Tuesday, October 26, 2010

மழையின் மொழி - திண்ணை இதழில் வெளியானக் கவிதை

Sunday October 24, 2010

மழையின் மொழி

குமரி எஸ். நீலகண்டன்



அழுக்கான புழுக்கத்தில்
நினைவுகள் அடங்கி நான்
நித்திரையில் கிடக்கையில்
சோவென்று பெய்த மழை
என்னை எழுப்பியது...

நான் அரை விழிப்பில்
நித்திரைக்குள் மீண்டும்
நுழைய முற்படுகையில்
அது தன் ராக ஆலாபனையில்
என் முகத்தை நீரால்
கழுவியது....

கனவுகளெல்லாம் புழுக்கத்தில்
புதைந்து போக
அழுது அழுது அது தன்
வானச்சுமையை நீராய்
கரைத்தாயிற்று... 
நாற்றங்களை பொசுக்க 
வழியில் ஒரு
ரோஜாப் பூவையும் 
பறித்தாயிற்று.

குப்பைகளைக் கூட்டி
குழிகளில் தள்ளி
செடிகொடிகளின் கால் கழுவி
அழுக்கானத் தரைகளை மெழுகி
வழிபோக்கர்கள் இன்னொருமுறை
சிறுநீர் கோலமிடவும்
துப்பல் ஓவியங்கள் வரையவும்
பாதைகளைக் கழுவித்
தயார் செய்து விட்டு
சொட்டிச் சொட்டி
தரையைத் தட்டித் தட்டி
என்னிடம் விடைபெற்றுச்
சென்றது மழை.

punarthan@yahoo.com

2 comments:

  1. KASHTTAPADUM EALAI SINTHUM NETRI VEARVAI POLAE,AVAN KALANGI VIDUM KANNEERTHTHULIYAIPPOALAE MAZHAI SOTTU SOTTUNNU SOTTUTHU PAARU ANGAE.ARUMAI.SANTHILAL.RAJAPALAYAM.

    ReplyDelete
  2. நன்றி சாந்திலால் அவர்களே....
    குமரி எஸ். நீலகண்டன்

    ReplyDelete