்
தெரியவில்லை.

ஆனாலும் குத்தும் குளிரை
விட்டு விலகும் என்னை
தடுக்கும் பாவனையில்
அதன் முகத்தின்
மோக ஜாடை.

மழைக்கு முந்தைய
மௌனத்தில்
சூழ்ந்த முட்களுக்கிடையே
பேரிரைச்சலுடன்
பேரன்புடன்
புரியாத மொழியில்
யாருக்கும் தெரியாமல்
பேசிக் கொண்டிருக்கிறோம்
இருவரும்.

Tuesday, January 18, 2011

நெருப்பு மலர் - திண்ணை இதழில் வெளியான கவிதை


நெருப்பு மலர்
குமரி எஸ். நீலகண்டன்
எரியும் காகிதத்தில்
அசையும் இதழ்களுடன்
அழகாக
ஆடியதொரு சிகப்புப் பூ..
கருப்பு வாசம். 


தொட இயலவில்லை
தோட்டமெதுவும் இல்லை
வண்டு மொய்க்கவில்லை
இதழ்கள் உதிரவில்லை
இறுதியில் மண்ணில்
கருப்பு மகரந்தங்கள்

Saturday, January 15, 2011

போகியும் பொங்கலும்

எல்லோருக்கும் என் உளம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

போகியும் பொங்கலும்
குமரி எஸ். நீலகண்டன்

பழைய துணி...
பழைய பாத்திரம்,
அரிவாள் மணை, கத்தி,
பழைய தலையணை,
விளையாட்டுப் பொருட்கள்,
கிரிக்கெட் மட்டை,
காகிதங்களென  அத்தோடு
பழைய நட்பு பகையென
பயன்படாதவைகளெயெல்லாம்
பழையதென
எரிந்தும் எறிந்தும் 


புது பாத்திரங்களுடன்
புதிய பொருட்களுடன்
புதுப் புது நண்பர்களுடன் ....
வாழ்த்துக்களுடன்
பொங்கலொ பொங்கலென்று
பொங்கிய பொங்கலின் புகையில்
பழைய நண்பரின்
கண்களில் நீர் ததும்ப
ல்

Monday, January 10, 2011

தாத்தாவும் பேரனும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

தாத்தாவும் பேரனும்
குமரி எஸ். நீலகண்டன்

தாத்தாவின் பிள்ளைக்கு
குழந்தை பிறந்திருக்கிறது.
கொஞ்ச நாளாய்
தாத்தாவிற்கு பேச
எந்த தோழர்களும்
தேவையில்லை...

தாத்தாவும் பேரனும்
ஏதேதோ பேசிக்
கொள்கிறார்கள்..
யாருக்கும் புரியவில்லை
அவர்களின் ரகசியங்கள்.

அழுகிறப் பேரனிடம்
தாத்தாய் அழகழகாய்
ஏதோ சொல்லிக்
கொடுக்கிறார்...

வாயில் பாட்டும்
கையில் கிலுக்குமாய்
கல கலப்பாய்
தாத்தாவின் ஆட்டம்.

குழந்தை கையை
அசைக்கிற போதும்
கால்களை ஆட்டி
இசைக்கிற போதும்
சாடையாய் கூடி நிற்கிற
முகத்தின் ஓசையில்
தாத்தா இப்போது
அவரது தாத்தாவின்
மடியினில்
கைகளையும் கால்களையும்
அசைத்து அசைத்து
ஏதோ சொல்லிக்
கொண்டிருக்கிறார்.


உலகம் திரும்பி
சுற்றிக் கொண்டிருக்கிறது.

Saturday, January 8, 2011

பல்லியின் சாபம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

பல்லியின் சாபம்
குமரி எஸ். நீலகண்டன்

சன்னலை அடைத்த போது
அந்த சப்தத்தில்
அச்சமுற்ற பல்லி
தப்பிக்க நினைத்து
இடுக்கின் இடையேத்
தலையை விட்டது.

குற்றுயிரில்
சபித்த பல்லியை
அடித்துக் கொன்றேன்
அதன் வலியற்ற
மரணத்திற்காக..

சபித்த பல்லிக்கு
எங்கேத்
தெரியப் போகிறது
என் சங்கடம்

Wednesday, January 5, 2011

வினோதக் காலை

வினோதக் காலை
குமரி எஸ். நீலகண்டன்



காலை என்பது
கடவுளின் வினோதம்.

இரவில் விதைத்த
நட்சத்திரங்கள்
வெளிச்சமாய் விரிகிற
வினோதம்.

இரவின் ரகசியங்கள்
இன்னும் ரகசியமாய்
பகலறியா பதுங்கு குழியில்
பாய்ந்து மறைகிற
வினோதம்.

கனவுகளில் குளித்து
வெளிச்சத்தில் உலர்த்த
விரிகிற காட்சிகளின்
விளையாட்டின் வினோதம்.

ஒட்டிய அழுக்குகளைத்
தட்டிக் கொள்ள
காலை அனுப்பும்
ஒளி ஓலையென
காலை என்பது
கடவுளின் வினோதம்.

Saturday, January 1, 2011

ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011 ம் - வல்லமை இதழில் வெளியான கவிதை


ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011ம்
குமரி எஸ். நீலகண்டன்
வருடங்கள் வளர வளர
வளர்ந்து கொண்டே
இருக்கிறோம்.  
உடலெங்கும் மின் ஒளியில்
பகட்டாய் பறக்கிறது பூமி.

காங்கிரீட் காடுகளில்
வாடாத பூக்களுடன்
பிளாஸ்டிக் தாவரங்கள்...

உயிர்களை உன்னதமாய்
காக்கிறோம்...
கொசுக்கள்.. வைரஸ்..
பாக்டீரியாக்களை
புதிது புதிதாய்
உருவாக்கியும் வளர்த்தும்...

வீட்டினுள் குளிரூட்டி
வெளியே அக்னி
வளர்க்கிறோம் .

பூமியின் அழுக்கான
கைகளின் வழி பணங்கள்
அவமானத்துடன்
அலைகின்றன

கட்டை பஞ்சாயத்தை
இன்னுமொரு கட்டை
பஞ்சாயத்தே தட்டி தனக்காய்
தீர்ப்பு சொல்கிறது.

ஆயிரம் வருடத்தில் பிறந்த
அழகான ஒரு மரப்பாச்சி பொம்மை
மிகுந்த சலிப்புடன்
குழப்பங்களின் குழைவினுள்
குதூகலமாய் வரும்
குழந்தை2011 ப்  பார்க்கிறது
பரிதாபமாய்.....

Friday, December 31, 2010

மௌனம் - வல்லமை இதழில் வெளியான கவிதை


மௌனம்

குமரி எஸ்.நீலகண்டன்..

பறக்கும் தூள்களுக்கு
இடையே
பரந்து நிற்கும்
மௌனத்தின் வெளி.

மணக்கும் மயக்கும்
மௌனத்தின் நெடி.

அடைத்த செவிகளுக்கும்
அடங்காமல் கேட்கும்
மௌனத்தின் ஒலி.

கால மாற்றத்தில்
புயலின் மையம்
மௌனம்.

புரிவதற்காகவும்
புரியாமல் இருக்கவும்
எழுதப்பட்டும்
ஓரளவு
புரிந்துவிடுகிறது
மௌனம்.

சலசலப்பில்
சல்லாபிக்கும்
மௌனம்.

எதுவும்
முடிந்துவிடுகிறது
உலகில் மௌனத்தில்.

இன்னொன்று
முளைத்தும் விடுகிறது
மௌனத்தில்.

Monday, December 27, 2010

காரணமெனும் ரணம்

காரணமெனும் ரணம்
குமரி எஸ். நீலகண்டன்

ஈருளி வாகனத்தில்
இயங்கிய அவன்
சாலைப் பூசணியில்
சரிந்து விழுந்தான்.
தலையெங்கும்
பூசணிக்குள்
புதைத்த குங்குமமாய்
சிகப்பு சித்திரங்கள்.
ஆஸ்பத்திரியில் அவனின்
அம்மா சொன்னாள்
எல்லாம் அவனுக்கு
திருஷ்டி கழிக்காததால்
நேர்ந்ததென்று.

Thursday, December 23, 2010

கடவுளின் ஆடை - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளின் ஆடை
குமரி எஸ். நீலகண்டன்
காற்றடைத்து
கடவுள் அளித்த
ஒரே ஆடையில்
கர்ஜிக்கும் முகங்கள்.

ஆடை
அவிழ்கிற போதும்
அசராமல் இருக்கும்
அகங்கார முகங்கள்.

திணித்த ஆசைகளால்
திணறும் மனத்துடன்
ஆடை
அவிழ்வதும் தெரியாமல்
அலையும் விழிகள்.

ஆசை ஆசையாய்
அலைந்து அள்ளியாயிற்று.
கடவுள் தந்த ஆடை
கழன்று போகும் தருணத்தில்
கொள்வதற்கு
கைகளும் இல்லை.
காற்றைச் சுமக்க
பைகளும் இல்லை.

Monday, December 20, 2010

தொலைவின் தூரம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

தொலைவின் தூரம்
குமரி எஸ். நீலகண்டன்



அவனின்
கொல்லும் கோபம்
பிடிக்காமல் அங்கிருந்து
விலகினேன்

அங்கும்
இன்னொருவனின் பொய்
என்னை பொசுக்க
அங்கிருந்தும் விலகினேன்

வந்த இடத்தில்
அங்கொரு
பொறாமைப் பேய்
அச்சுறுத்த
விரைந்து விலகினேன்

சிறிதேத் தொலைவில்
இன்னொருவனின்
சுயநலம்
என்னை அங்கே
அண்டவிடவில்லை

அந்த இடமும்
எனக்கு பாதுகாப்பற்ற
பகுதியாய் உணர்த்தியதால்
அங்கிருந்தும் விலகினேன்

சுற்றிச் சுற்றி
இடைவெளிகள்
விரிந்தாலும் போலிகளும்
அதன் கூலிகளும்
கும்மாளமிட
இன்னும் தொலைவில்
விலகிக் கொண்டே
இருந்தேன்

இன்னும் விலகி விலகி
எல்லையற்ற ஒரு வெளியில்
ஒரு புல்லாய்
நடுங்கி இருந்தேன்

அந்த இடத்தில்
என்னைச் சுற்றி
வெட்ட வெளி.
பொய்யர்கள், சுயநலவாதிகள்
பொறாமைக்காரர்கள்
அகங்காரிகளென
ஏதுமற்ற ஒரு சூன்ய வெளியில்
சூன்யமாகவே இருந்தேன்

உயிரற்ற ஒரு வெளியில்
வெறும் புல்லாக
நான் இருக்க
வந்த வழியறியாது
மந்தமாய் நின்றேன்

சுற்றுமுற்றும் பார்த்தேன்
இந்த நிசப்த வெளியில்
தொலைவில் ஒரு
காய்ந்த பட்டமரம்
என்னருகே வந்து நில் 
என என்னை
அழைத்ததுபோல்
இருந்தது.

Thursday, December 16, 2010

முகமூடிகள் - உயிரோசை இதழில் வெளியான கவிதை

முகமூடிகள்
குமரி எஸ். நீலகண்டன்

சாலையெங்கும்
சராசரி மனிதர்கள்
சஞ்சரிக்க
வியர்க்கிற வெயிலில்
ஈருருளி வாகனத்தில்
இறுக்கி அணைத்து
தோழனின் தோள் பற்றி
துப்பட்டாவில்
முகம் புதைத்து
மோகப் போதையில் அவள்.

அவளின் நெஞ்சைத்
திறந்த தோளாடை
அவளின் முகத்திற்கு
நல்ல பாதுகாப்பாம்
இரு வழிகளில்.....
சூரியக் கண்ணிலிருந்து
சுற்றும் கண்கள் வரை.

மூடிய துப்பட்டாவில்
கூடிய துளி உலகத்தில்
துள்ளி விளையாடியது
அவளது முகம்

Monday, December 13, 2010

ஒரு கைப் பிடியின் பிடிவாதம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday December 12, 2010

ஒரு கைப் பிடியின் பிடிவாதம்

குமரி எஸ். நீலகண்டன் 


ஆறு வயதில்
என்னுடன் தொங்கி
விளையாடியத் தோழனாய்
அந்தக்காலக் கதவின்
தாழ் கைப்பிடி. 


அப்பா அம்மா
தங்கையென எல்லோரின்
சந்தோஷ சங்கடங்கள்
கோப தாபமென
மன அழுத்தங்களின்
மின்சார பாய்ச்சல்களுக்கும்
ஈடு கொடுத்து..
இயங்கியது இக்கைப்பிடி.

ஆனந்தத்தில் ஆடாமல்
துயரத்தில் துவளாமல்
அமைதியாய் அசைகிற
அந்தக்காலக் கைப்பிடி.

பளபளக்கிற இதன்
மேனிக்குள் எங்கள்
குடும்ப வரைபடமாய்
எங்கள் எல்லோரின்
கைரேகைகள்.

காலம் கடந்து
மெலிந்த வலிந்த
அழுத்தங்களுக்கும்
தடுமாறாமல்
தடம் மாறாமல்
இளமைத் துடிப்புடன்
இன்றும் இயங்கும்
இந்தக் கைப்பிடி

இன்று எனது
முதுமையைச் சொல்கிறது
கதவைத் திறக்க
முனைந்த எனக்கு
திறக்காமல் பிடிவாதமாய்

Friday, December 10, 2010

சிவப்பு சமிக்ஞை - வல்லமை இதழில் வெளியான கவிதை

சிவப்புச் சமிக்ஞை 

குமரி எஸ்.நீலகண்டன்

Red_signal
சிவப்பு, பச்சை, மஞ்சளென
கண்களைச் சிமிட்டி,
போக்குவரத்தை
ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது
சமிக்ஞை விளக்கு.


சிமிட்டும் வண்ணங்களை
எப்போதுமே
சிதறடித்துச் செல்லும்
அவனது குதிரை.

விதிகளுக்குக் கட்டுப்படாத
அவனது விதி
அன்று வீதியில்.


கழன்ற காலணி
அவனது கன்னத்தில்.

அவனது கடிகார நேரம்
நின்று விட்டது.
அவனது பச்சை உடம்பில்
கிழிந்த போர்வையாய்
சிவப்பு வண்ணங்கள்.


உடலை உதைத்து
அவன் உயிரும்
எங்கோ போயிருக்க வேண்டும்.


சிவப்பு, பச்சை, மஞ்சளென
கண்களைச் சிமிட்டி,
போக்குவரத்தை
ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது
சமிக்ஞை விளக்கு.

Wednesday, December 8, 2010

மிதித்தலும் மன்னித்தலும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

குமரி எஸ். நீலகண்டன் 


காலை மிதித்தான்.
தெரியாமல்
மிதித்திருப்பானென
மன்னித்தேன்.

மீண்டும்
இன்னொரு தருணத்தில்
தெரியாமலும் தெரிந்ததும்
போலவும் மிதித்தான். 
சகித்தேன்..

சிறிது நேரம் கழித்து
சிரித்தான். மன்னித்தேன்.
காலங்கள் போகப் போக
அவ்வப்போது
 மிதித்தான். மன்னித்தேன்...
மிதித்தான்... மன்னித்தேன்...
மிதித்தான்.. மன்னித்தேன்.

இன்னும் மிதித்தான்...அவன்
எப்போதாவது சகதியிலிருந்து
மீள்வானென்ற நம்பிக்கையில்
மீண்டும் மீண்டும்
மன்னித்தேன். அவன்
இன்னும் சக்தியுடன்
சகதியுடன் மிதித்தான்.

மன்னித்து மன்னித்து
நான் என்னை மகானாக
நினைத்துக் கொண்டேன்.
அவன் எண்ணத்தில் நான்
ஒரு பலஹீனமானவனாக
கரைந்து கொண்டிருந்தேன்.

Saturday, December 4, 2010

இருட்டும் தேடலும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday November 28, 2010

இருட்டும் தேடலும்

குமரி எஸ். நீலகண்டன்

 


இருண்ட நீர் பையிலிருந்து
வளைந்து நெளிந்து
வெளியே வந்து
அழுத அவனுக்கு
ஒளி உற்சாகம் கொடுத்தது. 

வெளியின் துகள்கள்
அவன் வேர்களில் ஊருடுவ...
கருப்பு,வெளுப்பு,
அழுக்கு, மணம்,
மேல், கீழ்,
வடக்கு, தெற்கு,
சிறிது, பெரிது
உயர்ந்தது, தாழ்ந்தது,
நல்லது, கெட்டது,
அழகானது, அழகற்றது,
பலமானது, பலவீனமானது,
நிறம், திறமென ஒன்றாய்
இருந்தவற்றையெல்லாம்
பிரித்து பிரித்து
எல்லாவற்றையும் அவன்
ஒழுங்கீனம் செய்த போது.....

இறுதியில் இருள்
அவனை உள்வாங்கிக்
கொண்டது... 

இருட்டிலிருந்து வந்தவன்
இப்போது இருட்டில்
தேடுகிறான் ஒளியையும்
ஒளிக்கு பின்னால்
ஒளிந்து போனவைகளையும்.

Wednesday, December 1, 2010

இலையின் எல்லைக்கு அப்பால் - வல்லமை இதழில் வெளியான கவிதை

ஒரு வாரமாக நாகர்கோவில், திருவனந்தபுரம், கோட்டயமென பயணம்....அதனாலேயே தவிர்க்க முடியாமல் இடுகைகளில் சில விடுகைகள்...

இலையின் எல்லைக்கு அப்பால்

குமரி எஸ்.நீலகண்டன்
கங்காருவின் வயிற்றிலிருந்து
கங்காருக் குட்டிபோல்
இலைகள் துளிர்களாய்
விதைகளிலிருந்து
எட்டிப் பார்க்கின்றன.

கூடி விளையாட
கொம்புகளில் இலைகள்
வளர்ந்த போதும்
விரிந்த போதும்
காற்றின் தாளத்திற்குக்
கவிதைகள் படிக்கின்றன
இலைகள்.

காற்று இலைகளின் மேல்
மண்ணை வீசி
எறிந்த போதும்
கோபம் இல்லை இலைக்கு.

அடியில் புழுக்கள்
கூடு கட்டி
இலைகளைக் கீழே
தொங்கி இழுத்த போதும்
வருத்தமில்லை இலைக்கு.

பறவையாய்ப் பறந்த
பட்டாம் பூச்சி கீழே
மழை நீரில் தோய்ந்து
துவண்டு படபடத்த போது
இலையின் மேல்
விழுந்த நீர்த் துளிகளெல்லாம்
கண்ணீராய் சொட்டின.

Sunday, November 21, 2010

அதிசயக் குளியல் - வல்லமை இதழில் வெளியான கவிதை

அதிசயக் குளியல்

குமரி எஸ்.நீலகண்டன்

குளத்தில் சூரியன்
தினமும் குளிக்கிறது.
அதன் சூடு மட்டும்
குறைந்த பாடில்லை.

சேற்றுத் தண்ணீரில்
ஒவ்வொரு நாளும்
சந்திரனும் குளிக்கிறது.
அதன்மேல்
சிறிதும் ஒட்டுவதில்லை சேறு.

இரவில்
குளத்தில் நீந்தும் விண்மீன்கள்
காலையில் எங்கே
ஒளிந்து விடுகின்றன?

Friday, November 19, 2010

மேன்மக்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

மேன்மக்கள்
குமரி எஸ். நீலகண்டன்.


எல்லோரும் உடம்பின்
வியர்வை ஊற்றுக்
கண்களிலெல்லாம்
வாசனைத் திரவமூற்றி
காற்றில் போதையேற்றி
சற்றே முகமெங்கும்
வெள்ளை அடித்து
வீதிக்கு வருகிறார்கள்.
அவர்களின் ஒரு கையில்
பெரிய பூதக் கண்ணாடியும்
இன்னொரு கையில்
தார் சட்டியும்.
பூதக்கண்ணாடியால்
ஒவ்வொருவரையும்
கூர்ந்து பார்த்துவிட்டு
அவர்கள் முகத்தில்
சிறிது கரும்புள்ளி
தென்பட்டால் கூட
உடனடியாக அவருடைய
உருவம் வரைந்து
அதில் தார் பூசி
எல்லோருக்கும் காட்டி
இளித்து இன்பமடையும்
மக்கள்.