Monday, January 2, 2012

மழை துரத்திய இரவில் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

மழை துரத்திய இரவில்
குமரி எஸ். நீலகண்டன்

வானத்தில் வந்த
பூகம்பம் போல்
திடீரென இடி முழக்கம்.
விண்மீன்களையெல்லாம்
சுனாமி அடித்துச்
சென்றது போல்
வெறுமையாய்
கருவானம்.

இடை இடையே
வானத்தைக் கீறித்
தெறித்த ரத்தமற்ற
நரம்புகளாய் மின்னல்.

எங்கோப் புறப்படுகிற
மழை என்னை
இங்கேத் துரத்தியது.

தூங்குவதற்கு முன்
சன்னல்களையெல்லாம்
அடைத்து விட்டேன்.
இடிக்கு அஞ்சி கேபிள்
இணைப்புகளையெல்லாம்
திறந்து விட்டேன்.
மொட்டை மாடியில்
தொங்கிய 
துணிகளையெல்லாம்
தூங்கும் அறைக்குள்
தூங்க விட்டேன்.
நானும் தூங்கிப்
போனேன் வருகிற
மழையும் வந்ததாய்..

இடையில்
கொசுக்கள் வந்து
கடித்து எழுப்ப
தொப்பையாய்
நனைந்திருந்தேன்
வியர்வையில்.
நீச்சல் தெரியாத
இன்னொரு கொசு
வியர்வை மழையில்
நனைந்து முங்கிச்
செத்தது.

சன்னலைத் திறந்தேன்.
வழக்கம் போல்
வெறும் வானம்
விண்மீன்களுடன்
ஒரு விளையாட்டுப்
புன்னகையுடன்...

கொசுக்கள்
குதூகலத்துடன்
கைதட்டிப் பறந்தன

விடியும் வரை
விளையாடி ஜெயித்த 
மழையின் வெற்றியில்.

2 comments:

ராமலக்ஷ்மி said...

இடியின் முடிவில் பொழிந்த கவிதை அருமை:)!

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி...