Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Monday, April 11, 2011

இரவும் பகலும் - நவீன விருட்சம் இதழில் வெளியான கவிதை

இரவும் பகலும்
குமரி எஸ். நீலகண்டன்

ஏழு வண்ணங்களோடும்
களித்து களைத்த
ஏழு கடல்களும்
பகலை பரந்து
உள் வாங்கிக் கொண்டன.

இருளின் மயக்கத்தில்
இமைகள் மூடின.
பலரின் வீட்டிற்கும்
பலரும் வந்தார்கள்.
காந்தி வந்தார்.
ஒபாமா வந்தார்.
கலாம் வந்தார்.
கிளின்டன் வந்தார்.
எம்.ஜி.ஆர் வந்தார்.
சுந்தர ராமசாமி வந்தார்.
க.நா.சு வந்தார்.
பழைய பேப்பர்காரன்
வந்தான்.

வீரப்பன் வந்தான்.
திருடர்கள் வந்தார்கள்.
இவர்களோடு கடவுளும்
வந்தார்.

உயிரோடு இருப்பவர்கள்,
உயிரோடு இல்லாதவர்கள்
சிங்கங்கள், புலிகள் என
எல்லாமே
யாருக்கும் தெரியாமல்
அவரவர் உலகத்துள்
வந்து போயினர்.

இருண்ட ரகசியங்களோடு
இமைகள் புதைந்திருக்க
பரந்த வானத்தின்
இருளைத் துடைத்தெடுத்த
பகல் காத்திருக்கிறது
சிறிய இமைகளின்
வெளியே வேட்டை நாயாய்
மூடிய இமைகளுக்குள்
முடங்கிய இருண்ட உலகின்
இருளைத் துடைத்தெடுக்க.