Saturday, March 10, 2012

காற்றின் கவிதை - திண்ணை இதழில் வெளியான கவிதை

காற்றின் கவிதை
குமரி எஸ். நீலகண்டன்

எழுதாமல் பல
பக்கங்கள் காலியாகவே
இருக்கின்றன.

எழுதுவதற்காக இருந்தவன்
எழுதாமல் போனதால்
பலன் பெற்றனவோ
அந்தப் பக்கங்கள்.

எழுதுபவன் எழுதாததால்
வெள்ளை உள்ளத்துடன்
வெற்றிடம் காட்டி
விரைந்து அழைக்கிறதோ
அந்தக் காகிதப் பக்கங்கள்.

காகிதத்தின் மொழி
அறியாமல் காகிதத்தில்
எழுத முயல்கையில்
எங்கோ இருந்து
வந்தக் காற்று
காகிதத்தை
அடித்துப் போயிற்று.

காற்று அந்தக் காகிதத்தில்
தன் கவிதையைக்
கொட்டி கொட்டி
உரக்கப் பாடியது.

நிச்சயமாக அந்தக்
காகிதம்
காற்றின் கவிதையில்
காலம் முழுவதும்
நிறைந்திருக்கும்.

10 comments:

  1. /எழுதுவதற்காக இருந்தவன்
    எழுதாமல் போனதால்/ கிடைத்தது எங்களுக்கு காற்றின் கவிதை. மிக அருமை. அதே நேரம், எழுதச் சொல்லிதான் உரக்கப் பாடி அழைக்கிறது என்பதையும் நினைவில் கொள்வோம்:)!

    ReplyDelete
  2. சரியாகவேச் சொன்னீர்கள்... மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

    ReplyDelete
  3. எழுதுவதற்காகவே பிறந்தவை அந்தக் காகிதமும்
    அவன் கரமும் !

    ReplyDelete
  4. சக்தி மேடம்.. மிக்க நன்றி....உங்கள் இலக்கிய ஆர்வமும் பங்களிப்பும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது...

    ReplyDelete
  5. சொல்லாத சொல்லைப் போல எழுதாத கவிதையும் விலை மதிப்பற்றதுதான்....
    பக்கங்கள் பலனடைந்தாலும் நஷ்டம் என்னவோ வாசகர்களுக்குத்தான்...!
    காற்று கொண்டு போன கவிதையைத்தான் காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தனரோ....!

    ReplyDelete
  6. காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன் நல்லப் பாடல். மிக்க நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  7. ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  8. கவிதை ஜோர்!

    என்னுடைய பதிவில் புதிதாக ஆரம்பித்திருக்கிற தொடர் இது.
    'அன்புடன் ஒரு நிமிடம்'
    முதல் பகுதி.
    'எண்ணிச் சிந்திடுவோம்...'

    ReplyDelete
  9. கே.பி. ஜனா சாருக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  10. ezuthamaal ponathrke ippadi oru kavithai enraal ..ezuthunga sir..thamizh ulakam makizhsiyadayattum...super sir..

    ReplyDelete